Pages

April 29, 2005

இவர்களுடன் ரஜினி

ரஜினி படம் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு பரபரப்பு எல்லாம் இருந்த காலம் மலையேறிப்போய்விட்டதா என்று எண்ணும் அளவிற்கு அமைதியாக வெளிவந்து அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறாள் சந்திரமுகி. மன்னன் திரைப்படத்திற்குப் பிறகு, படத்தில் வரும் தன் பெயரையே, படத்தின் பெயராக வைக்காமல் செய்திருக்கிறார் ரஜினி. என்ன தான் வலுவான கதை இருந்தாலும் ஒரு திரைப்படத்தை நகர்த்திச் செல்வது திரைக்கதை மட்டுமே. ஆனால் முதல் பாதியில் திரைக்கதையில் நன்றாகவே கோட்டை விட்டிருக்கிறார் பி.வாசு. முதல் பாதியில் கதை நகரவே மறுக்கிறது.

கதைப்படி எல்லோருமே பணக்காரர்கள் தான். அதற்காக சாதாரணமாக இருக்கும் போது கூட பட்டுச் சேலை தான் உடுத்த வேண்டுமா?? வடிவேலு மனைவியை வைத்து ரஜினி அடிப்பது காமெடி அல்ல, காமநெடி. வடிவேலு செய்யும் நகைச்சுவை, பார்த்துப் பார்த்து புளித்துப் போன அதே நடிப்பு. இதை நகைச்சுவை என்று ஒத்துக்கொள்ளக் கூட முடியவில்லை. ப்ச் கொட்டச் செய்கிறது.

ரஜினியிடம் ஒரு வேண்டுகோள். தயவு செய்து, உங்கள் படங்களுக்கு தேவாவை மட்டுமே இசையமைக்கச் செய்யுங்கள். நீங்கள் நடந்து வரும் போது அந்த "ஹே ஹே" சத்தம் இல்லாதது ஒரு பெரிய குறையாகவே தோன்றுகிறது. வெகு நாட்களுக்குப் பிறகு பன்ச் டயலாக் இல்லாமல் ரஜினி படம் வந்திருக்கிறது. ஒரு பெரிய ஆறுதல். தளபதிக்கு பிறகு அறிவுரை இல்லாத படம். இயக்குனரின் தைரியத்திற்குப் பாராட்டுக்கள்.

ரஜினியின் குறல் ஒரு மாதிரியாக இருக்கிறது. பிளாஸ்டிக் ஸர்ஜரி செய்து கொண்டதன் விளைவோ??

ஜோதிகா பற்றி எழுதவில்லையென்றால், தமிழ் கூறும் நல்லுலகம் என்னை எப்பிறவியிலும் மன்னிக்காது. Stupendous Performance Jyothika. You outclassed every one. அதென்ன ஜோதிகாவுக்கு மட்டும் ஆங்கில பாராட்டு என்று எண்ணுபவர்களுக்கு என் விளக்கம், "ஜோதிகாவால் தமிழ் படிக்க முடியாதே. அதனால் தான் அங்கிலத்தில் எழுதினேன்". முதல் பாதியில் கூட்டத்தோடு கூட்டமாக இருந்தாலும், பின் பாதியில் வெளுத்து வாங்கியிருக்கிறார். அதிலும் சந்திரமுகியாக மாறும் காட்சியில் மிரட்டுகிறார்.

ரஜினிக்கு ஜோடி இல்லாமல் டூயட் இல்லாமல் படம் எடுக்க முடியுமா?? அதற்காக நயந்தாரா வந்து போகிறார். அய்யாவை விட இதில் கொஞ்சம் உப்பியிருக்கிறார்.

இளைய திலகம் இளைக்கவே மாட்டாரோ?? பிரபு ஸார், கொஞ்சம் உங்க உடம்பை இளைக்க வைக்க ஏதாவது பண்ணக் கூடாதா? பார்க்கவே சகிக்கலை. எல்லோரும் மூக்காலேயே பேசுவது போல் ஒரு ஆடியோ எஃபெக்ட். எக்கச்செக்க கதா பாத்திரங்கள். மாளவிகா, நாசர், செம்மீன் ஷீலா etc. எதற்காக இவ்வளவு பேர் என்று தெரியவில்லை. ஆஹா ஓஹோ என்று மற்ற விமர்சனங்கள் கூறுவது போல் அப்படி ஒன்றும் இல்லை. I wouldn't say it is an 100% entertainer. Nevertheless, it aint boring.

சரி, தலைப்புக்கும் கட்டுரைக்கும் சம்பந்தமே இல்லையே என்று நினைக்கிறீர்களா? படத்தில் எழுத்து போடும் போது, SUPER STAR என்று கிரஃபிக்ஸில் போடாமல் "இவர்களுடன் ரஜினி" என்று போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கு.



