Pages

December 07, 2009

போய் வருகிறேன் பெங்களூரு

நாலு கம்பெனிகள்
முப்பதினாயிரம் மென்பொருள் வரிகள்
அதில், ஆயிரம் குறைகள்
இருபது பணியாளர்
எட்டு வாடகை வீடுகள்
நாலு வீட்டுக்காரர்களிடம் சண்டை
பத்து ரூம் மேட்டுகள்
ஒரு சொந்த வீடு
பப் - டிஸ்கோதே ம்ஹும்
இரண்டு பைக்குகள் ஒரு கார்
வாரந்தோறும் ப்ரிகேட் ரோட்
ஞாயிறுகளில் பிருந்தாவன் ஹோட்டல்
எப்போதாவது கோயில்
பில்லியனில் கேர்ள் ஃப்ரண்டு என்ற கற்பனை
ஒரேயொரு திருமணம்
முன்று கடன்கள்
நான்கு கடன் அட்டைகள்
இதோ விரல் சொடுக்கும் நேரத்தில் கழிந்து விட்டன
புறப்புட்டு விட்டேன் இன்னொரு இடம் நோக்கி
போய் வருகிறேன் பெங்களூரு

November 30, 2009

பிராம்மணனின் இன்றைய கடமை

சோனி டி.வி’யில் போன வாரம், நியூ யார்க் படம் காட்டினார்கள். ஏற்கனவே பார்த்த படமென்றாலும் காத்ரினா கைஃபுக்காக இன்னொரு முறை பார்ப்பது என்று முடிவு செய்து, மீண்டும் ஒரு முறை பார்த்தேன். படத்தின் ஒரு கட்டத்தில் எஃப்.பி.ஐ அதிகாரியாக வரும் இர்ஃபான் கானுக்கும் நீல் நிதின் முகேஷுக்கும் இடையே நடக்கும் சூடான விவாதம் என்னை மிகவும் பாதித்தது. என்னை மிகவும் சிந்திக்க வைத்த விஷயமும் இது தான்.

“என் நண்பனை தீவிரவாதியாக்கியது உங்கள் இயக்கம் தானே” என்று இர்ஃபானைப் பார்த்து நீல் கோபாவேசமாக கேட்கும் போது, இர்ஃபான் மிகவும் சாந்தமாக பதில் சொல்வார்.

“நான் ஒரு முஸல்மான். ஒரு சில முஸல்மான்கள் செய்யும் தீவிரவாதச் செயல்களால் இன்று என்னுடைய ஜாதியைச் சேர்ந்தவர்கள் அனைவரையுமே இன்று தீவிரவாதிகள் என்று நினைத்து விடக்கூடிய அபாயகரமான சூழ்நிலை உருவாகியுள்ளது. எவ்வளவோ நற்செய்திகளைச் சொல்லும் இஸ்லாத்தைப் பாராமல், ஒரு சில விஷமிகள் செய்யும் செயல் இன்று அந்த மதத்தையே களங்கப்படுத்தி விட்டது. இந்தக் களங்கத்தைப் போக்குவது ஒவ்வொரு முஸல்மானின் கடமை. அதைத்தான் நான் செய்கிறேன்” இப்படியாக வசனம் இருக்கும்.

இந்த வசனம் என்னை கொஞ்சம் சிந்திக்கச் செய்தது. மேல் சாதிக்காரர்கள் என்று தங்களைத் தாங்களே வர்ணித்துக் கொண்டு சில மனிதர்களைத் தீண்டத் தகாதவர்களாக்கி, அவர்களுக்குப் படிக்கும் உரிமை மறுக்கப்பட்டு, அவர்கள் மீது அடக்குமுறை கொண்டுவந்து, அவர்களின் வாழ்க்கையையே நாசமாக்கியிருக்கும் எல்லோருமே தீவிரவாதிகள் தான். தங்களின் இந்த கீழ்த்தரமான் செயலுக்கு மதத்தைக் காரணம் காட்டியது இன்னும் இழிவான செயல். எனக்குத் தெரிந்த வரை ஹிந்து தர்மத்தில் ஒரு சாரார் மேல் ஜாதிக்காரர்கள் என்றோ கீழ்ஜாதிக்காரர்கள் என்றோ சொல்வதில்லை.

மஹாபாரத்திலே கூட ஒரு பகுதியுண்டு. உத்தங்கர் என்னும் மஹரிஷி, பாலைவனத்தில் அலைந்து திரியும் தனக்கு, நினைத்த மாத்திரத்திலே தண்ணீர் வேண்டும் என்ற வரத்தினைப் பெற்றிருப்பார். அவர் தாகமாக் உணர்ந்த போது, ஒரு வேட்டைக் காரன் ஒருவன் அவருக்குத் தண்ணீர் அளிப்பான். அவனிடம் தண்ணீர் வாங்க மறுத்து அவனை விரட்டிவிடுவார். அப்போது வானத்திலிருந்து அசரீரி ஒன்று ஒலிக்கக் கேட்கும். “உத்தங்கரே உமக்கு இந்திரனல்லவா அமிர்த்தத்தை அளிக்க வந்தான். நீரோ, ஜாதி வித்தியாசம் பார்த்து அவனைத் துரத்தி விட்டீர். இனி உமக்கு அமிர்தமும் கிடைக்கப் போவதில்லை. உமக்கு நான் கொடுத்த வரமும் பலிக்கப் போவதில்லை” என்று கூறி விட்டு அசரீரி மறைந்து விடும். தான் செய்த இழி செயலினால் நினைத்து உத்தங்கர் மனம் திருந்துவார்.

ஆக ஜாதிகள் இருந்த போதிலும், அதனுள் வேற்றுமைகளை உண்டுபண்ணியது ஹிந்து தர்மம் அல்ல. (இதுவே ஆங்கிலேயர்கள் கொடுத்த பெயர். இயற்பெயர் சனாதன தர்மம்) தர்மம் என்ற பேரில் பஞ்சாயத்து செய்தவர்கள் தான். அதிலும் பிராம்மணர்கள் என்று தங்களைக் கூறிக் கொண்டவர்கள் தான். (அப்படிக் கூறிக்கொள்பவர்களின் பரம்பரையில் தான் நானும் பிறந்துள்ளேன் என்று இங்கே கூறிக்கொள்கிறேன்) பிராம்மணன் என்ற வார்த்தைக்கு முற்றும் கற்றறிந்தவன் என்று பொருள். சக மனிதர்கள் மீது அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டவன் எப்படி பிராம்மணன் ஆவான் தெரிய்வில்லை. அதே சனாதன தர்மம் பிறப்பால் ஒருவன் பிராம்மணன் ஆகிவிட முடியாது என்றும் கூறுகிறது. இப்படிச் சொல்லும் தர்மமா, தீண்டாமையையும் புகட்டியிருக்க முடியும். பிற்காலத்தில் வந்த சில (பல) மனிதர்களால் செய்த தவறுக்கு தர்மத்தைக் குறை கூறி பலனில்லை. அப்படியே ஒரு சில பிராம்மணர்கள் செய்த தவறுக்காக இன்று பிராம்மணர்கள் என்று பூணல் அணிந்த அனைவரையும் காரணம் காட்டுவதிலும் அர்த்தமில்லை.

பிராம்மணர்கள் என்றாலே உயர்ஜாதிகாரன் என்ற திமிர் உண்டு என்று சிலர் எண்ணுவதை யாரால் போக்க வேண்டும், முடியும்? தங்களை பிராம்மணர்கள் என்று கூறிக் கொள்ளும் மனிதர்கள் தான் அதைச் செய்ய வேண்டும். மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற பாகுபாடற்ற சமுதாயம் மலர்வதை பிராம்மண ஜாதியில் பிறந்தவன் என்று கூறிக்கொள்ளும் ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். இறைவனின் படைப்பில் அனைத்து மனிதரும் சமம் என்ற உணர்வு உண்டானாலே இந்த எண்ணம் நீங்கி விடும் என்பது எனது தாழ்மையான கருத்து. பல நூற்றாண்டுகளாக கீழ்ஜாதி என்று வர்ணித்து சில மனிதர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஒடுக்குமுறக்கு இப்போதாவது பிராயச்சித்த்தம் தேடுவது பிராம்மண ஜாதிக்காரன் என்று சொல்லும் ஒவ்வொருவனின் கடமையாகும்.

October 09, 2009

கமல்ஹாசனும் தெளிவற்ற தமிழ் ரசிகர்களும்

மிழ் சினிமா ரசிகர்களுக்கென்றுமே நிழலையும் நிஜத்தையும் பிரித்துப் பார்க்கத் தெரியாது. உன்னைப் போல் ஒருவன் படத்தைப் பார்த்துவிட்டு பல பேர், (நிறைய வலைத்தளங்களில் கூட) கம்ல்ஹாசன் வன்முறையைத் தூண்டும் விதமாக படமெடுத்திருக்கிறார், ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுவோருக்கெதிராகத் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது, வன்முறைக்கு வன்முறக்கு தான் பதிலா, அப்படியென்றால் ஹே ராம், அன்பே சிவம் போன்ற படங்கள் எடுத்த கமல்ஹாசனின் சமூக நிலைப்பாடு மாறி விட்டதா, அப்படி இப்படி என்று காமா சோமா என்று கேள்விகள். இத்தனைக்கும் உ.போ ஒ. உண்மையிலேயே ஒரு தமிழ்ப் படம் கூட இல்லை. வெட்னெஸ்டே என்ற ஹிந்திப் படத்தின் ரீ-மேக்.

சினிமா பார்ப்பவர்கள் ஒன்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் பார்ப்பது ஒரு கதையை. அதில் வரும் நடிகர்கள் கதாபாத்திரங்கள். அவர்கள் அதில் செய்யும் காரியம் எல்லாமே அந்தந்த கதாபாத்திரங்களின் செயல்கள். கமல்ஹாசன் போன்ற சினிமாக்காரர்கள், என்றுமே தனது சொந்தக் கருத்தை முன் வைக்க சினிமா என்னும் ஊடகத்தைப் பயன்படுத்தியதில்லை. நிஜ வாழ்க்கையில் கமல்ஹாசன் என்ற நிஜ மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் தனது நாத்திக வாதத்தை என்றைக்குமே முழு மூச்சாக சினிமா மூலமாகப் பரப்பியதில்லை. தசாவதாரத்தில் கோவிந்த் பேசும் சில வசனங்கள் நாத்திகத் தன்மையுடையது என்று வாதிட்டால், என்னால் கடவுளைக் காப்பாற்ற வேண்டி உயிரையே கொடுத்த அந்த நம்பியைச் சொல்ல முடியும். தேவர் மகன் படத்தில் தனது பகுத்தறிவைப் பரப்பும் விதமாக, கல்யாணக் காட்சிகளை ரெஜிஸ்டர் ஆபிஸிலே வைத்து நடப்பது போல் காட்டியிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. ஒரு கதாபாத்திரத்திற்கு என்னென்ன அம்சங்கள் இருக்கின்றனவோ, அதைத்தான் காட்டிருப்பார்.

அவருக்கு திருமணத்திலே கூட நம்பிக்கை கிடையாது என்று எங்கோ படித்ததாக ஞாபகம். ஆனால் எந்தப் படத்திலும் திருமணத்திற்கெதிராகப் பகிரங்கமாக பிரசாரம் செய்ததில்லை. பி.கே.எஸ்’இல் கூட கடைசியில் திருமணம் கொள்வார். எல்லாமே ஒரு கதையில் வரும் நிழல் கதாபாத்திரங்கள்.

உ.போ.ஒ. படத்தில் அவர் உருவாக்கியது ஒரு கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்திற்கு நாட்டில் மந்தமாக நடைபெற்றுவரும் வழக்கு விசாரணையைப் பார்த்து ஆத்திரம் வருகிறது. அவன் தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறான். அதை அத்தோடு நிறுத்தி விட வேண்டும். அதை விட்டுவிட்டு கமல்ஹாசன் வன்முறைக்கு வன்முறை தான் பதில். கண்ணுக்கு கண் ரத்தத்திற்கு ரத்தம் என்னும் தனது கருத்தைத்தான் உ.போ.ஒ. மூலம் சொல்லியிருக்கிறார் என்றெல்லாம் குதிப்பதில் அர்த்தமில்லை. கமல்ஹாசன் ஏற்கனவே ஒரு பேட்டியில், “என் படங்கள் மூலம் நான் யாருக்கும் எதுவும் சொல்ல விரும்பவில்லை. என்னிடம் இந்தப் படத்தில் என்ன செய்தி சொல்லியிருக்கீங்க என்று கேட்கிறார்கள். செய்தி சொல்ல நான் என்ன போஸ்ட்மேனா” என்று அவரே சொல்லியிருக்கிறார்.

உண்மையில் தமிழ் ரசிகர்கள் இன்னும் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து மீளவில்லையென்று தான் சொல்ல வேண்டும். படத்தில் எம்.ஜி.ஆர் ரஜினி என்ன பேசுகிறார்களோ, அப்படியே, நிஜத்திலும் நிகழ வேண்டும் என்ற மனப்பான்மை இன்னும் நீங்கவில்லை. “நான் ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் செய்வேன்” என்று ஆடிப்பாடி வசனம் பேசிய எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்களைப் பார்த்து பார்த்தே பழகிவிட்ட நம் மக்களுக்கு (அதிலே நானும் அடக்கம்) கமல் போன்றவர்கள் செய்யும் நிழல் படத்தையும் நிஜம் என்றே நம்புகிறார்கள்(றோம்). அதனால் தானோ என்னவோ ரஜினி, விஜய் போன்றவர்களும் மாஸ் ஹீரோயிசம் என்ற ஸ்டேடஸ்ஸிற்க்காக பன்ச் டயலாக் பேசுகிறார்கள். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களான சிம்பு, தனுஷ், விஷால் வரை இந்த பன்ச் டயலாக் கலாசாரம் பரவி விட்டது.

கமல்ஹாசன் என்ற தனி மனிதனின் கருத்துக்கள் அவருடையது. (Thankfully) அதை அவர் ஒரு சினிமா கதாபாத்திரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு அதைச் சொன்னதில்லை. அந்தத் தனி மனித கருத்துக்களோடு பேதம் இருப்பின் அதை விவாதிக்கலாம், ஏன் குற்றம் கூட சொல்லலாம். அவரது நிறைய கருத்துகள் எனக்குப் பிடிக்காது. அதற்காக அவர் படைக்கும் கதாபாத்திரங்களோடு அதை ஒப்பிட்டுப் பார்ப்பது முட்டாள்த்தனம்.

“கமல்ஹாசன் போன்ற celebrity திரையில் என்ன சொன்னாலும் செய்தாலும், அதை தமிழ் நாட்டு மக்கள் அதை அவரே நிஜ வாழ்க்கையிலும் சொல்வார் செய்வார் என்று தான் நம்புவோம்” என்று வாதிட்டால், மக்களுக்கு எது நிழல் எது நிஜம் என்று educate செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு அடிப்பிடிடா பாரதவட்டா என்று மீண்டும் பழைய பல்லவியைப் பாடிக்கொண்டிருந்தால், நல்ல படைப்புகளைப் பார்ப்பது அரிதாகி விடும்.

பி.கு. நான் மேலேயெழுதியிருப்பது உ.போ.ஒ’வின் விமர்சனம் இல்லை.

October 08, 2009

தந்தை மகனுக்காற்றும் உதவி

நல்ல நாளிலேயே பெங்களூருவிற்கு டிக்கட் கிடைக்காது. அதுவும், பண்டிகை விடுமு்றைக்குப் பிறகு நெல்லையிலிருந்து பெங்களூரு வருவதென்றால் குதிரைக் கொம்பு தான். ஆயிரம் கோ்டி புண்ணியம் செய்திருந்தால் தான் தூத்துக்குடி எக்ஸ்பிரஸில் இடம் கிடைக்கும். சரி் எப்படியாவது தத்காலிலாவது டிக்கட் கிடைக்காதா என்ற எண்ணத்தில் காலை 6.30 மணிக்கே முன் பதிவு செய்யும் இடத்திற்கு போய் விட்டேன். ஊரில் என்னை விடக் கடமைக் கனவான்கள் ஜாஸ்தி போலிருக்கு. ஏற்கனவே ஒரு சிறு கும்பல் கூடியிருந்தது. எல்லோருமே அங்கேயிருந்த திண்ணையில் (அல்லது திண்ணை மாதிரியிருந்த மேடை) தான் உட்கார்ந்திருந்தோம். எப்படியும் 1.30 மணி நேரம் காக்க வேண்டியிருக்கும் என்பதால் கையில் ஒரு புத்தகத்தையும் எடுத்துப் போயிருந்தேன்.

நான் போயமர்ந்து ஒரு 10 நிமிடங்களில் அவர் வந்தார். வயது 55'ஐத்தாண்டியிருக்கும். மாநிறத்தை விட சற்றே கறுத்த உடல், நிறைய நிரைத்த முடி, 80களில் இருந்த ஸ்டைலுக்கேற்ப தைக்கப்பட்டிருந்த சட்டை, கையில் ஒரு துணிப்பை, ஹவாய்ச் சப்பல். இது தான் அவருடைய தோற்றம்.


“தம்பி நீங்க தான் வரிசையில கடைசியீங்களா?” முகத்தில் சற்றே கவலையுடன் அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி. “ஆமாங்க” என்றேன்.

“நான் ஒரு 10 நிமிஷத்துல காபி குடிச்சுட்டு வந்துதேன், என் எடத்தை பாத்துக்கிடுதீகளா” என்றார்.

“தப்பா எடுத்துக்காதீங்க. அடுத்து வர ஆள், நீங்க போய்ட்டு திரும்பி வரும்போது எடம் கொடுக்க மாட்டேன்னு சண்டை போட்டா என்னால ஒண்ணும் பண்ண முடியாது” என்றேன். எனக்கு முன்னால் இருந்த கனவான்களில் ஒருவர், “காலங்கார்த்தாலேர்ந்து நாங்கள்லாம் ஒக்காந்திருக்கோம்லா” என்று குரல் கொடுத்தார்.

“மவனுக்கு அர்ஜெண்டா மெட்ராஸ் போயாவணும். எங்கிட்டும் டிக்கடே இல்லன்னுட்டாவோ” என்றார் இன்னும் கவலையுடன்.

“எல்லாருக்குமே இங்கிட்டு அர்ஜெண்டுதான்” என்றார் அந்த கனவான் சிரித்த படியே.

“நான் என் பையை வச்சிட்டுப் போறேன்” என்று சொல்லியவர், என்ன நினைத்தாரோ, “செருப்பு இருக்கட்டும்”என்று சொல்லிவிட்டு பையை எடுத்துக் கொண்டு போய்விட்டார்.

பத்து நிமிடங்கள் கழித்து வந்தார். அடிக்கடி கையில் கட்டியிருந்த பழைய கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டார்.

