Pages

April 25, 2009

நிறைய ஞாபகம்.. கொஞ்சம் மறதி

என்னை சில சமயங்களில் ரொம்ப கோபமூட்டுவது எனக்குள் இருக்கும் ஒரு சிறு வியாதி. அது மற்றவர்களுக்கும் இருக்கிறது என்று தெரிந்து கொண்டதில் கொஞ்சம் ஆனந்தம். மனித மனம் தான் எவ்வளவு மேன்மையானது. ஒரு சக மனிதனுக்கும் தன் வியாதியிருப்பதைக் கண்டு மகிழ்கிறது.

அது என்ன வியாதின்னா, அசாதாரண விஷயங்களையெல்லாம் ஞாபகம் வைத்திருப்பேன். ஆனா சின்ன சின்ன விஷயங்களையெல்லாம் மறந்துடுவேன்.

எந்தெந்த அணிக்கெதிராக இந்தியா எவ்வளவு ரன் எடுத்தது. ஒரு கிரிக்கெட் மாட்சிலிருந்து ஒரு காட்சி பார்த்தாலே, யாருக்கெதிராக, எங்கு எப்போது நடந்தது, இந்தியா எவ்வளவு எடுத்தது, ஆட்ட நாயகன் யார், இப்படி சகட்டு மேனிக்கு ஞாபகம் இருக்கும். 

இது மட்டுமல்ல, ஸ்டெஃபி கிராஃப் எத்தனை முறை கிராண்ட் ஸ்லாம் வென்றார், யாரை தோற்கடித்தார், எந்த மேட்சில் எந்த நிற ஸ்கர்ட் அணிந்திருந்தார், அவரது முதல் பாய் ஃப்ரெண்ட் யார், பிறந்த நாள் என்ன, சொந்த ஊர் என்ன இப்படி இன்னும் பல.  “ஆஹா, நம்ம புருஷனுக்குத்தான் எவ்வளவு ஞாபக சக்தி இருக்கு” என்று ஒரு நாள் கூட காயத்ரி பிரமித்தது கிடையாது என்பது என் துரதிர்ஷ்டம்.

ஆனால் ரொம்ப அற்பமான விஷயங்கள் மறந்து போய்விடும். ஆஃபீஸ் கிளம்பும் அவசரத்தில் சில நாள் கைபேசி எடுத்துக்கொள்ள மறந்துவிடுவேன். அடையாள அட்டையை மறந்து விட்டு, ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்டிடம் தலைச் சொறிந்து கொண்டு நிற்க வேண்டும். ரிசப்ஷனிஸ்ட் கொஞ்சம் பார்க்கும் படி இருந்தால், நிதமும் அடையாள அட்டையை மறக்கலாம். உட்கார்ந்திருப்பதென்னவோ, முறுக்கிய மீசையுடன் ஒரு காவலாளி. 

கார் சாவியை எடுத்து எங்காவது வைத்திருப்பேன் ஆனால், எங்கே வைத்தேன் என்று சமயத்துக்கு ஞாபகம் வந்து தொலைக்காது. காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டது போல் குதி குதியென்று குதிப்பேன். ஆனால் இது எதற்கும் காயத்ரி அசங்க மாட்டாள் என்பது கொஞ்சம் கசப்பான உண்மை. அதென்னவோ, அவள் தேட ஆரம்பித்தவுடனேயே, “இதோ இருக்கிறேன்” என்று சாவியே கூவிக் கொண்டு அவள் கைக்கு வந்து விடுவது போலிருக்கும். 

இது கூடப் பரவாயில்லை. ஒரு நாள் காயத்ரி கட்டிக் கொடுத்த சாப்பாடு கொண்டு வந்திருப்பது கூட  ஞாபகமில்லாமல், ஆஃபீஸ் கேண்டீனில் சாப்பிட்டு விட்டு இரவு காயத்ரி டிஃபன் பாக்ஸைத் திறந்து பார்த்த பின் தான் தெரிந்தது அன்று நான் வீட்டிலிருந்து கொண்டு போன சாப்பாடைச் சாப்பிடவில்லை என்று. நாகரீகம் கருதி, அதற்குப் பின் என்ன நடந்ததென்பதை நான் சொல்ல மாட்டேன். இந்த மாதிரியெல்லாம் நடக்கும் போது, ரொம்ப வயதாகிவிட்டதோ என்ற கவலை வந்து விடுகிறது. 

இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களாவது பரவாயில்லை. ஒரு தடவை சிம்ரன் பிறந்த நாள் ஞாபகம் வைத்திருந்து பிள்ளையார் கோவிலில் சிம்ரனின் நலனுக்காக வேண்டிக்கொண்டு விட்டு, இரண்டு வாரங்கள் கழித்து வந்த காயத்ரியின் பிறந்த நாளை மறந்தே போய் விட்டேன். அம்மணி காலையிலிருந்து ஒன்றுமெ பேசவில்லை. ஆஃபீஸ் கிளம்பும் போது தான் என் அம்மா வாங்கிக் கொடுத்திருந்த புதுத் துணியை அணிந்திருந்தபோது தான் ஞாபகம் வந்தது, அன்று அவள் பிறந்த நாள் என்று. புயலுக்கு முன் வரும் நிசப்தத்தைக் கூடத் தாங்கிக் கொள்ளலாம், அம்மணியின் நிசப்தம் ரொம்பவுமே அபாயகரமானது. பர்ஸ் ரொம்ப இளைத்த பிறகே, புயல் கரையைக் கடக்காமல் கரைந்து போனது. 

இந்த வருடமும், சிம்ரன் பிறந்த நாள் ஞாபகம் வந்தது. அன்றே ஒரு சபதம் எடுத்துக் கொண்டேன். இம்முறை காயத்ரியின் பிறந்த நாளை மறக்கக் கூடாதென்று. அதற்காக சமயோசிதமாக ஒரு நல்ல காரியமும் செய்தேன். ஆனால் நான் செய்த காரியம், எனக்கு அனுகூலமாய் இருப்பதை விட்டுவிட்டு, மீண்டும் என் காலை வாரி விட்டது. காயத்ரியின் பிறந்த நாளன்று காலை எழுந்ததுமே வாழ்த்து சொல்லிவிட்டேன். ஆனாலும் காலையில் புயல் சின்னம்.

பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. காயத்ரி பிறந்தநாள் அன்று சரியாக இரவு பன்னிரண்டு மணிக்கு எனக்கு ஞாபகம் வரவழைப்பதற்காக கைபேசியில் ரிமைண்டர் வைத்துக் கொண்டேன். அந்த பாழாப்போற கைபேசியும் இரவு பன்னிரண்டு மணிக்கு ஒலித்திருக்கிறது. ஆனால் என் காதில் தான் அந்த ஒலி விழ வில்லை. போன ஜன்மத்தில் கும்பகர்ணனாகப் பிறந்திருப்பேனோ என்னவோ? ஆனால் கயத்ரி எழுந்துவிட்டாள். நல்ல வேளை, நித்ரா தேவியின் ஆதிக்கத்தில் நான் இருந்தால் , காயத்ரியின் முகம் போன போக்கை நான் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. அம்மணிக்கு முதலில் நான் அவள் பிறந்த நாளுக்காக கைப்பேசியில் ரிமைண்டர் வைத்திருப்பதைப் பார்த்து நொந்து போய்விட்டாள். இரவு 12 மணிக்கு கைபேசியின் ஒலி கேட்டு அவளுக்கு தூக்கமும் போய்விட்டது. ஆனாலும் காலையில் எழுந்தவுடன் வாழ்த்து சொன்னதால் ஏதோ கொஞ்சம் பிழைத்தேன். இருந்தாலும் புயல் காற்று வீசத்தான் செய்தது. நல்ல வேளை அவ்வளவாக சேதம் ஏதும் இல்லை. 

ஏங்க மனைவியின் பிறந்த நாளுக்கு கைபேசியில் ரிமைண்டர் வைத்துக் கொள்வது அவ்வளவு பெரிய தவறா? இந்த பெண்களைப் புரிஞ்சுக்கவே முடியலையேப்பா?என்ன அபாரமான ஞாபக சக்தி இருந்து என்ன செய்ய? இந்த மாதிரி சின்ன விஷயங்கள் அப்பப்போ காலை வாரி விடத்தான் செய்கின்றன.

