Pages

September 27, 2008

கொல்கத்தா தினங்கள் - 2

மு.கு: சென்ற பதிவில் கொல்கத்தாவில் அடித்த லூட்டி பற்றி எழுதுகிறேன், என்று சொல்லிவிட்டேன். படித்து விட்டு இதெல்லாம் ஒரு லூட்டின்னு எழுத வந்துட்டானுங்கன்னு கோபித்துக் கொள்ளக் கூடாது.

கொல்கத்தாவில் சரியாக ஒரு வருடம் இருந்தேன். செப்டம்பர் 20 1999 வோல்டாஸில் சேர்ந்து, அடுத்த வருடம் செப்டம்பர் 20ஆம் தேதி கொல்கத்தாவிற்கு குட் பை சொல்லியாயிற்று. முதல் 10 நாட்கள் அண்ணா வீட்டில் தங்கி விட்டு, நண்பனுடன் கம்பெனி கொடுத்த பிரம்மாண்டமான வீட்டிற்கு குடிபெயர்ந்தேன். வீட்டிற்குள்ளேயே பூப்பந்தாடுவோம். அவ்வளவு பெரிய வீடு. 

வீட்டிற்குப் பின்னாலேயே ஒரு லேடீஸ் காலேஜ். 8 மணியளவில் பால்கனிக்கு வந்து நின்றால் ஒரு ஃபேஷன் பரேடே பார்க்கலாம். ஒவ்வொருத்தருக்காய் மார்க் போடுவோம். சத்தம் போட்டு கூப்பிடுவோம். புரியவா போகிறது. சில நாட்கள் பால்கனியில் நின்று கொண்டு டம்பெல்ஸ் எல்லாம் எடுத்து வந்து ஆர்ம்ஸ் காட்டுவோம்.  பெங்காலி பெண்களை என்ன போட்டு வளற்கிறார்கள் என்று தெரியவில்லை. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி கூட சீறுடையில் இல்லாமலிருந்தால், இருபது வயது மதிக்கலாம். இவர்களுக்கெல்லாம் ஒரு சூப்பர் ஹிந்தி கோட் வார்த்தை கண்டு பிடித்தோம். BHMB!! எல்லாம் ரசகுல்லா மஹிமை. ரசகுல்லா ரசகுல்லா தான்!!!

நம்மூர் மாதிரி பெண்களுக்கென பஸ்ஸில் இட ஒதுக்கீடெல்லாம் கிடையாது. யாரும் எங்கும் உட்காரலாம். இப்படியொரு விதியிருப்பது 2 மாதங்கள் கழித்துத் தான் தெரிந்து கொண்டேன். தெரிந்து கொண்ட பிறகு சும்மா இருப்போமா?? ஃபிகர் இல்லாத பஸ்ஸில் ஏறுவதே கிடையாது.

கொல்கத்தாவில் மட்டுமே இன்றளவு இந்தியாவில் இயங்கி வரும் போக்குவரத்து சாதனம், டிராம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேய அரசால் கொண்டு வரப்பட்டது. அன்று இயங்கிய டிராம் வண்டிகளின் பெட்டிகளுக்கும், இன்றைய டிராம் பெட்டிகளுக்கும் ஒரு வித்தியாசம் கூட இல்லை. அன்று குதிரைகள் இழுத்தன. இன்று, மோட்டார் பொறுத்தப் பட்டு ஓடுகின்றன. இரண்டு பெட்டிகள் பொறுத்தப்பட்டிருக்கும். ஒன்றில் கூட்டம் நிரம்பி வழியும். இன்னொன்றில் அவ்வளவாக கூட்டம் இருக்காது. விசாரித்ததில் ஒன்று ஃபர்ஸ்ட் கிளாஸ். வித்தியாசம் என்னவென்றால் ஃபர்ஸ்ட் கிளாசில் காற்றே வராத சத்தம் மட்டுமே வரும் மின் விசிறி இருக்கும். கட்டணத்தில் 50 பைசா வித்தியாசம். மக்கள் அவ்வளவு சிக்கனம். 

நம்மூர் சாப்பாடு சாப்பிட வேண்டுமென்றால், லேக் ரோட் என்னும் இடத்திலுள்ள ராமகிருஷ்ணா மெஸ் போகணும். பாதாள மார்க்கமாகப் பாயும் மெட்ரோ பிடித்து காளிகாட்டில் இறங்கி 15 நிமிடம் நடக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாள் தான் இவ்வளவு தூரம் வந்து சாப்பிட முடியும். அதனால், எப்போதுமே nose dashing eating தான்.
திரும்பி காளிகாட் வரை நடப்பதற்கு சக்தியிருக்காது. உண்ட மயக்கம் தொண்டருக்கே உண்டெனில், எங்களுக்கெஞ்ஞனம்? ஓடும் டிராமிலேயே ஏறிக்கொள்வோம். காளிகாட் ஸ்டேஷன் வந்ததும் டிக்கட்டே எடுக்காமல் குதித்து ஓடிவிடுவோம். ஒடும் டிராமிலிருந்து எளிதாக இறங்கி விடலாம், ஏறவும் செய்யலாம். என்ன நடத்துனர் ஏதோ புலம்புவார். நம் பரம்பரையையே வைவார். புரியவா போகிறது. பதிலுக்கு நாங்களும் போடா வெண்ணை என்று சொல்லிவிட்டு, "மாஃப் கீஜியே" என்று சொல்லி விடலாம்.

நம்மூர் சாப்பாடு கிடைக்கும் இன்னொரு இடம், மனோஹர்புக்கூர் ரோட்டிலுள்ள ஹோம்லி ராஜ் என்ற ஹோட்டல். ஆனால் இது கொஞ்சம் காஸ்ட்லி. சாப்பாடு 50 ரூபாய். நன்றாக இருக்கும். செவ்வாய்க் கிழமை தோறும் பொங்கல் போடுவார்கள். காலை 9 மணிக்குள் காலியாகிவிடும். பொங்கல் சாப்பிடுவதற்கென்றே 8 கிலோமீட்டர் தூரம் போயிருக்கிறோம்.

ஊரிலுள்ள நண்பர்களிடம் கொல்கத்தா போறேன் என்று சொன்னதும், "மச்சி, அங்கிட்டு சோனாகஞ்ச்ன்னு இடம் இருக்காம். அங்கிட்டு மட்டும் போயிடதே"ன்னு அறிவுரைத்தார்கள். உபயம் மஹாநதி படம். கொல்கத்தாவில் நான் தங்கியிருந்த இடம் "பெயர் போன" இடம். மனம் சற்றே விசனப்பட்டாலும் வாழ்க்கையில் தவறி விடலாம். வரிசையாக இரண்டு மூன்று நட்சத்திர ஹோட்டல்கள். இரவு 9 மணிக்குமேல் அங்கு தினமும் டிஸ்கோதே. கொல்கத்தாவில் உயர் தட்டு பையன்கள் சில பெண்களை கரெக்ட் செய்து கொண்டு போவார்கள். வெளியே வரும் போது தனது நிலைமையறியாது வருவார்கள். எங்களால் இவர்களை பார்க்க மட்டுமே முடியும்.!!

