Pages

November 29, 2008

சிரம் தாழ்த்தி வணங்குவோம்

நெஞ்சை உறுக்கும் 60 மணிநேர தாக்குதலுக்குப் பிறகு, அனைத்து தீவிரவாதிகளையும், தேசிய பாதுகாப்புப் படையினர் கொன்று விட்டனர். நூற்றுக்கணக்கான அப்பாவி ஜனங்களின் உயிரைக் குடித்த இந்த மிருகங்களை வீழ்த்துவதில், தனது உயிரைப் பணயம் வைத்த அதிகாரிகளுக்கு சிரம் தாழ்த்தி வணங்குவோம். இது போன்ற தன்னலமற்ற வீரர்களைப் பெற்ற தாய்மார்கள்
புண்ணியவதிகள். இவர்களது இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது.

தனது அலுவலகத்தில் உட்கார்ண்ந்து கொண்டு ஆணைகள் மட்டும் கொடுத்துக் கொண்டிருக்காது, களத்தில் உயிர் நீத்த ஹேமந்த் கார்கரே


களத்தில் உயிர் நீத்த போலீஸ் அதிகாரி திரு. விஜய் சாலஸ்கர்
காயமுற்ற காவலரைப் பாதுகாத்து, தீவிரவாதிகளோடு ஒத்தையாளாகப் போரிட்டு இனினயிர் நீத்த சந்தீப் உன்னிகிருஷ்ணன்.





களத்தில் விஜய் சாலஸ்கர் மற்றும் ஹேமந்த கார்கரேயொயோடு உயிர் நீத்த போலீஸ் கமிஷ்னர், அஷோக் காம்தே.



இவர்களைப் போல் இன்னும் உயிர் நீத்த் காவலர்கள் அனைவரையும் சிரம் தாழ்த்தி வணங்குவோம். இவர்களது குடும்பங்களின் சோகத்தில் நாமும் பங்கு பெறுவோம். இது போல் இனியொரு சம்பவம் நடக்காமலிருக்க அரசாங்கத்தில் பதவி வகிப்பவர்கள் ஓட்டு வங்கிகளைப் பார்க்காமல் மக்களின் பாதுகாப்பு பற்றி யோசிக்க முனைய வேண்டும்.

இவர்களோடு இன்னும் முகம் தெரியாத 10 காவலர்கள் உயிர் நீத்துள்ளனர். அவர்களைப் பற்றி எந்தவொரு மீடியா சானலுக்கும் அக்கறை இல்லை. இன்று காலை NDTV'யில் அவர்கள் பெயர் ஸ்க்ரோல் செய்தனர். அவர்களது குடும்பங்கள் இவர்களது இழப்பிலிருந்து மீண்டு வர ஆண்டவன் அவர்களுக்கு சக்தி வேண்டிக்கொள்வோம்.

தீவிரவாத முயற்சியில் யார் ஈடுபட்டிரிந்தாலும், அவன் / ள் எந்த மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும், அவன் மீது பாரபட்சமின்றி நடவடிக்கையெடுக்க வேண்டும். கல்வியறிவு இல்லாததால் தான் தீவிரவாதிகள் உருவாகிறார்கள் ஒரு சிலர் கூறுகிறார்கள். மும்பை மீது தாக்குதல் நடத்தியவர்களைப் பார்த்தால் கல்வியறிவு இல்லாதவர்கள் மாதிரியா இருக்கிறார்கள்? ஸ்காட்லேண்டில் ஒரு எரியும் ஜீப்பை விமான நிலையத்தில் மீது மோதியவன் கல்வியறிவு இல்லாதவனா?

இலங்கைத் தமிழர்களை இலங்கை அரசு தாக்கக் கூடாது என உண்ணாவிரத நாடம் நடத்தும் கேடு கெட்ட கூத்தாடி கூட்டங்கள் இது போல் இன்னொரு சம்பவ்ம் நடக்காதிருக்க அரசாங்கம் சட்டங்கள் கொண்டு வரவேண்டி வலியுறுத்தி ஒரு அரைமணி நேர உண்ணாவிரதமாவது மேற்கொள்வார்களா?
இந்த போராட்டத்தில் உயிர் நீத்த வீரர்கள் குடும்பங்களுக்கு ஆதரவு குரல்கள் கொடுப்பார்களா?

யார் எப்படியேனும் போகட்டும். நாம் இன்று பாதுகாப்பாக வாழ்வதற்கு, தனது உயிர்களை துச்சமென மதித்து உயிர் விட்டவர்களுக்கு ஒரு நிமிட மௌன் னஅஞ்சலி செலுத்துவோம்.

ஜெய் ஹிந்த்!!

November 27, 2008



என்ன நடக்கிறது இந்த திருநாட்டில்

மீண்டும் ஒரு பயங்கரவாதச் செயல். ஒரு நாட்டையே நிலைகுலைய வைத்திருக்கிறது. இது நாள் வரை ஏதோ ஐந்தாறு வெடிகுண்டுகள் வைத்து மிரட்டி வந்தவர்கள். இன்று நூற்றுக்கும் மேலானவர்களை கொன்று குவித்து விட்டு, 300 பேரை காயப்படுத்தி இருக்கிறார்கள். மும்பையில் 24 மணிநேரத்துக்கு மேலாக நடந்து வரும் இந்த தீவிரவாதச் செயலை நினைத்தாலே மனம் பதறுகிறது. காலையிலிருந்து எந்த ஒரு செயலிலு்மே கவனம் செலுத்த முடியவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நினைத்தாலே மனம் பதறுகிறது.

இந்தத் தீவிரவாதிகள், கராசியிலிருந்து மும்பைக்கு படகில் வந்தார்கள் என்று மஹாராஷ்டிர முதல் ந்ணரியே கூறுகிறார். நம் நாட்டு கடற்படை என்ன மீன் பிடித்துக் கொண்டி்ருந்ததா? அவ்வளவு கவனக்குறைவாக இருந்தி்ருக்கிறது, நமது அரசு இயந்திரம். இதை எழுதிக்கொண்டிருக்கு்ம் போது கூட அனைத்து தீவி்ரவாத்களையும் பிடித்த பாடிலலை. எவ்வளவு தீவிரவாதிகள் என்ற கணக்குக் கூட தெரியவில்லை.

இதில் நம் பிரதம மந்திரி தொலைகாட்சியில் நாட்டு மக்களை அமைதி காக்கும் படி கேட்டுக் கொள்கிறார். இவர் வீட்டிலுள்ள யாராவது தீவிரவாதத் தாக்குதலில் பலியானால் இப்படி பேசுவாரா? இந்தத் தீவிரவாதச் செயலைப் பொறுத்துக் கொள்ளாது இந்தியா என்கிறார். ஐயா, இது நம் நாடு தொடுக்கப் பட்ட முதல் தாக்குதல் இல்லையே. இதற்கு முன்னரும் நீங்க இதே மாதிரி தானே சொன்னீர்கள். இது நாள் வரையிலும் என்ன ம.....த்த புடுங்க முடிந்தது??