April 24, 2009

சுய விளம்பரம்

ஐ.பி.எல் பற்றி என்னுடைய இந்த கிரிக்கெட்  இணையதளத்தில் எழுதுகிறேன். அங்கேயும் வந்து வாக்களித்து  விட்டுப் போங்கள். சே, தேர்தல் சமையத்துல இப்படித்தான் வார்த்தை வருது. 

உங்கள் நண்பர்களையும் கிட்டயும் கொஞ்சம் சொல்லுங்கள் :-)

April 15, 2009

சட்டத்துக்கு அறிவுமா இல்லை??

பாகிஸ்தான் தீவிரவாதியான ஆமீர் அஜ்மல் கஸாப் மீது இன்று ஒரு வழியாக விசாரணை ஆரம்பமாகவிருந்தது. மக்களை சரமாரியாக சுட்டுக் கொன்று குவிக்கும் ஒரு மிருகத்தை கையும் களவுமாகப் பிடிபட்டவன் மீது எந்த வித நடவடிக்கையும் இன்று வரை எடுத்தபாடில்லை. நாட்டின் பிரதமருக்கு ஒப்பான பாதுகாப்பு கொடுக்கப்பட்டு ஒரு ராஜ போக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், அவனுக்காக ஆஜராக வழக்குறைஞர் யாரும் இல்லை என்கிறார்கள். என்ன கொடுமையடா இது? கேட்டால் இது தான் நாட்டின் சட்டமாம்.

இதை விட கேவலம் என்னவென்றால், இவனுக்காக ஆஜராக நீதிமன்றமே ஒரு வழக்குறைஞரை நியமிக்கிறது. இன்று அந்த வழக்குறைஞரையும் நீக்கி விட்டது. என்னவோ, அவர் Spirit of the Law படி நடக்க வில்லையாம். ஒரு வழியாக கிட்டத்தட்ட 5 மாதங்கள் கழித்து ஆரம்பமான விசாரணை, அடியப்பிடிடா பாரத வட்டா என்று மீண்டும் அதே நிலைமைக்குப் போய் விட்டது. இதிலுள்ள கேலிக் கூத்தென்னவென்றால், இப்போது கஸாப் ஒரு பாகிஸ்தான் வழக்குறைஞரை நாடுகிறாராம்.

ஒன்று எனக்குப் புரியவில்லை. கஸாப் போன்ற தீவிரவாதிகள் செய்தது சாதாரண குற்றமில்லை. அது நமது நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர். இவர்களை எப்படி போலீஸ் பிடித்து, நீதிமன்றம் இவர்களை விசாரிக்கலாம். பிடிபட்ட தீவிரவாதிகளை ராணுவமல்லவா அவர்களை நீதிமன்றமத்தில் வைத்து விசாரிக்க வேண்டும். காஷ்மீரில் பிடிபடும் தீவிரவாதிகளையெல்லாம், ராணுவம் தானே விசாரித்து, அவர்களுக்கான தண்டனையை வழங்குகிறது. அவர்கள் எடுக்கும் முடிவை, எந்த நீதிமன்றமோ, மனித உரிமைக் கழகமோ ஒன்று புடுங்க முடியாது. பேசாமல் கஸாபையும் ராணுவத்திடம் ஒப்படைத்து விடலாம்.

கையும் களவுமாகப் பிடிபட்ட ஒரு தேச துரோகி மிருகத்துக்கு இவ்வளவு சலுகைகளா? கேட்டால் சட்டமாம், நியாயமாம். தீவிரவாதிகளை இப்படி அன்பாக நடத்தினால், ”எம்புட்டு பேரைக் கொன்னாலும், இவனுங்க ஒண்ணுமே பண்ண மாட்டாங்க, இவனுங்க ரொம்ப நல்லவனுங்கடா”ன்னு நினைத்து, அடுத்த தாக்குதலுக்கு தேதி குறிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

கஸாபின் குற்றத்தை இன்னும் யார் வந்து நிரூபிக்க வேண்டும். நீதிபதி முன்னால் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டால், இவனுக்கு ஆயுள் தண்டனை கூட கொடுத்து விடுவார்கள். இல்லையென்றால், சுப்ரீம் கோர்டில் மேல் மனு கூட முலாயம் சிங் மாதிரி ஆட்கள் போடுவார்கள். சட்டம் தன் கண்களின் மீது கறுப்புத்துணி கட்டியிருப்பதால், சட்டம் குருடு என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது தான் தெரிகிறது, அதற்கு மூளையும் கிடையாது என்று.

