Pages

January 13, 2011

என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை

பொங்கல் நல்வாழ்த்துக்கள். மூன்று மாதங்களுக்கு முன்பே தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

இந்த ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் வந்ததும் வந்தது, வெட்டிவம்பை கவனிப்பதற்கு நேரமே இல்லை. நேரம் இல்லை என்று சொல்வதை விட பொறுமை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 10 ஒரு மார்க் கேள்விகள் அல்லது ஒரு 10 மார்க் கேள்வி என்று வினாத்தாளில் இருந்தால், நாம் எதைத் தேர்ந்தெடுப்போம். அப்படித் தான் இருக்கிறது பிளாக் Vs. ஃபேஸ்புக் /ட்விட்டர். ஹேமநாதர் பாகவதர் ஸ்டைலில் சொல்லவேண்டும் என்றால், “என்னடா இது மதுரைக்கு, சாரி, பிளாகுக்கு வந்த சோதனை” என்று தான் சொல்ல வேண்டும். சும்மா மாஞ்சு மாஞ்சு பத்தி பத்தியா எழுதறதுக்குப் பதிலா, ஓரிரு வரிகளில் ட்விட்டுவது வசதியாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் எனது வாசகக் கண்மணிகள் (!!!!????) கேட்டுக்கொண்டதற்கிணங்க அவ்வப்போது வெட்டிவம்பையும் கவனிக்கலாம் என்று தீர்மானம் செய்திருக்கிறேன். :)

ட்விட்டரால் ரொம்பவே பாதித்திருப்பதால், அதே ஸ்டைலில் இந்த மொக்கைப் பதிவும்:

போன வருடம் கடைசி ஒரு வாரம் முழுக்க கம்பெனி அடைப்பு. 9 நாட்கள் வீட்டிலேயே இருந்து, உண்டு உரங்கியதில் 2 சுற்று பெருத்துவிட்டேன் என்று காயத்ரி பொரும ஆரம்பித்துவிட்டாள்.

பத்து நாள் விடுமுறையில் இரண்டு மூன்று புத்தகங்கள் படிக்க முடிந்தது. மிகவும் கவர்ந்தது, ஆண்ட்ரூ சோர்கின் எழுதிய “Too Big to Fail" என்ற புத்தகம். சமீபத்தில் நடந்த அமெரிக்காவின் பொருளாதாரப் பற்றாக்குறையை அந்த அரசு எப்படி எதிர்கொண்டது என்பது பற்றிய புத்தகம். ஒரு நாவல் போல திகிலுடனே ஆசிரியர் கொண்டுசென்றது அவ்வளவு நேர்த்தி. லேண்ட்மார்கில் கிடைக்கிறது. இந்தியாவில் இது போன்றதொரு பற்றாக்குறை ஏற்படாமலிருக்க ரிசர்வ் வங்கி ஏற்படுத்தியிருக்கும் நெறிமுறைகள் பாராட்டுக்குறியது.


போன வாரம் சென்னைப் புத்தகக் கண்காட்சி போயிருந்தேன். நல்ல கூட்டம். புத்தகம் படிப்பதில் இவ்வளவு பேர் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாயிருக்கிறது!

டெஸ்ட் தொடரைத் தட்டித் தடுமாறி ஒரு மாதிரி சமன் செய்து விட்டோம். கடைசிப் போட்டியில் தெனாப்பிரிக்காவை தோற்கடித்திருக்கலாம். ஏனோ கோட்டை விட்டுவிட்டோம்.

துக்ளக் ஆண்டு விழாவுக்குப் போகணும் என்று ஆவலாயிருந்தேன். சில வேலைகள் வந்ததால் போகமுடியவில்லை. கலாகேந்திரா சார்பாக இணையத்தில் வெப்காஸ்ட் செய்கிறார்கள் என்று தெரிந்ததும், வீட்டிலேயே உட்கார்ந்து திரு. சோ மற்றும் திரு.குருமூர்த்தி அவர்களது உரைகளைக் கேட்க முடிந்தது. திரு. சோவுக்கு இருக்கும் தில்லும் தைரியமும் வேறெந்த பத்திரிகையிடம் இருக்கிறது எனத் தெரியவில்லை. காலை 11 மணியிரிருந்தே மக்கள் வந்திருந்தார்களாம். கூட்டத்தில் எஸ்.வி.சேகரும் இருந்தார். கருணாநிதியை வாரும் போது என்ன நினைத்துக் கொண்டாரோ? வரும் தேர்தலில், எந்தக் கட்சியிலிருந்து போட்டியிடுவார், தெரியவில்லை.

பல கசமுசாக்களுக்குப் பிறகு இந்த வருடம் ஐ.பி.எல் நடக்குமா என்பதே சந்தேகமாயிருந்தது. நடுவில் என்ன நடந்ததோ தெரியவில்ல, போன வாரம் 10 அணிகள் வீரர்களை குதிரைகளுக்கு நிகராக பேரம் பேசினார்கள். கௌதம் கம்பீர் தான் இந்த வருடத்திய விலையுயர்ந்த வீரர். இவரை விலை பேசிய ஷாருக்கான் அணிக்கு இன்னும் சனிதிசை விட்ட பாடில்லை போலிருக்கு. அவருக்குக் கைக்கட்டில் அடிபட்டு தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பி விட்டார்.

நாளையோடு (ஜனவரி 16) சென்னைக்கு வந்து ஒரு வருடம் ஆகிறது. காலம் தான் எவ்வளவு விரைவாகப் பறக்கிறது?