Pages

May 25, 2008

ஊடகங்களின் நாடகம்


இன்று கர்னாடகா தேர்தல் முடிவுகள் தான் ஒவ்வொரு செய்தி தொலைக்காட்சியிலும் ஹாட் டாபிக். 100 தொகுதிகளின் முடிவுகள் தெரிந்த நிலையில் பி.ஜே.பி. தான் தனிப்பட்ட முதலிடம் வகிக்கும் பொழுது, சில செய்தித் தொலைக்காட்சிகள் அக்கட்சியை இரண்டாவது நிலைக்குத்தள்ளிவிட்டு, இரண்டாவது நிலையிலுள்ள காங்ரஸிற்கு முதலிடம் கொடுத்து அறிவிக்கின்றன.

உண்மையை மக்களுக்குச்சொல்வதில் பாரபட்சமின்றிக் கொடுப்பது தான் செய்தியாளர்களின் தலையாய கடமை. ஆனால் இப்படி ஒரு அரசியல் கட்சிக்குப் பாரபட்சமாக நடக்கும் செய்தியாளர்களை என்னவென்று சொல்ல?இந்தப்பதிப்பை எழுதும் பொழுது, யாருமே பெரும்பான்மை பலம் பெற்றிருக்கவில்லை. ஆனால், இப்பொழுதே யாரும் யாரும் கூட்டு சேரக்கூடும் என்று இப்போதே தொலைக்காட்சியில் அலசத்தொடங்கி விட்டார்கள். எது எப்படியோ, நல்லதொரு அரசு அமைந்தால் நல்லது தான்.

May 24, 2008

ஒரு சகாப்தம் நிறைவடைகிறது

முட்டி மோதி, தட்டித் தடுமாறி பெங்களூரு சர்வதேச விமான நிலைத்தை ஒரு வழியா திறந்துட்டாங்க. வந்து போகும் பயணிகளும் விமானிகளும் புதிய விமான நிலையத்தை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளுறாங்க. ஆனா, எனக்கென்னவோ பழைய விமான நிலையத்தை நினைத்தால் தான் பாவமா இருக்கு. ஒரு வயதான ஊழியன், தனது ஆயுட்காலம் முழுதும் ஒரு கம்பெனிக்காக உழைத்து ஓய்ந்து ரிடையர் ஆகி வீடு திரும்புவது போலத்தான் இருக்கு. பழைய விமான நிலையத்தை மூடக்கூடாது என்ற ஓலக்குரல்கள் பல எழுந்த வண்ணம் இருக்க, தனது கடமையை நாட்டிற்காக இவ்வளவு நாள் செய்து விட்டு, "போதும்டா சாமி! இவ்வளவு நாள் உழைச்சது போதும். இனிமேலும் முடியாது" என்று அந்த பழைய விமான நிலையம் கூறுவது இருக்கிறது.

பம்பாய் டெல்லி அளவு பெரிய நிலையமாக இல்லாவிட்டாலும், அவைகளுக்கு ஈடு கொடுத்து ஒரு நாளில், பல விமானங்கள் வந்து போக அனுமதித்திருக்கிறது. பழைய விமான நிலையமட்டுமன்றி, பெங்களுர் வானமே வெறிச்சோடிப்போய் விட்டது. ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கொரு விமானத்தைப் பார்த்த கண்கள், வெறிச்சோடிக்கிடக்கும் வானத்தைப்பார்க்கவே சகிக்கவில்லை. ஆகாயத்திற்கே இதைப் பொறுக்கமுடியவில்லை போலும். நேற்று மாலை கோடை வெப்பத்திலும், பெங்களுர் வானம் அழுது தீர்த்தது. பெங்களுர் வரும் வெளியூர் குழந்தைகள், விமானங்களைப் பார்த்து மகிழ்ந்து சிரிக்க ஒரு காரணாமாயிருந்திருக்கிறது. இனி பெங்களுர் வானில் விமானங்களைக் காண்பது அரிதாகிவிடும். விமானங்களைக்காட்டி குழந்தைகளுக்குச் சோறுட்டும் தாய் மார்கள் வேறு வழி தேட வேண்டும். பந்த் செய்ய முனைவோர் விமான நிலையத்தை முற்றுகையிட 40 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். சென்னை மாதிரி அக்கம் பக்கத்திலுள்ள நகரத்திற்குச் செல்வோர் விமானப் பயணங்களை மறக்க வேண்டி வரும்.