தான் உயிரைக் கொடுத்துப் பிடித்த தீவிரவாதிக்கு இவ்வளவு மரியாதை கிடைப்பது தெரிந்தால், அவனைப் பிடித்த, கான்ஸ்டபிள் துக்காராம் ஆத்மா சாந்தி அடைந்திருக்குமா என்று சந்தேகம் வருகிறது. கஸாபுக்கு மரண தண்டனை விதித்து, அதை கூடிய சீக்கிரமே நிறைவேற்றுவது தான் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதிமன்றம் வழங்கும் நியாயமாகும். இவ்வளவு நாளாக நியாயம் கிடைக்காமல் செய்வதிருப்பதே பெரிய தவறாகும். Justice Delayed is Justice Denied. சட்டம் இப்படித்தான் முட்டாள்த் தனமாக செயல் படுமென்றால், அந்தச் சட்டத்தையே மாற்ற வேண்டியது தான்.

கையும் களவுமாகப் பிடிபட்ட ஒரு தீவிரவாதிக்கே, இவ்வளவு மரியாதை என்றால், கோடி கோடியாக மக்களை ஏமாற்றி பணம் செய்த அரசியல்வாதிகளையா, இந்த நீதிமன்றங்கள் தண்டிக்கப் போகின்றன?

April 08, 2009

பொண்ணுப் பார்க்க போவோமா?!

எல்லாரும் சொ(சோ)கமா இருக்கீயேளா? “இம்புட்டு நேரம் நல்லாத்தேம்ல இருந்தோம், நீ எளுதியத படிக்கோம்லா, இனி என்னாவப்போகுதோ, தெரியல”ங்கான் ஒரு கிறுக்குப் பய. அவன் சொல்லுறத கண்டுக்கிட வேண்டாம்.

ஊர்ப்பக்கம் போயி ரொம்ப நாளாச்சா, நம்மூர் ஆளுங்க கிட்ட பேசியும் ரொம்ப நாளாயிருச்சு. திருநெல்வேலியில பேசுத தமிளே மறந்து போயிருவனோன்னு பயம் வந்திருச்சின்னா பாத்துக்கிடுங்க. வீட்டம்மாகிட்ட இந்த மாறி பேசினா, அதுக்கு ஒரு எளவும் புரியலை. யார் கிட்டயோ பேசுதேன்னு நினைச்சுக்கிட்டு பேந்தப் பேந்த முளிக்கா. சில சமயம் முளிக்காளா மொறக்காளான்னே தெரியலை. யார்கிட்டயும் எங்கூர் தமிளுல பேச முடியல. அதனால தான் உங்களையெல்லாம் நெல்லைத் தமிளுல குளிப்பாட்டலாம்னு கிளம்பிட்டேன். நம்புங்க மக்கா, நெல்லைத் தமிழ், வெல்லத் தமிழ்.

சரி மேட்டருக்கு வருதேன். கொஞ்ச நாளுக்கு முன்னாடி, திவ்யா ஒரு பதிவு எளுதியிருந்தாங்க. அதாவது, பொண்ணு பார்க்க வருத ஆளுகிட்ட என்ன பேசுறதுன்னு. நல்லாத்தேன் எளுதியிருந்தாங்க. அப்பவே, இதுக்கு நாமளும் ஒரு எசைப் பாட்டு, சீ, எசைப்பதிவு எளுதிறணும் முடிவு பண்ணேன். ஆனாப் பாருங்க இந்த எளவெடுத்த ஆஃபீஸுல “கொடுக்க காசுக்கு கொஞ்சம் வேலையைப் பாருல”ன்னு சொல்லி உசுர வாங்கிப்புட்டானுங்க. இப்போத்தேன் எளுத முடியுது.

எல்லா வீட்டுலயும், சும்மாத் திரியுற பசங்களுக்கு, இந்த கல்யாணம்’ற கருமாதியப் பண்ணிருவாங்க. இதுலேர்ந்து தப்பிக்க வளி ரொம்ப கொறவு. “நீ என்னல குளியில தள்ளுது, நானே விளுந்துக்கிடுதேன்னு” சொல்லி சில பசங்க ஏதாச்சும் ஒரு பொண்ணைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிடுவாங்க. அவங்களைப் பத்தி நமக்கென்ன கவலை.

