Pages

August 11, 2005

பரிணாம வளர்ச்சியினால் வழக்கொழிந்த சொற்கள்

என் மனைவிக்கு தமிழ் படிக்கத் தெரியாது என்பதாலும், இதைப் படிக்கும் எவருக்கும் என் மனைவியின் மின்னஞ்சலோ நடமாடும் முண்டக்கூவி (mobile phone) எண் தெரியாது என்ற தைரியத்தால் தான் இதை எழுதுகிறேன். இதை படித்துவிட்டு என் மனைவியிடம் என்னைப் போட்டுக் கொடுப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

எனது பழைய அலுவலகத்தில் தோழியொருத்தி எனக்கு சாபமிட்டாள். "தமிழே தெரியாத ஒரு பொண்ணோடத் தான் மாரடிக்கப் போறே" என்று. என்ன நினைத்து சாபமிட்டாளோ, அவளது சாபம் பாடி பலித்து விட்டது. என் மனைவியின் சொந்த ஊர், கடவுளுக்கு சொந்த ஊரான கேரளவிலுள்ள ஆலைப்புழை நகரம். பெண் பார்க்கச் சென்ற தினத்தன்று அவளிடம் கேட்ட முதல் கேள்வியே, தமிழ் தெரியுமா அன்பது தான். அதுவும் ஆங்கிலத்தில் தான் கேட்டேன். தெரியுமென்று தமிழில் விடை வந்த பிறகு தான் நிம்மதி பெருமூச்சு வந்தது. இதற்கு முன்னமே ஒரு வருடம் ஒரு பாலக்காட்டுவாசி என் சக அறையாளனாக இருந்தான். (எலேய், இதே ரேஞ்சுல புரியாத வார்த்தையெல்லாம் உபயோகப் படுத்தினே அரப்படப்போர"ன்னு யாரோ சொல்லுவது எனக்கு கேட்கிறது. ரூம் மேட் என்பதைத்தான் அப்படி விளித்தேன்(இது மெய்யாலுமே தமிழ் வார்த்தை தான். ஆனால், இதை மலையாளத்தில் தான் உபயோகிக்கிறார்கள்). அவன் பேசும் தமிழை நிறைய கேலி செய்ததுண்டு. வீடு மாற்றும் போது அவன் என்னிடம் கேட்டான், "இந்த சாமானையெல்லாம் எப்படி கடத்தப் போறாய்" என்றானே பார்க்கலாம். நானும் எனது இன்னொரு கோவை நண்பனும் விழுந்து விழுந்து சிரித்தோம். ஆனால், பெண் பார்த்த தினத்தன்று எனக்கு மனைவியாக வரப்போகிறவள் பேசிய தமிழ் அப்படியெல்லாம் எந்த ஒரு மலையாள சாயலுமே இல்லை. (மலையாள சாயலில் தமிழ் பேசினால் பெண் பிடிக்கவில்லை என்று சொல்லிவிடுவார்களோ என்பதற்காக special training எடுத்துக்கொண்டாளா என்று தெரியவில்லை).

ஒரு வழியாக திருமணமும் இனிதே அரங்கேறியது. திருமணம் கழிந்து மறுவீடு சென்ற போது தான் மொழிப்பிரச்சினை ஆரம்பித்தது. நான் ஏதோ சொல்லப் போக, என் மனைவி, "அது அப்படி அல்லா" என்றாள். எதற்காக அல்லாவை அழைக்கிறாள் என்று திருதிருவென முழித்தேன். பிறகு தான் தெரியவந்தது, "அது அப்படி இல்லை" என்பதைத்தான் "அல்லா" என்றிருக்கிறாள்.
பிறகு அவளது தங்கைகளிடம் பேசிக்கொண்டிருக்கையில், "ஒன்றும் சாரமில்லை" என்றாள். "சாரமா", நமக்கு தெரிந்த வரை சாரம் என்றால் லுங்கி தானே, இங்கு யாரும் லுங்கி யாரும் அணியவில்லையே, எதற்காக இவள் சாரமில்லை என்கிறால் என்று எனக்கும் ஒன்றும் புரியவில்லை. பிறகு தான் தெரிந்தது பரவாயில்லை என்பதை சாரமில்லை என்றிருக்கிறாள். இது மலையாளம் இல்லை, தமிழ் தானென்றும் சொன்னாள். இன்னும் இப்படி எவ்வளவு புரியாத தமிழை கேட்டுக் குழம்பபோகிறோம் என்று நொந்து கொண்டேன்.