வாரம் ஒரு படம். டப்பா ஹிந்தி படமானாலும் பார்த்துவிடுவது. அப்படியே புதிதாக படமேதும் இல்லையென்றாலும், இருப்பதில் எது நல்லதாக இருக்கிறதோ, அதை இன்னொரு முறை பார்த்து விடுவது. 30 ரூப்பாய்க்கு மேல் பால்கனி டிக்கட் இருக்காது. அப்படியிருந்தால், தியேட்டரைக் கொளுத்திவிடுவார்கள். மிதுன் சக்கரபொர்த்தி நடித்த ஏராளமான மசாலா பெங்காலிப் படங்களும் நிறைய ஓடும். ஒரு பெங்காலிப் படம் கூடப் பார்த்ததில்லை.

துர்கா பூஜா படு விமரிசையாக இருக்கும். பலவந்தமாக வீடு தோறும் 500 ரூபாய் வசூல் செய்து விடுவார்கள். ஊரே அல்லோல கல்லோலப் படும். ஊரிலுள்ள அனைத்து பெண்களும் துர்கா பூஜா நடக்கும் பந்தலுக்கு வந்து ஆடிப்பாடிக்கொண்டிருப்பார்கள். அட்டு ஃபிகர் கூட ஐஷ்வர்யா ராய் போல் இருக்கும்.

புதிதாய் போர்டபிள் டி.வி வாங்கினோம். எங்கோ தொங்கிக் கொண்டிருந்த கேபிளை இழுத்து டி.வி.யில் சொருகினால், ஆஹா படம் தெரிகிறது. சன். டி.வி மட்டும் தமிழ் சானல்; போதுமே. துட்டே கொடுக்காமல் 10 மாதங்கள் கேபிள் டி.வி. பார்த்தோம்.

ஆஃபீஸில் இலவச இன்டர்நெட். மணிக்கு 60 ரூபாய் என்றிருந்த கால கட்டத்தில் இலவச இன்டர்நெட் ஒரு வரப்பிரசாதம். அதுவும் என்னுடைய டிபார்ட்மன்டில் மட்டும் தான் இந்த வசதி. அங்கு வேலை பார்த்தவர்களுக்கு இது இன்டர்நெட் என்று கூடத் தெரியவில்லை. நான் கேட்டதற்கு, இது ஈ-மெயில் செய்வதற்காக இப்படி மோடமெல்லாம் இருக்கு என்றார்கள். ஈ-மெயில் செய்வதற்கு மட்டும் மோடமா? எங்கே நான் கொஞ்சம் பார்க்கட்டும் என்று சொல்லி, www.hotmail.com திறந்திடு சீசே என்று சொல்லவும், என்ன அற்புதம், hotmail வலைத்தளம் திறக்கலானது. 

ஆறு மணிக்கெல்லாம் எல்லாரும் மூட்டையைக் கட்டிக் கொண்டு போய் விட்டபிறகு, இன்டர்நெட்டில் ஏதாவதொரு சாட் ரூமில் ஏதாவது ஃபிகருடன் கடலை போடுவது வாடிக்கையாகிவிட்டது. ஃபிகர் தானா அல்லது, காதல் தேசம் கௌண்ட மணி மாதிரி பர்தா போர்த்தின புலியா தெரியவில்லை. பிளாக்ஸ்பாட் எல்லாம் வந்திருந்தால், எனது இலக்கிய பணி அப்போதே ஆரம்பமாகியிருக்கும்.

சரி இம்புட்டு சொல்லுதியே, என்ன வேலை பண்ணிக் கிழிச்சன்னு கேக்குதீயேளா?? ஒரு வருஷம் முழுக்க, இங்கிட்டு எந்த ஆணியப்புடுங்கலாம்னு யோசிச்சு யோசிச்சே ஒரு வருஷம் ஓடிப் போயிடுச்சி.

டிஸ்கி: சார் நான் வேலையிலிருந்து விலகிக்கொள்கிறேன் என்று ராஜினாமா கடிதத்தை என் மானேஜரிடம் கொடுக்கும் போது, "சபாஷ் வெரி குட் டெசிஷன். ஆல் த பெஸ்ட்" என்று கை குலுக்கினார்.

September 20, 2008

கொல்கத்தா தினங்கள் - 1

என்ன கிறுக்கினாலும், "இவன் ரொம்ப நல்லா எழுதறான்டா" என எப்போதும் ஊக்குவிக்கும் எனதருமை வாசகப்பெருமக்களுக்கு இப்பதிவினை காணிக்கையாக்குகிறேன்.


சென்னையிலிருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பிடித்து கொல்கத்தா வந்திறங்கிய தினம், ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. என்னடா நமக்குத்தான் இவ்வளவு பெரிய வரவேற்பா? "ரொம்ப அலட்டிக்காதேடா விஜய் என்னவென்று விசாரி" என எச்சரித்த மனதின் சொற்படி, அருகிலிருக்கும் பெங்காலி மனிதரிடம் என்னவென்று விசாரித்தேன். "ஆஜ் பிஷ்பகர்மா பூஜா ஆஷ்சே" என்றார் வாயில் பான் அடக்கியபடியே. என்ன கருமாந்திர பூஜையோ, இதற்கு மேல் விசாரித்தால் அவர் வாயில் இருந்த பான் என் மேல் அபிஷேகம் ஆகிடும் என்பதால் மேற்கொண்டு கேட்கவில்லை.


கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பிளாட்ஃபாரத்திற்குள் தன்னை முழுதாகப் புகுத்திப்பதற்குள் சாமான் தூக்கும் கூலியாட்கள் ரயிலுக்குள் முகமூடிக்கொள்ளையர் மாதிரி உள்ளே புகுந்தனர். எனது பெரியப்பா மகன் கொல்கத்தாவில் இருந்ததால் எனக்குப் போயிறங்க ஓர் இடம் இருந்தது. அவர் அனுப்பிய டிரைவர் என்னை அழைத்துச்செல்ல ஸ்டேஷனுக்கு வந்திருந்தார். விமான நிலையத்தில் பெரிய பெரிய VIP'க்களுக்காக placard எல்லாம் வைத்திருப்பார்களே, அந்த மாதிரி எனக்காக placard எல்லாம் கொண்டு வந்து, காத்திருந்து என்னை அழைத்துப் போனார். ஒர் வாரம் அண்ணா வீட்டிலிருந்து தான் ஆஃபீஸ் போனேன். மன்னியும் திருநெல்வேலி ஊராக இருந்ததால் home sickness அவ்வளவாகத் தெரியவில்லை.