எல்லா தீ்விரவாதிகளுக்கும் அண்டை நாடு அடைக்கலமும் பயிற்சியும் கொடுக்கிறது என்பது இனி்மேல் பிறக்கப் போகும் குழந்திக்குக் கூட்த் தெரியும். உங்களுக்குத் தெரிந்து என்ன் கிழித்து வி்ட்டீர்? அந்த நாட்டோடு எப்படி உறவாடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்? மெய்யாலுமே உங்களுக்கு நாட்டு நலன் மீது அக்கறை இருந்தாலும் உங்களை ஆட்டுவிக்கும் அம்மையார் உங்களை தன்னி்ச்சையாக இயங்க விட மாட்டார். அதிலும் உங்களுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகள், ஆஹா அவர்கள் போல் நாட்டுப்பற்று உள்ளவர்கள் யாரும் கிடையாது.

”எந்த ஊரி்லும் எந்த இடத்திலும் எங்களாlல் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடமுடியும்” என்று மார் தட்டுகிறார்கள் இந்த தீவிராதிகள். இவர்கள் எல்லோரும் ஒரு தாய்க்குப் பிறந்தவர்கள் தானா? இவர்களை ஒழித்துக் கட்ட என்ன செய்யப் போகிறது இந்த் அரசாங்கம்? இந்நேரம் இவர்களது பயிற்சிக் கூடாரங்கள் மீது ஏவு கணைகள் பாய்ந்திருக்க வேண்டாமா? பாகிஸ்தான் கைப்பற்றியிருக்கும் காஷ்மீரத்தில் ஒரு சில பயிற்சி முகாம்களாவது எரிந்து சாம்பலாகியிருக்க வேண்டாமா?

ஒரே ஒரு தடவை அமெரிக்காவில் தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. தனது ராணுவததையே ஆஃப்கானிஸ்தான் மீது பாய்ச்சினார் புஷ். இரண்டே இரண்டு இஸ்ரேல் ராணுவ வீரர்களை ஜோர்டான் நாடு கொன்றது. அந்த நாட்டையே uஉண்டு இல்லையெனச் செய்துவிட்டடு இஸ்ரேல். அவர்கள் செயல் வீரர்கள். பதவி சுகதிற்காகத் தன் நாட்டு மக்களையே காப்பாற்றத ஒரு தலைவன், வாழ்வதற்கே தகுதியற்றவன்.

அடுத்த 7 நாட்களில் இந்தியா இந்த தீவிரவாத சக்திகளுக்குத் துணை போபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லையென்றால், பிரதமர் என்பவர் தூக்கு் மாட்டிக் கொண்டு சாகலாம்.

தீவிரவாதிகளை எதிர்த்துப் போர் புரிந்து உயிர் நீத்த வீரர்களுக்கும், உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவோ்ம்.

ஜெய் ஹிந்த்

November 21, 2008



மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 5

மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 4

குழந்தைக்குக் கூட கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் பற்றி விபரம் தெரிந்தாயிற்று. இந்த கார்ட் நம்முடைய வங்கிக் கணக்கை ஒரு அட்டையில் எப்படி பதிய வைத்திருக்கின்றதோ அப்படியே, நமது செட்-டாப்-பாக்ஸ் கணக்கை ஒரு கார்டில் போட்டு வைத்திருப்பார்கள். அதற்குப் பெயர் தான் ஸ்மார்ட் கார்ட் (Smart Card). சரி இதற்குப் பெயர் ஏன் ஸ்மார்ட் கார்ட். அப்படியென்ன ஸ்மார்ட்டா இது பண்ணுகிறது?
மாதச் சந்தா கணக்கை சேமித்து வைப்பது ஒன்றும் இன்றைய தேதியில் பெரிய ராக்கெட் விஞ்ஞானம் இல்லையே? ஒரு காந்த ஸ்ட்ரிப்பில் கூட இந்த விபரங்களை அடக்கி வைக்கலாமே? பின் எதற்காக இதற்குப் பெயர் ஸ்மார்ட் கார்ட்? அப்படி ஸ்மார்டாக என்ன இருக்கிறது இதில்?

இந்தக் கார்டில் ஒரு சிறு மைக்ரொ பிராஸஸர் (Micro Processor) இருக்கிறது. இதற்குத் தான் செட்-டாப்-பாக்ஸிற்கு வரும் சிக்னல்களை டிக்ரிப்ட் செய்யும் தில்லாலங்கடி விஷயம் தெரியும். இந்த கார்டே ஒரு சிறு கம்பியூடர் போலத்தான். இதில் ஓடும் மென்பொருள் தான் என்க்ரிப்ட் ஆகியிருக்கும் சிக்னல்களை டிக்ரிப்ட் செய்யும் தந்திரம் அறிந்திருக்கும்.