ஆரவாரமிழந்து ஆர்பாட்டமிழந்து யாரும் கவனிப்பாரின்றிக் கிடக்கும் அந்த கிழட்டு பழைய விமான நிலையத்தைப் பார்க்கவே மனம் சங்கடமாக இருக்கிறது. ஒரு கம்பெனியிலிருந்து ஓய்வு பெற்றவரின், அனுபவத்தை நாடி பல கம்பெனிக்கள் அவர்களுக்கு கௌரவ பதவி கொடுக்கின்றன. சில முக்கிய முடிவுகளை அவர்களிடம் ஆலோசனை செய்கிறார்கள். அதே மாதிரி முக்கியமான வி.ஐ.பிக்கள் வந்து போகவும், அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களுக்குச் செல்லும் விமானங்களையும் இங்கிருந்து இயக்கினால், நல்லது. எனினும் பல வருடங்களாய் நாட்டிற்குப் பணியாற்றிய ஒரு ஊழியனின் சகாப்தம் நேற்றோடு இனிதே நிறவடைந்தது.

May 18, 2008

ஆஹா!! ஹிந்தி திரையுலகம்

ஐ.பி.எல் மாட்ச் பார்க்க விடாமல், ஜீ டி.வி.யில் ஒளிபரப்பாகும் ஃபிலிம் ஃபேர் அவார்ட் நிகழ்ச்சியைத்தான் பார்க்கணும் என்று இன்று மேலிடத்து உத்தரவு. வேற வழி! அதனால கிரிக்கெட்டுக்கு கல்தா கொடுத்து விட்டு ஜீ டி.வியை ட்யூன் செய்யலானேன். அதுவும் நல்லதுக்குத்தான். மேலிடத்து பெர்மிஷனுடன் அறைகுறை நங்கையர்களை ரசிக்க முடிந்ததே.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியர்கள் கரன் ஜோஹரும் சாஜித் என்ற இரு இளம் இயக்குனர்கள். மெய்யாலுமே இவர்களுக்கு உடம்பு பூரா மச்சம் இருக்கணும்பா. வர்றவள் போறவள் எல்லாரும் கன்னத்தில் கிஸ் அடிக்காளுங்க. அப்பட்டியே எவளாச்சும் அடிக்கலைன்னா, இவனுங்களே கேட்டு வாங்கிக்கிடறானுங்க.
இப்படித்தான் லார தத்தாவை கலாய்ச்சானுங்க.
"லாரா, நீ செம ஹாட்டா வந்திருக்கே", கரன்.
"ஒஹ் ரொம்ப தாங்க்ஸ்" லாரா.
"எங்கே எனக்கு ஒரு உம்மா கொடு", கரன்.
அழுத்தமாக ஒரு உம்மா, கரன் கன்னத்தில்.

யப்பா, இதெல்லாம் தமிழ் சினிமா உலகத்தில் நடக்குமா. இது போதாதுன்னு, ஷாருக்கான் மனைவியிடம், "ஐ லவ் யூ" என்று பப்ளிக்கா சொல்லுறானுங்க. கட்டிப்பிடிச்சு மறுபடி கன்னத்தில் ரெண்டு உம்மா. ஆஹா இன்னா கலாசாரம்பா.

அடுத்த தபா, மேலிடத்திடம் எந்த ஹிந்தி டி.வி.யில் அவார்ட் ஃபங்க்ஷன் போடுறாங்கன்னு நானே சொல்லலாம்னு இருக்கேன்.