நான் வேலை பார்த்த ஆஃபீஸ் பற்றி ஒரு சிறு விளக்கம். கம்பெனியின் பெயர் வோல்டாஸ் (Voltas). குளிர் சாதனப் பெட்டிகள் மட்டுமே தயாரிக்கிறார்கள் என்று நினைத்திருந்த நான், பலதரப்பட்ட வியாபாரம் செய்கிறார்கள் எனத் தெரியவந்தது கல்கத்தா போன பிறகு தான். ஆஃபீஸ் வீற்றிருந்த கட்டிடம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. எங்கள் ஆஃபீஸ் நாலாவது மாடியில். பக்கத்து கட்டிடம் 7 மாடிகள் கொண்டது. எங்கள் ஆஃபீஸ் ஜன்னலிலிருந்து எட்டிப்பார்த்தால் பக்கத்து கட்டிடத்தின் மொட்டைமாடி தெரியும். ஒவ்வொரு தளமும் சுமார் 35-40 அடி உயரமாவது இருக்கும். ஆஃபீஸில் கிட்டத்தட்ட எல்லோருமே நாற்பதைக் கடந்தவர்கள். பெண்களைத்தவிர அநேகமாக எல்லோருமே புகைப்பிடிப்பார்கள். எங்கே வேணுமானாலும் புகை பிடிக்கலாம். பான் போட்டு ஜன்னலிலிருந்து எங்கே வேணுமானாலும் துப்பலாம். அவ்வளவு சுதந்திரம்.


குளிர் சாதனப்பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தின் பிராந்தீய ஆஃபீஸில் குளிர் சாதனப் பெட்டிகள் கிடையாது. "ஆஃபீஸ் முழுவதையும் குளிரூட்டப் பணம் இருக்கு. எங்களுக்குச் சம்பளம் கூட்ட மட்டும் பணமில்லையா" என யூனியன் கேட்டதால், வேண்டாம், ஆஃபீஸில் குளிர் சாதனங்களே பொறுத்த வேண்டாம் என முடிவெடுத்து விட்டார்களாம். எவ்வளவு உயர்ந்த சிந்தனை?


ஆஃபீஸ் கட்டிடத்தில் ஒரே ஒரு லிஃப்ட் தான். அதை இயக்குவதற்கு ஒரு தனி ஆள். அவனைத் தவிர அதை யாராலும் இயக்க முடியாது. அப்படியொரு ஹைதர் அலி காலத்து லிஃப்ட். இடியே விழுந்தாலும் காலையில் 9.30 முன்னால் லிஃப்டை இயக்க மாட்டான். 9.28 க்கு லிஃப்டுக்குப்பக்கத்திலேயே நின்று கொண்டு உள்ளங்கையினுள் புகையிலையோ என்ன எழவோ அதைப் போட்டு மற்ற கையின் கட்டை விரலால் போட்டு தேய் தேய் என்று தேய்த்துக் கொண்டிருப்பான், ஆனால் லிஃப்டை இயக்க மாட்டான். எல்லா அலுவகங்களும் 9.30 மணியிலிருந்து 5.30 வரை சரியாக 8 மணி நேரம் இயங்கும். 5.20க்கே மக்கள் மூட்டை முடிச்செல்லாம் கட்டிக் கொண்டு வீட்டுக்குப் போக ஆயுத்தம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் லிஃப்ட் இயக்குபவனும் 5.30க்கே லிஃப்டை ஆஃப் செய்து விட்டு, அதை ஒரு பெரிய சங்கிலி போட்டு கட்டி விட்டுச் சென்று விடுவான். அதற்குப் பிறகு 4 மாடிகள் லொங்கு லொங்குவென்று நடக்க வேண்டியது தான். வெளியே எங்கு சென்றாலும் 5.30க்குள் வந்து விட வேண்டும். இல்லையேல் 4 மாடிகள் ஏறுவதற்குள் (இந்தக்கால கட்டிடத்தில் சுமார் 7 மாடிகள்) டங்குவார் அருந்துடும்.


அந்த லிஃடில் போக ஒரு பெரிய கூட்டமே கியூவில் நின்று கொண்டிருக்கும். வங்காளத்தில் இதுவொரு நல்ல பழக்கம். எங்கும் எதிலும் கியூ தான். பஸ் நிறுத்ததிலிருந்து, சினிமா தியேட்டர், கோவில், ஹோட்டல், ரயில் நிறுத்தமென அனைத்து இடங்களிலும் கியூ.




கொல்கத்தா விசித்திரமான ஒரு ஊர். இந்தியாவின் கிழக்குப்பகுதியில் இருப்பதால், சூரியன் 4.45க்கெல்லாம் கண் விழித்துவிடுவார். மாலை 5.30 அலுவலகங்களிலிருந்து எல்லோரும் விடு திரும்பும் போது அவரும் இன்றைய duty முடிந்தது என உரங்கப் போயிடுவார். எதற்கெடுத்தாலும் பந்த் நடத்துவார்கள். உப்புச் சப்பில்லாத விஷயத்திற்கெல்லாம் ஊர்வலம் போவார்கள். காலையில் டீயுடன் ரசகுல்லா இரண்டை உள்ளே தள்ளிவிட்டுத் தான் வயிற்றிலுள்ளதை வெளியே தள்ளுவார்கள். 2 ரூபாய் டிராம் டிக்கட் எடுத்து பாதி ஊரைச் சுற்றிப்பார்க்கலாம். 3 ரூபாய்க்கெல்லாம் ரிக்ஷா காரன் 2 கிலோமீட்டர் தூரம் மிதிப்பான். சில குண்டு மாமிகள் கொஞ்சம் கூட கருணையே இல்லாமல் நோஞ்சானாக இருப்பவனின் கை ரிக்ஷாவில் போவார்கள். நிறைய மக்கள் ரோட்டிலேயே குளிப்பார்கள். அடுக்கு மாடிக் கட்டிடங்களின் படிக்கட்டுத் திருப்பங்களில் தவறாமல் பான் போட்டுத் துப்புவார்கள்.


கொல்கத்தாவில் எது நன்றாக இருக்கோ இல்லையோ இனிப்பு வகைகள் ரொம்ப நன்றாக இருக்கும். திருப்பதி லட்டுவில் பாதியளவு இருக்கும் குலாப் ஜாமுன் வெறும் 1 ரூபாய் தான். தைரியமாக வாங்கிச் சாப்பிடலாம். நல்ல நெய்யில் செய்திருப்பார்கள். இன்னொன்று பெங்காலிப் பெண்கள். நானும் என் நண்பனும், "என்ன போட்டுடி உங்க அம்மா உன்னை வளர்த்தா" என்போம், அந்தப் பெண் அருகிலியே. புரியவாபோகிறது என்ற தெனாவட்டு தான்! ஸ்கூல் படிக்கும் பெண்கள் கூட 20 மதிக்கத்தக்கவர்கள் மாதிரி இருப்பார்கள். எல்லாம் ரசகுல்லா தின்ன எஃபக்ட் போலிருக்கு.