ஒவ்வொரு பிராட்காஸ்டருக்கும் இந்த என்க்ரிப்ஷன் தான் அவர்களது உயிர்நாடி. டிக்ரிப்ஷன் தவிர சந்தா தாரரின் மற்ற பல விபரங்களையும் இது தெரிந்து வைத்திருக்கும். இந்த மாதம் சந்தா செலுத்தியாயிற்றா போன்ற விபரங்கள் முதற்கொண்டு இந்த கார்டில் பதிந்து வைத்திருக்கும். ஒவ்வொரு செட்-டாப்-பாக்ஸிற்கும் ஒரு அடையாள எண்ணும் உண்டு. இன்னாரிடம் இந்த செட்-டாப்-பாக்ஸ் இருக்கிறது என்ற டேடா பேஸ் (database) பிராட்காஸ்டரிடம் (டாடா ஸ்கை போன்றவர்கள்) இருக்கும்.
அதே போல் ஒவ்வொரு ஸ்மார்ட் கார்டுக்கும் ஒரு அடையாள எண் உண்டு. இந்த ஸ்மார்ட் கார்ட் இந்த செட்-டாப்-பாக்ஸில் இருக்கிறது என்ற விபரமும் இருக்கும். மேலும் அந்த ஸ்மார்ட் கார்டை வேறொரு செட்-டாப்-பாக்ஸில் போட முடியாது. இதை பாக்ஸ் - கார்ட் பேரிங் (Box Card Pairing) என்று சொல்லுவார்கள்.
"லேய், கிளாஸ்ல வாத்தியார் லொள்ளு தாங்க முடியலையேன்னு பார்த்தா, நீ அதுக்கு மேல ராவுதியே"ல நினைக்கீயளா? இருங்க இருங்க. இந்த மாதிரி ஸ்மார்ட் கார்ட், சாஃப்ட்வேர் அது இதுன்னு யாருக்கும் ஒண்ணும் புரியாம இந்த பிராட்காஸ்டர்கள் மக்களை ஏமாற்றுவது எப்படியென்று பார்ப்போம்.
ஒரு பிராட்காஸ்டரிடமிருந்து செட்-டாப்-பாக்ஸ் வாங்கிவிட்டால், அவர்கள் கொடுக்கும் ஸ்மார்ட் கார்ட் வைத்துத் தான், நம்மால் நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும். இந்த செட்-டாப்-பாக்ஸிற்கு ஆயிரக்கணக்கில் ரூபாய் கொடுப்பதால் அவ்வளவு எளிதாக இன்னொரு செட்-டாப்-பாக்ஸ் வாங்கிட முடியாது. அதாவது ஒரு சன் -டைரக்ட் செட்-டாப்-பாக்ஸில் டாடா ஸ்கை ஸ்மார்ட் கார்டை உபயோகிக்க முடியாது. அதே போல் ஒரு செட்-டாப்-பாக்ஸோடு பேர் செய்து விட்ட ஸ்மார்ட் கார்டை அதே பிராட்காஸ்டரின் இன்னொரு செட்-டாப்-பாக்ஸில் போட முடியாது. இதற்கு Interoperability என்று சொல்வார்கள். எப்படி மைக்ரோசாஃப்ட் தயாரிக்கும் மென்பொருளை விண்டோஸ் இயங்காத வேறெந்த கணினியிலும் எப்படி செலுத்த முடியாதோ அப்படித்தான் இதுவும்.
அது ஏன் இப்படி? எல்லாம் பணம் பண்ணும் யுக்தி தான். இப்போது நிறைய வீடுகளில் ஒன்றிற்கு மேலாக டி.வி.க்கள் வந்து விட்டன. ஒரே கேபிள் இணைப்பு மட்டும் கொடுத்து, அதையே வெவ்வேறு டி.வி.க்களுக்குக் கொடுக்கலாம்.
ஆனால் செட்-டாப்-பாக்ஸில் இந்த சங்கதியெல்லாம் செல்லுபடியாகாது. ஒரே டிஷ் வேணுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் இரண்டு செட்-டாப்-பாக்ஸ் வாங்கியே ஆகணும். ஒவ்வொரு செட்-டாப்-பாக்ஸிற்கும் தனித்தனியாக சந்தா கட்டியாகணும். இப்போது உங்கள் வீட்டில் கீழே ஹாலில் ஒரு டி.வி.யும் மாடியில் இன்னொரு டி.வி.யும் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு டி.வி.க்கும் தனித்தனியாக செட்-டாப்-பாக்ஸ் வாங்கியாகணும். சரி பாக்ஸாவது போனால் போகிறது, ஒரு சந்தா மட்டும் செலுத்தினால போதுமென்று நினைத்தீர்களானால், அதுவும் செய்ய முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு பாக்ஸிற்கும் ஒரு தனிப்பட்ட கார்டைத் தான் உபயோகப்படுத்தியாகணும். ஒரு பாக்ஸிலுள்ள கார்டை இன்னொரு பாக்ஸில் உபயோகப்படுத்த முடியாது என்பதற்கு தொழில் நுட்ப ரீதியான எந்தவொரு காரணமும் இல்லை. எல்லாம் துட்டு செய்யும் வழிமுறைகள்.
இந்தத் தில்லு முல்லு பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாமால் அரசாங்கமும், வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் தகவல் ஒளிபரப்பு தொழில் நுட்பத்தை கண்காணிக்கும் ஒரு நிறுவனம் உள்ளது. அது, Telecom Regulatory Authority of India, சுருக்கமாக TRAI. இந்த நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் தான் இன்று செல் ஃபோன் இணைப்புகள் இவ்வளவு மலிவாக இருக்கிறது. ஆனால் இவர்களுக்கு இது வரை பிராட்காஸ்டர்கள் செய்யும் தில்லு முல்லு அவ்வளவாக தெரியவில்லை. வெளிநாடுகளில் என்ன செய்கிறார்களோ, குறிப்பாக இங்கிலாந்தில் என்ன தொழில் நுட்பம் இருக்கிறதோ அதையே ஈயடிச்சான் காப்பி அடிக்கிறார்கள். ஆனால் இங்கிலாந்து ஜெர்மனி போன்ற நாடுகளில் இந்த பிராட்காஸ்டர்கள் செய்யும் தில்லு முல்லுகளுக்கு ஆப்பு வைக்கும் படி அடுத்த கட்ட தொழில் நுட்பத்திற்கு மலையேறி விட்டார்கள். இதிலுள்ள கூத்து என்னவென்றால், இந்த தொழில் நுட்பத்திற்கான மென்பொருளை பெரும்பாலும் இந்தியாவில்தான் எழுதுகிறோம். அம்மாதிரி நாடுகளில் இந்த பிராட் காஸ்டர்களில் பருப்பு இனிமேலும் வேகாததால் இந்தியா மாதிரி தொழில் நுட்பம் அவ்வளவாக முன்னேறாத நாடுகளைக் குறி வைத்துப் பண்ணுகிறார்கள்ள்.
அப்படி பிராட்காஸ்டர்களுக்கு ஆப்பு தொழில் நுட்பம் தான் என்ன? இந்த இடைத்தரகர்களான பிராட்காஸ்டர்கள் இல்லாமல், நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் சானல்களே நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு சிக்னல்களை அவர்கள் இல்லத்திற்குக் கொண்டு செல்லும் தொழில் நுட்பம் தான். அதெப்படி சாத்தியம் என்று கேட்கிறீர்களா? ஏன் முடியாது? 20 வருடங்களுக்கு முன்னால் எல்லோர் வீட்டு மொட்டை மாடியில் ஆண்டென்னா வைத்து தூர்தர்ஷன் மட்டுமே பார்க்கலியா? (இதற்கு Terrestrial Transmission என்று பெயர்). அது போலவே தான். என்னடா இது "அடியப்பிடிடா பாரதவட்டா"ன்னு இருக்கே. டிஜிடல் சிக்னல்களைப் பார்க்கத் தானே செயற்கைக்கோள் உதவி கொண்டு, செட்-டாப்-பாக்ஸ் மூலமாக டிஜிடல் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போது மீண்டும் ஆண்டெனா யுகத்துக்கே போகணுமா என்று நினைக்கிறீர்களா? என்ன செய்வது, ஃபேஷன் மாடிரி தொழில் நுட்பமும் ஒரு யு-டர்ண் அடிக்கிறது, சில மாற்றங்களுடன். இந்த Terrestrial Transmission இப்போது வளற்சியடைந்து விட்ட நாடுகளில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. ஆனால் இந்த தொழில் நுட்பம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப் படுமா? அடுத்த பதிவில் பார்க்கலாம்.

November 15, 2008



இப்போ நல்லா இருக்கா?

நேயர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவர்க்ள் படிக்கும் படி அகலத்தைக் குறைத்துப் பார்த்தேன். HTML code'ல் எங்கேயோ தப்பு நேர்ந்து விட்டது. "உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா" என்ற கதையாகிவிட்டது. எல்லா விட்ஜெட்டும் எக்குத்தப்பாக காட்சியளிக்க ஆரம்பித்து விட்டன. அதை சரி செய்யவும் முடியவில்லை.
சரி, வேற டெம்பிளேட் போட்டுவிடுவோம் என்று இந்த டெம்பிளேட்டைப் போட்டுவிட்டேன் . சுண்டெலியை (அதான் Mouse) இடவலமாக நகர்த்தி படிக்கும் கஷ்டம் இப்போதிருக்காது என நம்புகிறேன்.
Customer satisfaction is key to success!! Happy Reading!!