“சென்னைக்கு ஏதாச்சும் ரயில்ல நல்லாயிருக்கும்” என்றார் என்னப் பார்த்து. என் பதிலுக்குக் காத்திராமல், “கவுண்டர் கரெக்டா 8 மணிக்குத் தொறந்திருவாங்கள்லா. 10 நிமிஷத்துலயே அம்புட்டு டிக்கட்டும் போயிருமாம்லா. அப்படியா தம்பி” என்றார் என்னிடம்.

“சொல்ல முடியாதுங்க. இந்தியா பூராவும் டிக்கட் கொடுக்கறாங்க. எங்கிருந்தும் வாங்கலாம்” என்று பொதுவாகச் சொல்லிவைத்தேன்.

“இந்தக் கம்பியூட்டர் கறுமாந்திரம் வந்தப்புறம் தான்யா டிக்கட்டுக்கு இம்புட்டு கிராக்கி. கம்பியூட்டர் வச்சிருக்க பயபுள்ளேல்லாம், வூட்டுலேந்தே ஒக்காந்து புக் பண்ணிப்புடுதானுங்க. இங்கிட்டு வந்து கால் கடுக்க நின்னாலும், ஒண்ணும் கிடைக்க மாட்டேங்குது” என்று அங்கலாய்த்தார் இன்னொரு பெரிசு.

“கம்பியூட்டருக்கு எல்லா தகவலும் ஊட்டி விட்டு, யப்பா ராசா டிக்கட் கொடு மவராசான்னு காத்திருந்தாலும், கரெக்டா 8 மணிக்கு ரயில்வேஸ் சைட் மக்கர் பண்ணும் கொடுமை எனக்குத் தான் தெரியும்” என்று மனதுக்குள்ளே சொல்லி சிரித்துக் கொண்டேன்.

“அதை விட இந்த ஏஜெண்டுங்க தான் நிறைய டிக்கட்டை புக் பண்ணிப்புடிதானுங்க” என்றார் இன்னொரு பெரிசு.

“உங்களுக்கு ஏதாச்சும் ஏஜண்டைத் தெரியுமா” என்று என்னிடம் கேட்டார்.

“இல்லீங்க. தெரியாது”

கண்களில் ஒரு மாதிரியான ஏமாற்றம். “மவன் மெட்றாசுக்குக் கண்டிப்பா நாளன்னிக்கிப் போயே ஆவணும்” என்று மீண்டும் அதே பல்லவி. குட்டி போட்ட பூனை மாதிரி இங்கும் அங்கும் நடந்தார். சில நேரம் கழித்து எனக்குப் பின்னால் ஒருவர் உட்கார, “அந்தத் தம்பிக்கப்புறம் நான் தான். சப்பல் வச்சிருக்கேன்” என்று தள்ளியிருந்து சொன்னார்.

8 மணிக்கு கவுண்டர் திறந்ததும், எல்லோருக்கும் முன்னாலே போய் நின்று கொண்டவரை சிலர் மறித்தனர். “தப்பா எடுத்துக்கிடாதீங்க. உங்களுக்கு முன்னால டிக்கட் வாங்கிற மாட்டேன். எந்தெந்த ரயில்’ல டிக்கட் இருக்குன்னு தெரியும். அதத்தான் பாக்கேன்” என்றார். டிக்கட் வங்கிக் கொண்டு போகும் ஒவ்வொருவரிடமும், “கிடைச்சுட்டுதா, எம்புட்டு சீட் இருந்துச்சு” என்று ஏதோ பரீட்சை எழுதி ரிசல்டுக்குக் காத்திருக்கும் ஒரு அப்பாவி மாணாவனைப் போல் காத்திருந்தார். எனக்கு முன்னால் நின்றிருந்தவர்களுக்கே சென்னைக்கு டிக்கட் இல்லையென்று சொல்லிவிட்டார்கள். பின்னால் நின்றிருந்தவர்களும் புலம்பிக் கொண்டே வெளியேறிவிட்டார்கள். எப்படியும் டிக்கட் கிடைக்காது எனத்தெரிந்திருந்தும், அவர் போகவில்லை. நான் கவுண்டரை அடந்ததும் என் பின்னால் வந்து நின்று கொண்டார்.

எப்படியும் அவருக்காகப் பிரத்யேகமாக ரயிலில் சீட் உருவாக்கப் போவதில்லை. கண்டிப்பாக ஏமாற்றமே மிஞ்சியிருக்கும். இருந்தாலும், அவருடைய ஏமாற்றம் தோய்ந்த முகத்தைப் பார்க்க எனக்கு மனத்துணிவு இல்லை.

தன் மகனுக்காக அதிகாலையிலேயே ரயில் முன்பதிவு செய்ய வந்த மனிதரோடு ஓரு மணிநேரப் பழக்கமென்றாலும், இன்னும் அவருடைய கவலை தோய்ந்த இன்னும் அகக் கண் முன்னே நிழலாடுகிறது. அவர் மகனுக்காக எதிலாவது டிக்கட் கிடைத்ததா இல்லையா தெரியவில்லை.

“இவன் தந்தை என்னோற்றான்” என்று பிறர் சொல்ல அவர் மகன் இருக்கிறானா இல்லையா தெரியவில்லை, ஆனால், “இவன் மகன் என்னோற்றான்” என்று தான் சொல்ல வேண்டும்.

October 06, 2009

குந்தவையின் கட்டளை

கொஞ்ச காலம் பிளாகுலகிலிருந்து அஞ்ஞாதவாசம் இருந்தாலும், நம்ம ரசிகப்பெருமக்கள் விடமாட்டேன்றாங்க (டேய் டேய் அடங்குடா! வேற யாராவது சொல்வதற்கு முன், நானே சொல்லிக் கொள்கிறேன்)
குந்தவை அக்கா, திடீர்னு ஒரு கட்டளை இட்டிருக்காங்க. இந்த நாலுக்கும் என்ன சம்பந்தம்’னு தெரியலை. ஆனால் எல்லாமே கொஞ்சம் விவகாரமான விஷயமாத்தான் இருக்கு. ஏதோ என் மனசுல பட்டதை எழுதியிருக்கேன். நீ என்னடா சொல்லுறதுன்னு, நீ பெரிய *()$%*(#$(%(#’ங்கியா’ன்னு கேட்டு ஆட்டோ கீட்டொ அனுப்பிடாதீங்க.

காதல்

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த வார்த்தைக்கான அர்த்தம் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறது. பள்ளிப்ப்ருவத்தில், ஒரு ஆணும் பெண்ணும் கட்டிக்கொண்டு ஆடிப்பாடி கல்யாணம் செய்து கொள்வதற்குப் பெயர் தான் காதல் என்றிருந்தது. விடலைப் பருவத்தில் ஒரு தலைக் காதல். ஸ்டெஃபி கிராஃப், மாதுரி தீக்ஷித், ஸ்ரீ தேவி இப்படியாக என் ஒரு தலை ராகத்தின் ஆலாபனை ரொம்பவே நீளம். விவரம் தெரிந்த பிறகு, எதன் / யார் மீதாவது பற்று அல்லது ஈர்ப்பு அதிகமாகி அதோடு / அவரோடு ஏற்படும் உறவு தான் காதல் என்று புலப்பட்டது. அப்படிப் பார்க்கையில், வாழ்வின் எந்நாளிலும் குறுக்கிடாமல் இருந்ததில்லை. கிரிக்கெட், தாய் நாடு, தாய் மொழி, புத்தகம், வேலை, தாய், மனைவி இப்படியாக நான் காதலிக்கும் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

எலேய் கேட்ட கேள்விக்கு டகால்டி வேலையெல்லாம் காட்டாமல் ஒழுங்கா பதில் சொல்லுனு என் மனசாட்சி உள்ளேயிருந்து கத்துவதால், எல்லோருக்கும் தெரிந்த காதல் பற்றியே இரண்டு வரி போனால் போகுது, எழுதித் தொலைக்கிறேன்.

கல்யாணத்திற்கு முன்பே காதல் வயப்பட்டிருக்கேன். அவளை நினைத்து உருகாத நாளில்லை. அவளைக் காண வேண்டும் என்று ஏங்காத தருணங்கள் இல்லை. அவளையே நினைத்து அவளோடு வாழ்வதாக கற்பனை செய்து கொண்ட தினங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. பார்க்கும பெண்களில்லாம் அவள் ஒளிந்திருக்கிறாளா என்று நோட்டம் விட்ட அந்த தினங்கள் மறக்க முடியாதவை. என்னை ஆட்கொண்ட அந்த உணர்வை காதல் என்று தான் சொல்ல வேண்டுமானால் ஆம், நானும் காதல் வயப்பட்டேன். என்ன நான் காதலிச்ச பொண்ணு 1000 வருஷத்துக்கு முன்னால் வாழ்ந்தவள். நான் காதல் வயப்பட்டவளைப் பற்றி இதொ நான் ஏற்கனவே எழுதியது.

கடவுள்

ஆம் இருக்கிறது. என்னடா இப்படி மரியாதையில்லாமல் சொல்கிறானே என்று வெகுண்டு எழ வேண்டாம். அண்ட சராசரத்தையும் கட்டிக் காத்து, அந்த உருவமற்ற, பிறப்பு இறப்பு எதுவுமில்லாத, கால நேரமில்லாத, எங்கும் வியாபித்திருக்கும் சக்தியை வேறெப்படி அழைப்பது?? கடவுள், என்ற வார்த்தைக்கு காஞ்சி பெரியவர் ஒரு முறை கொடுத்த விளக்கம் தான் ஞாபகம் வருகிறது. ஒவ்வொரு உயிருக்கும் உள்ளே கிடக்கும் சக்தியே, ‘கடவுள்’. மனிதன் தன்னை மீறி எதுவும் இல்லை, யாரும் இல்லை என்ற கர்வம் கொள்ளாமலிருக்கவே கடவுள் என்றொரு சக்தி இருக்க வேண்டியது அவசியமாகிறது. அப்போ பிரம்மா, விஷ்ணு, சிவன், பிள்ளையார், லக்ஷ்மி சரஸ்வதி, முருகன், அல்லாஹ், இயேசு இவங்கள்’லாம்?? எல்லோரும் ஒரே பரம்பொருளுக்குள் ஐக்கியமாகியிருக்கின்றனர் என்று தான் நம்புகிறேன். கஷ்டகாலம் வரும் போதெல்லாம், கடவுளிடம் முறையிடுவேன். கஷ்டம் நீங்குகிறதோ இல்லையோ, அதைத் தாங்கும் மனப்பக்குவம் ஏற்பட்டிருக்கிறது, மனது இதமாயிருந்திருக்கிறது. கடவுளைக் கண்டதில்லை, ஆனால், அப்படியொரு சக்தி இருப்பதை பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன்.

பணம்

பணம் பத்தும் செய்யும்
பணம் பாதாளம் வரை பாயும்
சமீபத்தில் படித்த புதினத்தில் இவ்வரிகளைக் கண்டேன்.
Money is Freedom
Money is Power
முற்றிலும் உண்மையான வார்த்தைகள். வசதியான வாழ்க்கைக்கும், பிறர்க்கு உதவுவதற்கும், பணம் மிக மிக அவசியம். ஆனால் பணம் மட்டுமே எல்லாம் இல்லை. பணத்தால் எப்போதும் எல்லாவற்றையும் சாதித்து விட முடியாது என்பதும் மனதில் இருக்க வேண்டும்.

அழகு

அழகைப் பற்றி கவிப்பேரரசு, பாட்டே எழுதியிருக்கார். எதோ, எனக்குத்தெரிந்த அழகைப் பற்றிச் சொல்கிறேன்.
அழகு என்றால் நினைவுக்கு வருவது, ஐஷ்வர்யா ராய், அசின், மாதுரி தீக்ஷித், தீபிகா படுகோன் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். (காயத்ரி அவள் பெயரைச் சேர்த்துக் கொள்ளுமாறு கண்களால் ஆணையிடுகிறாள்) ஆனால் இந்த புற அழகெல்லாம் சில காலத்துக்குத்தான். என்னைப் பொறுத்தவரை அழகு என்பது பார்ப்பவர் கண்களிலும் இல்லை, பார்க்கப்படுபவர் உடலிலும் இல்லை. அது பார்ப்பவர் எண்ணத்திலும், பார்க்கப்படுபவரின் மனதிலும் தான் இருக்கிறது. எனக்கு நெல்சன் மண்டேலா கூட அழகாகத்தான் தெரிகிறார்.
அதற்காக அழகாகத் தோற்றமளிக்கக் கூடாது என்பது என் கருத்தல்ல. ஆள் பாதி ஆடை பாதி என்பது போல் பார்ப்பவர் கண்கள் கூசாமலும், நெளியாமலும் இருந்தாலே அழகாகத் தான் இருக்கும்.
அப்பாடா!! கொடுத்த வேலையை ஒரு வழியா செய்து முடிச்சாச்சு. யார் யாருக்கு இந்த நாலு மேட்டர் பற்றியும் எழுதணும்’னு தோணுதோ, எழுதலாம். நான் யாரையும் வம்புக்கு இழுக்கலை!!

August 03, 2009

காய்ச்சல் கொண்டேன்

சில நாட்களாக பெங்களுரில் நிலவி வரும் சீதோஷநிலையில் ஆதவனைக் காண்பதே அரிதாகி விட்டது. (சென்னை மக்களின் காதுகளிலிருந்து புகை வருவதைக் காண முடிகிறது) மப்பும் மந்தாரமுமாகவும், கொப்பும் கொலையுமாகத் தான் இருக்கிறது. சூரியபகவான் வெகேஷனில் போய்விட்டதால் வைரஸுகளுக்கெல்லாம் கொண்டாட்டம் தான். “ஹையா ஜாலி”யென்று , மக்கள் மீது படையெடுக்க ஆரம்பித்து விட்டன. இதிலுள்ள கொடுமையென்னன்னா, நானும் அந்த வைரஸ்களின் கொரில்லாத் தாக்குதலுக்கு ஆளானது தான்.

சனி மதியம் சாப்பிட்டு விட்டு, டி.வி பார்த்துக் கொண்டிருந்த போதே காய்ச்சல் ஏறி விட்டது. ”என்ன உடம்போப்பா. எப்படித் தான் இப்படி திடீர்னு காய்ச்சல் வருதோ” என்று காயத்ரி கவலை கொண்டாள். “உடம்புன்னு ஒண்ணு இருந்தா, காய்ச்சல் வரத்தான் செய்யும். பாவம் அதுக்கும் போய் இருக்க ஒரு இடம் வேண்டாமா!!” என்பது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

சரி டாக்டரிடம் போகலாம் என்றாள். சிறு வயதிலிருந்தே டாக்டரிடம் போவது எனக்குப் பிடிக்காத விஷயம். எனக்கு மட்டுமில்லை, என் அப்பா தாத்தா என்று யாருக்குமே பிடிக்காது. “ஒண்ணும் வேண்டாம். ஒரு பாராசிடமாலும் எரித்ரோமைசினும் போட்டுக் கொண்டால் போதும்” என்று சொல்லிவிட்டேன். பொதுவாகவே ஒரு மாத்திரைக்கே உடம்பிலுள்ள வைரஸ்களெல்லாம் காலி பண்ணிப் போய்விடும். இது கொஞ்சம் விடாப்பிடியான வைரஸ் போலிருக்கு. ஞாயிறு காலையிலும் காய்ச்சல் குறைய வில்லை. இனிமேலும் சும்மா இருக்கக் கூடாது, கண்டிப்பாக டாக்டரிடம் போயே ஆக வேண்டும் என இப்போது மேலிடத்திலிருந்து உத்தரவு பிறந்தது.

“இங்க பார் டாக்டரிடம் போனாலும் ஒரு டோலோவோ, இல்லை காம்பிஃப்ளேமோ தான் எழுதித் தரப் போறார். அதை நாமே வாங்கிப் போட்டுண்டாப் போச்சு. இதென்ன அமெரிக்காவா? Presciption இல்லாமல் மாத்திரை தரம்மாட்டேன்னு மெடிக்கல் ஸ்டோர்ஸ் காரன் சொல்ல” என்று என்ன சொல்லியும் எடுபடவில்லை.
“இல்லை இல்லை, ஒரு ஊசி போட்டுண்டு, அப்படியே பிளட் டெஸ்ட் எதுவும் எடுக்கச் சொன்னால் அதையும் எடுத்துடலாம்” என்று அதட்டலான ஒரு சமாதானம் பிறப்பிக்கப் பட்டது.

“சரி, எந்த ஆஸ்பத்திரியில் இப்போது டாக்டர் இருக்கிறார் என்று விசாரி” என்றேன். என்ன ஆச்சர்யம்!ப் ஞாயிறென்றால், பெங்களூரில் ஆஸ்பத்திரிக்கும் விடுமுறை போலிருக்கு. ஒரு ஆஸ்பத்திரியிலும் ஒரு டியூடி டாக்டர் கூட இல்லை என்று சொல்லிவிட்டு, ஃபோனையும் உடனே வைத்து விட்டார்கள். “என்னடா இது பெங்களூருக்கு வந்த சோதனை. ஏதேது பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமைன்னா யாருக்கும் உடம்பு சரியில்லாமல் போகக்கூடாதா?! இழுத்துண்டிருக்கற கேஸுன்னாக் கூட திங்கள் வரை பொறுக்கணும் போலிருக்கே!!

“சரி கவலையை விடு. டாக்டர் கிட்ட போனாலும், டோலோ, காம்பிஃப்ளேம் ஏதாவது தான் எழுதித் தரப் போறார். அதை நாமளே வாங்கிக்கலாம். டாக்டருக்கு தண்டம் அழுது தான் இதைச் சாப்பிடணும்’னு இல்லை” என்று சொல்லியும், காயத்ரி இசையவில்லை. எங்கேயெல்லாமோ விசாரித்து, ஒரு வழியாக ஒரு ஆஸ்பத்திரியில் டாக்டர் இருக்கிறார். அவரும் 12 மணி வரை தான் இருப்பார் என்று தெரிந்து கொண்டு, அவரைப் பார்க்கப் புறப்பட்டோம்.

இந்தப் பாழாப்போற ஊர்’ல உள்ள ஒரு கொடுமை என்னவென்றால், எந்தவொரு ஆஸ்பத்திரியாகட்டும், அங்கே நாம் முதலில் ரெஜிஸ்டர் கொள்ள வேண்டும். அதற்கென்று தனியாகப் பிடுங்கிக் கொள்வார்கள். முதலில் இந்த துவாரபாலகர்களைக் கவனித்தால் தான் உள்ளே அனுமதி. “நீ டாக்டரைப் பாரு இல்லை, எக்கேடு கெட்டுப் போ. எங்களை முதலில் கவனி” என்று சொல்லாமல் நாசூக்காகக் காசு பிடுங்கும் தந்திரத்திற்குப் பெயர் தான் ரெஜிஸ்ட்ரேஷன். சரி துவாரபாலகர்களைக் கவனித்தாயிற்று. டாக்டர் இருக்கும் அறை எங்கே என்று தேடிக் கொண்டு போனால், ஒரு அறைக்குள் உட்காரச் சொன்னார்கள்.