வேலையில் சேர்ந்து 4-5 நாட்களில் அவன் எனக்கு அறிமுகம் ஆனான். அறிமுகப்படுத்திக் கொண்டான் என்று தான் சொல்ல வேண்டும். அவன் பெயர் ரகுராமன். பாலக்காடு சொந்த ஊர். என் ஊரைக் கேட்டவுடன், "ஆ நீ திருநெல்வேலியாடா. எனக்கும் தமிழ் தெரியும்" என்றான். அப்பாடா ஒரு வழியா ஒரு தமிழ் முகம் இருக்கிறதே என்று மனம் நிம்மதி அடைந்தது. "நான் தனியாத்தான் இருக்கேன். நீ என் கூட ஜாயின் பண்ணிக்கோயேன். அது வோல்டாஸின் வீடு தான். Company Accomodation. மாதச் சம்பளத்திலிருந்து HRA வைப் பிடித்துக் கொண்டு விடுவார்கள்" என்றான். அன்று சாயங்காலமே அவன் தங்கியிருக்கும் விட்டிற்குப் போனேன்.அதை வீடு என்று சொல்வதை விட பெரிய பங்களா என்று தான் சொல்ல வேண்டும். பிரம்மாண்டமான அரைகள். கட்டில்கள் மேஜைகள், நாற்காலிகள், பெரீஈய டைனிங்க் டேபிள் என சகல வசதியுடன் கூடிய ஒரு வீடு. ஆனால் ரொம்பப் பழைய வீடு. ஆஃபீஸில் அதை பூத் பங்களா என்று தான் சொல்லுவார்கள். அதுவும் கொல்கத்தாவின் மையப் பகுதியான பார்க் ஸ்ட்ரீட் என்னும் இடத்தில். கரும்பு தின்ன கூலியா? அந்த வார இறுதியிலேயே அண்ணா வீட்டிலிருந்து மூட்டை முடிச்சுகளெல்லாம் தூக்கிக் கொண்டு இங்கு வந்து விட்டேன். அன்று முதல் அவனுடன் கொல்கத்தாவில் அடிக்க ஆரம்பித்த லூட்டி, யப்பா சொல்லி மாளாது.

September 18, 2008

இந்நாள் அவ்வருடம்

செப்டம்பர் ௧௮ 1999. என் வாழ்க்கையில் அது வரை நான் செய்திராத நெடுந்தூரப் பயணம்
தொடங்கியது. கொல்கத்தா நோக்கி பயணப்பட்டேன். சுமார் 2300 கிலோ மீட்டர் தூரம். சென்னை போய் அங்கிருந்து கோரமண்டல் பிடித்து ஒண்ணரை நாள் பயணம் செய்த பிறகு கொல்கத்தா போய் இறங்கினேன். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பயணத்தின் போது என் கம்பார்ட்மென்டில் ஒருவர் கூட தமிழர் இல்லை. எனக்கு ஏதோ கொஞ்சம் ஹிந்தி தெரிந்திருந்தாலும் மற்றவரிடம் சம்பாஷணை செய்யும் அளவிற்கு தெரியாது. வாழ்க்கையில் 24 நான்கு மணி நேரத்திற்கு மேலாக நான் பேசாமலிருந்தது அன்று தான். அன்று தான் முதலும் கடைசியுமாக மௌன விரதம் அனுஷ்டித்தேன் என்று நினைக்கிறேன். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பிரயாணம் ஒரு வித்தியாசமான அனுபவம். காலையில் 9 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மறு நாள் மதியம் 2 மணிக்கு கொல்கத்தா சென்றடையும். முதல் நாள் ராத்திரி 11 மணிக்கு விஷாகப்பட்டினம் வரும். This is the last stop in which one can see some tracts of urban civilization. விழித்தெழுந்து பார்த்தால் ஒரிஸ்ஸா மாநிலத்திலுள்ள கட்டாக்கில் ரயில் நின்றுகொண்டிருந்தது.

ஏதோ 30 ஆண்டுகள் பின்னோக்கி பயணப்பட்ட ஓர் உணர்வு. கட்டாக் ஸ்டேஷன்
அழுக்கிலேயே மூழ்கியிருக்கிறது. சாய் (டீ) விற்பவரிடம் அதை வாங்கிக் குடித்தால் என்னென்ன நேரிடுமோ? கடவுளுக்கே வெளிச்சம். மருந்துக்குக்கூட காஃபி கிடைக்கவில்லை. சென்னையில் அக்கா வீட்டில் கட்டிக்கொடுத்த சாப்பாடெல்லாம் முதல் நாளே காலியாகிவிட, கட்டாக்கில் தான் காலை சிற்றுண்டி. நான் பேசும் ஹிந்தி பூரி விற்பவனுக்குப் புரியவில்லை. அவன் பேசும் ஒரியா என் மண்டைக்குள் நுழையவில்லை. என்னத்தையோ புரிந்து கொண்டு 50 ரூபாயை நீட்டினால் சில்லறை இல்லை என்று சொல்லிவிட்டான். விசாரித்தபோது தான் தெரிந்தது. அவன் கொடுத்த பூரி செட் வெறும் 4 ரூபாய் தான். ஆச்சர்யமாக இருந்தது. எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று இன்னும் 2 பாக்கெட் பூரி வாங்கிக் கொண்டேன்.
கொல்கத்தாவில் இறங்கியவுடன், ஒரு சின்ன அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம். இவ்வளவு அழுக்காகவும் ஒரு ஊர் இருக்க முடியுமா? எங்கும் எல்லாவற்றிலும் அழுக்கு. அவ்வளவு
டப்பாவான பேரூந்தூக்களை அதற்கு முன் பார்த்ததே இல்லை. வாரத்தில் மனிதர்கள்
எத்தனை நாள் குளிப்பார்கள் எனத் தெரியவில்லை.