November 10, 2008

இவளா என் மனைவி

இந்த வார இறுதிக்கு திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி ஆம்பூர், குல தெய்வம் கோயில் என்று ரொம்பவே ஊர் சுற்றித் திரிந்தாயிற்று. திருநெல்வேலியில் நெல்லையப்பரை விட்டால் போவதற்கு வேறேங்கும் இடம் இல்லை. நம்ம டமேஜ் நாள், சாரி மரேஜ் நாள் வேற வருதே, இப்பவே அட்வான்ஸா ஏதாவது வாங்கிடலாம் என்று காயத்ரியைக் கூட்டிக்கொண்டு வண்ணாரப்பேட்டையில் புதிதாக திறந்திருக்கும் ஆரெம்கேவி சென்றேன்.

கொஞ்சம் உங்கள் ஆள் காட்டி விரலால் முகத்திற்கு முன் சுற்றிக் கொள்ளுங்கள். ஒரு சிறு ஃபிளாஷ் பேக். அப்படியே ஒரு 4 வருடங்கள் பின்னோக்கிச் சென்றால், (கல்யாணம் ஆவதற்கு முன், நிச்சயம் ஆனதற்குப்பின்) தீபாவளிக்கு புடவை எடுத்து தருகிறேன் என்று, சென்னை ஆரெம்கேவிக்கு கூட்டிச் சென்றிருந்தேன். என்னிடம், "உங்க பட்ஜெட் என்ன" என்றாள். முதல் தடவையாக கடைக்குக் கூட்டி வந்திருக்கிறேன். பட்ஜெட்டெல்லாம் சொல்லி இமேஜைக் கெடுத்துக் கொள்ளவேண்டாமென்று, "அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. உனக்கு எது பிடிச்சிருக்கோ அதியே வாங்கிடலாம்" என்றேன். எனக்கு வாழ்க்கையில் பிடிக்காததில் ஒன்று, துணிக்கடைகளில் நேரம் கழிப்பது. போனோமா, எது முதலில் பிடிக்கிறதோ, அது நம் பட்ஜெட்டுக்குள் அடங்கி விட்டால் உடனே "பேக் செய்யுங்கள்" என்று சொல்லி விடுவேன்.


என் அம்மாவும் தங்கையும் துணி செலக்ட் செய்து முடிப்பதற்குள் என் பொறுமையே போய் விடும். நான் பாட்டுக்கு ஒரு ஓரத்துக்குப் போய் இ.தி.கு போல் முகத்தை உர்'ரென்று வைத்துக்கொண்டு உட்கார்ந்து விடுவேன். முதல் முறையாக கல்யாணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணை துணிக்கடைக்கு கூட்டி வந்திருக்கிறேன், ஆண்டவா நிறைய பொறுமையைக் கொடு என்று வேண்டிக்கொண்டேன்.

புடவைக் கடைக்குள் நுழைந்தவள், சில்க் காட்டன் எந்த செக்ஷன் என்று கேட்டுக்கொண்டு அந்த இடத்திற்குச் சென்றாள். "காஞ்சி காட்டன், பியூர் காட்டன் தெரியும், இதென்ன சில்க் காட்டன். புது ஃபேஷனா" என்று கேட்டுத் தொலைத்தேன். என்னை ஏற இறங்கப் பார்த்தவள், "இல்லையே, இதெல்லாம் ரொம்ப பழைய ஃபேஷன் தான்" சொல்லிவிட்டாள். "சரி, நமக்கு தெரியலை போலும்" என்று நினைத்துக் கொண்டு, அவள் என்ன தான் செலக்ட் செய்கிறாள் பார்ப்போம் என்று அவள் நின்ற செக்க்ஷனுக்குப் போனேன். இவள் எந்த ரேஞ்சுக்குப் புடவை எடுக்கப் போறாளோ என்ற உதறல் கொஞ்சம் இருக்கத் தான் செய்தது.

சில புடவைகளைப் பார்த்தாள். விரித்துக் காட்டச் சொன்னள். நானும் என் பங்கிற்கு, அந்தப் புடவையை எடுத்துப் போடுங்க, இந்தப் புடவயை எடுத்துப் போடுங்க்கன்னு கொஞ்சம் ஷோ காட்டினேன். பின்ன, எனக்கு புடவையெடுப்பதில் இஷ்டமே இல்லையென்று நினைத்து விட்டால்?? ஒரு புடவையை எடுத்துக் காட்டி, "இது நல்லா இருக்கா" என்றாள். எனக்கும் அது பிடித்திருக்கவே "நல்லா இருக்கு" என்று தலையாட்டினேன். ("அன்று ஆட்டத்தொடங்கியது, இன்னும் நின்ற பாடில்லையா"ன்னெல்லாம் பின்னூட்டத்தில் கேட்கப்படாது!!)

"இதை பில் போட்டுடுங்க சார்", என்று சொல்லிவிட்டாள். புடவையும் 1500 சொச்சம் தான். "இதற்கு பிளௌஸ் எடுக்க வேண்டாமா" என்றதற்கு, "இந்தப் புடவை பிளௌஸ் அட்டாச்ட் தான். அதனால் வேண்டாம்" என்று சொல்லி விட்டாள். அப்பாடா, பிளௌஸ் செலவும் மிச்சம் என்று சொல்லிக் கொண்டேன். அன்றைய தினம் என் மனைவியாகப் போகிறவள் புடவை செலக்ட் செய்ய எடுத்துக் கொண்டது வெறும் எட்டே நிமிடம் தான். என் கஸின் அக்காவிடம், இந்த விஷயத்தை சொன்னதற்கு, "இப்படி ஒரு அதிசயப் பிறவியா? நீ கொடுத்து வச்சிருக்கடா" என்று வாழ்த்தினாள்.

மீண்டும் உங்கள் ஆள் காட்டி விரலால் முகத்திற்கு முன் சுற்றிக் கொள்ளுங்கள்.


ஃபிளாஷ் பாக் முடிந்தது.

மீண்டும் ஆரெம்கேவி, ஆனால் திநெல்வேலியில். நான் உள்ளே போனதும், "சார், சில்க் காட்டன் புடவை செக்ஷன் எங்க இருக்கு" என்றேன். "என்னை ஒரு முறை முறைத்து விட்டு, "கொஞ்சம் சும்மா இருக்க முடியுமா" என்று சொல்லிவிட்டு, "இல்ல சார், சில்க் புடவை செக்ஷன் எங்க இருக்கு" என்று கேட்டாள். என்னிடம் பட்ஜட் எதுவும் கேட்கவில்லை. "சார், 3000-4000 ரேஞ்சுல உள்ள புடவை எடுத்துக் காட்டுங்க" என்றாள். நிறைய புடவைகளை அலசினாள். நிறைய புடவைகளை தன் மீது வைத்துப் பார்த்தாள். போதாதற்கு கண்ணாடியிலும் பார்த்துக் கொண்டாள்.

எவ்வளவோ புடவைகளை நான் நல்லா இருக்கு என்று சொல்லியும் திருப்தி அடையவில்லை. "இங்க ஒண்ணும் சரியா இல்லை. நல்லியில் போய் பார்க்கலாம்" என்று சொல்லி விட்டாள். ஆட்டோ பிடித்து 6 கிலோமீட்டர் தள்ளியுள்ள நல்லிக்குப் போனோன். அங்கேயும் இதே கதை தான். மீண்டும் நிறைய புடவைகள், நிறைய விரித்துப்பார்த்தல், அதே முகம் சுளிப்பு, எதையுமே பேக் செய்யவில்லை.