எனக்கா காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் இருக்கிறது. இவர்களென்னன்னா, ஏ.ஸியை, எவ்வலவு குறவான தட்பவெப்பத்தில் வைக்க முடியுமோ, அவ்வளவு குறைவாக வைத்திருந்தார்கள். என் பற்கள் ஒரு ஜலதரங்கக் கச்சேரியே நடத்தின. இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து வெள்ளை அங்கி அணிந்த ஒரு பெண்மணி உள்ளே நுழைந்தாள். ஸ்டெதஸ்கோப் வைத்திருப்பவர் தான் டாக்டர் என்று எனக்குத் தெரியாதா. எம்புட்டு தமிழ் சினிமா பார்த்திருக்கோம். பொய் சொல்லப் போறோம் படத்துல “நீங்க புரோக்கரா பார்டியா”ன்னு கேப்பாங்களே, அது மாதிரி, “நீங்க டாக்டரா நர்ஸா”ன்னு கேக்கணும் போல இருந்தது. கேட்கவில்லை. “டாக்டரை இருக்காறா இல்லையா” என்றேன். முதலில் நான் செக்கப் செய்வேன். பிறகு தான் டாக்டர் பார்ப்பார் என்றாள். சரி தான் முதலில் துவாரபாலகர்கள், அப்புறம் இந்த உபதெய்வங்கள், அப்புறம் தான் சந்நிதிக்குள்ளேயே விடுவார்கள் போலிருக்கு.

ரத்த அழுத்தம், பல்ஸ் எல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டாள். “ஹலோ, நான் வந்திருப்பது காய்ச்சலுக்காக. நீங்க ஆள் மாற்றி இதெல்லாம் பார்க்கறீங்களா” என்றேன். ஒரு புன்னகையுடன், “உங்களை முழுசா செக்கப் செய்வதற்குத்தான் இதெல்லாம்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

10 நிமிடக் காத்திருத்தலுக்குப் பின், திரை போடப்பட்டிருந்த சந்நிதி திறந்தது. ஐ மீன் டாக்டரைப் பார்க்க அனுமதிக்கப் பட்டேன். ஜீன்ஸ் டி-ஷர்ட் போட்டுக் கொண்டு சாஃப்ட்வேர் எஞ்சினியர் போல், இளமையான டாக்டர். ஒரு வேளை ஹவுஸ் சர்ஜன் எனப்படும் அப்ரெசிந்தியாகக் கூட இருக்கலாம். இவரிடம் ஸ்டெதஸ்கோப் இருக்கு. டாக்டர் தான் என்பது ஊர்ஜிதம் ஆனது. வக்கீலிடமும் வாத்தியாரிடமும் உண்மையை மறைக் கூடாதே. அதனால் எனக்கு எப்போது காய்ச்சல் வந்தத்து, என்னென்ன மாத்திரை எடுத்துக் கொண்டேன் , இதற்கு முன் காய்ச்சல் வந்த போதெல்லாம் என்னென்ன மாத்திரை எடுத்துக் கொண்டேன், என்னென்ன சாப்பிட்டேன் என்று ஒன்று விடாமல் அனைத்தும் ஒரே மூச்சில், எதோ கேள்விக்கு பதில் சொல்வது போல் ஒப்பித்துத் தள்ளினேன்.

நான் சொன்னதைக் கேட்டுக் கொண்டாரா இல்லையா தெரியவில்லை. மீண்டும் ரத்த அழுத்தம், பல்ஸ், உடல் உஷ்ணம் என எல்லாம் செக்-அப் செய்தார். நர்ஸ் மீது அவ்வளவு நம்பிக்கை போலிருக்கு. “உங்களுக்கு வந்திருப்பது வைரல் ஃபீவர் தான்” என்றார்.

“இது எங்களுக்குத் தெரியாதா!! இத்தக் கேக்கவா அம்புட்டு தூரத்துலேர்ந்து வந்திருக்கோம்” என்று என் மனம் சொல்வதை காயத்ரி என் கண்களைப் பார்த்தே தெரிந்து கொண்டவள் வேறொரு புறம் திரும்பிக்க் கொண்டாள்.

“உங்கள் காய்ச்சலுக்கு டோலோ எடுத்துக் கொள்ளுங்கள். அதை ப்ரிஸ்கிரைப் செய்கிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் சரியாகி விடும்” என்று சொல்லிவிட்டு மருந்துசீட்டில் எழுதிக் கொடுத்தார். மீண்டும் காயத்ரியை நான் பார்க்க யத்தனிக்க , அவள் முகம் என் பக்கம் திரும்பவே இல்லை.

“அப்போ எனக்கு ஊசியெல்லாம் எதுவும் போடப்போறதில்லையா” என்றேன்.
“தேவையில்லை” என்றார்.
“ஒரு பிளட் டெஸ்ட் வேணா எடுத்துப் பார்த்துடுங்களேன். ”
“No need. This is just a viral infection"

மீண்டும் காயத்ரி பக்கம் திரும்பியிருந்தால் அவள் எழுந்து போயிருப்பாள்.

“நான் ஏற்கனவே எடுத்த்துக் கொண்ட அதே மருந்தைத் தான் டாக்டரும் எழுதிக் கொடுத்திருக்கார், இதுக்கெல்லாமாவா ஃபீஸ் வாங்குவீங்க” என்ற என் விண்ணபத்தை துவாரபாலகர்கள் ஏற்க மறுத்து விட்டனர். வலுக்கட்டாயமாக அர்ச்சனைக்கான காசைப் பிடுங்கிக் கொண்டார்கள். வாத்தியாருக்கும் வைத்தியருக்கும் கடன் வைத்தால் படிப்பும் வராது, நோயும் போகாது’ன்னு எங்கேயோ கேட்டிருந்ததால், போனாப் போறது என்று நினைத்துக் கொண்டு அவர்கள் கேட்ட தொகையைச் செலுத்திவிட்டு வீடு வந்தோம்.

பி.கு. இன்று ஓரளவு உடம்பு பரவாயில்லை. நாளை ஆஃபீஸ் போய்விடலாம் என்று நினைக்கிறேன்.

“ஏண்டா வெண்ணை, ஒரு சாதாரண காய்ச்சல் வந்ததை இப்படியொரு மொக்கைப் பதிவாப் போட்டு, எங்க நேரத்தை வீணடிக்கிறியேடா” என்று யாரும் பின்னூட்டத்தில் கேட்க வேண்டாம்.

July 29, 2009

ரீமேக் கலாசாரம்

ஆஃபீஸ் நண்பன் உபயத்தால் கம்பக்த் இஷ்க் என்ற ஹிந்தி படம் DivX வடிவில் கிடைத்தது. போதாக்குறைக்கு காயத்ரியை வேறு கூட உட்கார்ந்து பார்க்கும்படி சொல்லிவிட்டேன். பம்மல் .கே. சம்பதத்தின் கதையை அப்படியே அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போய் ஏன் எடுத்திருக்கிறார்களோ??? அரை மணி நேரம் கழிந்தும் நகருவேனா என்கிறது படம். காமெடி என்ற பெயரில் படம் முழுக்க வீசுகிறது காமநெடி. படத்தில் தென்படும் அனைத்து பெண்களுமே பிகினியில் காட்சியளிக்கிறார்கள். ஜோக் என்ற பெயரில் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள். கம்லஹசனும் மௌலியும் பார்த்தால் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் ள்வார்கள். பேசாமல் கமலே பம்மல் கே. சம்பத்ததையே டப்பிங் செய்திருக்கலாம்.

எனக்குத் தெரிந்து ஒரு படைப்பை மீண்டும் வேறொரு மொழியில் மீண்டும் அதை எடுக்கும் போது மிகுந்த கவனம் தேவை. ஏற்கனவே முதலில் வந்த படத்தைப் பார்த்து, அதன் பாதிப்பும் எதிர்பார்ப்பும் மீண்டும் எடுக்கப் பட்ட படத்தின் மீதும் ஏற்படும். ரீமேக் / டப்பிங் செய்கிறேன் பேர்வழி என்று சில அசல் படத்தை கொலை செய்கிறார்கள்.

என் நினைவில் முதலில் பார்த்த டப்பிங் படம் சங்கராபரணம். தமிழில் டப் செய்திருந்தார்கள். பாடல்களனைத்தும் ஏற்கனவே கேட்டுவிட்டிருந்ததால், தமிழில் கேட்கும் போது கேனத்தனமாக இருந்தது. இதற்கும் முதலில் தமிழ் பிரதையைத் தான் பார்த்தேன். பிற்பாடு தெலுங்கில் பார்த்தபோது தான் நிறைவு உண்டானது. இன்றும் சங்கராபரணத்தைப் பார்த்தால் சலிக்காது.

ஆனால் டப் செய்தாலும் அதன் அழகழியாமல் இருந்ததென்னவோ, சலங்கை ஒலி தான். உடைகள் மட்டும் சற்று வித்தியாசமாக இருந்தாலும் டப்பிங் வசனம், பாடல்கள், இசை, நாட்டியம் என எதிலுமே குறை சொல்ல முடியாது. எல்லோருமே தங்களது குரலிலேயே பேசியிருப்பது இன்னொரு காரணமாகக் கூட இருந்திருக்கலாம்.

ஹிந்தியிலிருந்து தமிழில் எடுக்கப்பட்ட வசூல் ராஜாவும் சரி, தமிழிலிருந்து ஹிந்தியில் எடுக்கப்பட்ட அலைபாயுதேவும் சரி, பார்க்கவே பிடிக்க்லை. சஞ்சய் தத் அப்படியே ஒரு தாதா போல் இருந்தார். கமலுக்கு என்ன தான் உடல் வாகு இருந்தாலும், ஒரு ரவுடியாகப் பார்க்க முடியவில்லை. முன்னாபாய்’இல், அந்த ஆஸ்பத்திரி டீனிடம் சஞ்சய் பேசும் அந்த casual dialogue delivery கமலிடம் மிஸ்ஸிங். என்னதான் சென்னைத்தமிழில் கலாய்த்தாலும், ஒரிஜினல் போல் வரவில்லை.

அலைபயுதேவின் பிளஸ்பாயிண்டே, இளமை ததும்பும் மாதவனின் சிரிப்பும், வசீகரிக்கும் ஷாலுவின் (அஜீத் மன்னிக்க. இப்படித் தான் ஷாலினியைக் கூப்பிடுவேன்) கண்களும் தான். விவேக் ஓபராய், ராணி முகர்ஜி, இருவரிடமும் அந்த இளமையும் வசீகரமும் சுத்தமாக இல்லை. அதிலும் நடராஜன் அடிக்கும் டைமிங் ஜோக்குகளை கொலை செய்திருப்பார்கள் ஹிந்தியில்.

அனில் கபூர் கிட்டத்தட்ட எல்லா பாக்யராஜ் படங்களையும் ரீமேக் செய்திருப்பார் என நினைக்கிறேன். பேடா மட்டுமே மாதுரி தீட்சித் உபயத்தில் பார்க்க முடிந்தது. மற்றதெல்லாம் சொல்லிக் கொள்ளும் படி ஒன்றுமில்லை.

சந்திரமுகி கூட மணிச்சித்ரதாழ் போலில்லை, என்பாள் காயத்ரி. நல்ல வேளை ஏக் துஜெ கேலியே போன்ற படங்களை தமிழில் எடுக்கவில்லை. ஹிந்தியிலேயே தமிழகத்திலும் வெளியிட்டு வெற்றிநடை போட்டது. தெலுங்கில் மனோசரித்ரா என்று ரீமேக் செய்தார்கள் என்று நினைக்கிறேன்.

தமிழிலேயே டப் செய்யப்பட்ட குரு பரவாயில்லை. அபிஷேக் முகம் தான் கொஞ்சம் அழுதமூன்ஞ்சியாக இருந்தது.

ஒரு படத்தை, ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழியில் எடுக்கும் போது, அந்தந்த மொழி கலாசாரம் என்பதற்கேற்ப கஸ்டமைஸ் செய்கிறார்கள். இந்தியாவில் வி்ற்பனையாகும் பீஸாவில் தந்தூரி சுவை கொண்டு வருவது மாதிரி. ஆனால் எனக்கென்னவோ, கஸ்டமைஸ் செய்யப்பட்ட பீஸாவும் பிடிக்கவில்லை, படங்களும் பிடிப்பதில்லை. அசலில் எடுக்கப்பட்ட படத்தை அப்படியே, அச்சு பிசகாமல் அப்படியே வேறொரு மொழியிலும் வெளியிட்டால் மக்கள் ரசிப்பார்கள் என்றே தோன்றுகிறது.

கன்னடத் திரைத்துறை வளரவேண்டும் என்பதற்காக பிற மொழிப்படங்கள் கன்னடத்தில் டப் செய்யக்கூடாது என்று கன்ண்ட ஃபிலிம் சேம்பர் தடை விதித்துள்ளதாம். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க?? விளைவு, ஒரிஜினல் படம் என்பதே கிடையாது. எல்லாமே, மற்ற மொழிகளிலிருந்து கதையைத் திருடி எடுக்கப்படும் படங்கள் தான்.

திரைத்துரையினருக்கு சில வேண்டுகோள்கள். முடிந்தவரை ஒரிஜினல் படங்களை எடுங்கள். ரீமேக் செய்யும் போது அந்தந்த ஊருக்கு ஏற்ற மாதிரி கஸ்டமைஸ் செய்யாமல் முடிந்தவரை ஒரிஜினலை பின்பற்றப் பாருங்கள். படம் துவங்குவதற்கு முன், அசல் படத்தின் தயாரிப்பாளர், மற்றும் இயக்குனர்களுக்கு ஒரு நன்றி டைடில் போடுங்கள். ஒன்றும் குறைந்து போய்விட மாட்டீர்கள்.

July 20, 2009

வெல்லத்தானே வீரம் கொல்வதற்கு இல்லை

ரொம்ப நாள் கழித்து இரண்டு நல்ல சினிமாக்கள் பார்க்க நேர்ந்தது. இரண்டுமே சமீபத்திய ரிலீஸ் தான். இரண்டுமே, அமெரிக்காவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள். ஒன்று ஹிந்தி படமான நியூ யார்க்.

9/11’க்கு பிறகு அமெரிக்கா தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் எவ்வளவு முனைப்பாக இருக்கிறது என்பதை நியூ யார்க் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். FBI'இனால் தீவிரவாதி என்று சந்தேகப்பட்டு கைது செய்யப்பட்ட ஒருவன், தீவிரவாதியாகிறான். ஆனால் எந்தவொரு செயலும் தீவிரவாதத்தை நியாயப் படுத்த முடியாது என்று அதே FBI அதிகாரி கூறுவது உண்மையென்றாலும், ஒரு பாதிக்கப்பட்டவன் அப்படி நினைப்பானா என்று தெரியவில்லை.

சந்தேகத்தின் பேரில் எவ்வளவு பேரை சிறையில் பிடித்தடைத்து, விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்து, பிறகு சாட்சிகள் இல்லாததன் பேரில் விடுதலை செய்வதைப் பார்த்தபிறகு, அமெரிக்கா மீதான மதிப்பு போய் வெறுப்பு மட்டுமே மிஞ்சுகிறது.

9/11’க்கு பிறகு 1200 பேரை அமெரிக்க அரசும் உளவுத்துறையும் கைது செய்து அவர்களை காண்டனமோ பே என்ற சிறைச்சாலையில் அடைத்து சித்திரவதை செய்திருக்கிறார்கள் என்று படம் முடிந்தவுடன் குறுன்ஞ்செய்தி போடும் போது, அமெரிக்கா மீதான மதிப்பு போய், வெறுப்பு தான் மிஞ்சுகிறது. சுதந்திரம் சுதந்திரம் என்று கூறிக்கொள்வதெல்லாம், வெள்ளைத் தொல் கொண்டவர்களுக்குத் தான் போலிருக்கு.

தீவிரவாதியாக இருப்பானோ என்று சந்தேகப்படுபவனையே சித்திரவதை செய்கிறது அமெரிக்கா. இங்கே, நம் நாட்டில் என்னடான்னா, தீவிரவாதி என்று 100% தெரிந்திருந்தும், தீவிரவாதச் செயல் புரியும் போது கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டும், அவனுக்கு அரசு செலவில் ராஜ மரியாதை கொடுக்கப்பட்டு, இவன் புரிந்தது, தீவிரவாதச் செய்ல தானா என்று ஆலோசிக்கும் இந்திய அரசாங்கம் எங்கே?

படத்தில் எனக்கு மிகவும் பிடித்த இடம், FBI அதிகாரியாக வரும் இர்ஃபான் பேசும் ஒரு வசனம். “ஒரு தீவிரவாதி உருவாவதற்கு நாம் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் எந்தவொரு செயலும் தீவிரவாதத்தை நியாயப் படுத்த முடியாது. ஒரு தனி மனித கோபம் என்பதை ஒரு நாட்டிற்கெதிராகத் திருப்புவதை யாராலும் எப்போதும் ஒத்துக் கொள்ள முடியாது”. உண்மையான வார்த்தைகள். இந்தப் படத்தைப் பார்த்ததும் எனக்கு மஹாத்மா காந்தி மீதான மரியாதை அதிகரித்திருக்கிறது.

ஓர் அரசாங்கத்திற்கெதிராக அவர் நடத்திய போராட்டம், அந்த அரசாங்கத்தை ஒழிப்பதற்காக அல்ல. அவர்களை மாற்றி, அவர்களும் வாழ்ந்து நாமும் நமது உரிமைகளோடு வாழவேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் கொண்ட Inclusive Agitation. அவர்கள் இருந்தால் நம்மால் நமது உரிமைகளைப் பெற முடியாது. அவர்களை ஒழித்துக் கட்டினாலொழிய நம் உரிமைகள் நமக்குக் கிடைக்காது என்று கிளர்ச்சி கொண்ட Exclusive Agitation ’ஆக அது இருந்திருக்கவில்லை. அவரும் ஆயுதத்தை கையிலேந்தியிருந்தால் அவருக்கும் தீவிரவாதி என்ற பட்டமே கிடைத்திருக்குமோ என்னவோ? என்னைப் பொறுத்த வரை வீரத்திற்கு ஒரு புதிய அர்த்தம் கொடுத்தார் என்று தான் தோன்றியது. வீரம் சக மனிதனின் மனதை வெல்வதற்கே, கொல்வதற்கு அல்ல என்பது தான். I think, that is why Mr. Mohandas Karamchand Gandhi has outgrown all others in stature.