டெயில் பீஸ்:
எப்படியெல்லாம் ரஜினியை கடவுளுக்கு நிகராக சித்தரித்து படம் எடுத்தார்கள். ஆனால் இப்போது என்ன ஆயிற்று?? தமிழ் நாட்டையே ஆட்டி வைத்திருந்த ஒரு மாமனிதருக்கே இந்த நிலைமையென்றால், நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களெல்லாம் எம்மாத்திரம். இனியாவது தலையும் மலையும், தனது படங்களில் பன்ச் டயலாக் அடிக்காமல், தன்னை ஒரு super Man'ஆக சித்தரித்துக் கொள்ளாமலிருந்தால் நல்லது.
ரஜினியின் இந்த நிலையை பார்க்கும் போது, விவேக்கின் ஒரு டயலாக் தான் நினைவிற்கு வருகிறது. இனியும் நான் இந்த கட்டுரையை தொடர்ந்தேனானால், சிலர் என்னை ஆள் வைத்து அடிக்க கூடும். அதனால், இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

Mr. Rajini, I think its time for you to pad up for the second innings. You may have to change your playing style. Remember your are made to follow on.

April 12, 2005

ஆதலினால் தாய்மொழியும் பயிற்றுவீர்

தாய்க்கு நிகராக தாய் நாட்டையும் தாய்மொழியையும் குறிப்பிடுகின்றோம். வேறெதற்கும் தாய் என்ற அடைமொழி கிடையாது. தாய் நாட்டைப் பிரிந்திருக்கையிலே, நம் நாட்டவனைக் கண்டால் மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு முறை நான் அயல் நாட்டிற்கு சென்ற போது, தனிமை என்னை வெகுவாக வாட்டியது. என் நாட்டவன் யாரையாவது காண மாட்டேனா என்ற ஏக்கம் என்னுள்ளே எழுந்தது. ஆனால் என் தாய்மொழி பேசும் அண்டை நாட்டவனைக் கண்ட போது, எனது மகிழ்ச்சி அளவிடமுடியா உயரத்தை எட்டியது. என் தாய் மொழி பேசும் ஒருவனை சந்தித்ததில் தாயையே சந்தித்த மகிழ்ச்சி.

ஆனால், இன்று வெகுவான பெற்றோர்கள், தமது குழந்தைகளுக்கு தாய்மொழியை போதிக்க மறந்துவிட்டனர். தாய் மொழியிலே பேசினால் கூட அது ஒரு கௌரவக் குறைச்சல் என்று எண்ணுகிறார்கள். A for Apple , B for Ball என்று கற்றுக்கொடுக்கும் பெற்றோர்கள் அம்மா, ஆடு, இலை, என்று சொல்லிக்கொடுப்பதில்லை. ஒரு குழந்தையிடம் யானையின் படத்தைக்காட்டி, இது என்ன என்று கேட்டால், elephant என்று பதில் வருகிறதே தவிர, யானை என்று சொல்லத் தெரியவில்லை. One two three four என்று நூறு வரை சொல்லும் குழந்தைக்கு ஒன்று இரண்டு மூன்று என்று சொல்லத் தெரியவில்லை. என் பிள்ளை mummy daddy என்று தான் கூப்பிடுவான் என்று சில பெற்றோர்கள் பெருமை பட்டுக்கொள்கிறார்கள். பிஞ்சு உள்ளங்களின் நெஞ்சங்களிலே தாய்மொழி ஏதோ தவறான மொழி என்ற ஒரு மாயை ஏற்படுத்திவ்விட்டார்கள். நான் சில அரசியல் வாதிகளைப்போல, தாய் மொழியிலே தான் கல்வி கற்க வேண்டும் என்று சொல்ல வில்லை. சத்தியமாக இல்லை. போட்டி மிகுந்த இன்றைய உலகத்தில் எதிர் நீச்சல் போட வேண்டும் என்றால், ஆங்கிலத்திலே பயில்வது அவசியமாகிவிட்டது. இது ஒரு மறுக்க முடியா உண்மை. தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பது என் வாதம் அல்ல. தாய்மொழியைப் புறக்கணிக்காமல் கல்வி கற்ப்பிப்போம் என்பதே என் வேண்டுகோள்.

பெற்றோர்களே, குழந்தைகளுக்கு Ba Ba Black Sheep சொல்லிக்கொடுக்கும் போது, அம்மா இங்கே வா வா என்ற பாட்டும் சொல்லிக்கொடுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு Tinkle comics வாங்கும் போது, அம்புலிமாமாவும் சிறுவர்மலரும் வாங்கிக்கொடுங்கள். நெபோலியனையும், கார்ல் மார்க்ஸையும் பற்றிச் சொல்லிக்கொடுக்கும் போது, நம் சேர சோழ பாண்டியர் பற்றியும் சொல்லிக்கொடுங்கள். Harry Potter புத்தகங்கள் வாங்கும் போது, ஒரு பொன்னியின் செல்வனையும் வாங்குங்கள். குறைந்த பட்சம், பத்து குறளாவது கற்றுக்கொடுங்கள். At least திருவள்ளுவர் யார் என்று கேட்க வைக்காதீர்கள். ஔவ்வையாரும், பாரதியாரும், கம்பரும் எழுதாததை, மில்டனும், டென்னிசனும் வேர்ட்ஸ்வொர்தும் எழுதிவிடவில்லை. முடிந்தவரை வீட்டிலே, தாய் மொழியில் உறையாடுங்கள். சச்சின் டெண்டுல்கரே, வீட்டில் மராட்டியில் பேசுகிறார். தம் குழந்தைகள் தாய்மொழியை மறந்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்.