கொல்கத்தா என்றதும், எல்லோருக்கும் நினைவு வருவது, ரஸகுல்லா. என்னிடம் கேட்டால் கம்யூனிசம் என்பேன். ரயில் நிலையத்திலேயே என்னை ஒரு 10 கூலிகள் சூழ்ந்து கொண்டார்கள். என் சாமான்களை நானே எடுத்துச் செல்லத் தடை.
सामान उठाना हमारा काम हैअगर आप सामान उठाएंगे तो हम क्या करेंगे ?
"சாமான் தூக்குவது எங்கள் வேலை. அதை நீங்களே செய்து விட்டால் நாங்க என்ன
செய்வோம்". ஆடிப் போயிட்டேன். ஆஃபீஸில் சேர்ந்த முதல் நாளே ஒருவர் என்னிடம், "நீங்க மத்ராஸிலேர்ந்து இங்கே வந்து வேலை பார்க்கறதுனால ஒரு பெங்காலியின் வேலையை அபகரித்துக் கொண்டாய்" என்றாரே பார்க்கலாம். "அடப்பாவிங்களா, என்னவோ நான் கொல்கத்தாவுல போய்த்தான் வேலை பார்ப்பேன் என்று அடம் பிடித்த மாதிரி சொல்லறீங்களே" என்று நினைத்துக்கொண்டேன். இப்படிப்பட்ட வங்காளத்தை விட்டு டாடா வெளியேறுவது ஒண்ணும் எனக்கு வியப்பாக இல்லை.

பெங்காலியில் 'வ'னாவும் 'அ'னாவும் கிடையாது. ஹிந்தியில் எல்லா 'வ'வையும் 'ப' என்றும், எல்லா 'அ'வையும் 'ஒ'வாக மாற்றிவிட்டால் பாதி பெங்காலியாகிவிடும். என் பெயரை பெங்காலி மக்கள் கொலை செய்த மாதிரி அயல்நாட்டவர் கூட கொலை செய்தது கிடையாது. என்னை பிஜோய் என்று தான் அழைப்பார்கள். இதைக் கேட்கவே நாராசமாக இருக்கும். என்ன செய்ய? ஏதாவது சொன்னால் "பிஜோய் டவுன் டவுன்" என்று கொடி பிடித்தாலும் பிடித்துவிடுவார்கள். அதேபோல் 'ச'னாவும் கிடையாது. எல்லாமே, "ஷா"னா தான். சாட்டர்ஜிக்களை ஷட்டொபாத்யாய் என்பார்கள். சென்குப்தாவை ஷென்குப்தோ
என்பார்கள். கங்குலி 50 அடித்தாலே ஆஃபீஸில் விஸில் அடிப்பார்கள்.

ஆனால் கொல்கத்தாவில் என் நண்பனுடன் அடித்த லூட்டி வேறெங்கும் அடிக்கவில்லை.
பின்னொரு முறை மீண்டும் கொசுவர்ர்த்தி ஏற்றுகிறேன்.

September 14, 2008

கூட்டாஞ்சோறு

அநியாயம், அக்கிரமம், அட்டுழியம்!! ஆஃபீஸில் வலைப்பதிவையெல்லாம் படிக்க விடாமல் வேலை வேலை என்று கடந்த இரண்டு வாரங்களாக கும்மு கும்மு என்று கும்மி விட்டார்கள். இதனால், நான் விரும்பிப் படிக்கும் பதிவுகளை வீட்டுக்கு வந்து படித்து, 20-25 பேர் பின்னுட்டம் எழுதிய பிறகு தான் என்னால் எழுத முடிகிறது.

லையில் ஏதோ மேய்ந்து கொண்டிருந்தபோது, www.anyindian.com என்ற வலைத்தளம் கண்ணில் பட்டது. நிறைய தமிழ் புத்தகங்களை இணையதளத்திலேயே வாங்கலாம். சரி அப்படியென்ன தான் இருக்கிறது என்று நோட்டம் விட்ட போது 30 ஆண்டுகளாக கணையாழி என்ற பத்திரிகையில் சுஜாதா எழுதின கட்டுறைகளடங்கிய புத்தகம் கண்ணில் பட்டது. சுஜாதாவின் சீடரான தேசிகன் முப்பது வருடங்களாக சுஜாதா எழுதின கட்டுறைகளை (கணையாழியின் கடைசிப்பக்கங்கள் என்ற பெயரில்) சேகரித்து வெளியிட்டிருக்கிறார். உடனே ஆர்டர் செய்து விட்டேன். கூடவே சோ (துக்ளக் சோவே தான்) மஹாபாரதம் பேசுகிறது என்ற இரு புத்தகத்தையும் வாங்கி விட்டேன். ஆர்டர் செய்த இரண்டாவது தினமே வீட்டிற்கு கூரியர் வந்து விட்டது.

கணையாழியின் கடைசிப்பக்கங்கள் தான் எவ்வளவு ஸ்வாரஸ்யம். சுஜாதா பிளாக் எழுதியிருந்தால் இப்படித்தான் இருந்திருக்கும். இன்னும் முழுதாகப் படிக்கவில்லை.

சோ எழுதிய மஹாபாரதம் பேசுகிறது கூட ஒரு வித்தியாசமான புத்தகம் தான். எனக்கு சிறு வயதில் ராஜாஜி எழுதிய மஹாபரதம் புத்தகம் பரிசாகக் கிடைத்தது. அதைப் படித்த போது பாரதக்கதை சொல்லிருந்தாரேயன்றி அதை ஆராயவில்லை. ஆனால் சோ தமக்கேயுரிய பாணியில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கதையோடு, அது நடந்திருக்கக்கூடிய சாத்தியக்கூறு பற்றியும் அலசுகிறார். அவ்வப்போது பகுத்தறிவாளர்களையும் வாருகிறார். பாரதம் படித்தால் வீட்டில் சண்டை வருமாமே??!! இதுவரை வந்ததற்கும் இனி வருவதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கின்றது என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

சுஜாதாவைப் படிப்பதா, சோவைப்படிப்பதா, அல்லது இந்த இரண்டு புத்தகத்தை வாங்குவதற்கு முன் படித்துக்கொண்டிருந்த ஆங்கிலப் புதினத்தைப் படிப்பதா, அல்லது அடுத்த வாரம் ஆஃபீஸில் எடுக்க வேண்டிய செமினாருக்காக எடுத்து வந்த தலையணை போன்ற புத்தகத்தைப் படிப்பதா? ஒன்றும் தெரியாமல் முழி பிதுங்கி நிற்கிறேன்.

அடுத்த வாரம் செமினாரில், In Sujatha's writings we see a paradigm shift that took place in Tamil literature என்று சொல்லாமலிருக்க வேண்டும்.



நேற்று வீட்டில் ஓணம் பண்டிகை இனிதே கொண்டாடினோம். கேரளப் பெண்ணை மணந்த
னால் வருடத்தில் இன்னொரு நாள் nose dashing eating. அதாங்க மூக்கு முட்ட சாப்பிடறது. வீட்டம்மா பூக்கோலமெல்லாம் போட்டு அசத்திப்புட்டாங்க. பூக்கோலம் போடுவதற்கு நானும் ரொம்பவே உதவி செய்தேன். என்ன உதவி செய்தேன் என்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்?