என்னை பாதித்த இன்னொரு படம், "Crossing Over" என்ற ஆங்கிலப் படம். இதுவும் அமெரிக்காவை மையப்படுத்தியே எடுக்கப்பட்ட படம். சட்டத்தை மீறி பிழைப்புக்காக அமெரிக்காவில் குடிபெயர்ந்த மக்களை எப்படிக் கையாளுகிறது என்பது தான் கதையின் கரு. அப்படியென்ன தான் இருக்கிறது, அமெரிக்காவில் ? வேலை வாய்ப்பா, சுதந்திரமா, பணமா, அல்லது அமெரிக்காவில் இருக்கிறோம் என்ற பெருமிதமா? தெரியவில்லை. ஆனால் படம் பார்த்து முடித்த பிறகு, அமெரிக்கா பற்றி, “சீ சீ இந்தப் பழம் புளிக்கும்” என்று தான் எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

May 28, 2009

படித்ததில் ரசித்தது

நான் படித்து ரசித்த சில புத்தகங்கள் பற்றிப் பகிர்ந்து கொள்வதற்கு இப்படி ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த திவ்யப்ரியாவிற்கு மனமார்ந்த நன்றி. நல்ல வேளை அந்தப் பகிர்தலும் எப்படி இருக்கணும் என்று ஒரு ரெடி மேட் டெம்பிளேட்டும் கொடுத்துவிட்டதால், நான் படித்து ரசித்த புத்தகங்களைப் பட்டியலிடுவது இன்னும் எளிதாகப் போய் விட்டது. சிந்து பைரவி படத்தில் ஒரு வசனம் வரும். நாமளா பாடறது ஒரு சுகம், சங்கீதம் கேக்கறது ஒரு சுகம். அதே மாதிரி சங்கீதத்தைப் பற்றி பேசுவதும் ஒரு சுகம் என்று சுஹாசினி சொல்லுவாங்க. அதே போல், புத்தகங்களைப் படிப்பது ஒரு சுகம், அதைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதும் ஒரு தனி சுகம். அதனால் தான் வெட்டிவம்பில் அவ்வப்போது என்னைக் கவர்ந்த சில புத்தகங்களைப் பற்றி இடுகைகள் எழுதியிருக்கிறேன். சரில்ல, ஓவரா பீத்திக்காதே. விஷயத்துக்கு வா’ன்னு சில பேர் கூவறாங்க.

One book that changed my life:
என் வாழ்க்கையை மாற்றிப் போட்டப் புத்தகம்:

என்னடா இது மேஜர் சுந்தர் ராஜன் மாதிரி ஆங்கிலத்தில் சொன்னதை இன்னொரு முறை தமிழிலே சொல்கிறானே என்று நினைக்கறீங்க. பரவாயில்லை, நினைத்துவிட்டுப் போங்கள் :-)

சரி என் வாழ்க்கையை அப்படியொன்றும் பெரிதாக மாற்றிப் போட்ட புத்தகம் என்று எதுவும் பெரிதாகச் சொல்ல முடியாது. ஆனால் சில புத்தகங்கள் வாழ்வின் யதார்த்தங்களைப் புரிந்து கொள்வதற்கு ரொம்பவே உதவியாயிருந்திருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், சுவாமி சுகபோகானந்தா எழுதிய மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் புத்தகம். வாழ்வின் மிகவும் விரக்தியான, தனிமைப் படுத்தப்பட்ட காலகட்டத்தில் மிகவும் தன்னம்பிக்கையூட்டிய புத்தகம். அதேபோல் காஞ்சி காமகோடி ஸ்ரீ பரமாச்சார்யாள் அவர்களின் பேச்சுகளின் தொகுப்பான தெய்வத்தின் குரல்.

ஆனால் ஒரு புத்தகத்தைப் படித்து விட்டுப் பித்து பிடித்தவன் போல் அலைந்திருக்கிறேன். அது, பொன்னியின் செல்வன். அது பற்றி ஏற்கனவே இரண்டு பதிவுகள், நூலுக்குள் நுழந்தேன் - 1 நூலுக்குள் நுழைந்தேன் - 2 எழுதியிருக்கேன்.

The book you have read more than once:
ஒரு தடவைக்கு மேலாக ஒரு புத்தகத்தை வாசித்தது:

அதுவும் பொன்னியின் செல்வனே. மூன்று தடவை முழுவதுமாக படித்து முடித்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம், குந்தவை வரும் பாகங்களை மீண்டும் படிப்பேன்.

ஆங்கிலத்தில் மீண்டும் படிக்க வைத்த புத்தகம், டான் பிரவுணின் டிஜிடல் ஃபோர்ட்ரெஸ். விறுவிறுப்பாக இருந்ததால், விடிய விடிய படித்து விட்டு, முழுவதும் புரிவதற்காக மீண்டொருமுறை படித்தேன்.

One book you would want on dessert island:
ஒரு தனித்தீவில் நீங்கள் எடுத்துச் செல்ல நினைக்கும் புத்தகம்

சுஜாதாவின் எந்தவொரு நாவலானாலும் சரி. தமிழில் எழுதும் எவருக்கும் இவரே ஆசான். தைரியமாகச் சொல்லலாம்.

One book that made you laugh:
சிரிக்கவைத்தவொரு புத்தகம்:

ஆங்கிலத்தில் நகைச்சுவையான புத்தகம் என்றால், டிண்டின் காமிக்ஸ். அதுவும், கேப்டன் ஹேடக் எங்கேயாவது போய் அடிபட்டுக் கொண்டு, Billious of Blue Blistering Barnacles, Thundering Typhoons என்று கத்துவதைப் பார்த்தால் குபீரென்று சிரித்து விடுவேன்.

தமிழில் படித்ததில் சிரித்து வயிறு கிழிந்தது, கிரேஸி மகன் எழுதிய, கிச்சா. கிச்சா அடிக்கும் லூட்டியில் வயிறு அருந்தே போய்விட்டது. சாவி எழுதிய வாஷிங்கடன் திருமணமும் அதே ரகம். சில இடங்களில் மட்டும் கிச்சு கிச்சு ரகம்.

One book that made me cry:
அழவைத்த ஒரு புத்தகம்:

நல்லவேளை இது வரை அப்படியேதும் புத்தகம் படித்ததில்லை. தஸ்லிமா நஸ்ரினின் லஜ்ஜா மட்டும் மனதை நெருடச் செய்தது. அங்கு நடந்த இனப் படுகொலைகளையெல்லாம் யாருமே கண்டுக்கவில்லை.

One book that you wish had never been written:
இந்த மாதிரி ஒரு புத்தகத்தை ஏன் எழுதினார்கள் என்றொரு புத்தகம்

பொன்னியின் செல்வனைப் படித்து முடித்து விட்டு, அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து கொண்டிருந்தபோது, அடுத்து என்ன நடந்திருக்கும் என்ற ஆவல் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நேரம் அது. பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து, அதன் அடிப்படையில் யாராவது எழுதியிருக்கிறார்களா, என்று தேடியதில் விக்கிரமன் எழுதிய நந்திபுரத்து நாயகி பற்றி அறிந்து கொள்ள நேரிட்டது. அந்த நந்திபுரத்து நாயகி, குந்தவை என்றும் அவளை வைத்தே மூன்று பாகங்கள் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரிந்ததும், அந்தப் புத்தகத்தை தேடாத இடமில்லை. கடைசியில் ஆசிரியரின் முகவரியும் கிடைத்து. அவர் வீட்டுக்கே என் கசினை அனுப்பி, எப்படியாவது புத்தகம் வாங்கிவரச் சொல்லி, அன்றே கூரியர் செய்ய சொல்லி, படித்துப் பார்த்தால், புத்தகம் செம கடி. வாங்கி விட்டோமே என்ற எண்ணத்திற்காகவே படிக்க வேண்டியதாப்போச்சு.

One book you wish you had written:
நான் எழுதியிருக்க வேண்டும் என்றெண்ணிய புத்தகம்

சுஜாதாவின் சில நாவல்களைப் படிக்கும் போது, இப்படியொரு கதைகளத்தைக் கொண்டு நமக்கேன் கற்பனை வர மாட்டேங்குது என்ற ஏக்கம் மட்டுமே வரும்.

One book you are currently reading

இப்போது படித்துக் கொண்டிருக்கும் ஒரு புத்தகம்:

இப்போது மூன்று புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன். விவேகானந்தரின் வாழ்க்கை சரித்திரம், சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்கள், ஜிம் கரி எழுதிய, Men are From Mars, Women Are From Venus. ஏற்கனவே சென்ற பதிவில் இதைப் பற்றி எழுதிவிட்டதால் மறு ஒளிபரப்பு செய்ய விரும்ப வில்லை.

One book you have been meaning to read:

நான் படிக்க விரும்பும் ஒரு புத்தகம்:

இரண்டு முறை படிக்க ஆரம்பித்து, 50 பக்கங்களோடு நின்று விட்ட, Fountain Head. ரொம்ப நாளாக காயத்ரி இதைப் படிக்கச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருக்கிறாள். அவள் புதினம் படிக்க ஆரம்பித்த காலத்தில் முதலில் படித்த புதினமாம். அதே புத்தகத்தை, அட்டை பைண்ட் செய்யாத குறையாக பாதுகாத்து வைத்திருக்கிறாள்.

One book you’ll recommend

நான் பரிந்துரைக்கும் ஒரு புத்தகம்

எதைச் சொல்ல எதை விட? இது வரை பொன்னியின் செல்வன் படிக்கவில்லையென்றால் இனியாவது படியுங்கள். இல்லையென்றால் புத்தகம் படிப்பதில் அர்த்தமே இல்லை. ஆங்கிலத்தில் Irving Wallace எழுதிய The Man கண்டிப்பாகப் படிக்கச் சொல்வேன்.

சரி, கொடுத்த வேலையை செவ்வன செய்து முடிச்சாச்சு. யாரை கோர்த்து விட? அரிதான சில சினிமாக்கள் பற்றி அமோகமான தகவல்கள் பல கொடுக்கும் சரவண குமாரை, இந்தத் தொடருக்கு அன்புடன் அழைக்கிறேன்.

May 27, 2009

என்னைப் பற்றி இது வரை தெரியாதவை...

என்னையும் மதிச்சு ரம்யா இந்தத் தொடர் அருந்து போகமலிருக்க என்னைப் பற்றிய சில விஷயங்களை உதிர்க்கும்படி செய்துட்டாங்க. அதனால் இதோ, என்னைப் பற்றின சில கேள்விகளும், அதன் பதில்களும்.....

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

எங்க அம்மா அமிதாப் பச்சனின் விசிறி. அவர் நடித்த அநேக படங்களில் அவர் பெயர் விஜய். என் தாத்தா, முருக பக்தர். அதனால், குமாரும் சேர்ந்து கொண்டு விஜய் குமார் ஆனது.

Of Course எனக்கு என் பெயர் ரொம்பவே பிடிக்கும்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?
நான் அவ்வளவு எளிதாகக் கண்ணீர் விடும் ரகம் இல்லை. ரொம்ப யோசித்துப் பார்க்கையில் கடைசியாக அழுதது, இந்தியா T20 உலகக் கோப்பையை வென்ற போது, உணற்சி மிகுதியில் அழுதேன்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
கையெழுத்து என்றால் Signature'ஆ. அது கொஞ்சம் பிடிக்கும். ஆனால் கையால் எழுதும் எழுத்து அவ்வளவாகப் பிடிக்காது. எவ்வளவு முயன்றும் திருந்தவே இல்லை. என் எழுத்தை எங்கம்மா கொக்கு பறப்பது மாதிரி இருக்கு என்பாள்.

4.பிடித்த மதிய உணவு என்ன?
சைவத்தில் எது வேணாலும் பிடிக்கும். இருந்தாலும், சாம்பார், உருளைக்கிழங்கு / அவியல்/ முட்டைக் கோஸ் கரி, தயிர் சாதம் தான் எப்போதுமே என் சாய்ஸ்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ஒரு ஆளிடம் உடனே என்னால் நட்பாகப் பேச முடியும். மேற்கொண்டு அவருடன் நட்பைத் தொடர்வது, அவருடைய குணாதிசையங்களைப் பொறுத்தது. என் வேவ்லெங்திற்கு இல்லையென்றால், முறைத்துக் கொள்ள மாட்டேன். கேட்ட கேள்விக்கு பதில்.


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
எந்த நீர் நிலையிலும் குளிக்கப் பிடிக்கும். இருந்தால் கடல் அருவியில், இரண்டிலும் பிடித்தது, கடலே. நிந்திக் குளிப்பதென்றால் இன்னும் பிடிக்கும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்கள்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்த விஷயம் எல்லோரையும் நல்லவர் என்று நம்புவது. பிடிக்காததும் அதுவே.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
ஆஹா, பொடி வச்சு கேக்கறாங்கப்பா. பிடித்த விஷயம், எப்பவுமே சுத்தமாக இருக்கணும் என்று நினைப்பாள்.

இந்த சுத்தம் தான் பிடிக்காத விஷயமும் கூட. வெளியில் போய்ட்டு உள்ளே வந்தால், முதல் வேலையாக கை கால் கழுவ வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னால், (ஏற்கனவே கழுவிய) தட்டு ஸ்பூன், டம்ளர், எல்லாம் மீண்டும் ஒரு முறை கழுவ வேண்டும். கழுவாமல் பழங்கள் எதுவும் சாப்பிடக் கூடாது. வாழைப் பழத்தைக் கூட கழுவித்தான் சாப்பிட வேண்டும் என்று கண்டிஷன் போடுவாள். கொசு அடித்தால் கூட கையை சோப் போட்டுக் கழுவணும் :)

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் தந்தை. கல்லூரியில் காலெடுத்து வைத்த அதே தினம், கிட்டத்தட்ட அதே நேரத்தில் அவர் உயிரிழந்தார். வாழ்வின் முக்கியமான காலகட்டத்தில் அவர் என்னோடு இல்லாதது பேரிழப்பு.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
வேஷ்டி, முண்டா பனியன்.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
என்னங்க இது, பிரவுசரைப் பார்த்துக் கொண்டு தான் இதை எழுதுகிறேன். கேட்பது, எஸ்.வி.ஷேகரின், தத்துப் பிள்ளை நாடகம். சும்மா கலந்து கட்டிக் கலாய்க்கிறார்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
பிங்க்.

14.பிடித்த மணம் ?
சாம்பார் / ரசம் கொதிக்கும் போது வரும் மணம். இந்த மணத்தை முகர்ந்தாலே பசி வந்துடும்.
மழைக்கு முன் வரும் மண் வாசமும் பிடிக்கு :)

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
நான் எவ்வளவு மொக்கை போட்டாலும், அது நல்லா இருக்கு என்பார்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
அவரது, கற்பனையில் உருவான, வடிவேல், விவேக் காமெடிப் பதிவுகள். அவர் சகோதரி பட்ட உடல் நல அவஸ்தைகளைப் படித்து விட்டு, ஒன்றுமே செய்ய முடியாமல் சில நேரம் ஸ்தம்பித்துப் போய் விட்டேன். சில நாட்களுக்கு முன் அவர் இப்போது உடல் நலம் தேறி விட்டார் என்றதும் ரொம்ப சந்தோஷப் பட்டேன்.

17. பிடித்த விளையாட்டு?
என்றென்றும் கிரிக்கெட். 16 வயதுக்குட்பட்ட பிரிவில், நெல்லை மாநகருக்காக விளையாடியிருக்கிறேன். ஓபனிங்க் ஃபாஸ்ட் பவுலர்.
விப்ரோ, எல்.எஸ்.ஐ’க்காகவும் விளையாடியிருக்கிறேன். இப்போது தொப்பை போட்ட பின் 10 பந்து வீசினாலே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது.

ஸ்டெஃபி கிராஃப் விளையாடும் வரை டென்னிஸும் பிடித்தது.
இப்போது அன்னா இவாநோவிச், ஷரபோவா, சானியா மிர்சா, ஃபெடரர் விளையாடும் டென்னிஸ் ஆட்டங்களை மட்டும் பார்க்கிறேன்.

18.கண்ணாடி அணிபவரா?
அணிய ரொம்பப் பிடிக்கும். ஆனால் இது வரை கண்ணாடி அணியும் பாக்கியம் கிட்ட வில்லை. அலுவலகத்தில் கண்ணாடிக்காக வருஷத்திற்கு 3000 ரூபாய் சலுகை தருகிறார்கள். இது வரை 30000 ரூபாய் சலுகையை பெறவே இல்லை.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
நகைச்சுவைப் படங்கள் ரொம்ப பிடிக்கும். ஆங்கில அக்‌ஷன் படங்களும் பிடிக்கும். தமிழில் சூர்யா, விக்ரம், கமல், படங்கள் பிடிக்கும்.
மனதை நெருடும் படியான சமூகப்படங்களும் எப்போதாவது பார்ப்பேன்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
ம்ம்ம் திரையரங்கத்தில், ஹரிஹர் நகர் - பாகம் 2.
கல்யாணமாகி 4 வருஷமாகியும் மலையாளப் படம் பார்க்கவில்லை என்று காயத்ரிக்கு ஆதங்கம். என்ன பண்ண? பார்த்துத் தொலைக்க வேண்டியதாப்போச்சு.

21.பிடித்த பருவ காலம் எது?
வசந்த காலம். பெங்களூரில் இக்காலத்தில் ஊரெங்கும் பூக்கள் பூத்துக் குலுங்குவது கண் கொள்ளாக் காட்சியாயிருக்கு.

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ஒரு புத்தகம் இல்லை. 3 புத்தகங்கள் படிக்கிறேன். ரம்யா அனுப்பிய விவேகானந்தரின் வாழ்க்கை சரித்திரம், சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்கள், Men Are From Mars, Women Are From Venus. காயத்ரி செய்யும் சேஷ்டைகள் இப்புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்த பிறகு விளங்குவது போலிருக்கிறது.


23.உங்கள் டெஸ்க்டொப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
பார்த்துப் பார்த்து ரொம்ப போரடித்து விட்டால் மாற்றிவிடுவேன். மாதத்திற்கொரு முறை மாற்றுவேன் என்று வைத்துக் கொள்ளலாம்.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
எந்த இசை வாத்திய ஓசையும் பிடிக்கும். குறிப்பாக வயலின், கிடார், வீணை, புல்லாங்குழல், மிருதங்கம்.
அலையின் ஓசையும், மரங்கள் காற்றில் ஏற்படுத்தும் சத்தமும் பிடிக்கும். நான் வளர்த்த தாந்தூ (நாய் என்றால் எனக்குக் கோபம் வந்துடும்) குறைக்கும் சத்தமும் பிடிக்கும்.

காது ஜவ்வு கிழியற மாதிரி டங்கு டக்கற டங்கு டக்கற’ங்கற குத்துப் பாட்டுச் சத்தம், சுத்தமாப் பிடிக்காது.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அமெரிக்கா. முதன் முதலில் வீட்டை விட்டு ரொம்ப நாட்களுக்கு நெடுந்தூரம் போனது, கொல்கத்தா.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
கல்லூரி காலத்தில் புரோட்டா கடைகளில் 25’க்குக் குறையாமல் தின்பேன். அந்தத் திறமை இப்போது அந்தத் திறமை மங்கி விட்டது என்று நினைக்கிறேன்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல், அடுத்தவர் தயவில், ஒரு காரியத்தை செய்து கொள்வது.
சிகப்பு சிக்னல் இருந்தாலும், அதை மதியாமல் எகிரிச்செல்வது, சாலையில் துப்புவது, குப்பை போடுவது, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். வெளிநாட்டுக்குப் போனால், அங்கே தண்டனை கொடுத்து விடுவார்களே என்று பயந்து அவ்வாறு செய்யாத மக்கள், நம்மூர் மண்ணை மிதித்ததும், “நம்ம ஊர் தானே, எவன் கண்டுக்கப்போறான்” என்ற போக்கை என்னா ஏற்றுக் கொள்ளவே முடியாது.