காரை எடுக்கச் சென்ற போது சாவியைக் கொடுக்குமாறு கேட்டேன். ஏதோ சேட்டனை கூப்பிட்டு, "கார் தார்க்கோல் கொண்டா" என்றதும் அதிர்ந்தே போய் விட்டேன். எது காருக்கு தார்க்கோலா???? எங்கள் ஊரிலெல்லாம், பெரிய பிரம்மாண்ட தேரோடு வடத்தை இணைப்பதற்கு ஒரு பெரிய கம்பி உபயகப்படுத்துவார்கள். இல்லை மாட்டு வண்டியில் சக்கரத்தில் இருக்குமே, அதற்குத்தான் தார்க்கோல் என்பார்கள். இவளென்னடா, கார் சாவியைக் கேட்டால் தார்க்கோல் கொண்டு வரச்சொல்கிறாளே, எதைக் கொண்டு வரப்போகிறார்களோ, என்று நினைக்கையில், நல்ல வேளையாக சாவியை கொடுத்தார்கள். இப்படியாக பல புதிய வார்த்தைகள் உபயோகத்திலிருப்பதைக் கண்டு நான் அவ்வப்போது என் மனைவியை கிண்டல் செய்வதுமுண்டு.
தரையில் புழுதி / தூசி இருக்கிறது என்று சொல்ல மாட்டார்கள் - பொடி இருக்கிறது என்பார்கள். நூலாம்படை என்பது அவள் அகராதியிலேயே கிடையாது.அதை வலை என்பாள். துண்டை தோர்த்து என்பாள். போர்வையை பொதப்பு என்பாள்.

தோழி விட்ட சாபம் ஞாபகம் அவ்வப்போது வரும். முழுவதாக பலிக்காவிட்டாலும் கொஞ்சமாவது பலித்துவிட்டது.

சில நாட்களுக்கு நான் அவளது தமிழை கேலி செய்ததுண்டு. என்னடீ தமிழ் பேசுகிறீர்கள். பாதி புரியவில்லை.
பிறகு ஒரு நாள் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய விகடன் ஒன்றை படிக்கும் போது, அதில் சில வார்த்தைகள் என் மனைவி ஊரில் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் இருந்தன. தமிழ் நாட்டில் நாம் பேசும் தமிழ், பரிணாம வளர்ச்சியினால் பிற மொழிகளிலிருந்தும் சில வார்த்தைகளைக் கடன் வாங்கியிருக்கிறது.
பண்டைய தமிழில் "இல்லை" என்ற ஒரு வார்த்தையே கிடையாது. "அல்ல" என்று தான் இருந்திருக்கிறது. பரவாயில்லை என்ற வார்த்தை பாரசீக மொழியிலுள்ள பாதி வார்த்தை. பாரசீக வார்த்தையான பர்வாஹ்+இல்லை (இது தமிழ்) என்பதைச் சேர்த்து தான் பரவயில்லை என்கிறோம். பாதி என்ற வார்த்தையே தவறு. பகுதி என்பது தான் சரி. பகுதி என்ற வார்த்தை தான் மறுவி பாதி என்றாகிவிட்டது.
சாவி என்ற சொல்லும் வட மொழிச் சொல். அக்காலத் தமிழர்கள் சாவிக்கு பதிலாக தார்க் கோலைத்தான் உபயோகித்திருக்கிறார்கள்.

தமிழின் இந்த பரிணாம வளர்ச்சியினால் எத்தனை வார்த்தைகள் வழக்கொழிந்து விட்டன. இந்த உண்மை அறிந்த பின் என் மனைவி பேசும் தமிழை கேலி செய்வதை நிறுத்தி விட்டேன். இப்போதெல்லாம் என் நாவிலும் அவ்வப்போது அல்லா எட்டிப்பார்க்கிறார். ;-)

3 comments:

Subbu said...

விஜயேட்டா,
தாங்கள் ஈ ப்லோகில் கிருக்கியதை, மன்னியிடம் பரயாம் பற்றோ?? ஓ எண்ட குருவாயூரப்பா!!!

எனக்கு ஓர்மை உண்டு
Nama.. panna kindal ellam koncham nenjam illa
..Kerala is god's own country, mallu's are god's own people. their language is
"இன்பத்தேன் வந்து பாயுது காதினுள்ளே"

Panrathu ellam pannitu..பரிணாம வளர்ச்ச periya etymology.. finding the root of words in tamil ah?? nalla "Sappai Kattu" than.

அல்லா!!!!

-Subbu

Vijay said...

Subbu, namba Goyindooo pathi kooda ornnu ezhuthaNum ;-))

மேவி... said...

mudiley sami