"எல்லா நல்ல புடவைகளும் தீபாவளிக்கே விற்றுப் போயிருக்கலாம். இருக்கறதுல நல்லதா பார்த்து எடுத்துக்கோ" என்று நான் சொன்னதற்கு எந்த வித ரியாக்ஷனும் இல்லை. பக்கத்துல தானே போத்தீஸ் இருக்கு, அங்கே போகலாம் என்றாள். என் முகம் கொஞ்சம் கொஞ்சமாக இ.தி.கு.போல் மாற ஆரம்பித்தது. ஆனால் காட்டிக்கொள்ள வில்லை.

போத்தீஸில் மட்டுமென்ன பார்த்தவுடனேயே புடவையை எடுக்கப் போகிறாளா ? "அம்மா, 3000-4000 ரூபாய்க்கெல்லாம் நீங்க எதிர்பார்க்கும் டிசைன் கிடைக்காது. அதெல்லாம் 5000'க்கு மேல" என்று கடைக்காரரும் சேர்ந்து அவர் பங்குக்கு என் குருதிக்கொதிப்பை இரட்டிப்பு செய்தார். "அப்படின்னா, அந்த ரேஞ்சுலயே எடுத்துப் போடுங்க'என்று சொல்லிவிட்டாள். என் முகம் முற்றிலும் இ.தி.கு. போல் மாறி விட்டத்தை ஒரு வாறாகப் புரிந்து கொண்டவள், மள மளவென புடவைகளைக் களைந்து 5-6 புடவைகளை அதிலிருந்து ஃபில்டர் செய்து, முக்கால் மணி நேர அலசலுக்குப் பிறகு ஒன்றை மனதே இல்லாமல் பேக் செய்யச் சொன்னாள்.

அப்போது தான் எனக்கு இந்த எண்ணம் உதித்தது. செகண்ட் லேடி என்ற ஆங்கில நாவலில், அமெரிக்க ஜனாதிபதியின் மனைவியின் உருவம் கொண்ட ஒரு பெண்ணை பக்காவாக தயார் செய்து, ஜனாதிபதியின் மனைவியைக் கடத்தி விட்டு, இவளை அந்த இடத்தில் மாற்றி விடுவார்கள், ரஷ்ய உளவுக்துறையான கே.ஜி.பி. காரர்கள். எனக்கும் அது போல் நேர்ந்து விட்டதா? எட்டே நிமிடத்தில் புடவை செலக்ட் செய்யும் காயத்ரியை கடத்திவிட்டு அவள் போலுள்ள வேறொரு பெண்ணை என் மனைவியாக இருக்கும் படி செய்து விட்டார்களோ? எட்டு நிமிடத்தில் புடவை செலக்ட் செய்த காயத்ரி எங்கே? 3 கடைகள் ஏறி இரண்டு மணி நேரம் செலவு செய்து, மனமே இல்லாமல், என் பர்ஸுக்கு வேட்டு வைத்து புடவை வாங்கும் இவள் யார். இவளா(?!) என் மனைவி?!

டிஸ்கி 1: புடவை வாங்கி கொண்டு சுடிதார் வேறு. யப்பா இப்பவே கண்ணக் கட்டுதேன்னு நான் ஒரு ஓரத்துல உட்கார்ந்து விட்டேன். அரை மணி நேரம் கழித்து போகலாம் என்று சொன்னது தான் ஞாபகம் இருக்கு.

டிஸ்கி 2: இ.தி.கு என்று 3-4 இடங்களில் குறிப்பிட்டிருக்கேன். அப்படின்னா என்னன்னு கண்டுபிடித்தால் சொல்லிவிடாதீர்கள்.

November 04, 2008

மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 4

மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 1
மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 2
மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 3


எனக்கு வேணும் சன் டைரக்ட், இஸ்கோ லகா டாலா தோ லைஃப் ஜிங்காலாலா, பாக்ஸ் ஃப்ரீ டிஷ் ஃப்ரீ, விஷ் கரோ டிஷ் கரோ ! "ஏ ஏ நிறுத்து நிறுத்து என்னல்லாமோ சொல்லிக்கொண்டு போறே" என்று முழி பிதுங்குகிறீர்களா? இதெல்லாம் DTH செட்-டாப்-பாக்ஸிற்கான விளம்பர வாசகங்கள். இந்தியாவில் சற்றே தாமதமாக வந்தாலும், செட்-டாப்-பாக்ஸின் விற்பனை விண்ணை முட்டுகிறது. அப்படி இந்த DTH என்றால் என்ன? செயற்கைக் கோளிலிருந்து நேராக நம் வீட்டின் வரவேற்பறைக்கே வருவதால் இதற்குப் பெயர் Direct To Home. சரி இந்த DTH இனால் அப்படியென்ன லாபம்?

கேபிள்காரர்களின் தயவில் தயவில் டி.வி நிகழ்ச்சிகள் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. துல்லியமான டிஜிடல் சிக்னலினால் நல்ல தொரு தரமான வீடியோ பார்க்கலாம். கேபிள் சென்டரில் மின்சாரம் தடைப் பட்டால் நம் வீட்டில் டி.வி பார்க்க முடியாது. செயற்கைக் கோளில் மின்சாரத்தடை ஏற்படாதலால் தடையில்லாமல் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். இதனாலெல்லாம் DTH ரொம்ப சௌகர்யமானதும் லாபகரமானதா என்றால், அவ்வளவு லாபகரமானது இல்லை என்று தான் நான் பதிலளிப்பேன்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் சென்ற பதிவில் பார்த்த MSO என்பவர்களுக்குப் பதிலாக டாடா ஸ்கை, டிஷ் டி.வி போன்றவர்கள், இடைத்தரகர்களாக இருக்கின்றனர். இவர்களை Broadcaster'கள் என்று சொல்லலாம். இவர்கள் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் சன் டி.வி ஸ்டார் டி.வி (இவர்களை Content Producer என்று சொல்லலாம்), போன்றவர்களிடமிருந்து சிக்னல்களைப் பெற்று செயற்கைகோளுக்கு அனுப்புகிறார்கள். செயற்கைக் கோளிலிருந்து செட்-டாப்-பாக்ஸ் மற்றும் மினி-டிஷ் கொண்டு நாம் வீட்டில் பார்க்கிறோம். நாம் consumer'கள்.

ஆக Content Producer'களிடமிருந்து consumer'க்கு சிக்னல்கள் சென்றடைய ஒரு Broadcaster தேவைப் படுகிறார். இந்த Broadcaster, content producer' இடமிருந்து சிக்னல்களைப் பெற்று அதை வேறு யாருக்கும் புரியாத வண்ணம் என்க்ரிப்ட் செய்து செயற்கைக்கோளுக்கு அனுப்புகின்றனர். இந்த சிக்னல்களை நமது செட்-டாப்-பாக்ஸிலுள்ள ஸ்மார்ட் கார்டிற்கு எப்படி டிக்ரிப்ட் செய்ய வேண்டும் என்று தெரியும். இந்த என்க்ரிப்ஷன் டிக்ரிப்ஷன் தான் இந்த பிராட்காஸ்டர் செய்யும் பெரிய தில்லாலங்கடி வேலை.