28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
எனக்கு வரும் கோபம். கோபம் வந்தால், என்ன செய்கிறேன் என்றே தெரியாது.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
போக நினைப்பது, இமய மலை. இது வரையில் போனதில், கோவா.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
எப்படி இருக்கணும்’னா? நல்ல சூர்யா மாதிரி உடற்கட்டு, கமல்ஹாசன் மாதிரி கண்கள், மாதவன் மாதிரி சிரிப்பு, இப்படியெல்லாம் இருக்கணும்’னு தான் ஆசை. என்ன பண்ண முடியலியே :(

விஜய்’ஐ (என்னத் தான்) நம்பி ஒரு காரியத்தை ஒப்படைக்கலாம் என்று மற்றவர்கள் நம்பும் படியாக இருக்கணும்.


31.கணவன் செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
இந்தக் கேள்வியைக் கொஞ்சம் மாற்றிக் கொள்கிறேன். கணவனாக என்ன செய்ய விரும்பணும், என்று. என் மனைவி அடைய விரும்பும் வெற்றிகளில் அவளுக்கு ஊக்கமும் உறுதுணையும் கொடுக்க வேண்டும். (காயத்ரி படித்துத் தொலைத்து விடக்கூடாது :( )

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்வு ஒரு ரோஜாச்செடி மாதிரி. அதில் முள்ளும் இருக்கும், அழகான பூக்களும் இருக்கும். முட்களை மட்டுமே பார்த்து பயந்தோமானால், அதிலிருக்கும் ரோஜாவை ரசிக்க முடியாமல் போயிடும். கொஞ்சம் பெரீஈஈய வரியாகவே சொல்லிட்டேன்.

அப்பாடா, கொடுத்த வேலையை ஒழுங்கா செய்துட்டேன். இனி, இந்த விளையாட்டுல யாரை இழுத்து விடலாம். வேலை வேலை’ன்னு ரொம்ப உழைக்கற திவ்யாவையும், முகுந்தனையும் இந்தத் தொடருக்கு அழைக்கிறேன்.


May 24, 2009

பிரபாகரன் - என் பார்வையில்

கடந்த சில தினங்களாக பதிவுகளில் படித்ததில் சில என் மனதை நிறையவே மனதை நெருடச் செய்தன. இந்திய அரசாங்கத்தால் தேடப்பட்டு ஒரு கொலைக் குற்றவாளியான விடுதலைப் புலிகள் தலைவன் பிரபாகரனுக்கு இவ்வளவு அனுதாபிகளா? ஒரு இயக்கத்தை விடுதலைப் போராட்ட இயக்கமென்றும், பயங்கரவாதி இயக்கமென்பதும், பார்ப்பவர்களின் கண்களில் தானிருக்கிறது. ஆங்கிலேயர்களின் கண்களில் பகத் சின் ஒரு பயங்கரவாதி. நாமோ அவரை ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகியாக் கொண்டாடுகிறோம். காஷ்மிரில் பயங்கரவாதம் புரிபவர்கள் பாகிஸ்தானுக்கு விடுதலைப் போராளிகளாகத் தெரிகிறார்கள், நமக்கோ அவர்கள் பயங்கரவாதிகள். அதே போல் தான் பிரபாகரனும்.

இலங்கைத் தமிழரின் நலனுக்காக போராடும் ஒரு இயக்கத்தை வழி நடத்தி, இலங்கை வாழ் தமிழர்கள் அனைவரும், சம உரிமை பெற்று அந்த நாட்டின் மற்ற குடிமக்களின் உரிமைகளோடு வாழ வேண்டும் என்றெண்ணி ஒரு இயக்கத்தை வழி நடத்தியவர். அற வழியில் சென்றால் நியாயம் கிடைக்காது என்று போராளியாக உருவெடுத்தவர். இது வரை அவர் செய்ததில் எதிலுமே குற்றம் காண முடியாது. ஆனால், தன் இன மக்களுக்கு தான் மட்டுமே ஒரே தலைவனாக இருக்க வேண்டும். போராடிப் பெற்ற சுதந்திரத்தின் காப்பாளனாக தான் மட்டுமே இருக்க வேண்டும் என்றெண்ணியது தான் அவர் செய்த முதல் குற்றம். ஆனால் அந்த முதல் குற்றத்தினால் விளைந்த செயல்கள் அவரை ஒரு பயங்கரவாதியாகத்தான் சித்தரிக்கிறது.

இலங்கை அரசோடு போராடிப் பெற்ற சுதந்திரத்தை தாமே அனுபவிக்க வேண்டும் என்று எண்ணுவது எவ்வளவு போலித்தனமான உணர்வு. ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய காந்திக்கும் சுபாஷ் சந்திரபோசுக்கும் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால், பெறும் சுதந்திரத்தில் யாருக்கு அதிக உரிமை உண்டு இருவரும் எண்ணியதில்லை. தன்னால் மட்டுமே சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்றும் எண்ணியதில்லை. இருவரும் எடுத்துக் கொண்ட பாதை வெவ்வேறாக இருந்தாலும், எண்ணம் ஒன்றாக இருந்தது. ஒருவரையொருவர் ஒழித்துக் கட்ட முயலவில்லை.

ஆனால் பிரபாகரன் விஷயத்தில் நடந்ததென்ன? “நான் தொடங்கிய போராட்டம் என்னால் மட்டுமே முடிய வேண்டும். போராடி பெறும் சுதந்திரத்தை நான் முன்னின்று மக்களுக்கு வழங்க வேண்டும். அப்படி யாராவது என்னை எதிர்க்க முயன்றால், அவர்கள் வாழ அறுகதையற்றவர்கள். இலங்கைத் தமிழர்களின் பாதுகாவலன் நான் ஒருவன் மட்டுமாகத் தான் இருக்க வேண்டும்” இது தான் அவர் சிந்தனை. இதனாலேயே பத்மநாபா, அமிர்தலிங்கம் போன்றவர்களை கருணையேயில்லாமல் கொலை செய்தார். விடுதலைப் புலிகளை சர்வதேச பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க முக்கிய காரணமாக இருந்தது, ராஜீவ் காந்தியைக் கொன்றது தான். அவரைக் கொல்வதற்கு முன்னால் கூட விடுதலைப் புலிகள் மீது இந்திய அரசாங்கத்துக்கு கொஞ்சம் கருணை இருந்தது. ராஜீவ் கொலை, உள்ளது போனதடா நொள்ளகண்ணா கதையாகிவிட்டது.

இப்படி பிற தேசத்துத் தலைவர்களை கொலைபுரிந்ததனால், பாதகம் யருக்கு. அப்பாவி இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு. பிள்ளையார் பிடிக்க குரங்கான கதை தான். வேறு வழியில்லாமல், பிரபாகரன் பின் இவர்கள் நின்றதால், அவர்களும் இலங்கை அரசால் மேற்கொள்ளப் பட்ட வன்முறையில் பலியானார்கள். அப்பாவி மக்களை கேடையங்களாக வைத்து, விடுதலைப் புலிகள் குளிர் காய்ந்தார்கள்.

இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த ஒரே ஆள் இவர் தானென்றாலாவது, இவரைக் கொண்டாடுவதில் அர்த்தமுண்டு. தன்னைத் தவிர வேறு யாரும் தமது மக்களின் நலன் மீது அக்கரை இருக்கக் கூடாது என்று நினைக்கும் ஒரு சர்வாதிகாரியை எப்படிப் பாராட்டுவது? இவரது சர்வாதிகாரத்தனப் போக்கால், இலங்கைத் தமிழர்களின் வரப்பிரசாதமாக இருந்திருக்க வேண்டியவர், அவர்களுக்கு ஒரு சாபமாகவே தான் இருந்தார் என்று தான் சொல்வேன்.

அமைதி நிலவரம் திரும்ப நார்வே அரசு எடுத்துக் கொண்ட முயற்சியும், இவரது தனித் தமிழ் ஈழம் மட்டுமே வேண்டும் என்ற அவரது பிடிவாதத்தால்(அதற்கும் தானே தலைவனாக இருக்க வேண்டும் என்ற பேராசை வேறு) இலங்கைத் தமிழர்களுக்கு பாதகமாகவே விளைந்தது.

இலங்கையில் தமிழர்களின் மக்கள் தொகை 5 கோடி இருக்குமா? இவ்வளவு பேரை வைத்துக் கொண்டு எந்தவிதமான அரசாங்கத்தை அமைத்து விட முடியும்?ஒரு சர்வாதிகாரத்தனமான மனிதனால் மக்களுக்கு இன்னல் மட்டுமே கொடுக்க முடியும் என்பது சரித்திரம் நமக்குப் புகட்டும் பாடம். அப்படியே பிரபகரன் தலைமையில் அரசு அமைந்தால், அவர்களுக்கு இந்திய அரசாங்கம் எந்த வித உதவியும் புரிந்திருக்கப் போவதில்லை. அவர்களுக்கு உதவ பாகிஸ்தானும் சீனாவும் தான் வருவர்கள். பொருளதவியிலிருந்து ராணுவத்தளவாடங்கள் வரை எல்லாம் கொடுப்பார்கள். இந்தியாவிற்குப் பெறும் பாதுகாப்புப் பிரச்னை ஏற்படும். தனித் தமிழ் ஈழம் என்று முழங்குபவர்கள் இதை யோசித்துப் பார்த்தார்களா? இந்தியா எக்கேடுகெட்டாவது போகட்டும் என்பது தான் அவர்களது நிலைப்பாடா?

ஆக மொத்தத்தில் பிரபாகரன் தலைமையில் ஏற்பட்டிருக்கும் ஈழத்தால் ஒன்றும் பெரிதாக ஒன்றும் சாதகமாக முடிந்திருக்காது. இலங்கை அரசுக்கு பிரபாகரனை ஒழித்துக் கட்டுவதை விட வேறு வழியில்லை.

ஆனால், இனியாவது ராஜபக்க்ஷே அரசு, தமிழர்களுக்கு அவர்களுக்கு மறுக்கப் பட்ட உரிமைகளைக் கொடுக்க வேண்டும். சிங்களவர்களுக்கு இருக்கும் உரிமைகள் அனைத்தும் தரப்பட வேண்டும்.அதற்கு இந்தியா முழுவதுமாக டிப்ளோமேடிக் அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். முடிந்தால் ஐ.நா. தலைமையில் ஒரு கண்காணிப்புக் குழுவை அமைத்து மேற்பார்வையிட வலியுறுத்த வேண்டும்.

ஒரு இனத்தை அடிமையாக்குவதனால் கிளர்ச்சி தான் ஏற்படும் என்று மீண்டும் காலம் பாடம் புகட்டியிருக்கிறது.

டிஸ்கி 1: பிரபாகரன் இறந்துவிட்டார் என்று இலங்கை அரசு வெளியிடும் செய்தி நம்பும் படியாகவும் இருக்கிறது, அனால் வீடியோவில் அவரது கண்கள் முழித்துப் பார்ப்பதைப் பார்த்தால் மார்ஃபிங்க் செய்திருக்கிறார்களோ என்று சந்தேகமும் வருகிறது. ஆனால் நக்கீரன் வெளியிட்டிருக்கும் பிரபாகரனே அவர் இறந்தமாதிரிக் காட்டும் காட்சிகளைப் பார்த்துப் புன்னகைக்கும் அண்டப் புளுகு ஆகாசப் புளுகு.

டிஸ்கி 2: தமிழ் மக்களிடமிருந்து உரிமைகளைப் பறிக்கப்பட்டது இலங்கை அரசு செய்தது கொடுமையிலும் கொடுமை. இந்தியா போன்ற நாடுகள் இலங்கை மேல் டிப்ளோமேடிக் அழுத்தம் கொடுத்திருக்கணும். இந்தியாவிலேயே தனித் தமிழ்நாடு வேண்டும் என்று கேட்டவர்கள் இந்தத் தமிழர்கள், இவர்களது இனத்திற்கு ஏன் பரிந்து போக வேண்டும் என்று இந்திய அரசு நினைத்ததோ தெரியவில்லை.

டிஸ்கி 3: ஆனால் புலிகளுக்கெதிராகப் போர் நடத்துகிறோம் பேர்வழி என்று இலங்கை அரசு அப்பாவிப் பொது மக்களை கொன்று குவித்ததை மன்னிக்க முடியாது. இதற்காக இலங்கை அதிபரை சர்வதேச நீதிமன்றத்தில் வைத்து தண்டனை கொடுத்தால் கூடத்தகும்.

May 16, 2009

ஐ.பி.எல்'இன் உச்ச கட்டம்

ரு மாதமாக நடந்து கொண்டிருந்த ஐ.பி.எல் இன்று தான் உச்சத்தை எட்டியிருக்கிறது. என்னடா இவன் இன்னும் பத்து நாட்கள் நடக்க வேண்டியிருக்கும் ஐ.பி.எல் பற்றி இப்போதே பேசுகிறானே என்று முழி பிதுங்க வேண்டாம். நான் சொல்லும் ஐ.பி.எல் இந்தியன் பார்லிபென்டரி லீக் Indian Parliamentary League. காலையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள் இன்னும் முடிந்தபாடில்லை. இருந்தாலும், சுவாரஸ்யத்திற்கு ஒரு குறைச்சலும் இல்லை. முதலில் முன்னணியில் இருப்பவர், பத்து நிமிடங்களில் பின் தங்குகிறார், பின்னணியில் இருப்பவர் முன்னணிக்கு வருகிறார். யப்பா, என்ன பரபரப்பு. சில இடங்களில் எதிர்பார்த்த முடிவுகள் வரவில்லை. பெறுத்த ஏமாற்றம், சில இடங்களில் எதிர்பார்ப்பை விட இன்னும் நல்ல முடிவுகள். ஒன்று மட்டும் உறுதி. மக்களின் எண்ண ஓட்டத்தை எந்த ஊடகத்தாலும் புரிந்து கொள்ள முடியாது என்பது தெளிவாகிறது.

இன்னும் முன்னணி முடிவுகள் தான் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் காங்கிரஸ் கூட்டணி தான் மீண்டும் அரசு அமைக்கப்போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்திய மக்கள் இந்த தடவை தொங்கு பாராளுமன்றத்துக்கு ஓட்டளிக்கவில்லை என்றெண்ணும் போது சற்று நிம்மதி. அரசியல்வாதிகள் தங்கள் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள மட்டுமே யோசித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். நாடு என்றொன்று இருக்கிறது, அதில் மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் சில நேரம் செலவிடுவோமே என்று சிந்திக்கத்தோன்றுவார்கள்.

தேர்தல் முடிவுகளில் சில சந்தோஷங்கள் சில ஏமாற்றங்கள். ஷஷி தாரூர் போன்று படித்த நல்ல பண்புள்ளவர்கள் தேர்தலில் வென்று பாராளுமன்றத்துக்கு வருவது வரவேற்க்கத்தக்க விஷயமாக இருந்தாலும், அழகிரி போன்ற ரவுடிகளும் கூடவே வருகிறார்கள் என்று எண்ணும் போது, சற்று பயமாகவே இருக்கிறது.

மதுரை மக்களுக்கு அழகிரி போன்ற ரவுடிகளுக்கு ஒரு பாடம் புகட்ட நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதைக் கோட்டை விட்டுவிட்டார்கள் என்று தான் எண்ணுகிறேன்.அழகிரி வென்றது ஒருவகையில் நல்லது தான். ஆனந்த விகடனில் வந்த ஜோக் ஒன்று தான் ஞாபகம் வருகிறது. இரண்டு பேர் பேசிக்க் கொள்வார்கள்.

"என்ன டா, இப்போ உங்க ஏரியா ரவுடி பக்கிரி தொல்லை குறைஞ்சிடிச்சாமே"
"ஆமாம் டா. நாங்க அவனுக்கு சரியான தண்டனை கொடுத்திட்டோம். வந்த இடைத்தேர்தல்'லெ அவனை எம்.எல்.ஏ ஆக்கி சென்னைக்கு அனுப்பிட்டோம்"

அழகிரிக்கும் இது மதுரை மக்கள் கொடுத்திருக்கும் தண்டனை மாதிரி தான் இருக்கிறது. மதுரையிலேயே இருந்து நமக்குத் தொல்லை கொடுப்பதை விட, இவரை டில்லிக்கு அனுப்பிவிட்டால், விட்டது பீடை என்று சில நாட்கள் நிம்மதியாக இருக்கலாம் என்றெண்ணியிருப்பார்கள் போல. தான் ஒரு எம்.பி.'யாக கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் செலவழித்திருக்கும் ஒருவர், அதை விட பல மடங்கு சொத்து சேர்க்கத்தான் முனைவார். என்னவேணாலும் பண்ணித்தொலையட்டும். மக்களுக்கு நாலு நல்லது பண்ணினால் சரி தான்.

லாலு, ராம்தாஸ், வைகோ, ராம் விலாஸ் பஸ்வான் போன்ற சந்தர்ப்ப வாதிகளுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியிருக்கிறார்கள். பதவி சுகத்துக்காக மட்டுமே கூட்டணி வைத்துக் கொள்ளும் இம்மாதிரியான அரசியல்வாதிகளுக்கு இது சரியான சாட்டையடி. இனிமேலாவது நல்ல புத்தி வந்து திருந்தினால் சரி.

தமிழகத்தைப் பொறுத்தவரை, கருணாநிதியே எதிர்பாராத முடிவுகள். என்னைக்கேட்டால், விஜய்காந்துக்குத் தான் கருணாநிதி நன்றி சொல்ல வேண்டும். ஆன்டி-இன்கும்பென்ஸி (Anti-Incumbency)வாக்குகள் அனைத்தும் அதிமுகவுக்குப் போகாமல் இருக்கு, விஜயகாந்தே ஒரு பெரும் காரணம் என நினைக்கிறேன்.

அப்பாடா, தேர்தல் முடிந்தது, இனி நம்ம ராஜ்யம் தான் என்று காங்கிரஸ் மார் தட்டிக் கொள்ளாமல், இனி நாட்டின் வளர்ச்சிக்காக என்ன செய்யலாம் என்று நினைக்கவேண்டும். பி.ஜே.பி தங்களுக்குள் தோல்வியை ஒப்புக் கொண்டாலும், வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு ஒரு நல்ல எதிர் கட்சியாகப் பணியாற்ற வேண்டும். சும்மா எல்லாவற்றிற்கும், பாராளுமன்றத்தின் நடுவுக்கு வந்து, வெளிநடப்பு செய்வது என்றிருக்காமல், உருப்படியாக ஏதாவது செய்தால், மாநிலத் தேர்தல்களில் ஏதாவது சாதிக்க முடியும்.

ஏதோ எழுத நினைத்து, ஆனந்த விகடன் தலையங்கம் போலாகிவிட்டது.