பிற மொழி கற்பது பாபமல்ல. தாய்மொழியைப் புறக்கணிப்பது புண்ணியமுமல்ல.

பெற்றோர்களே, ஆதலினால் உங்கள் குழந்தைகளுக்கு தாய்மொழியும் பயிற்றுவீர்!!!!!!!

பி.கு. மேலே நான் சொன்ன இலக்கிய உதாரணங்கள் யாவும் தமிழிலே உள்ளதால், நான் உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுங்கள் என்று சொல்லவில்லை. என் தாய்மொழி தமிழ் என்பதால், தமிழ் உதாரணங்கள் கொடுத்துள்ளேன். மலையாளம் எண்ட மாத்ரு பாஷா என்று பரைபவர்கள், மலையாள உதாரணங்கள் போட்டுக்கொள்ளலாம் :))))

April 07, 2005

திரையில் உலர்ந்த கவிதைகள்

சில அற்புதமான கவிதைகளுக்கு நல்ல இசை சேர்த்தால், அந்த இசை அதில் மறைந்திருக்கும் கவிதை வரிகளை வெகுவாகவே overshadow செய்த்துள்ளன. அப்படி இசையால் overshadow செய்யப்பட்ட சில கவிதைகள் இங்கே.

அதனால் இந்த blog'க்கு திரையில் மலராமல் உலர்ந்த கவிதைகள், என்று பெயரிட்டுள்ளேன்.


படம்: ஒரு தலை ராகம்

கவிஞர்: டி.ராஜேந்தர்


இது குழந்தை பாடும் தாலாட்டு, இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம், இது நதியில்லாத ஓடம்.


நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப்பார்க்கிறேன்,

வடமிழந்த தேரது ஒன்றை நாள் தோறும் இழுக்கிறேன்

சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்

உறவுராத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன்.


வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொட்டுக்கிறேன்

வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்,

விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனைப்பார்க்கிறேன்

விருப்பமில்லா பெண்ணை எண்ணி, உலகை நான் வெறுக்கிறேன்.


உளமறிந்த பின் தானோ, அவளை நான் நினைத்தது,

உறவுருவாள் என தானோ மனதை நான் கொடுத்தது

உயிரிழந்த கருவைக்கொண்டு, கவிதை நான் வடிப்பது

ஒரு தலையா காதலிலே, ஏத்தனை நாள் வாழ்வது.


அதே படத்திலே இடம் பெற்ற இன்னொரு பாடல். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த பாடல் hit ஆன அளவிற்கு, மேலே உள்ள பாடல் ஹிட் ஆக வில்லை.


வாசமில்லா மலரிது, வசந்தத்தை தேடுது

வைகையில்லா மதுரையிது, மீனாட்சியைத்தேடுது

ஏதேதோ ராகம், என்னாளும் பாடும்,

அழையாதார் வாசல் அலை வைத்து ஓடும்


பாட்டுக்கொரு ராகம், ஏற்றி வரும் புலவா,

உனக்கேன் ஆசை நிலவவள் மேலே

மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை,

உனக்கேன் ஆசை கலைமகள் மேலே


என்ன சுகம் கண்டாய் இன்று தொடர்ந்து,

உனக்கேன் ஆசை ரதியவள் மேலே

வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை என்றும்

உனக்கேன் ஆசை மன்மதன் போலே.


மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம்

உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட

மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே

உனக்கேன் ஆசை உறவென்றும் நாட


வாசமில்லா மலரிது, வசந்தத்தை தேடுது

வைகையில்லா மதுரையிது, மீனாட்சியைத்தேடுது

ஏதேதோ ராகம், என்னாளும் பாடும்,

அழையாதார் வாசல் அலை வைத்து ஓடும்


நமக்கெல்லாம் டி.ராஜேந்தரை அடுக்கு மொழி வசனம் எழுதும் ஒரு வசன கர்த்தாவாகத்தான் தெரியும். அவருக்குள் ஒளிந்திருக்கும் ஒரு மாபெரும் கவிஞனை நிறைய மக்களுக்கு தெரியாது.


இன்னும் சில பல உலர்ந்த கவிதைகள் அடுத்த blog'இல் பார்ப்போம்.