இந்த என்க்ரிப்ஷன் மட்டும் இல்லையென்றால், செயற்கைக்கோளிலிருந்து எந்த அலைவரிசையில் சிக்னல்கள் வருகிறது என்று தெரிந்து விட்டால் யார் வேணாலும் ஒரு டிஷ் போட்டு, செயற்கைக்கோளிலிருந்து வரும் அலைவரிசையை பதிவிறக்கம் செய்து, சிக்னலகளைப் பார்க்க முடியும். மாதச் சந்தா செலுத்தாமலேயே நம்மால் டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும். மாதச் சந்தா செலுத்தவில்லையென்றால் கேபிள் காரன் கேபிள் இணைப்பைத் துண்டித்து விடமுடியும். ஆனால், இந்த DTH முறையில் யார் யார் எங்கெங்கு டிஷ் பொறுத்தியிருக்கிறார்கள் என்று பிராட்காஸ்டருக்கு எப்படித் தெரியும்? இந்த மாதிரி ஹாக் செய்வதற்க்காகவே நிறைய பேர் இருக்கிறார்கள்.

இந்தியாவில் Content Producer'க்கென சில விதிமுறைகள் இருக்கின்றன. அவர்கள் எல்லோரும் எல்லா DTH பிராட்காஸ்டர்களுடன் தங்களுடைய சிக்னல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். முதலில் இலவசமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தான் விதிமுறை கொண்டு வந்தார்கள். பின்னர், எவ்வளவு சந்தாதாரர்கள் இருக்கிறார்களோ அதற்கேற்றாற்போல் பணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று மாற்றியமைத்தார்கள்.

இங்குதான் இந்த DTH பிராட்காஸ்டர்கள் லாபம் பார்க்க ஆரம்பித்தனர். கேபிள் காரகள் எப்படி தங்களுடைய சந்தாதாரர்கள் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பித்தனரோ, அதே தில்லு முல்லுவை இவர்களும் செய்ய ஆரம்பித்தனர். சில நாட்களுக்கு முன், டாடா ஸ்கை வைத்கிருப்போர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ESPN பார்க்க முடியாமற்போனதற்கு இப்படி நடந்த தில்லு முல்லு தான் காரணம்.

இந்த DTH பிராட்காஸ்டர்கள் கொண்டு வந்திருக்கும் ஒரு வரவேற்கத்தக்க ஒரு தொழில் நுட்பம், "Pay Per View". அதாவது நாம் பார்க்கும் சானல்களுக்கு மட்டும் சந்தா கட்டினல் போதும் என்ற தொழில் நுட்பம். ஆனால் இவர்கள் சானல்களை பகேஜ் செய்யும் முறையைப் பார்த்தால், அதில் எள்ளளவும் Consumer'க்கு லாபம் இல்லை என்பது தான்.

பொதுவாக, தமிழ் குடும்பங்களில் விரும்பிப் பார்க்கும் சானல்கள் சன் டி.வி, கே.டி.வி, ராஜ் டி.வி, விஜய் டி.வி, (நான் பார்க்கா விட்டாலும்)கலைஞர் டி.வி, சன் மியூஸிக், இசையருவி, பொதிகை, மற்றும் இன்ன பிற தமிழ் சானல்கள். வீட்டம்மாக்கள் போனால் போகிறதென்று விட்டால், இ.எஸ்.பி.என், ஸ்டார் கிரிக்கேட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ். குழந்தைகள் இருந்தால் கார்டூன் நெட்வொர்க், சுட்டி டி.வி, ஜெடிக்ஸ். என்னைப்போல் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அறிவுப்பசியுள்ளவர்கள் (ரொம்ப ஓவர்'ன்னு காயத்ரி சொல்கிறாள்) டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிரஃபி, இவ்வளவு தான்.

நமது விருப்பம் இப்படியிருக்க, அவர்கள் தங்களது சானல் பொக்கேக்கயை, தமிழ் பொக்கே, விளையாட்டு பொக்கே, குழந்தைகள் பொக்கே, கல்வி பொக்கே என்று பாகேஜ் செய்திருக்கணும். ஆனால், அவர்கள் அப்படி செய்திருக்க மாட்டார்கள். சன் பொக்கே, ராஜ் பொக்கே, கலைஞர் பொக்கே, ஸ்டார் பொக்கே, விளையாட்டு பொக்கே, என்று தனித்தனியாக பாக்கேஜ் செய்து வைத்திருப்பார்கள். அது என்ன பொக்கே என்று நீங்கள் கேட்கக்கூடும். நான் ஏற்கனவே சொன்னது போல், ஒரே அலைவரிசையில் நிறைய சானல்களைப் பார்க்க முடியும். எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால், இப்படி ஒரே அலைவரிசையில் அனைத்து சானல்களும் ஒரு பொக்கேக்குள் அடங்கும் என்று குறிப்பிடலாம். அதாவது சன் நிறுவனம், தான் தயாரிக்கும் அனைத்து சானல்களையும், ஒரே அலைவரிசையில் கொடுக்கும். இதனால் அதனை சன் பொக்கே என்று சொல்லலாம். ஒவ்வொரு பொக்கேவிற்கும் ஒரு அயாயாள எண் உண்டு. தனது அடையாள எண்ணையும் அலைவரிசையையும் சன் நிறுவனம், பிராட்காஸ்டர்களோடு பகிர்ந்து கொள்ளும். இதைத் தொழில் நுட்ப ரீதியாக சொல்லவேண்டுமானால், "Feed Sharing" என்று சொல்லலாம்.

இதே போல் எல்லா Content Producer'களும் தனது சிக்னல்களை பிராட் காஸ்டர்ரோடு பகிர்ந்து கொள்கிறார்கள். இப்படியாக எல்லா Content Producer'களிடமிருந்து வாங்கிய பொக்கேக்களை ரி-பாக்கேஜ் செய்து என்க்ரிப்ட் செய்து மீண்டும் செயற்கைக்கோளுக்கு அனுப்புகிறார்கள். எதற்காக இந்த ரி-பாகேஜ்? இதில் தொழில் நுட்ப ரீதியான காரணம் எதுவும் இல்லை. எல்லாமே வியாபார நோக்கம் தான். உதாரணத்திற்கு, சன் மற்றும் விஜய் டி.வி வேண்டுமானால், தமிழ் பொக்கே வாங்க வேண்டும். ஆனால் இந்த தமிழ் பொக்கேக்கு இவர்கள் வைத்திருக்கும் கட்டணம் சன் பொக்கேக்கும் ஸ்டார் பொக்கேக்கும் இவர்கள் எவ்வளவு கட்டணம் செலுத்துகிறார்களோ, அவ்வளவாகும். மேலும் விளையாட்டு பொக்கே வேண்டுமெனில், அதற்கு இன்னும் கொஞ்சம் பணம் கொடுத்து அந்த பொக்கேயும் வாங்க வேண்டும். இங்கு தான் இந்த பிராட்காஸ்டர்கள் பணம் பண்ணுகிறார்கள். இவர்கள் ஸ்டார் பொக்கே வாங்கும் போதே விஜய் டி.வி.யுடன் இவர்களுக்கு ஸ்டார் இ.எஸ்.பி.என் வந்து விடும். ஆனால், எப்படி மக்கள் விளையாட்டுக்காக இவ்வளவு பைத்தியமாக அலையும் போது அதில் ஏன் காசு பண்ணக்கூடாது என்ற பேராசை தான். இதில் இன்னும் கொடுமை என்னவென்றால், இந்தியா கிரிக்கெட் பைத்தியம் பிடித்த நாடு. ஸ்டார் பொக்கேயோடு ஸ்டார் கிரிக்கெட்டும் பிராட்காஸ்டருக்கு வந்து விடும். ஆனால், இவர்கள் ஸ்டார் கிரிக்கெட்டை விளையாட்டு பொக்கேயோடு வழங்காமல் அதை தனியாக விற்று காசு பண்ணுவார்கள்.