பாவம் அத்வானி தான். வாழ்நாளில் ஒரு நாளாவது பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்து விடலாம் என்றெண்ணியவரின் மனக்கோட்டை சுக்கு நூறாக உடைந்து விட்டது. இனிமேலாவது தனிமனித தாக்குதலை நிறுத்தி விட்டு, உருப்படியான எதிர்க் கட்சியாத் தலைவராக நடந்து கொள்வார் என்றெதிர்பார்ப்போம்.

கடைசியாக மன்மோகன் சின்ங்குக்கு. ஆய் போய்ட்டு அலம்பிக்கறதுக்கு கூட சோனியாகாந்தியின் கட்டளைக்குக் காத்திருக்காமல், தன்னிச்சையாக முடிவுகள் எடுக்க வேண்டும். மன்மோகன் சார், நீங்க 2004'ல நாடு உங்களிடத்தில் ஒப்படைக்கப் பட்டபோது நல்ல நிலைமையில் இருந்தது. இன்று நிலைமை தலைகீழ். உங்க அரசு உருப்படியாக பெரிதும் சாதிக்க வில்லை. இனிமேலாவது நாட்டை முன்னேற்றப் பாருங்கள். எல்லோரையும் எப்போதும், ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியாது.

May 05, 2009

இயல் இசை நாடகம்

கடந்த இரு வாரங்களும் மிக நீளமான வார விடுமுறைகள். தேர்தல், ஆஃபீஸ் மாற்றம் என்று சென்ற வாரத்துக்கு முந்தைய வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே ஆஃபீஸ் இருந்தது. நான்கு நாட்கள் விடுமுறையை அனுபவித்து விட்டு, மனமே இல்லாமல் திங்களன்று ஆஃபீஸ் போனால், மீண்டும் நாலே நாட்களில் மீண்டும் ஒரு விடுமுறை. உழைப்பாளர் தினமாம். அன்று ஒரு நாளாவது உருப்படியா வேலையைப் பாருங்கடா என்று சொல்லியிருக்கலாம். ஆனால், உழைப்பாளர்கள் புண்ணியத்தில் எங்களுக்கும் விடுமுறை விட்டுவிட்டார்கள். போன மாதம் தான் கோவா போய் நிறைய செலவழித்து விட்டதால், காயத்ரியே எங்கேயும் போக வேண்டாம் என்று சொல்லி விட்டாள்.

ஊரில் என்ன தான் நடக்கிறது என்று பார்த்ததில் கிரேஸி மோஹனின் சாக்லேட் கிருஷ்ணா நாடகத்துக்கான விளம்பரம் ஹிண்டுவில் தென்பட்டது. நல்ல வேளை டைம்ஸ் ஆஃப் இந்தியா வாங்கியிருந்தால் அதுவும் தெரிந்திருக்காது. ரொம்ப நாளாகவே நாடகம் பார்க்க வேண்டும் என்று ஆசை. இப்போது தான் அதற்கான சந்தர்ப்பம் வாய்த்தது. நான் கிரேஸி மோகனின் பரம விசிறி நான். சிறு வயதிலேயே, அவருடைய சில நாடக காஸெட்டுகளை வாங்கி, டேப் கிழியும் வரை மீண்டும் மீண்டும் போட்டுக் கேட்டதுண்டு. நிஜமாகவே மாது மிரண்டால் நாடக டேப் கிழிந்தே போய் விட்டது. ஏன் கமல்ஹாசனின் காமெடிப் படங்களின் வெற்றிக்கு கிரேஸி மோஹன் வசனங்களே காரணம் என்று சொல்லலாம்.

டிக்கட் வாங்க போன் செய்தால் வீட்டுக்கே வந்து கொடுக்கிறார்கள். பெங்களூர் பசவங்குடியிலுள்ள ஒரு சபாவில் நாடகம். நான்கு மணி காட்சிக்கு 3.30 மணிக்கெல்லாம் போயாகிட்டது. கார் பார்க்கிங் செய்யக்கூட இடமில்லை. ரோட்டில் தான் பார்க் செய்தேன். அவ்வளவு கூட்டம். 15 வருடங்கள் கழித்து இப்போது தான் பெங்களூரில் நாடகம் போடுகிறாரார்களாம். அரங்கம் நிறைந்திருந்தது. இவ்வளவு தமிழ் மக்களை ஒரு இடத்தில் பார்க்க ரொம்பவே சந்தோஷமாயிருந்தது. சென்னை திருவல்லிக்கேணியே நாடகத்துக்கு வந்திருந்தது போலிருந்தது.

போன வாரம் மலையாளப் படம் ஒன்றை காயத்ரி பார்த்துக் கொண்டிருந்த போது, அதை அவ்வளவு கேலி செய்தோமே, இந்த நாடகத்தில் சும்மா அச்சுப் பிச்சுத்தனமான ஜோக்கெல்லாம் இருந்தால் காயத்ரி நம்மை கொமைத்து எடுத்துவிடுவாளே என்று சிறிதளவு உதறல் இருக்கத்தான் செய்தது.

நாடகம் என்றால் பள்ளிக்கூட ஆண்டு விழாவில் போட்ட நாடகங்கள் தான் ஞாபகம் வந்தது. ஒவ்வொரு காட்சி மாறும் போதும், திரையைப் போட்டு, செட்டை மாற்றிப் போடுவதற்குள், போன காட்சியில் என்ன நடந்தது என்று நாடகம் போடும் எங்களுக்கே மறந்து போகும் அளவிற்கு நாடகம் போடுவோம். பார்வையாளர்கள் பொறூமையிழந்து போய்விடுவார்கள். இது எப்படியிருக்கப் போகிறதோ, மேடையில் இருப்பவர்கள் தெரிவார்களா மாட்டார்களா என்று பலதரப்பட்ட உதறல்கள்.

ஆனால் ராக்கெட் பறப்பது போல் எடுத்தவுடனேயே காமெடியில் கலந்து கட்டி அடிக்க ஆரம்பித்து விட்டார் மாது பாலாஜி. ஒரு ஜோக்குக்கு சிரித்து முடிப்பதற்குள் அடுத்து சில ஜோக்குகள் வந்து போய்விடும். ஒரு கட்டத்தில் என்னால் சிரிக்கவே முடியவில்லை. வயிறு வலிக்க ஆரம்பித்து விட்டது. இதற்கும் முதல் 15 நிமிடங்களுக்கு கிரேஸி மோஹன் எந்தக் காட்சியிலும் தோன்றவில்லை. அவர் வந்ததும் இன்னமும் களைகட்டிவிட்டது. எல்லாமே டைமிங் ஜோக்குகள் தான். வாழ்க்கையில் ரொம்பவே விரக்தி அடைந்திருக்கும் ஒருவனுக்கு கிருஷ்ணரே நேரில் வந்து அவன்

பிரச்னைகளைத் தீர்த்து, கடவுளை மட்டுமே நம்பாதே, உன்னையும் நம்பு என்பது தான் நாடகத்தின் கரு. இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. சில மாயாஜால மேஜிக் வித்தைகளெல்லாம் வேற காட்டி அசத்திவிட்டார்கள். நடிகர் ரமேஷ் அரவிந்த் சிறப்பு விருந்தினர்.

எல்லாம் சரி தான், ஆனால் எதற்காக இன்னும் அந்தக் காலத்து ஸ்டைலிலே மேடையில் நான்கு மைக் வைத்து, அதற்கு முன் நின்று கொண்டு இன்னும் வசனம் பேசுகிறார்களோ? தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்து விட்டதே, ஒரு வயர்லெஸ் காலர் மைக் வைத்துக் கொண்டு பேசப்படாதா? அதை மட்டும் கொஞ்சம் மாத்துங்க மோஹன் சார். மீண்டும் கிரேஸி மோஹன் எப்போது அடுத்த நாடகம் போடுவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

கடந்த ஞாயிறன்று ஸ்ரீ ராமநவமி கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஸ்ரீ ராம் சேவா மண்டலி ஏற்பாடு செய்திருந்த சுதா ரகுனாதன் கச்சேரி. இரண்டு வாரங்களாகவே நிதமும் கச்சேரி நடந்து கொண்டிருந்திருக்கின்றன. எனக்குத் தான் தெரிந்திருக்கவில்லை. மாண்டலின் ஸ்ரீநிவாஸ் கச்சேரியெல்லாம் கூட இருந்திக்கிறது. ரொம்பவே வருத்தப்பட்டேன்.

கச்சேரிக்கும் நல்ல கூட்டம். பெரும் பாலும் எல்லாம் ரிடையர்ட் கேஸ்கள் தான். கர்நாடக முன்னாள் முதல்வர் திரு.எஸ்.எம்.கிருஷ்ணாவும் வந்திருந்தார். கர்நாடகத்தில் தேர்தல் முடிந்துவிட்டது, மஹாராஷ்டிர ஆளுனர் பதவியிலிருந்தும் கல்தா கொடுத்தாகிவிட்டது, வீட்டிலிருந்து பாயைப் பிராண்டிக் கொண்டிருந்தவரை, விழாவுக்குத் தலைமை தாங்கக் கூட்டி வந்திருப்பார்கள் போல. ஆனால், என்ன ஆச்சர்யம், ஒரு முன்னாள் முதல்வருக்கு எந்த வித பாதுகாப்பும் இருந்த மாதிரி தெரியவில்லை. மருந்துக்கு கூட ஒரு போலீஸையும் காணவில்லை.

ஆனாலும் ஐயாவுக்கு தெனாவட்டு ஜாஸ்தி தான். பின்ன காங்கிரஸில் இருந்து கொண்டு, ராமநவமி கொண்டாட்டங்களுக்கு வந்திருக்காரே, சோனியா காந்தியிடம் அனுமதி வாங்கினாரா என்று தெரியவில்லை!! தேர்தலோ முடிந்துவிட்டது என்று எண்ணியிருப்பார் போல.

முதலில் ஒரு ஏழெட்டுப் பேர் கன்னடத்தில் மாத்தாடினார்கள். குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். பிறகு தான் கச்சேரி ஆரம்பமானது. கச்சேரியின் ஹைலெட்டே எங்களுக்கு இரு வரிசைகள் முன்
அமர்ந்திருந்த ஒரு பெண்மணி தான். 35 வயது மதிக்கத்தக்க நடுத்தர வயதுப் பெண்மணி. யப்பா என்னமா தலையை ஆட்டி, தாளம் போட்டு ரசிக்கிறார். அவர் காட்டிய சேஷ்டைகளில் நிறைய பேர் அவரையே பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் வீட்டில் மூவோ, ஜண்டு பாமோ இருந்தால் நல்லது. இவ்வளவு ஆட்டியும் அவருக்கு கழுத்து வலி வரவில்லையென்றால், அது பெரிய சாதனை தான். வாயும் அசைந்ததைப் பார்த்தால், அவரும் கூடவே பாடுகிறார் என்று நினைத்தேன். பிறகு தான் தெரிந்தது, அம்மணி வெறும் தாளமும் தலையை
மட்டும் தான் ஆட்டுகிறார் என்று. ஏதோ அவர் வாயசைக்க சுதாரகுநாதன் பிளேபேக் பாடுவது போல் இருந்தது.

சுமார் மூன்று மணிநேரக் கச்சேரி. கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் வேறொரு உலகில் சஞ்சாரிக்கும் சுகானுபவம். வயலின் திரு.ரகு, மிருதங்கம் திரு.சதீஷ், மோர்சிங் திரு. ராமன் என்று ஆளாளுக்கு விருந்து படைத்தார்கள்.

பாட்டெல்லாம் நன்றாகத் தான் இருந்தது. ஆனால் பாடுவதற்கு முன், இது இன்ன ராகம், இன்ன தாளம், இவர் இயற்றிருக்கிறார் என்று ஓரிரு வார்த்தைகள் அறிமுகம் கொடுத்தால் என்னைப் போலுள்ள அரைவேக்காடுகள் முக்காவேக்காடுகளாகும் வாய்ப்புண்டு. ஏன் சொல்கிறேனென்றால், பாடகர் ஆலாபனை செய்யும் போது, இது கல்யாணியா காம்போதியா என்று தெரியாது. அட்டானா போலிருக்கும், ஆனந்த பைரவியும் எட்டிப் பார்க்கும். இப்படிப் பார்வையாளர்கள் குழம்பாமலிருக்க பாடல் பற்றிய ஒரு அறிமுகம் அவசியம் என்பது அடியேனின் தாழ்ந்த விண்ணப்பம். கச்சேரி முடிய இரவு 10.30 ஆகிவிட்டது.

இரண்டு வாரங்களில் இசையும் நாடகமும் பார்த்தாச்சு. இந்த இயல் மட்டும் தான் பாக்கி. அப்பாடா, தலைப்புக்கு ஏற்ற மாதிரி ஒரு வழியா கொண்டு வந்தாச்சு. இந்த வார வெள்ளிக்கிழமை நித்யஸ்ரீ கச்சேரி இருக்கிறதாம். ஆஃபீஸுக்கு அரை நாள் விடுப்பு விடசொல்லியிருக்கிறாள் காயத்ரி. பார்ப்போம் என்றிருக்கிறேன். உங்களுக்கு மட்டும் சொல்கிறேன், அன்னிக்கு எனக்கு ஆஃபீஸில் வேலை நிறைய இருக்கும். இப்பவே சொன்னால், குதிப்பாள்.

April 25, 2009

நிறைய ஞாபகம்.. கொஞ்சம் மறதி

என்னை சில சமயங்களில் ரொம்ப கோபமூட்டுவது எனக்குள் இருக்கும் ஒரு சிறு வியாதி. அது மற்றவர்களுக்கும் இருக்கிறது என்று தெரிந்து கொண்டதில் கொஞ்சம் ஆனந்தம். மனித மனம் தான் எவ்வளவு மேன்மையானது. ஒரு சக மனிதனுக்கும் தன் வியாதியிருப்பதைக் கண்டு மகிழ்கிறது.

அது என்ன வியாதின்னா, அசாதாரண விஷயங்களையெல்லாம் ஞாபகம் வைத்திருப்பேன். ஆனா சின்ன சின்ன விஷயங்களையெல்லாம் மறந்துடுவேன்.

எந்தெந்த அணிக்கெதிராக இந்தியா எவ்வளவு ரன் எடுத்தது. ஒரு கிரிக்கெட் மாட்சிலிருந்து ஒரு காட்சி பார்த்தாலே, யாருக்கெதிராக, எங்கு எப்போது நடந்தது, இந்தியா எவ்வளவு எடுத்தது, ஆட்ட நாயகன் யார், இப்படி சகட்டு மேனிக்கு ஞாபகம் இருக்கும். 

இது மட்டுமல்ல, ஸ்டெஃபி கிராஃப் எத்தனை முறை கிராண்ட் ஸ்லாம் வென்றார், யாரை தோற்கடித்தார், எந்த மேட்சில் எந்த நிற ஸ்கர்ட் அணிந்திருந்தார், அவரது முதல் பாய் ஃப்ரெண்ட் யார், பிறந்த நாள் என்ன, சொந்த ஊர் என்ன இப்படி இன்னும் பல.  “ஆஹா, நம்ம புருஷனுக்குத்தான் எவ்வளவு ஞாபக சக்தி இருக்கு” என்று ஒரு நாள் கூட காயத்ரி பிரமித்தது கிடையாது என்பது என் துரதிர்ஷ்டம்.

ஆனால் ரொம்ப அற்பமான விஷயங்கள் மறந்து போய்விடும். ஆஃபீஸ் கிளம்பும் அவசரத்தில் சில நாள் கைபேசி எடுத்துக்கொள்ள மறந்துவிடுவேன். அடையாள அட்டையை மறந்து விட்டு, ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்டிடம் தலைச் சொறிந்து கொண்டு நிற்க வேண்டும். ரிசப்ஷனிஸ்ட் கொஞ்சம் பார்க்கும் படி இருந்தால், நிதமும் அடையாள அட்டையை மறக்கலாம். உட்கார்ந்திருப்பதென்னவோ, முறுக்கிய மீசையுடன் ஒரு காவலாளி. 

கார் சாவியை எடுத்து எங்காவது வைத்திருப்பேன் ஆனால், எங்கே வைத்தேன் என்று சமயத்துக்கு ஞாபகம் வந்து தொலைக்காது. காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டது போல் குதி குதியென்று குதிப்பேன். ஆனால் இது எதற்கும் காயத்ரி அசங்க மாட்டாள் என்பது கொஞ்சம் கசப்பான உண்மை. அதென்னவோ, அவள் தேட ஆரம்பித்தவுடனேயே, “இதோ இருக்கிறேன்” என்று சாவியே கூவிக் கொண்டு அவள் கைக்கு வந்து விடுவது போலிருக்கும். 

இது கூடப் பரவாயில்லை. ஒரு நாள் காயத்ரி கட்டிக் கொடுத்த சாப்பாடு கொண்டு வந்திருப்பது கூட  ஞாபகமில்லாமல், ஆஃபீஸ் கேண்டீனில் சாப்பிட்டு விட்டு இரவு காயத்ரி டிஃபன் பாக்ஸைத் திறந்து பார்த்த பின் தான் தெரிந்தது அன்று நான் வீட்டிலிருந்து கொண்டு போன சாப்பாடைச் சாப்பிடவில்லை என்று. நாகரீகம் கருதி, அதற்குப் பின் என்ன நடந்ததென்பதை நான் சொல்ல மாட்டேன். இந்த மாதிரியெல்லாம் நடக்கும் போது, ரொம்ப வயதாகிவிட்டதோ என்ற கவலை வந்து விடுகிறது. 

இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களாவது பரவாயில்லை. ஒரு தடவை சிம்ரன் பிறந்த நாள் ஞாபகம் வைத்திருந்து பிள்ளையார் கோவிலில் சிம்ரனின் நலனுக்காக வேண்டிக்கொண்டு விட்டு, இரண்டு வாரங்கள் கழித்து வந்த காயத்ரியின் பிறந்த நாளை மறந்தே போய் விட்டேன். அம்மணி காலையிலிருந்து ஒன்றுமெ பேசவில்லை. ஆஃபீஸ் கிளம்பும் போது தான் என் அம்மா வாங்கிக் கொடுத்திருந்த புதுத் துணியை அணிந்திருந்தபோது தான் ஞாபகம் வந்தது, அன்று அவள் பிறந்த நாள் என்று. புயலுக்கு முன் வரும் நிசப்தத்தைக் கூடத் தாங்கிக் கொள்ளலாம், அம்மணியின் நிசப்தம் ரொம்பவுமே அபாயகரமானது. பர்ஸ் ரொம்ப இளைத்த பிறகே, புயல் கரையைக் கடக்காமல் கரைந்து போனது. 