ஆனா, இந்த வீட்டுல பாத்து கல்யாணம் பண்ணி வைக்காங்க பார்த்தீயெளா, அந்தப் பசங்களுக்குத் தான் இந்தப் பொண்ணு பார்க்கற வைபவமெல்லாம். இந்த சடங்குலயும் ஒரு ‘இது’ இருக்குது’ங்கறத ஒத்துக்கிடணும்.

அம்மா அப்பா அங்கீகாரத்தோட சைட் அடிக்கறதுக்குப் பேரு தான் இந்தப் பொண்ணு பார்க்கற சடங்கு. முன்னெல்லாம் குடும்பத்தோட ஒரு பத்து பேர் போயித்தான் பொண்ண பார்ப்பாங்க. நம்மாளு இம்புட்டுப் பேத்துக்கு நடுவ ஒரு பொண்ணப் பார்த்துப் பளக்கமிருக்காது. என்ன பேசுறது ஏது பேசறதுன்னு ஒரே ஒதறலா இருக்கும். இந்த ஒதறல் தான் மவனே ஒனக்கு மொத எதிரி. இத மொதல்ல ஓதரித் தள்ளணும்.

இன்னொரு விஷயம், பொண்ணப் பார்க்கறதுக்கு முன்னாடியே, அந்தப் பொண்ணு பத்தியும் அது குடும்பத்தப் பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சிக்கிடறது நல்லது. ஏன் சொல்லுதேம்னா, கிடைக்கப் போறதோ சில நிமிஷங்கள் தான். அந்த நேரத்துல இந்த அறி்முகப் படலம் வேண்டாம்லா. அதுக்குத் தேன் சொல்லுதேன்.

அப்புறம் இந்தப் பொண்ணப் பாடச் சொல்லறது, ஆடச் சொல்லறது, இதெல்லாம் வேண்டாம் மக்கா. இந்த மிரிண்டா விளம்பரம் மாதிரி ஆயிடுச்சின்னா, பொளப்பு நாறிறும். எம்புட்டு முடியுமோ, அம்புட்டு பேசுங்க. ஏன்னா கல்யாணம் ஆன பெறவு நீங்க பேசி சம்சாரம் கேக்குற வாய்ப்பு கெடக்காது.

அப்புறம் இன்னொரு விஷயம். பொண்ணு பார்க்கப் போறது, நம்ம மேல பொண்ணு இம்ப்ரெஸ் ஆவணும்’ங்கறுதுக்காக. முன்னெல்லாம் நிலம வேற மாதிரி இருந்தது. ஆனா இப்போ நெலம தலை கீழ். அதனால மேன்லியா நடந்துக்குங்க. தன்னப் பத்தி நல்லவன் வல்லவன், அப்படி இப்படின்னு சொல்லுங்க. எப்படியும் கல்யாணமாயி வண்டவாளம் தண்டவாளம் ஏறப் போகுது. அது வரைக்குமாவது, அவங்க மனசுல ராசா மாதிரி ஒரு இமேஜ் பில்ட் அப் கொடுக்கலாம்லா, என்ன நான் சொல்லுறது?

அப்புறம், இந்த சொஜ்ஜி பஜ்ஜி, ஸ்வீட் காரம் காஃபி இதெல்லாம் கொடுப்பாங்க. நமக்குத்தான் எப்பவுமே அன்லிமிடட் மீல்ஸ் ஃபுல் கட்டு கட்டியே பளக்கம்’னுட்டு, இன்னும் கொஞ்சம் கேசரி போடுங்க, ரெண்டு பஜ்ஜி வைங்க, அது இதுன்னு கேட்டுத் தொலையாத. நாமளும் டீஜண்டுன்னு காட்டிக்கிடணும்.