May 17, 2008

அரசாங்க ஆஸ்பத்திரி மீது காண்டு ஏன்?

"கழுத்துவலித்தொல்லையால் முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதி" - செய்தி. ராமசந்திரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் இவரை பரிசோதித்து வருகிறார்களாம். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், ஏன் அரசாங்க ஆஸ்பத்திரியில் போய் சிகிச்சை செய்துகொள்ளவில்லை? இவரே அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போகலைன்னா, அங்கே வசதிகள் சரியா இல்லைன்னு தானே அர்த்தம்? இல்லை, அங்கு வேலை பார்க்கும் டாக்டர்கள் மேல் நம்பிக்கை இல்லையா? அவர்கள் திறமையில் சந்தேகமா? ஏன் இடஒதுக்கீட்டில் மருத்துவம் படித்து, இட ஒதுக்கீட்டிலேயே அரசாங்க ஆஸ்பத்திரியிலே வேலையும் கிடைத்தவர்கள் எந்த அளவிற்கு சிகிச்சை கொடுப்பார்கள் என்ற அச்சமா? இல்லை, இவர் அங்கு போனதால் ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை கொடுக்காமல், டாக்டர்கள் தன்னை கவனிக்க வந்துவிடுவார்கள் என்பதற்காக அங்கு போகாமலிருக்கிறாரா? எந்த அரசாங்க ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தாலும் நுழைவாயிலில் கருணாநிதியின் படத்தைத்தான் மாட்டி வைத்திருக்கிறார்கள். அப்படியிருக்க ஒரு மாநிலத்தின் முதல்வர் என்று சொல்லிக்கொள்பவர், இப்படி செய்வது ஒரு தப்பான முன்னுதாரணம்.
இதைப்பற்றியெல்லாம் ஞானி தனது 'ஓ' பக்கங்களின் குட்டு என்று எழுதுவாரா தெரியாது. அதனால் தான் நான் முந்திக்கொண்டேன்.

May 13, 2008

உனக்கு மட்டுமா தம்பி?!