இந்த வருடமும், சிம்ரன் பிறந்த நாள் ஞாபகம் வந்தது. அன்றே ஒரு சபதம் எடுத்துக் கொண்டேன். இம்முறை காயத்ரியின் பிறந்த நாளை மறக்கக் கூடாதென்று. அதற்காக சமயோசிதமாக ஒரு நல்ல காரியமும் செய்தேன். ஆனால் நான் செய்த காரியம், எனக்கு அனுகூலமாய் இருப்பதை விட்டுவிட்டு, மீண்டும் என் காலை வாரி விட்டது. காயத்ரியின் பிறந்த நாளன்று காலை எழுந்ததுமே வாழ்த்து சொல்லிவிட்டேன். ஆனாலும் காலையில் புயல் சின்னம்.

பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. காயத்ரி பிறந்தநாள் அன்று சரியாக இரவு பன்னிரண்டு மணிக்கு எனக்கு ஞாபகம் வரவழைப்பதற்காக கைபேசியில் ரிமைண்டர் வைத்துக் கொண்டேன். அந்த பாழாப்போற கைபேசியும் இரவு பன்னிரண்டு மணிக்கு ஒலித்திருக்கிறது. ஆனால் என் காதில் தான் அந்த ஒலி விழ வில்லை. போன ஜன்மத்தில் கும்பகர்ணனாகப் பிறந்திருப்பேனோ என்னவோ? ஆனால் கயத்ரி எழுந்துவிட்டாள். நல்ல வேளை, நித்ரா தேவியின் ஆதிக்கத்தில் நான் இருந்தால் , காயத்ரியின் முகம் போன போக்கை நான் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. அம்மணிக்கு முதலில் நான் அவள் பிறந்த நாளுக்காக கைப்பேசியில் ரிமைண்டர் வைத்திருப்பதைப் பார்த்து நொந்து போய்விட்டாள். இரவு 12 மணிக்கு கைபேசியின் ஒலி கேட்டு அவளுக்கு தூக்கமும் போய்விட்டது. ஆனாலும் காலையில் எழுந்தவுடன் வாழ்த்து சொன்னதால் ஏதோ கொஞ்சம் பிழைத்தேன். இருந்தாலும் புயல் காற்று வீசத்தான் செய்தது. நல்ல வேளை அவ்வளவாக சேதம் ஏதும் இல்லை. 

ஏங்க மனைவியின் பிறந்த நாளுக்கு கைபேசியில் ரிமைண்டர் வைத்துக் கொள்வது அவ்வளவு பெரிய தவறா? இந்த பெண்களைப் புரிஞ்சுக்கவே முடியலையேப்பா?என்ன அபாரமான ஞாபக சக்தி இருந்து என்ன செய்ய? இந்த மாதிரி சின்ன விஷயங்கள் அப்பப்போ காலை வாரி விடத்தான் செய்கின்றன.

April 24, 2009

சுய விளம்பரம்

ஐ.பி.எல் பற்றி என்னுடைய இந்த கிரிக்கெட்  இணையதளத்தில் எழுதுகிறேன். அங்கேயும் வந்து வாக்களித்து  விட்டுப் போங்கள். சே, தேர்தல் சமையத்துல இப்படித்தான் வார்த்தை வருது. 

உங்கள் நண்பர்களையும் கிட்டயும் கொஞ்சம் சொல்லுங்கள் :-)

April 15, 2009

சட்டத்துக்கு அறிவுமா இல்லை??

பாகிஸ்தான் தீவிரவாதியான ஆமீர் அஜ்மல் கஸாப் மீது இன்று ஒரு வழியாக விசாரணை ஆரம்பமாகவிருந்தது. மக்களை சரமாரியாக சுட்டுக் கொன்று குவிக்கும் ஒரு மிருகத்தை கையும் களவுமாகப் பிடிபட்டவன் மீது எந்த வித நடவடிக்கையும் இன்று வரை எடுத்தபாடில்லை. நாட்டின் பிரதமருக்கு ஒப்பான பாதுகாப்பு கொடுக்கப்பட்டு ஒரு ராஜ போக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், அவனுக்காக ஆஜராக வழக்குறைஞர் யாரும் இல்லை என்கிறார்கள். என்ன கொடுமையடா இது? கேட்டால் இது தான் நாட்டின் சட்டமாம்.

இதை விட கேவலம் என்னவென்றால், இவனுக்காக ஆஜராக நீதிமன்றமே ஒரு வழக்குறைஞரை நியமிக்கிறது. இன்று அந்த வழக்குறைஞரையும் நீக்கி விட்டது. என்னவோ, அவர் Spirit of the Law படி நடக்க வில்லையாம். ஒரு வழியாக கிட்டத்தட்ட 5 மாதங்கள் கழித்து ஆரம்பமான விசாரணை, அடியப்பிடிடா பாரத வட்டா என்று மீண்டும் அதே நிலைமைக்குப் போய் விட்டது. இதிலுள்ள கேலிக் கூத்தென்னவென்றால், இப்போது கஸாப் ஒரு பாகிஸ்தான் வழக்குறைஞரை நாடுகிறாராம்.

ஒன்று எனக்குப் புரியவில்லை. கஸாப் போன்ற தீவிரவாதிகள் செய்தது சாதாரண குற்றமில்லை. அது நமது நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர். இவர்களை எப்படி போலீஸ் பிடித்து, நீதிமன்றம் இவர்களை விசாரிக்கலாம். பிடிபட்ட தீவிரவாதிகளை ராணுவமல்லவா அவர்களை நீதிமன்றமத்தில் வைத்து விசாரிக்க வேண்டும். காஷ்மீரில் பிடிபடும் தீவிரவாதிகளையெல்லாம், ராணுவம் தானே விசாரித்து, அவர்களுக்கான தண்டனையை வழங்குகிறது. அவர்கள் எடுக்கும் முடிவை, எந்த நீதிமன்றமோ, மனித உரிமைக் கழகமோ ஒன்று புடுங்க முடியாது. பேசாமல் கஸாபையும் ராணுவத்திடம் ஒப்படைத்து விடலாம்.

கையும் களவுமாகப் பிடிபட்ட ஒரு தேச துரோகி மிருகத்துக்கு இவ்வளவு சலுகைகளா? கேட்டால் சட்டமாம், நியாயமாம். தீவிரவாதிகளை இப்படி அன்பாக நடத்தினால், ”எம்புட்டு பேரைக் கொன்னாலும், இவனுங்க ஒண்ணுமே பண்ண மாட்டாங்க, இவனுங்க ரொம்ப நல்லவனுங்கடா”ன்னு நினைத்து, அடுத்த தாக்குதலுக்கு தேதி குறிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

கஸாபின் குற்றத்தை இன்னும் யார் வந்து நிரூபிக்க வேண்டும். நீதிபதி முன்னால் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டால், இவனுக்கு ஆயுள் தண்டனை கூட கொடுத்து விடுவார்கள். இல்லையென்றால், சுப்ரீம் கோர்டில் மேல் மனு கூட முலாயம் சிங் மாதிரி ஆட்கள் போடுவார்கள். சட்டம் தன் கண்களின் மீது கறுப்புத்துணி கட்டியிருப்பதால், சட்டம் குருடு என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது தான் தெரிகிறது, அதற்கு மூளையும் கிடையாது என்று.

தான் உயிரைக் கொடுத்துப் பிடித்த தீவிரவாதிக்கு இவ்வளவு மரியாதை கிடைப்பது தெரிந்தால், அவனைப் பிடித்த, கான்ஸ்டபிள் துக்காராம் ஆத்மா சாந்தி அடைந்திருக்குமா என்று சந்தேகம் வருகிறது. கஸாபுக்கு மரண தண்டனை விதித்து, அதை கூடிய சீக்கிரமே நிறைவேற்றுவது தான் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதிமன்றம் வழங்கும் நியாயமாகும். இவ்வளவு நாளாக நியாயம் கிடைக்காமல் செய்வதிருப்பதே பெரிய தவறாகும். Justice Delayed is Justice Denied. சட்டம் இப்படித்தான் முட்டாள்த் தனமாக செயல் படுமென்றால், அந்தச் சட்டத்தையே மாற்ற வேண்டியது தான்.

கையும் களவுமாகப் பிடிபட்ட ஒரு தீவிரவாதிக்கே, இவ்வளவு மரியாதை என்றால், கோடி கோடியாக மக்களை ஏமாற்றி பணம் செய்த அரசியல்வாதிகளையா, இந்த நீதிமன்றங்கள் தண்டிக்கப் போகின்றன?

April 08, 2009

பொண்ணுப் பார்க்க போவோமா?!

எல்லாரும் சொ(சோ)கமா இருக்கீயேளா? “இம்புட்டு நேரம் நல்லாத்தேம்ல இருந்தோம், நீ எளுதியத படிக்கோம்லா, இனி என்னாவப்போகுதோ, தெரியல”ங்கான் ஒரு கிறுக்குப் பய. அவன் சொல்லுறத கண்டுக்கிட வேண்டாம்.

ஊர்ப்பக்கம் போயி ரொம்ப நாளாச்சா, நம்மூர் ஆளுங்க கிட்ட பேசியும் ரொம்ப நாளாயிருச்சு. திருநெல்வேலியில பேசுத தமிளே மறந்து போயிருவனோன்னு பயம் வந்திருச்சின்னா பாத்துக்கிடுங்க. வீட்டம்மாகிட்ட இந்த மாறி பேசினா, அதுக்கு ஒரு எளவும் புரியலை. யார் கிட்டயோ பேசுதேன்னு நினைச்சுக்கிட்டு பேந்தப் பேந்த முளிக்கா. சில சமயம் முளிக்காளா மொறக்காளான்னே தெரியலை. யார்கிட்டயும் எங்கூர் தமிளுல பேச முடியல. அதனால தான் உங்களையெல்லாம் நெல்லைத் தமிளுல குளிப்பாட்டலாம்னு கிளம்பிட்டேன். நம்புங்க மக்கா, நெல்லைத் தமிழ், வெல்லத் தமிழ்.

சரி மேட்டருக்கு வருதேன். கொஞ்ச நாளுக்கு முன்னாடி, திவ்யா ஒரு பதிவு எளுதியிருந்தாங்க. அதாவது, பொண்ணு பார்க்க வருத ஆளுகிட்ட என்ன பேசுறதுன்னு. நல்லாத்தேன் எளுதியிருந்தாங்க. அப்பவே, இதுக்கு நாமளும் ஒரு எசைப் பாட்டு, சீ, எசைப்பதிவு எளுதிறணும் முடிவு பண்ணேன். ஆனாப் பாருங்க இந்த எளவெடுத்த ஆஃபீஸுல “கொடுக்க காசுக்கு கொஞ்சம் வேலையைப் பாருல”ன்னு சொல்லி உசுர வாங்கிப்புட்டானுங்க. இப்போத்தேன் எளுத முடியுது.

எல்லா வீட்டுலயும், சும்மாத் திரியுற பசங்களுக்கு, இந்த கல்யாணம்’ற கருமாதியப் பண்ணிருவாங்க. இதுலேர்ந்து தப்பிக்க வளி ரொம்ப கொறவு. “நீ என்னல குளியில தள்ளுது, நானே விளுந்துக்கிடுதேன்னு” சொல்லி சில பசங்க ஏதாச்சும் ஒரு பொண்ணைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிடுவாங்க. அவங்களைப் பத்தி நமக்கென்ன கவலை.

ஆனா, இந்த வீட்டுல பாத்து கல்யாணம் பண்ணி வைக்காங்க பார்த்தீயெளா, அந்தப் பசங்களுக்குத் தான் இந்தப் பொண்ணு பார்க்கற வைபவமெல்லாம். இந்த சடங்குலயும் ஒரு ‘இது’ இருக்குது’ங்கறத ஒத்துக்கிடணும்.

அம்மா அப்பா அங்கீகாரத்தோட சைட் அடிக்கறதுக்குப் பேரு தான் இந்தப் பொண்ணு பார்க்கற சடங்கு. முன்னெல்லாம் குடும்பத்தோட ஒரு பத்து பேர் போயித்தான் பொண்ண பார்ப்பாங்க. நம்மாளு இம்புட்டுப் பேத்துக்கு நடுவ ஒரு பொண்ணப் பார்த்துப் பளக்கமிருக்காது. என்ன பேசுறது ஏது பேசறதுன்னு ஒரே ஒதறலா இருக்கும். இந்த ஒதறல் தான் மவனே ஒனக்கு மொத எதிரி. இத மொதல்ல ஓதரித் தள்ளணும்.

இன்னொரு விஷயம், பொண்ணப் பார்க்கறதுக்கு முன்னாடியே, அந்தப் பொண்ணு பத்தியும் அது குடும்பத்தப் பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சிக்கிடறது நல்லது. ஏன் சொல்லுதேம்னா, கிடைக்கப் போறதோ சில நிமிஷங்கள் தான். அந்த நேரத்துல இந்த அறி்முகப் படலம் வேண்டாம்லா. அதுக்குத் தேன் சொல்லுதேன்.

அப்புறம் இந்தப் பொண்ணப் பாடச் சொல்லறது, ஆடச் சொல்லறது, இதெல்லாம் வேண்டாம் மக்கா. இந்த மிரிண்டா விளம்பரம் மாதிரி ஆயிடுச்சின்னா, பொளப்பு நாறிறும். எம்புட்டு முடியுமோ, அம்புட்டு பேசுங்க. ஏன்னா கல்யாணம் ஆன பெறவு நீங்க பேசி சம்சாரம் கேக்குற வாய்ப்பு கெடக்காது.

அப்புறம் இன்னொரு விஷயம். பொண்ணு பார்க்கப் போறது, நம்ம மேல பொண்ணு இம்ப்ரெஸ் ஆவணும்’ங்கறுதுக்காக. முன்னெல்லாம் நிலம வேற மாதிரி இருந்தது. ஆனா இப்போ நெலம தலை கீழ். அதனால மேன்லியா நடந்துக்குங்க. தன்னப் பத்தி நல்லவன் வல்லவன், அப்படி இப்படின்னு சொல்லுங்க. எப்படியும் கல்யாணமாயி வண்டவாளம் தண்டவாளம் ஏறப் போகுது. அது வரைக்குமாவது, அவங்க மனசுல ராசா மாதிரி ஒரு இமேஜ் பில்ட் அப் கொடுக்கலாம்லா, என்ன நான் சொல்லுறது?

அப்புறம், இந்த சொஜ்ஜி பஜ்ஜி, ஸ்வீட் காரம் காஃபி இதெல்லாம் கொடுப்பாங்க. நமக்குத்தான் எப்பவுமே அன்லிமிடட் மீல்ஸ் ஃபுல் கட்டு கட்டியே பளக்கம்’னுட்டு, இன்னும் கொஞ்சம் கேசரி போடுங்க, ரெண்டு பஜ்ஜி வைங்க, அது இதுன்னு கேட்டுத் தொலையாத. நாமளும் டீஜண்டுன்னு காட்டிக்கிடணும்.

ஓவரா கேள்வியெல்லாம் கேட்டு வைக்காதீங்க. பெறவு நினைத்தேன் வந்தாய் தேவ்யானி கணக்கா அவுங்க எதிர் கேள்வி கேட்டா, தொலைஞ்சோம். நாம வேலைக்கு ஆள் எடுக்கறதில்லை. உங்களுக்கு வேலையில் அயல்நாடு போகு்ம் வாய்ப்பு இருந்தால் அவங்ககிட்ட பாஸ்போர்ட் எல்லாம் இருக்குதான்னு கேட்டு வச்சுக்க்கிடுங்க. அப்படியே அவங்க வேலையில் அயல்நாடு போகும் வாய்ப்பு இருக்குதான்னும் தெரிஞ்சு வச்சுக்கிடுங்க. ஊர் உலகத்துல நெலமை சரியா இல்லைல்லா, அதேன்.

இன்னொரு முக்கியமான விஷயம். சில வீட்டுல வரதக்ஷணை எதிர்பார்ப்பாங்க. அம்மா அப்பா கிட்ட வரதக்ஷணை ஏதும் எதிர்பார்க்காதீங்கன்னு சொல்லிப்பாருங்க. அப்படி அவங்க மசியலைன்னா, அதைப் பத்தி முன் கூட்டியே வீட்டுப் பெரியவங்களை பேசிக்கிடச் சொல்லுங்க. இந்த பொண்ணு பார்க்கப் போறன்னிக்கு அதப் பற்றிப் பேச வேண்டாம். ஏன்னா நாம போறது, சந்தோஷமா(???!!!!) வாழறதுக்கு ஒரு துணையைத் தேடி. வியாபாரம் பேசுறதுக்கில்லை.

அப்புறம் ஒரு முக்கியமான் விஷயம்டே. பொண்ணு பாக்கப் போறதுக்கு முன்னாடி, பொண்ணோட ஃபோடோவெல்லாம் வூட்டுல காட்டுவாய்ங்க. அதுல பொண்ணு புடிச்சிருந்தா மட்டும், இந்த பொண்ணு பார்க்கப் புறப்புடுங்க. குடும்பத்தோட போய் பொண்ணயும் பார்த்துட்டு, நாங்க அப்புறமா சொல்லியனுப்பறோம்னு சொல்லிப்புட்டு வராதீங்க. ஒரு பொண்ண பார்த்தோமா, அதையே கட்டினமான்னு இருக்கணும். அத விட்டுப்புட்டு, நாலஞ்சு பொண்ண பார்த்துப்புட்டு நல்லா சொஜ்ஜி பஜ்ஜியெல்லாம் தின்னுப்புட்டு, இருக்கறதுல எது தேருதுன்னு யோசிக்காதீங்க. எங்கூரு பக்கத்துலயெல்லாம், கல்யாணம் கட்டுதேன்னு சொன்னாத்தேன், பொண்ணெயே காட்டுவாங்க . பொண்ணையும் பார்த்துப்புட்டு, பிடிக்கலைன்னா, பெறவு உங்க உசுருக்கு நாங்க உத்தரவாதம் கிடையாது’ன்னுடுவாங்க.

“ஆமாம், இம்புட்டுச் சொல்லுதியே, பொண்ணப் பார்க்கயில, என்னாத்த பேசுறதுன்னு, ஒண்ணுமே சொல்லலியேல்ல, திவ்யா, எம்புட்டு சொல்லியிருக்காங்க”ன்னு கேக்குதீயேளா?

“எலேய் முட்டாப்பயலே, கெடைக்க பத்து நிமிஷத்துல என்னத்தலே பேச முடிவு செய்ய முடியும்? தலைக்குமேல ஆண்டவன் எதையோ கிறுக்கி அனுப்பியிருக்கான். எல்லாம் அதுபடி தான் நடக்கும். சும்மாவா சொன்னாங்க, மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்”னு. அமையலைன்னா, தலைவிதிய நொந்துகிட்டு, டஸ்மாக்’ல ஒரு கட்டிங்க் அடிச்சிக்கிட வேண்டியது தான்”.

வாழ்க்கைத் துணை தேடுறது, ரொம்ப ஸ்வாரஸ்யமானது, ஆனா கவனமா இருக்கணும். வாழ்த்துக்கள்.

டிஸ்கி: மேலே எழுதினதுல என்னென்ன நான் பண்ணேன்னெல்லாம் பின்னூட்டத்துல கேக்கப்படாது. அதெல்லாம் தொளில் ரகசியம்.