September 05, 2008

எங்களுக்கே மார்க்கா??

மனைவி மார்க் போட்டால் என்ற திவ்யாவின் பதிவிற்கு இது எதிர் பதிவு அல்ல. அதையும் மீறி திவ்யாவின் பதிவிற்கு ஏதாவதொரு சம்பந்தம் இருக்குமெனில், அது தற்செயலாக நடந்தது. வேண்டுமென்றே செய்யவில்லை. அம்மணி காபிரைட் டிரைட் எதுவும் செய்யவில்லையென்று நினைக்கிறேன்.

எப்போதுமே டிப்ஸ் பல கொடுக்கும் திவ்யா தன்னுடைய இந்தப் பதிவில் மனைவிமார்கள் இப்படி இப்படி மார்க் போடுவார்கள் என்று மொட்டையாக சொல்லி, கல்யாணமே செய்து கொள்ள வேண்டுமா என்று பல பிரம்மசாரிகளின் மனதில் சிந்தனையோட்டத்தை கிளறி விட்டதாக பட்சியொன்று சொல்லியது. அட மனைவிமார்களின் மார்க்குகளை எப்படி கையாள்வது என்பதை, அனுபவஸ்தன் நான் சொன்னால் ஒரு நாலு பேருக்காவது உபயோகமாக இருந்துவிட்டுப் போகட்டுமே என்று இந்தப் பதிவை எழுதுகிறேன்.

டிஸ்கி: மனைவியிடமிருந்து நல்ல பெயர் வாங்கியே தீருவந்தென்று அயராது உழைக்கும் / உழைத்துக்கொண்டிருக்கும் கர்ம வீர புருஷர்களுக்கு இந்தப் பதிவை சமர்ப்பணம் செய்கிறேன்.

சரி, இனி மனைவிமார்கள் போடும் மார்க்குகளிலிருந்து எப்படி டபாய்ப்பது எனபதைப் பார்ப்போம்.

1. ராத்திரி நல்லா தூங்கிட்டு இருக்கும்போது "ஏங்க வெளியிலே ஏதோ சத்தம் கேட்குதுங்க" அப்படின்னு சொல்றார் மனைவி....

நீங்க என்ன வீர தீர பராக்கிரமத்தைக் காட்டினாலும் உங்களைப் பாராட்டப் போரதில்லை.
யாராவது நல்ல தூங்கும் போது எழுப்பினா எப்படியிருக்கும்? ஆனால் நம்ம போறாத நேரம், எழுப்புவது மனைவியாக இருக்கறதுனால, வெளியே போயடா பார்க்கத்தான் வேணும். அதனால நம்மளோட எரிச்சலையும் காட்டிக்க முடியாது.
வெளியே போகும் போது மனைவி கால் மேல ஏறி மிதிச்சு நடந்து போங்க. "ஐயையோ"ன்னு அவங்க கத்தற கத்துல வந்திருக்கற திருடனும் துண்டக்காணோம் துணியக்காணோன்னு ஓடிப்போயிருவான். இனிமேல் ஜன்மத்திலும் உங்களை தூக்கத்தில் சத்தம் கேக்குதுன்னு எழுப்ப மாட்டாங்க.

சரி நீங்க மனைவி மீது அதீத பாசம் வைத்திருக்கீங்களா? எழுந்திரிச்சு வீட்டுல இருக்கற எல்லா விளக்கையும் போட்டு, ஃபானையும் ஆஃப் பண்ணிட்டு வெளியில போங்க. "ஏன் ஃபானை ஆஃப் பண்ணறீங்க"ன்னு கேட்டா, "அப்போ தான் சத்தம் கேக்குதா இல்லையான்னு தெரியும்" பதில் சொல்லுங்க. இதெல்லம் பண்ணின பெறவும் அவுங்க தூங்குவாங்கன்னு நினைக்கறீயளா? நீங்க அடிக்கற இந்த லூட்டிய பார்த்துட்டு, இனி உங்க பொஞ்சாதி, தூக்கத்துல எழுப்புவாங்கன்னு நினைக்கறீங்க?

அப்படியும் சில கும்பகர்ணினிகள் தூங்குச்சுன்னா, நல்ல பெரிசா ஒரு தடியெடுத்துகிட்டு கதவுலயும் தரையிலயும், நாலு நாலு தட்டு தட்டி, "டாய், ஒக்கா மக்கா எவன் டா அவன். தைரியம் இருந்தா முன்னாடி வாடா பன்னாடை". இப்படி மனைவியைத் திட்ட முடியாத வார்தைகளெல்லாம் வைத்து அவனை துதிபாடுங்கள். இதற்கப்புறம் என்றைக்குமே சத்தம் கேட்குதுன்னு உங்க மனைவி எழுப்பவே மாட்டாங்க.

2.உங்க வைஃப்க்கு பர்த்டே கொண்டாட.....
எந்த நல்ல ஹோட்டலுக்கு கூட்டிட்டுப் போய் அவங்களுக்குப் புடிச்சதை, வாங்கிக் கொடுத்தாலும் உங்களைப் புகழப் போறதில்லை. "ஏன் நான் சமைச்சுப் போடறது ஐயாவுக்குப் புடிக்கலையோ"ன்னு தான் கேட்கப் போறாங்க. "இல்லை இன்னிக்காவது வெளிய கூட்டியாந்தீங்களே. வீட்டுக்குள்ளேயே கிடந்து வெந்து சாகறேன்" என்று அலுத்துக்கொள்ளவோ தான் போறாங்க. "இல்லாட்டி, என்னவோ டாஜ் ஹோட்டலுக்கா கூட்டியாந்துக்கீங்க"ன்னு குறை சொல்லப்போறாங்க. அதனால முடிந்த அளவிற்கு மனைவியின் பொறந்தநாளைக்கு வீட்டிலயே சமைக்க சொல்லிடறது பெட்டர். "என்ன தான் இருந்தாலும் நீ சமைக்கறது மாதிரி வருமா"ன்னு இரண்டு வார்த்தை சொல்லிப்பாருங்க, அவ்வளவு தான். ஜில்லுனு ஆகிடுவாங்க.
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்

அப்படின்னு வள்ளுவரே சொல்லிப்புட்டாரு. அடுத்த பொறந்த நாளைக்கு நீங்களே வெளியே போகலாம்னு சொன்னாக் கூட, "வீட்டுலயே சாப்பிடலாம்"னு சொல்லிடுவாங்க.

