Pages

August 09, 2005

இசை ஓவியம்

கடந்த வார இறுதியில் ஊருக்குப் போகும் போது, பேருந்துவில் காதல் ஓவியம் படம் பார்க்க நேரிட்டது. (வி.சி.டி.க்கெல்லாம் அம்மா ஆப்பு வச்சப்பறம் இந்த மாதிரி ஹைதர் அலி காலத்து படத்த தான் பஸ்ஸுல போடுறானுங்க). பாரதிராஜா, இளையராஜா வைரமுத்து கூட்டணியில் வந்த படம். படம் என்னவோ தோல்வியிலும் தோல்வி அப்படி ஒரு தோல்வி. ஊர் பேரு தெரியாத ஒரு கதாநாயகன். ஓரிரண்டு படங்கள் மட்டுமே செய்திருந்த ராதா, இது தவிர படத்தில் நிறைய வந்திருப்பது ஜனகராஜ். இவர் எப்போ வந்தாலும் எரிச்சல் தான் வருது. ஹீரோ மொகரக்கட்டையைக் கண் கொண்டு பார்க்க முடியாது. (குருடனாக வரும் காட்சியில் மட்டும் அச்சு அசல் கண் இல்லாதவர் போலவே பண்ணியிருக்கார்). இவரின் குரலுக்காகவே கதாநாயகிக்கு இவர் மேல் காதல் வருகிறதாம். கதாநாயகி தனது பாட்டின் ரசிகை என்பதற்காகவே நாயகனுக்கு அவள் மேல் காதல் வருகிறதாம். அவளைப் பார்த்தது கூட கிடையாது, ஆனால் அவள் கால் கொலுசு சத்தம் மட்டும் தனியாக கேட்குமா. கொலுசை மாற்றினாலும் கிளைமாக்ஸில் அவளது கொலுசு சத்தம் கேட்கிறது. இருந்தாலும் இப்படத்தை முழுதாக பார்த்தேன். (உனக்கு வேற விவஸ்தையே இல்லைடா என்று நீங்கள் சொல்லுவது எனக்கு புரிகிறது). இந்த படத்தை 2 மணி நேரம் ஓட்டியிருப்பது இளையராஜாவும் வைரமுத்துவும், எஸ்.பி.பாலசுப்புரமணியம் ஜானகியும் மற்ற பிற பின்னணியில் வாத்தியங்களை இசைத்திருக்கும் கலைஞர்கள்.

சில பாடல்களை legendary என்பார்களே, இப்படத்தில் அமைந்துள்ள பாடல்கள் அனைத்தும் அவ்வகையைத் தான் சேரும். பாடல் வரிகளுக்கு வைரமுத்து கொடுத்திருக்கும் அத்தானை உவமைகளும் அதீத கற்பனை வளம். உதாரணத்துக்கு,

பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்


என்று ஆரம்பிக்கும் பாடல் செவிகளுக்கு ஓர் இசை விருந்து. காம்போதியில் ஆரம்பித்து, ஆனத்த பைரவியில் சில நேரம் சஞ்சாரம் செய்துவிட்டு மறுபடியும் காம்போதிக்கு வரும் இப்பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு ஃபிகரை வர்ணிப்பது போல் பாடியிருப்பார்.

மற்றொரு பாடல், இளையராஜா, சௌந்தர்ய லஹரியின் முதல் சுலோகத்தோடு ஆரம்பிப்பார்.
அவிஞானாம் அந்தஸ்திமிர மிஹிர ரீப நஹரி
ஜடானாம் சைதன்யஸ்தபஹ மஹரந்த ஸ்ருதிஜரி
என்று இப்பாடல் ஆரம்பிக்கும். இது ஆதி சங்கரர் அம்பிகையின் அழகை வர்ணிக்கும் பாடல்.
ஸ்ருங்கார ரஸத்தை ஆதிசங்கரர் என்னடா, நான் வர்ணிக்கிறேன் பார், என்று வைரமுத்து போட்டி போட்டுக்கொண்டு இவ்வரிகளை எழுதியிருக்கிறார் போல.

நதியில் ஆடும் பூவனம், அலைகள் வீசும் சாமரம்
காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
ஸ்ருங்கார ரஸத்தில் வரிகள் மட்டும் அமைந்தால் போதுமா, அதற்கேற்ப ராகம் வேண்டாமா, தேவகாந்தாரியும் ஹிந்தோளத்தையும் குழைத்துக்கொண்டு இசைஞானி இசை அமைத்திருப்பார். இசை மட்டும் அமைத்தால் போதுமா, என் மாதிரி ஆட்கள் இதைப் பாடினால் எப்படி இருக்கும். அப்படி இருக்கச் செய்யாமல், எஸ்.பி.பியும் ஜானகியும் தனது குரல் வளத்தால் இப்பாடலுக்கு இன்னும் மெருகூட்டியிருக்கிறார்கள். எவ்வளவு முறை கேட்டாலும் அலுக்காத பாடல். பாடலைக் கேட்டாலே மனம் இதமாகிவிடும்.

ஸ்ருங்கார ரஸம் மட்டும் தானா. அம்மா அழகே உலகின் ஒளியே என்ற பாடலில் பக்தி பெருக்கெடுத்து ஓடுகிறது.

பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ என்ற பாடலில் கடவுளின் மீதே குரோதத்தை வெளிப்படுத்துகிறார் இசைஞானி.
குயிலே எந்தன் கீதங்கள் கேளாயோ என்ற பாடலில் பிரிவும், உச்சகட்டமாக, சங்கீதஜாதிமுல்லை பாடலில் ஆற்றாமையும் வெளிப்படுகிறது. இப்படி ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரஸத்திக்கேற்ப இசையமைத்ததற்கு இசை ஓவியம் என்று பெயரிட்டிருந்தால், இசைக்காகவாவது இன்னும் சில நாட்கள் படம் ஓடியிருக்கும்.

படம் ஃபிளாப் ஆனதால் படத்துடன் பாடல்களும் இன்றைய தலைமுறையினர் நிறைய பேருக்கு தெரியாமல் போனது அவர்களின் துரதிர்ஷ்டம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

பி.கு. ராகங்கள் பற்றிய தகவல்களெல்லாம் என்னுடைய இடைச்செருகல்கள். அவையெல்லாம் எந்தெந்த ராகங்களோ, இளையராஜவுக்கே வெளிச்சம். ;-)

1 comment:

Vijay said...

theriyalaiyEpppaaaa ;-((( Nayagan Kamal maathiri sollippaarkkavum