March 26, 2009

பயணப்பட்டோம்

இரவு பகலென்று பாராமல், என்ன கிழமை என்றும் நினைக்காமல் கருமமே கண்ணாக இருந்து ஒரு வழியாக எடுத்துக் கொண்ட வேலையை முடித்தாயிற்று. இரண்டு மூன்று வாரங்களுக்கு நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளக் கூட நேரம் இல்லை. இரவு வீட்டுக்கு எல்லோரும் உறங்கிய பின்பு வந்து, விழித்திருக்கும் காயத்ரி தூக்கக் கலக்கத்துடன் சாப்பாடு போடும் போது, நாளை சீக்கிரம் போக வேண்டும் என்று சொல்லும் போது, “ஆஃபீஸிலேயே இருக்க வேண்டியது தானே, எதற்காக வீட்டுக்கு வரவேண்டும்” என்று சலித்துக் கொள்ளும் அளவிற்கு வேலை. பதிவெழுதவும் நேரமில்லை, நண்பர்களின் பதிவுகளை ஒழுங்காகப் படிக்கமுடியவில்லை. இருந்தாலும் ஏதோ பேருக்கு பின்னூட்டமிட்டுக் கொண்டிருக்கும் அளவிற்கு அவ்வளவு வேலை. உகாதியை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு எங்காவது போய் வரலாம் என்றிருந்த பிளானெல்லாம் வீணாய்ப் போய்விடுமோ என்றெண்ணும் அளவிற்கு வேலை அதிகம். ஒரு வழியாக போன வாரம் ஒரு வழியாக எவனோ எழுதிய மென்பொருள் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. அப்பாடா, ஒரு வழியாக இவ்வளவு நாள் கண் விழித்தது வீண் போகவில்லை என்று எல்லோருக்கும் மன நிம்மதி. அதை விட எனக்கு இன்னும் நிம்மதி. பின்ன காயத்ரியிடம் இந்த மூன்று நாட்களில் கோவா போகலாம் என்று சொன்னதைச் செய்யாவிட்டால், விட்டிலேயே ஒரு சுனாமி ஏற்பட்டு விடும். அப்படியேதும் நடக்காமலிருந்ததே, அதுதான் மென் பொருள் வேலை செய்ததை விட பெரிய நிம்மதி. “ரொம்ப வேலை செய்து விட்டாய், ஒரு நாள் லீவு எடுத்துக்கோ” என்று மேனேஜர் சொன்னது இன்னும் நல்லதாய்ப் போயிற்று.

ஒரு மாதமாக கோவா போகப் போகிறோம் என்று கனாக் கண்டு கொண்டிருந்த நாளும் வந்தது. வெள்ளிக் கிழமை அதிகாலை 6.15 மணிக்கு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் விமானம். பழைய விமான நிலையமாக இருந்தால் 5 மணிக்குக் கிளம்பினால் கூட 5.20க்குப் போய் விடலாம். தேவனஹள்ளி விமான நிலையம் வரை போக வேண்டும் என்பதால் வீட்டிலிருந்து 3.50’க்கெல்லாம் கிளம்பியாயிற்று. ஏர்-டெக்கனிடமிருந்து வாங்கிய Turbo Propeller பொறுத்திய விமானத்தைத் தான் கோவா வழித்தடத்தில் ஓட்டுகிறார்கள். “கல்யாணமாகி முதன் முதலில் விமானத்தில் போகிறோம், இப்படி டப்பா விமானத்திலா போவது” என்று காயத்ரி அங்கலாய்க்கவில்லை, மனதிற்குள் திட்டியிருப்பாள். என்ன செய்வது, 1.30 மணிநேரப் பயணத்திற்கு A-380’ஆ விடுவார்கள்?? சொன்ன நேரத்துக்கு வண்டியைக் கிளப்பி 7.30’க்கெல்லாம் கோவா போய் சேர்ந்தாயியுற்று.

கோவா என்றதுமே, நண்பர்களெல்லோரும், மனைவியுடனா கோவா செல்வது என்று கேலி செய்தார்கள். அவர்கள் சொன்னது, விமானம் ஏறியவுடனேயே பலித்து விட்டது. விமானத்தில் பயணிக்கும் பாதிப் பேர் பாதி உடை தான் அணிந்திருந்தார்கள். அதிலும் விமானப் பணிப் பெண் வேறு அநியாயத்துக்கு கையை உரசிக் கொண்டு அங்குமிங்கும் நடக்கிறாள். காயத்ரி முகத்தில் கொஞ்சம் கடுகைப் போட்டு தாளித்து விடலாம், அப்படி சிவந்திருந்தது.

கோவாவில் நாங்கள் போய்ச் சேர வேண்டிய இடம், கோல்வா பீச். விமான நிலையத்திலிருந்து 40 நிமிட பயணத்திலிருக்கிறடு. சாலைகளெல்லாம் வெகு ஜோர். நல்ல பராமரிப்பு. தெற்கு கோவாவில் அவ்வளவாக மக்கள் கூட்டம் இருக்காது என்று நண்பன் சொன்னதால், இந்த கடற்கரையைத் தேர்ந்தெடுத்தேன். இணையதளத்தில் ரொம்பவும் தேடி ஒரு ஹோட்டலில் அறையும் முன் பதிவு செய்தாயிற்று. போய் இறங்கிய தான் தெரிந்தது, இணையதளத்தில் காட்டிய படங்களை எவ்வளவு மாற்றியிருக்கிறார்களென்று. இணைய தளத்தில் காட்டப்பட்ட அறைக்கும் நிஜத்திலும் நிறைய வித்தியாசம். புலம்பி என்ன செய்ய? ஒரு நாள் இங்கே இருப்போம் என்று தேற்றிக் கொண்டு, பக்கத்திலிருக்கும் கொஞ்சம் விலை கூடுதலான ஹோட்டலில் மறு நாளைக்கு மாறினோம்.

கோல்வா பீச்சின் அழகே அங்கிருக்கும் வெள்ளை நிறத்திலுள்ள மணல் தான். வேறெங்கும் இந்த நிறத்தில் மணலைப் பார்த்ததில்லை. 19 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்டிருக்கும் நீஈஈஈஈஈளமான கடற்கரை. கூட்டம் அவ்வளவாக இல்லை. Bare Minimum உடையில் அயல்நாட்டவர் மட்டுமில்லை, இந்திய நங்கைகளும் பார்க்க முடிந்தது. காயத்ரி கூட இருந்ததனால், மனதில் தான் படப் பிடிக்க முடிந்தது.

மற்ற கடற்கரைகளில் காணப்படும் கூட்டத்தில் பத்தில் ஒரு பங்கு தான் இங்கு இருக்கிறது. அங்கேயே parasailing என்ற படகோடு கட்டை விடப்பட்ட பராசூட் பயணம், Jet Skiing என்ற தண்ணீரில் பயணிக்கும் வேகமான ஸ்கூட்டர், வாழைப் பழம் போலுள்ள தோணியில் பயணிக்கும் Banana Ride வேகமாகக் கடலில் போகும் ஸ்பீட் போட் ஆகியவை இருக்கிறது. கடற்கரைக்குள்ளே போகும் போதே நம்மை வந்து அது பண்ணணுமா இது பண்ணனுமா என்று மொய்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்கள் சொன்ன விலைக்கும், கால் பங்கிலிருந்து பேரம் பேசலாம். கொஞ்சம் அசந்தாலும் நன்றாக மசாலா அறைத்து விடுவார்கள். நான் பராசெய்லிங்க், ஸ்கூட்டர் ரைட், மற்றும் ஸ்பீட் போட் மட்டும் போதும், எவ்வளவு ஆகும் என்று கேட்டதற்கு, முதலில் 3000 ரூபாய் ஆகும் என்றான். 500 தான் கொடுப்பேன், முடிந்தால் வா, இல்லையென்றால் வேண்டாம் என்று சொன்ன பிறகு பேரம் பேசிப் பேசி, 900 ரூபாயில் வந்து நின்றான். எல்லாமே, பத்து நிமிடம் தான். ஆனால் அந்த பத்து நிமிடத்தில் ஏற்பதும் அந்த த்ரில், விவரிக்க வார்த்தைகளில்லை. நான் மட்டும் தான் பராசெய்லிங்க் போனேன். காயத்ரிக்கு உயரத்தைக் கண்டால் பயம். அதுவும் கடல் மீது பறப்பதற்கு இன்னும் பயம். 100 அடி உயரத்திலிருந்து கோவா கடற்கரையையும் கீழே நீல நிறக் கடலையும் பார்க்கும் அனுபவம் வாழ்க்கையில் மறக்க முடியாதது. நல்ல வெயில் அடித்தாலும், கடற்கரையில் காற்று அடித்ததால் அவ்வளவாகத் தெரியவில்லை. மாலையில் கொஞ்சம் கூட்டம் கூடியிருந்தது. ஒரு மணி நேரம் கடலில் குளித்தேன். அலைகள், திருச்செந்தூரில் இருப்பது போல் அவ்வளவு வீரியம் இல்லை. காலை நக்கி விட்டுத்தான் செல்கின்றன. காயத்ரி கால் மட்டும் நனைத்துக் கொண்டாள்.

மறு நாள் வடக்கு கோவாவிலுள்ள பீச்களுக்குப் போகலாம் என்று முடிவெடுத்தோம். வடக்கே பணாஜி (கோவாவின் தலைநகரம்) தாண்டி 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, கோவாவின் பிரசித்தி பெற்ற கலாங்குடே பீச். இங்கு தான் தன்ஹா தன்ஹா பாட்டு படமாக்கப் பட்டது என்று நினைக்கிறேன். பிரசித்தி பெற்றதால் கூட்டமும் நிறைய. எனக்கென்னவோ, இதை விட கோல்வா மிகவும் பிடித்திருந்தது. இரு சக்கர வாகனங்கள் வாடகைக்குக் கிடைக்கிறது. ஒரு நாளுக்கு 250 ரூபாய் வாடகை. பெட்ரோல் செலவு நமது. ஒரு ஹோண்டா ஆக்டிவா எடுத்துக் கொண்டு அஞ்சுனா, மிராமர் வெகேடர் பீச்சுகளுக்குப் போனோம்.

மிராமர் பீச் பணாஜி ஊருக்குள்ளேயே இருக்கிறது. இங்கு கடலில் எங்கும் நீந்தவோ, கால் நனைக்கவோ முடியாது. எடுத்தவுடனேயே ஆழம் தான். கரைக்கு வெகு அருகில் கப்பலைப் பார்க்கலாம். அஞ்சுனா பீச் வெறும் பாறை. அடுத்து வெகேடர் பீச்சுக்குப் போனொம். இயற்கை எழில் கொஞ்சும் அழகான பீச். சுற்றிலும் மலை. மலைக்கு மேலே சபோரா கோட்டை. இங்கு தான் தில் சாஹ்தா ஹை படத்தில் ஒரு காட்சி இங்கு தான் எடுத்தார்கள். கோட்டைக்கு ஏறிச் செல்வதற்கு தனி வழி. அங்கிருந்து பார்த்தால் கீழேயுள்ள கடற்கரை. மறு புறத்தில் தென்னை மரங்கள் அடர்ந்த நிலப்பரப்பு. இன்னொரு புறம் கடல். ஆஹா, அங்கேயே நாள் முழுக்க உட்கார்ந்திருக்கலாம். அப்படியொரு அழகு இடம். அந்த இடத்தில் ஒரு அரை மணி நேரத்தில் இருந்தோம். கோட்டை வரை மேலேறிப் போவதற்குள் காயத்ரி ரொம்பவே களைத்துப் போய் விட்டாள்.

மீண்டும் கோல்வாவிற்கு பயணத்தைத் துவங்கினோம். திரும்பும் போது நெடுஞ்சாலையில் வராமல், சில இண்டீரியர் பாதைகளிலெல்லாம் வண்டியைச் செலுத்தினேன். அற்புதமான சாலைகள். மக்கள் தான் எவ்வளவு பண்புள்ளவர்களாக இருக்கிறார்கள்? ஒரு முச்சந்தியை கடக்கும் போது, அவர்கள் நின்று நமக்கு வழி விடுகிறார்கள். நிறைய பழங்காலத்து வீடுகளைப் பார்க்க முடிந்தது. ரொம்பவே வித்தியாசமான கட்டமைப்பு, கலாசரம். மக்கள் எவ்வளவு செல்வச் செழிப்புடன் வாழ்கிறார்கள் என்று எண்ணத் தோன்றியது. ஒரு வழியாக 7 மணிக்கு கோல்வா வந்து சேர்ந்தோம். உடலிலுள்ள அனைத்து தசைகளும் எலும்புகளும் நரம்புகளும் செயலிழந்து போயிருந்தது.

மறு நாள் ஷாப்பிங்க் ஏதாவது செய்யலாம் என்று அருகிலிருக்கும் ஊரான மர்காவுன் போனோம். என்ன ஆச்சர்யம், ஒரு கடை கூட திறக்கவில்லை. ஞாயிறன்று கடைகள் கிடையாதாம். ஒன்றுமே வாங்காமல் ஹோட்டலுக்கு வந்து காலி செய்து கொண்டு, விமான நிலையம் வந்து ஊர் திரும்பினோம்.

கோவாவில் எனக்கு இன்னொரு பிடித்த விஷயம், எந்த பீச்சருகில் இருக்கும் கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் கிடையாது. கடற்கரையெல்லாம் ரொம்ப சுத்தமாக இருக்கிறது. அவ்வளவு நன்றாகப் பராமரிக்கிறார்கள்? மெரீனா எந்த லக்ஷணத்தில் இருக்கோ?
இன்னொரு அம்சம், இங்குள்ள ஹோட்டல்கள். சுத்த சைவமாக இருந்தாலும் சாப்பாட்டுப் பிரச்னையே இல்லை. கோவா சாப்பாடு என்றாலே மீன் தான் என்று நினைத்திருந்தது எவ்வளவு தவறு? கோல்வாவில் ஒரு ஹோட்டலில் சைவ கோவா சாப்பாடு கிடைத்தது. வெகு ஜோர். மது பானமில்லாத ஹோட்டலே கிடையாது.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், எல்லோரும் ஆங்கிலம் பேசுகிறார்கள். நாம் ஹிந்தியில் பேசினால் கூட ஆங்கிலத்தில் பதிலளிக்கிறார்கள். டாக்ஸி டிரைவர், ஸ்கூட்டர் வாடகைக்கு விடுபவர், ஹோட்டல் ரிஷப்ஷெனிஸ்டு என எல்லோரும் ஆங்கிலம் சரளமாகப் பேசுகிறார்கள். அதே போல் பெயர்ப் பலகைகள் ஒன்றுமே ஹிந்தியிலோ, மராத்தியிலோ எழுதப் படவில்லை. எல்லாமே ஆங்கிலம் தான்.

மனதே இல்லாமல் முன்று நாட்கள் போனதே தெரியாமல் கனத்த மனதுடன், மீண்டும் வர வேண்டும் என்ற எண்ணத்துடன் ஊர் திரும்பினோம். வாழ்வில் மறக்க முடியாத மூன்று நாட்கள் போனதே தெரியவில்லை.

வாசகப் பெருமக்களின் வேண்டுகோளுக்கிணங்க, இந்தப் பக்கம் புதிதாக சேர்க்கப்பட்டது:
வெட்டிவம்பு பக்கத்திலேயே புகைப்படங்களின் ஸ்லைட் ஷோவை சேர்த்துள்ளேன். க்ளிக்கினால் பெரிதாகக் காணலாம். பார்க்க முடியவில்லையென்றால், இது தான் புகைப் படங்கள் இருக்கும் இணையதள முகவரி:
http://picasaweb.google.com/vksankaran/GoaTrip

கோவாவில் எங்கு தங்கலாம், எந்த இடம் போகலாம் என்று இணையதளத்தில் நிறைய எழுதித் தள்ளியிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, கோவா என்றாலே பீச் என்றாகிவிட்ட பிறகு, பீச் அருகில் இருக்கும் ஒரு விடுதியில் தங்குவது நல்லது. டிசம்பரிலிருந்து மே மாதம் இறுதி வரை தான் கோவா செல்ல முடியும். பிப்ரவரி மாதம் வரை நல்ல சீசன். மார்சிலேயே வெப்பம் 32 டிகிரி. மூன்று நாட்களில் நானே கறுத்து விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் :-)

கோடை காலத்தில் வெயில் பின்னியெடுத்து விடும். ஜுன் முதல் நவம்பர் வரை மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி விடும். அப்போது கோவா போவது நல்லதில்லை. புயலுடன் மழை வருவதால், கடலிலும் போக முடியாது. தங்கும் வசதி நிறையவே இருக்கின்றன. ஆனால் இணையதளத்தில் போட்டிருக்கும் விளம்பரங்கள் நம்மை ரொம்பவே ஏமாற்றுகின்றன. 2500 ரூபாய்க்கு மேல் தான் நல்ல தரமான விடுதிகள் கிடைக்கின்றன. பேச்சுலர்களாகப் போனால் எப்படியும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். இந்தத் தங்கமணிகளைக் கூட்டிச் செல்லும் போது தான் இந்த பாராமீட்டரையெல்லாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. கோல்வா பீச்சில் நாங்கள் தங்கின விடுதி, Silver Sands Beach Resort". ஒரு நாளைக்கு 3000 ரூபாய் (ஏ.ஸி வசதி கொண்டது, இரண்டு பேருக்கான காலை சிற்றுண்டியும் இதில் அடக்கம்)

பீச்சிலிருந்து 150 மீட்டர் தூரத்தில் தான் இருக்கிறது. அருகிலேயே கோல்வா பீச் ரெஸிடென்ஸி (இது கோவா சுற்றுலாத்துறை நடத்தும் விடுதி), ஸ்டார் பீச் ரிசார்ட், கோல்பார் பீச் ரிசார்ட், வின்ஸிஸ் பீச் ரிசார்ட் என்று நிறைய இருக்கின்றன. அவையெல்லாம் எப்படியென்று தெரியவில்லை.

கலங்குடே பீச் அருகில் கலங்குடே பீச் ரிசார்ட் இருக்கிறது. இதுவும் கோவா சுற்றுலாத் துறையினர் நடத்தும் விடுதி. வெளியிலிருந்து பார்க்க நன்றாக இருக்கிறது. பாகா பீச்சிலும் நிறைய விடுதிகள் உள்ளன. இந்த மூன்றும் தான் பிரசித்தி பெற்ற பீச்சுகள். இது போக நிறைய தனியார் வீடுகளும் வாடகைக்குக் கிடைக்கின்றன. இணையதளத்தில் அதற்கான விளம்பரங்கள் கொட்டிக் கிடக்கின்றன. பெங்களூரிலிருந்து நிறைய தனியார் பேரூங்துக்கள் போகின்றன. 16 மணி நேரம் ஆகும். விமானத்தில் பயணிக்க 1.15 மணி நேரம் தான்.

மது அருந்துபவர்களுக்கு சுவர்க லோகம். எல்லா ஹோட்டலிலும் மது உண்டு. புகை பிடிக்க முடியாது.

வாழ்வில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடம்.