எங்க அப்பா கடைக்கு பக்கத்தில் ஆர்ய பவன் ஹோட்டல் இருக்கிறது. நெல்லை சைவ பிள்ளைமார் ஹோட்டல். டிஃபன் வகைகள் வெகு ஜோராக இருக்கும். அப்பா கடைக்கு எப்போ போனாலும் அநேகமாக இங்கு ஒரு விசிட் அடித்து விடுவேன். அப்பாவை ஒரு பத்து நிமிஷம் நச்சரிக்க வேண்டும். "சந்தைக்குப் போணும்; ஆத்தா வையும் காசு கொடு" என்று 16 வயதினிலே படத்தில் கமல்ஹாசன் ரஜினியை நச்சரிப்பதுபோல் கேட்டுக்கொண்டே இருந்தால் "போய்த் தொலை" என்று ஐந்தோ பத்தோ கொடுப்பார். நேரே இந்த ஹோட்டலுக்குத்தான் விஜயம்.
ஒரு முறை (ஆறோ ஏழோ படிக்கும் போது) சில முக்கியமான கஸ்டமர் வந்திருக்கும் போது, நான் கடைக்குள்ளே என்ட்ரி கொடுத்தேன். எப்போதும் போல தலைச் சொரிந்து கொண்டே "அப்பா" என்றேன். ஒண்ணுமே கேட்காமல் பத்து(!) ரூபாய் எடுத்துக் கொடுத்துவிட்டார். "கஸ்டமர் வந்திருக்கும் போது, இவன் மானத்தை வாங்க வேண்டாம்" என்று நினைத்தாரோ என்னவோ? "ஆஹா! இப்படி கஸ்டமர் வந்திருக்கும் போது அப்பாவிடம் பணம் கேட்காமலேயே கரந்துவிடலாம் போலிருக்கே" என்ற உண்மை வெகு நாட்களுக்குப் பிறகு தான் தெரிந்தது.
பத்து ரூபாய் கிடைத்தது பெரிய பொக்கிஷம் மாதிரி. நேரே ஆர்ய பவன் போனேன். இதற்கு முன் சாப்பிடாதது என்னென்ன என்று பட்டியலிட்டேன். ஒவ்வொண்ணா ஆர்டர் செய்தேன். ஒவ்வொன்றையும் ஆர்டர் செய்யும் முன் சர்வரிடம், இதன் விலை எத்தனை? விலைப்பட்டியலில் போட்டிருக்கும் விலையும் இவன் சொல்லும் விலையும் ஒன்றுதானா என்று வெரிஃபை பண்ணிக்கொள்வேன். பில் அமௌண்ட் பத்து ரூபாயைத் தாண்டிவிடக்கூடாதே என்ற கவனம் வேறு. (என்னென்ன சாப்பிட்டேன் என்று சொல்ல மாட்டேன். நீங்க அப்புறம் கண்ணு போட்டுட்டீங்கன்னா?) அப்பப்போ அப்பா கொடுத்த பணம் பாக்கெட்டில் இருக்கா என்றும் பார்த்துக்கொள்வேன். (பணம் இல்லாம மாவாட்டணுமே என்ற பயம்!)
ஒரு வழியா சாப்பிட்டு முடித்தபின் பில் பத்து ரூபாய்க்குள்தான் வந்திருப்பதைப் பார்த்து நிம்மதி. அப்பாடா! மாவாட்ட வேண்டாம்! பில்லை எடுத்துக்கொண்டு கௌன்டருக்கு பணம் செலுத்தச் சென்றேன். பில்லை வாங்கிகொண்டவர் பில்லைப்பார்த்தார், என்னைப்பார்த்தார். என்ன நினைத்தாரோ, "உனக்கு மட்டுமா தம்பி?" என்று கேட்டார்.
அவர் ஏன் அப்படிக் கேட்டார் என்று புரியவில்லை. ரொம்ப ஜரூரா "ஆமாண்ணே" என்று வெள்ளந்தியாக தலையாட்டினேன். கடைக்குத் திரும்பி வந்ததும் அப்பாவிடம் மீதி சில்லரைக் காசைக் கொடுக்க (அப்போதெல்லாம் பாக்கெட் மணி கிடையாது), "என்னடா இவ்வளவு தானா?" என்றார். "ஆமாம்பா. அந்த ஹோட்டல்ல கூட உனக்கு மட்டுமா தம்பின்னு கேட்டான்" என்று சொல்லித் தொலைத்தேன். அவ்வளவு தான். கடையில் இருந்தவர்களெல்லாம் ஒரே சிரிப்பு. அப்பவும் எனக்கு ஒண்ணுமே புரியவில்லை. ஆனால் அப்பா மட்டும் தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக பையில் மீதிக்காசைப் போட்டுக்கொண்டார்.
வீட்டிற்கு வந்ததும் அம்மாவிடம், " உன் பிள்ளை, கஸ்டமருக்கு முன்னால என் மானத்தையே வாங்கிட்டான். கொடுத்த காசு அம்புட்டையும் செலவழிச்சு தின்னுபுட்டு, ஹோட்டல்காரன் கேலியா பேசினதைக் கூட பெருமையா சொல்லிக்கிறான்" என்று தலையயிலடித்துக் கொண்டார். "ஏண்டா, என்னடா பண்ணின? எதுக்கு அப்பா கோபமா இருக்கார்?", என்று அம்மா கேட்டதற்கு, நான் நடந்ததைச் சொன்னேன். அம்மாவும் சிரித்துக் கொண்டே "நல்ல பிள்ளை டா போ" என்றாள்.
இன்றும் எனக்கு ஹோட்டல் காரன் சொன்னது பிடிபடவில்லை. அப்படியென்ன கேட்டுவிட்டான். "உனக்கு மட்டுமா தம்பி?" என்று தானே கேட்டான். என்னைக் கேலியா செய்தான்? இல்லை எல்லோர் முன்னாலும் அவன் சொன்னதை அப்பாவிடம் சொன்னேனே? அது தவறா? ஒண்ணும் விளங்கலைடா சாமி.