இந்த DTH ஆபரேடர்கள், நிகழ்ச்சி தயாரிப்பதில்லை, ஆனால் நிகழ்ச்சி தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து சிக்னல்களை வாங்கி, அதை வேறு யாரும் பார்க்காத வண்ணம் மாற்றியமைத்து, consumer'க்கு வழங்குகிறார்கள். இவர்கள் சொந்தமாகச் செலவு செய்வது,
சிக்னல்களை என்க்ரிப்ட் செய்வது (அதுவும் தனது சொந்த லாபத்திற்காகத்தான்), செட்-டாப்-பாக்ஸ் மற்றும் அதன் மென்பொருள் வடிவமைப்பது தான். செட்-டாப்-பாக்ஸ் மற்றும் விற்றதால் இவர்களுக்கு நிறைய லாபம் இல்லை. மாதாமாதம் நாம் செலுத்தும் சந்தாப் பணம் தான் இவர்களுக்கு தங்க முட்டை போடும் வாத்து. அதனால் தான் தனது வியாபாரத்தைப் பெறுக்க இப்போது பாக்ஸ் மற்றும் டிஷ் இலவசம் என்று கூவிக்கூவி விற்கிறார்கள். எப்படி ஒரு இடத்தில் இரண்டு கேபிள் ஆபரேடர்கள் இணைப்பு கொடுப்பதில்லையோ அதே போல், ஒரு DTH ஆபரேடரிடமிருந்து வாங்கிய செட்-டாப்-பாக்ஸை வைத்து இன்னொரு பிராட்காஸ்டருக்குத் தாவ முடியாது. இதுவும் இவர்கள் பணம் பண்ண இன்னொரு யுக்தி?

அது ஏன்? அடுத்த பதிவில் சொல்கிறேன்.


November 02, 2008

சினிமா சினிமா

என்னடா இது, மதுரைக்கு வந்த சோதனை? நம்மளை யாருமே பிரத்தியேகமா அழைக்கலியே, அழைக்காமலேயே அழை விருந்தாளியாக இந்தத் தலைப்பில் எழுதிடலாமான்னு நிறைய யோசித்திருக்கிறேன். போனாப் போகட்டும், இவன் எழுதுவதையும் தமிழ் பேசும் நல்லுலகம் படித்துத் தொலைக்கட்டும் என்று அழைப்பு பிச்சை விடுத முகுந்தனுக்கு கோடானு கோடி நன்றிகள்.

1)எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
என்ன உணர்ந்தீர்கள்?
எந்த வயதில் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. "இன்று போய் நாளை வா" என்ற பாக்கியராஜ் படத்தை பார்க்க விடாமல் அழுது கொண்டிருந்ததையும், அப்பா என்னை வெளியிலேயே வைத்துக் கொண்டிருந்ததையும் அம்மா சொல்லியிருக்கிறாள். சித்தப்பாவோடு "அலைகள் ஓய்வதில்லை" போய் வாடி என் கப்பக்கழங்கே பாட்டு கேட்டது மட்டும் நினைவில் நிற்கிறது. முழுதாக விவரம் தெரிந்து பார்த்த படம், காக்கிச் சட்டை. சிங்காரி சரக்கு நல்ல சரக்கு பாட்டுக்கு ஆட்டம் போட்டு, வீட்டுக்கு வந்த பின் அம்மாவிடம் வாங்கிக் கொண்டது நன்றாக ஞாபகம் இருக்கிறது.
சிறு வயதில் படங்களில் வரும் சண்டைகளைப் பார்க்கும் போது, இப்படி குதிப்பவர்களை ஒலிம்பிக்ஸிற்கு அனுப்பினால் இரண்டு மெடலாவது தேரும் என்று உணர்ந்தேன்.

2)கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
இணையத்திலுள்ள விமர்சனத்தை படித்துவிட்டு, படம் நன்றாக இருக்கிறது என்று ஏமார்ந்து போய் நேற்று ஏகன் போனோம். படம் பார்த்து விட்டு என் மனைவி காயத்ரிக்கு வந்த தலைவலி இன்னும் போக வில்லை. அமர்ந்து என்று சொல்வதை விட கொட்டாவி விட்டுக்கொண்டே பார்த்தேன் என்று சொல்லலம். எப்போடா படம் முடியும், வீட்டுக்கு கிளம்பலாம் என்று On a march என்று ரெடியாக இருந்தோம். படம் விட்டதும், ஓடியே வந்து விட்டோம்.

3)கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது,எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ்ப் படம், "ராமன் தேடிய சீதை". எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. நாம் தான் ஒரே பெண்ணைப் பார்த்து விட்டு, அவளைக் கட்டிக் கொண்டோம். ஆனால், சேரன் இப்படி ரவுண்டு கட்டி பஜ்ஜி சொஜ்ஜியெல்லாம் சாப்பிடுவதைப் பார்த்து காதில் கொஞ்சம் புகை வந்தது. அதெப்படி சேரன் படத்திற்கு மட்டும் இப்படி அம்சமாக கதாநயகிகள் கிடைக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
அரங்கிலன்றிப் பார்த்த தமிழல்லாத படம், "The Punisher". தன் குடும்பத்தை கொன்றவர்களை கொன்று குவிக்கிறான். வீட்டில் ஹோம் தியேடர் வாங்கி பார்த்த முதல் படமும் இது தான்.

4) மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
இரண்டு படங்கள். மகாநதி மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால். இரண்டு படங்களையும் 6 முறை அரங்கில் போய்ப் பார்த்தேன்.
மகாநதியை இப்போது சமீபத்தில் பார்த்தபோது, ஷோபனா தூக்கத்தில் புலம்பும் காட்சியை காண முடியவில்லை. என்னையும் அறியாமல் கண்களில் உதிரமே கொட்டுகிறதோ என நினைத்தேன்.