3.உங்கள் உடலமைப்பு எப்படி????
பொம்பளைங்க இந்த விஷயத்துல பயங்கர தெளிவு. நாமதான் பொஞ்சாதி ஐஷ்வர்யா ராயாகவும் அசினுக்கு கசினாகவும் இருக்கணும்னு விரும்பரோம். ஆனா, மனைவிகள் தன்னுடைய புருஷன் ஷாருக்காவோ ஹ்ரித்திகாவோ இருந்தே ஆகணும்னு எதிர்பார்க்கறது இல்லை. அப்படியேதும் இருந்தா மத்த பொண்ணுங்க தன் புருஷனை பார்த்து சைட் அடிப்பாங்களேன்ற பொஸஸிவ்னெஸ் அவங்களுக்கு அதிகம்.
அப்படியும் உங்க மனைவி உங்களைப் பார்த்து தொப்பை வந்திடுச்சி, வெயிட் போட்டுட்டீங்க அப்படி இப்படின்னு ஏதாவது சொல்லறாங்களா? கவலையே படாதீங்க. "எல்லாம் நீ பொங்கி போடுற சோத்த தீன்னறதுனால தான்டீ இப்படி ஆகிட்டேன்"னு அவங்க மேலயே பிளேட்டத் திருப்பிடணும். அதுக்கப்புறம் நீங்க S.P.B மாதிரி ஆனாக்கூட ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.

5. " ஏங்க நான் ரொம்ப குண்டா தெரியறேனாங்க?" என்று கேட்கிறார் உங்கள் மனைவி....


இது கொஞ்சம் டேஞ்சரான கேள்வி. எல்லா மனைவிகளுக்கும் தெரியும், அவங்க குண்டாகிட்டாங்கன்னு. ஆனால், அதை புருஷன் சொல்லக்கூடாது. என்ன தான் உண்மையே சொல்லுவேன்னு ஹரிசந்திரனுக்குத் தம்பியா சபதமெடுத்திருந்தாலும், "கல்யாணத்தன்னிக்கு எப்படி இருந்தியோ அப்படியே தான் இருக்கேன்னு" சொல்லிடணும். மேலே சொன்ன குரளை ஞாபகம் வைத்துக் கொள்ளவும்.

6. ஒரு பிரச்னை பற்றி சீரியஸா உங்க மனைவி உங்க கிட்ட வந்து பேசுறார். அதற்கு நீங்கள்…
மனைவி பிரச்னை என்று கொண்டு வந்தாலே அது 99.9999% உங்களுடைய சொந்த பந்தஙளுடன் ஏற்பட்ட மனஸ்தாபமாயிருக்கும். நீங்கள் யார் பக்கம் தீர்ப்பு சொன்னாலும் டேஞ்சர் தான். அதனாலே பிரச்னையென்று வந்தால் ஒரு டம்ளர் தண்ணீரை வாயில் அடைத்துக் கொள்ளவும். முழுங்கி விட வேண்டாம். மௌன விரதம் மேற்கொள்ள இதுவொரு எளிய வழி. இப்படி ஒவ்வோர் தடவையும் பிரச்னையென்று உங்கள் மனைவி வரும்போதெல்லாம் நீங்கள் மௌன விரதம் இருந்து விட்டீர்களெனில், அடுத்த பிரச்னையை உங்கள் மனைவி உங்கள் கவனத்திற்கு கொண்டு வரமாட்டார்.

மேலே சொன்ன செய் முறை விளக்கங்கள் எல்லாவற்றையும் தவறாது கடைபிடித்தால், மனைவிமார்கள் நமது திறமைகளுக்கு பரீட்சை வைக்க மாட்டார்கள். பரீட்சையே இல்லைன்னா அப்புறம் மார்க் எப்படி? அப்படியும், அடாது வெறுப்பேத்தினாலும் விடாது பரீட்சை வைப்பேன் என்ற மனைவிகளின் கணவர்களுக்கு ஒரு அறிவுரை. "கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்" என்று கணவர்களைப் பற்றி ரொம்பவே நெகடிவ் இமேஜ் உருவாக்கிட்டாங்க. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்லிக்கறேன். வெளில சொல்லிடாதீங்க. "பேயானாலும் பத்தினி" அம்புட்டுத்தான். இதுக்கு மேல சொல்லறதுக்கு ஒண்ணும் இல்லை.

September 03, 2008

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்


பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும்
இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்
கோலம் செய், துங்கக் கறி முகத்தூமணியே
நீ எனக்கு, நிதமும் வலைப்பதிவெழுத
சங்கத் தமிழ் மூன்றும் தா