May 09, 2008

மொழிப்பிரச்சினை

பெங்களூர் வந்து எட்டு வருடங்கள் ஆகியும் இன்னும் ஒழுங்கா கன்னடம் பிடிபடவில்லை. தமிழ் நாட்டுக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று சொல்லுவதாலேயோ என்னமோ கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும் எண்ணமே வரவில்லை. கொல்கத்தா போய் ஐந்தே மாதங்களில் ஓரளவேனும் பெங்காலி புரிந்து கொள்ள முடிந்தது, ஆனால் இன்னும் கன்னடம் வரவில்லை.
ஆஃபீசிலும் நிறைய ஹிந்தி மக்கள் தான். கன்னடத்தில் மாத்தாட வேண்டாம். அக்கம் பக்கத்திலுள்ள கடைக்காரர்களும் ஹோட்டல்காரர்களும் (கன்னடர்களாகவே இருந்தும்) நன்றாகவே தமிழ் பேசுகிறார்கள். அப்படியே யாராவது கன்னடத்தில் மாத்தாட ஆரம்பித்தால், "கன்னடா கொத்தில்லா" என்று சொல்லிடுவேன். அவர்களும் எனக்கு தெரிந்த ஹிந்தியிலோ ஆங்கிலத்திலோ சில சமயம் தமிழிலேயே கூட பேச ஆரம்பித்து விடுவார்கள். அதனால் கன்னடம் தெரியவில்லை என்பது ஒரு குறையாகவே இருந்தது கிடையாது. என் மனைவிக்கும் கன்னடம் அவ்வளவாக தெரியாது. (தமிழே முழுசா தெரியாது. இதுல கன்னடம் மட்டும் தெரியுமா?).
முதன் முதலில் மொழிப்பிரச்சினை உருவானது, எங்கள் வீட்டிற்கு வேலை செய்ய வந்த பெண்மணி மூலமாக. அவளுக்கு தமிழ் தெரியாது, ஹிந்தியும் ஆங்கிலமும் புரியாது. கன்னடம் மட்டுமே தெரியும். மைசூர் பக்கத்திலுள்ள
மாண்டியா தான் சொந்த ஊர். (எப்போ தமிழ் நாட்டிற்கு எதிராக கலவரம் வந்தாலும் இங்கு தான் ஆரம்பமாகும்) அவள் எதோ கேட்க, நான் எதோ சொல்ல, அவள் கேட்டதற்கும் நான் (என் மனைவியையும் சேர்த்து தான்) சொன்னதற்கும் சம்பந்தமே இருந்திருக்காது போலும். அவள் தலையில் அடித்துக்கொண்டு சிரிப்பாள். என் முகம், பணத்தை எல்லாம் இழந்து விட்ட வடிவேல் மூஞ்சி கணக்கா ஆகிடும். தொடப்பம் எங்கேன்னு கேட்டிருப்பாள், இவ்வளவு தான் பாத்திரம் இதை மட்டும் தேய்த்தால் போதும் என்பேன். நான் சொல்வது அவளுக்கு புரியாமல் அவளே தொடப்பத்தைத் தேடி எடுத்து கொள்வாள். குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால், துணியை நானே உலர்த்தி கொள்கிறேன் என்பாள் என் மனைவி.
இந்த மாதிரி அவள் என்ன சொல்கிறாள், நாங்கள் என்ன சொல்கிறோம் என்றே புரியாமல், நிறையவே சர்க்கஸ் கூத்துக்கள் நடக்கும்.
இப்படி அல்லல் பட்டு இன்றளவும், கன்னட சரஸ்வதி என் நாவில் குடி கொள்ள மறுக்கிறாள்.