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
எப்போது சினிமாக்காரர்கள் அரசியலில் புகுந்தார்களோ அப்போதே சினிமாவிலும் அரசியல் புகுந்து விட்டது. என்னைத் தாக்கிய சம்பவம் என்பதை விட எரிச்சலூட்டிய சம்பவம் என்று தான் சொல்ல வேண்டும். கமல்ஹாசன் இயக்கிய சண்டியர் படத்திற்கு சாதிச் சாயம் பூசி படப்பிடிப்புக்கு நிறைய நெருக்கடி கொடுத்த அரசியல் சம்பவம் ரொம்பவே எரிச்சலூட்டியது. அதனால் படத்தின் பெயரையே விருமாண்டி என மாற்ற வேண்டியிருந்தது. எங்கள் ஊரில் சண்டியரென்பது தெனாவட்டா திரிபவர்களைத் தான் சொல்லுவோம். இதற்கு எந்த சாதியும் விதிவிலக்கல்ல.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
I feel that we live in an era, where technology has reached its zenith.
அப்படியிருக்க சமீபத்தில் வெளிவந்துள்ள சிவாஜி, தசாவதாரம் மற்றும் ஏனைய சினிமாக்களில் வெளிக்காட்டப்படும் தொழில் நுட்பம் அவ்வளவாக பிரமிக்க வைப்பதில்லை. இன்ரைய சினிமாக்காரர்களுக்கு மென்பொருள் துறை ரொம்பவே உதவுகிறது.
ஆனால் எந்த வித தொழில் நுட்ப வசதியும் இல்லாத காலத்தில் எடுக்கப்பட்ட விட்டலாச்சாரியார் படங்கள் தான் என்னை மிகவும் கவருகின்றன. அதிலும் சந்திரலேகா, ஔவையார், பாதாள பைரவி , மாயா பஜார் போன்ற படங்களில் வந்த தொழில் நுட்பத்தை ரொமவே மதிக்கிறேன். பேச்சுக்குச் சொல்லவில்லை. உண்மையாகவே சொல்கிறேன்.

6) தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
இணையதளத்தில் சினிமா பற்றிய செய்திகள் வாசிப்பதுண்டு. வீட்டில் ஆனந்த விகடன் வாங்கிய காலத்தில் சினிமா செய்திகள் அதில் படிப்பதுண்டு.

7)தமிழ்ச்சினிமா இசை?
என்றென்றும் இளையரஜா. அதிலும் S.P.பாலசுப்பிரமணியம் ஜானகி கூட்டணியில் வந்த டூயட் பட்டுக்கள் ரொம்பவே பிடிக்கும்.
சில ஏ.ஆர்.ராஹமான், வித்யாசாகர் பாட்டுக்கள் பிடிக்கும்.

8)தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
கொல்கத்தாவில் இருந்த போது வாராவாரம் ஹிந்தி படத்துக்குப் போய் விடுவேன். என்னல்லாமோ ஹிந்தி படம் பார்த்தேன்.
கல்யாணம் ஆவதற்கு முன் ஏதாவது நல்ல ஆங்கிலப் படம் பார்ப்பதுண்டு. கல்யாணம் ஆன பிறகு, எப்போதும் கிரிக்கட்டே பார்க்கிறேன் என்பதற்கு தண்டனையாக அவ்வப்போது களியுஞாலு, ஸ்வப்பனக்கூடு கிளாஸ்மேட் போன்ற மலையாளப் படங்களும் பார்க்க நேரிடுகிறது. வெருதே ஒரு பார்யா என்ற மலையாளப் படத்தை எப்படியாவது பார்க்க வைத்து விடவேண்டும் என்ற சபதத்தை காயத்ரி எடுத்துக்கொண்டிருக்கிறாள்.
சிறு வயதில் தூர்தர்ஷனில் போடும் மாநில மொழித் திரைப்பட வரிசையில் சில தெலுங்கு படம் பார்த்த ஞாபகம். குறிப்பிட்டுச் சொன்னால் தியாகையா, சங்கராபரணம், தான வீர சூர கர்ணா.
சத்யஜிட் ராய் எடுத்த பதேர் பாஞ்சாலி என்னை மிகவும் பாதித்தது என்று சொல்ல ஆசை தான். ஆனால் பார்க்கமலேயே எப்படி பாதித்தது என்று சொல்ல?

9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா?
என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?
தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

கள்ளத் தொடர்பு கூட கிடையாது. கமல்ஹாசன் சிம்ரன் ரம்யாகிருஷ்ணன் தவிர வேறெந்த திரைத் துரையினரையும் பார்த்ததில்லை. முடிந்தால் அசினைப் பார்த்து அடோகிரஃப் வாங்க வேண்டும்.

என் தந்தையின் ஒண்ணு விட்ட மாமா தியாகராஜனுக்கு (பிரஷாந்த் அப்பா) உதவியாளராக இருந்திருக்கிறார். கொம்பேரி மூக்கன், மலையூர் மம்புட்டியான் போன்ற படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். சிறு வயதில் அவரை பார்த்திருக்கிறேன். மற்றபடி வேறெந்தத் தொடர்பும் கிடையாது.
என்னோடு தொடர்பு வைத்துக் கொள்வதால் தமிழ் சினிமாவில் எப்படிப் பட்ட படங்கள் எடுக்கக்கூடாது என்று அறிவுறை வேணாலும் வழங்கலாம்.

10)தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழ்ச் சினிமாவை அரசியலிலிருந்து அகற்றிவிட்டால் கொஞ்சமேனும் உருப்பட வாய்ப்புண்டு. இந்த மாஸ் ஹீரோயிசம், ஹீரொவை கடவுள் போல் காண்பிப்பது நின்றால் எதிர்காலம் நன்றாக இருக்கும். ஆனால் தமிழ் சினிமா கதாநாயகர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று தெரிகிறது. இவர்களே சென்ற தலைமுறையின் வாரிசுகள் தான். அடுத்த 10 வருடத்தில் இவர்களின் வாரிசுகளைத் தான் சினிமாவில் பார்க்க முடியும்.

11) அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள்,செய்திகள் எதுவுமே பத்திரிகைகள்,தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட
ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்?
தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
ஏற்கனவே சப்-ப்ரைம் க்ரைஸிஸால் பொருளாதாரம் தில்லானா மோஹனாம்பாள் ரேஞ்சுக்கு ததிகிணத்தோம் போடுகிறது. எவ்வளவு பேர் வேலையில்லாமல் ஆகப்போகிறார்கள் என தெரியவில்லை. இப்போது சினிமாவும் ஒரு இன்டஸ்ட்ரியகிவிட்டது. ஒரு வருடத்திற்கு தமிழ் சினிமாவே இல்லையென்றால் இதனால் சினிமாவையே நம்பியிருக்கும் நிறைய தொழிலாளிகள் பாதிப்பார்கள். விளைவு ரொம்பவே விபரீதமாக இருக்கும். நடிகர்கள், நடிகைகள் எங்காவது போய் கலைவிழா நடத்தி சம்பாதித்துக் கொள்வார்கள். ஆனால் பாவம் இந்த டெக்னீஷியன்கள், ஒப்பனைக்காரர்கள், லைட்மேன் இவர்களெல்லாம் என்ன செய்வார்கள். கிசு கிசு எழுதும் நிருபர்கள் அவர்கள் மென்ன அவல் கிடைக்காமல் தற்கொலை செய்து கொள்வார்கள்.

வேண்டாம் இது பற்றிப் பேச மட்டுமல்ல, நினைக்கவே வேண்டாம்.


இந்தத் தொடர் என்னோடு நின்றுவிடாமலிருக்க தற்போது பிளாகுலகிலிருந்து அஞ்ஞாதவாசம் மேற்கொண்டிருக்கும் ரம்யா ரமணியையும் குந்தவையும் அன்புடன் அழைக்கிறேன்.