September 02, 2008

திண்ணை நினைவுகள்

"தாத்தா, தாத்தா திண்ணைன்னா என்ன தாத்தா", 8 வயதே நிரம்பிய மூன்றாம் வகுப்பு படிக்கும் என் பேரன் என்னிடம் கேட்டான்.
"ஏன்டா கண்ணா உனக்கு திடீர்னு திண்ணை பற்றி சந்தேகம்?"என்றேன்.
"என்னோட தமிழ் பாடத்துல 'திண்ணை' என்ற வார்த்தை அருஞ்சொற்பொருளில் இருக்கு. அதுக்கு எங்க மிஸ்சால ஒழுங்கா அர்த்தம் சொல்ல முடியலை. உங்க வீட்டுல இருக்கற தாத்தா பாட்டி கிட்ட கேளுன்னு சொல்லிட்டாங்க" என்றான்
திண்ணை - இன்று அகராதியில் இடம் பெறும் அளவிற்கு போய் விட்டதா? அருஞ்சொற்பொருளில் அதற்கு ஒழுங்கான ஒரு அர்த்தம் கூட இருக்கவில்லையா? அவனுக்குப் புரியும் படி விளக்கிச் சொல்லலானேன்.
"போச்சு தாத்தா கிட்ட விளக்கம் கேட்டுட்டியா, உனக்கு விளங்கினா மாதிரி தான்", என் பேரனின் பாட்டி இன்னும் என்னை கலாய்ப்பதை விடவில்லை.
"கண்ணா அந்தக்காலத்துல எங்க ஊருல வீடு கட்டும் போது, வழிப்போக்கர்கள் இளைப்பாற ஒவ்வோர் வீட்டிற்கு முன்னாலும், ஒரு மேடை கட்டியிருப்பாங்க. விட்டின் கூரை இந்தத் திண்ணை மேலும் படர்ந்து இருக்கும். அந்தத்தெரு வழியாக நடந்து போறவங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திண்டு அப்புறம் தன்னோட பயணத்தைத் தொடருவாங்க" என்று திண்ணைக்குண்டான காரணத்தைச் சொன்னேன்.
மேலும் தொடர்ந்தேன், "எங்க தாத்தா வீடு இருந்த ஊருல ஒவ்வொரு வீட்டுலயும் திண்ணை இருந்தது. நாங்க சின்னப்பசங்களா இருந்த போது, இந்தத் திண்ணை எங்க வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே இருந்தது. காலையில், ஒரு நண்பன் வீட்டுத் திண்ணையில் காரம் போர்ட், மதியம் ஒரு நண்பன் வீட்டுத் திண்ணையில் சீட்டு, மாலையில் இன்னொருவன் வீட்டுத் திண்ணையில் செஸ், இரவு மற்றொரு நண்பன் வீட்டுத் திண்ணையில் சாப்பாடு. ஏன் பல நாள் திண்ணையிலே படுத்துத் தூங்கியிருக்கேன். காற்று வேற பிச்சுண்டு போகுமா, தூக்கம் சுகமா வரும் ".
"என்னது திண்ணையிலேயே தூக்கமா?" ஆச்சர்யத்துடன் கேட்டான்.
"ஆமாம். அதிலயும் எங்க விளையாட்டுக்கு ஒரு அளவே கிடையாது. ஏதாவது ஒரு பையன் தூங்கிக் கொண்டிருப்பான். அவன் பக்கத்தில் 10-15 பெரும் கற்களை வச்சுட்டு, ஒரு பெரிய கும்பலை கூட்டிக்கொண்டு வந்து, அவனை எழுப்பி, "ஏண்டா அறிவு கெட்டவனே, இவ்வளவு கல்லை எதுக்காகடா பக்கத்துல வச்சுண்டு தூங்கற"ன்னு நிறைய கலாட்டாவெல்லாம் செய்வோம். பாவம் அந்தப் பையன் இவ்வளவு பேர் தன்னைச் சுற்றி நிற்பதைப் பார்த்து ரொம்பவே நொந்து போவான். அதிலும் சில சமயம் தூங்கற பையன் முகம் கிட்ட ஒரு பூனையையோ நாயையோ விட்டு விடுவோம். அது போய் அவனை நக்க அவன் அடித்துப் பிடித்து ஓட ஒரே தமாஷாக இருக்கும்".
"ஓ தாத்தா நீங்க இவ்வளவு சேட்டை பண்ணியிருக்கீங்களா?"
"எங்க தாத்தா வீட்டு திண்னை கொஞ்சம் பெரிசு. அதிலே நாங்க கிரிக்கெட்டே விளையாடுவொம். ஒரு தடவை கிரிக்கேட் விளையாடி, பல்பை உடைச்சு, தாத்தா கிட்ட நல்லா வாங்கிக் கட்டிண்டோம். சாயங்காலம் ஆயாச்சுன்னா, தெரு மாமிகளெல்லாம் வாசல் தெளித்து கோலம் போட்டுட்டு ஊர் கதை பேச அவரவர் திண்ணைக்கு வந்துடுவாங்க. அப்போல்லாம் மெகா சீரியல் வரலை. நாங்க பசங்க கிரிக்கெட் விளையாட ரொம்பவே இடைஞ்சலா இருக்கும். ஒரு மாமி மேல அடிச்சு, அவள் பல்லைக்கூட உடைச்சிருக்கேன்."
"தாத்தா குறும்புக்கார தாத்தா நீங்க"
"அது மட்டுமா, திண்ணையில உட்கார்ந்துண்டு தெருவுல நடக்கற ஒரு பொண்ணையும் விட மாட்டோம். ஏதாவது கமெண்ட் அடிச்சிக்கிட்டேயிருப்போம்"
"போதுமே, உங்க சுயபிரஸ்தாபம். சின்ன குழந்தை கிட்ட இன்னது தான் சொல்லறதுங்கற விவஸ்தையே இல்லையா" என்று கடிந்து கொண்டால் என் மனைவி.
"அடிப்போடி, இந்தக் காலத்து குழந்தைள்லாம் பிஞ்சுலயே பழுத்ததுங்க" என்று சொல்லி விட்டு மீண்டும் தொடர்ந்தேன். "எங்க தாத்தா இருந்த தெருவுல இருந்த வாத்தியார் ஒருத்தர் திண்ணைல வச்சு தான் சுலோகமெல்லாம் சொல்லித்தருவார். அவர் வீட்டு திண்ணைமட்டுமே பற்றாது. அவ்வளவு கூட்டம் இருக்கும். இப்படியாக நான் சின்னப்பையனாக இருந்த காலத்துல திண்ணை என்னோட வாழ்க்கையில ரொம்பவே வந்திருக்கு.
"அப்புறம் ஏன் தாத்தா நம்ம வீட்டுல திண்ணையில்லை?", சங்கடமான கேள்வியொன்றை வீசினான் என் பேரன்.
"விலை வாசி இருக்கற இருப்புல, நம்ம விட்டு வசால்ல ஒரு தூண் கூட கட்ட முடியலை. இதுல திண்ணைக்கு எங்கே போறது? ஒண்ணு பண்ணு, நீ நல்லா படிச்சு நிறைய சம்பாதிச்சு, தாத்தாவும் நீயும் உட்கார்ந்து பேசறதுக்கு திண்ணை வச்ச ஒரு வீடு கட்டித்தருவியா?"
"கண்டிப்பா கட்டித் தறேன் தாத்தா" என்று சொல்லிவிட்டு துள்ளிக் குதித்து ஓடின என் பேரனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
"என்னங்க பால் காரன் மணி அடிக்கறான் பாருங்க கதைவைத் தரங்க"
"அவனை அப்படியே திண்ணையிலேயே போட்டுட்டுப் போகச்சொல்லு".
" ஆச்சு, மறுபடியும் தூக்கத்துல புலம்ப ஆரம்பிச்சாசா, எழுதிருங்க, எழுதிருங்க" , யாரோ என்னைப்பிடித்து உலுப்புவது தெரிந்தது.
" எங்க நம்ம பேரன். அவனுக்கு எங்க தாத்தா வீட்டுல நான் திண்ணையில அடிச்ச லூட்டியெல்லாம் சொல்லிண்டிருந்தேனே, எங்கே அவன்."
"ம்ம், 'அடியேங்கற புருஷனைக் காணோம். இதுல பிள்ளை பொறந்தா சந்தானகோபாலகிருஷ்ணன்'னு பேர் வைக்கறேன்னு வேண்டிண்டாளாம் ஒருத்தி. அந்த மாதிரி இருக்கு. இன்னும் வயசு முப்பது கூட தாண்டலை. இதுல பேரனாம், பேத்தியாம். எழுந்துக்கற வழியப்பாருங்க".
டிஸ்கி:
'திண்ணை' பற்றிய சங்கிலித் தொடரை தொடர்வதற்கு அழைப்பு விடுத்த ரம்யாவிற்கு நன்றி. பின்ன , தமிழ் பேசும் நல்லுலகத்தை அடுத்து என்னத்த எழுதி எப்படி வாட்டியெடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு தக்க சமயத்தில் அழகான ஒரு விஷயத்தைப்பற்றி எழுத ஐடியா கொடுத்ததற்காக!
திண்ணை இத்தோடு நின்றுவிடாமலிருக்க முகுந்தனை அன்புடன் அழைக்கிறேன்