ஓவரா கேள்வியெல்லாம் கேட்டு வைக்காதீங்க. பெறவு நினைத்தேன் வந்தாய் தேவ்யானி கணக்கா அவுங்க எதிர் கேள்வி கேட்டா, தொலைஞ்சோம். நாம வேலைக்கு ஆள் எடுக்கறதில்லை. உங்களுக்கு வேலையில் அயல்நாடு போகு்ம் வாய்ப்பு இருந்தால் அவங்ககிட்ட பாஸ்போர்ட் எல்லாம் இருக்குதான்னு கேட்டு வச்சுக்க்கிடுங்க. அப்படியே அவங்க வேலையில் அயல்நாடு போகும் வாய்ப்பு இருக்குதான்னும் தெரிஞ்சு வச்சுக்கிடுங்க. ஊர் உலகத்துல நெலமை சரியா இல்லைல்லா, அதேன்.

இன்னொரு முக்கியமான விஷயம். சில வீட்டுல வரதக்ஷணை எதிர்பார்ப்பாங்க. அம்மா அப்பா கிட்ட வரதக்ஷணை ஏதும் எதிர்பார்க்காதீங்கன்னு சொல்லிப்பாருங்க. அப்படி அவங்க மசியலைன்னா, அதைப் பத்தி முன் கூட்டியே வீட்டுப் பெரியவங்களை பேசிக்கிடச் சொல்லுங்க. இந்த பொண்ணு பார்க்கப் போறன்னிக்கு அதப் பற்றிப் பேச வேண்டாம். ஏன்னா நாம போறது, சந்தோஷமா(???!!!!) வாழறதுக்கு ஒரு துணையைத் தேடி. வியாபாரம் பேசுறதுக்கில்லை.

அப்புறம் ஒரு முக்கியமான் விஷயம்டே. பொண்ணு பாக்கப் போறதுக்கு முன்னாடி, பொண்ணோட ஃபோடோவெல்லாம் வூட்டுல காட்டுவாய்ங்க. அதுல பொண்ணு புடிச்சிருந்தா மட்டும், இந்த பொண்ணு பார்க்கப் புறப்புடுங்க. குடும்பத்தோட போய் பொண்ணயும் பார்த்துட்டு, நாங்க அப்புறமா சொல்லியனுப்பறோம்னு சொல்லிப்புட்டு வராதீங்க. ஒரு பொண்ண பார்த்தோமா, அதையே கட்டினமான்னு இருக்கணும். அத விட்டுப்புட்டு, நாலஞ்சு பொண்ண பார்த்துப்புட்டு நல்லா சொஜ்ஜி பஜ்ஜியெல்லாம் தின்னுப்புட்டு, இருக்கறதுல எது தேருதுன்னு யோசிக்காதீங்க. எங்கூரு பக்கத்துலயெல்லாம், கல்யாணம் கட்டுதேன்னு சொன்னாத்தேன், பொண்ணெயே காட்டுவாங்க . பொண்ணையும் பார்த்துப்புட்டு, பிடிக்கலைன்னா, பெறவு உங்க உசுருக்கு நாங்க உத்தரவாதம் கிடையாது’ன்னுடுவாங்க.

“ஆமாம், இம்புட்டுச் சொல்லுதியே, பொண்ணப் பார்க்கயில, என்னாத்த பேசுறதுன்னு, ஒண்ணுமே சொல்லலியேல்ல, திவ்யா, எம்புட்டு சொல்லியிருக்காங்க”ன்னு கேக்குதீயேளா?

“எலேய் முட்டாப்பயலே, கெடைக்க பத்து நிமிஷத்துல என்னத்தலே பேச முடிவு செய்ய முடியும்? தலைக்குமேல ஆண்டவன் எதையோ கிறுக்கி அனுப்பியிருக்கான். எல்லாம் அதுபடி தான் நடக்கும். சும்மாவா சொன்னாங்க, மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்”னு. அமையலைன்னா, தலைவிதிய நொந்துகிட்டு, டஸ்மாக்’ல ஒரு கட்டிங்க் அடிச்சிக்கிட வேண்டியது தான்”.

வாழ்க்கைத் துணை தேடுறது, ரொம்ப ஸ்வாரஸ்யமானது, ஆனா கவனமா இருக்கணும். வாழ்த்துக்கள்.

டிஸ்கி: மேலே எழுதினதுல என்னென்ன நான் பண்ணேன்னெல்லாம் பின்னூட்டத்துல கேக்கப்படாது. அதெல்லாம் தொளில் ரகசியம்.