Pages

June 30, 2010

ஆதலினால் தாய் மொழியும் பயிற்றுவீர்

சென்ற வாரம் உணவருந்த வெளியே சென்றிருந்த போது, நான் அமர்ந்திருந்த மேசைக்கருகில் ஒரு சிறிய குடும்பம். கணவன் மனைவி, 10 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க அவர்களது பெண். மிக அருகில் உட்கார்ந்திருந்ததால் அவர்கள் பேசிக்கொள்வது காதில் நன்றாகவே விழுந்தது. ஒட்டுக் கேட்கவில்லை :)

அவர்கள் தமிழர்கள் தான் என்பது அந்தக் கணவன் மனைவி பேசுவதிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. தன் மனைவியோடு பேசும் போது தமிழிலே பேசும் அவர், தன் மகளோடு பேசும் போது ஆங்கிலத்துக்கு மாறி விடுகிறார். மனைவியும் அப்படியே. ஏதேது மகளிடம் தமிழில் பேசினால் கௌரவக்குறைச்சல் என்று நினைத்தாரா, அல்லது தன் மகள் தப்பித் தவறிக் கூட தமிழ் பேசிவிட வேண்டாம் என்று நினைத்தாரா? “சார் போதும். ரொம்ப பீட்டர் விடாதீங்க” என்று சொல்லணும் போலிருந்தது. அவர்கள் மகளும் தப்பித் தவறிக் கூட தமிழில் ஒரு வார்த்தை பேசவில்லை. அம்மா அப்பா தவிற வேறெதுவும் அதன் வாயிலிருந்து தமிழ் வார்த்தைகள் வேறெதுவும் வரவில்லை.

அவர்களது நிலைமை என்னவோ, நானறியேன். சமீபத்தில் தான் வெளிநாட்டிலிருந்து சென்னை வந்திருக்கலாம். திடீரென்று தமிழில் பேசுவது அக்குழந்தைக்கு கஷ்டமாக இருந்திருக்கலாம்.

ஆனால் இந்தக் குடும்பம் ஒரு பானை சோத்துக்கு ஒரு பதம் தான். பல குடும்பங்களில் இன்று குழந்தைகளிடம் தமிழில் (அல்லது தாய் மொழியில் பேசுவதில்லை). தமிழ்க்குடும்பங்களில் தான் இது அதிகம் என்று நினைக்கிறேன்.
பெங்களூரில் பல வட இந்திய நண்பர்கள் அவர்கள் குழந்தைகளிடம் ஹிந்தியிலோ அல்லது அவர்கள் தாய்மொழியிலோ பேசுவதைப் பார்த்திருக்கிறேன்.

நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டில் தமிழ் அழியாதிருக்க, “முடிந்த வரை தமிழிலேயே பேசுங்கள்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். பல இல்லங்களில் இன்று குழந்தைகள் ஆங்கிலத்தில் தான் உரையாடுகின்றனர். ஏதோ, நம்ம தளத்தை நாலு படிக்கிறார்களே(!!!!?????) என்ற ஆர்வத்தில் (அறிவுரை சொல்ல அருகதை இல்லாவிட்டாலும் ஆதங்கத்தைச் சொல்லலாமே என்ற எண்ணத்தில் தான்), சில வருடங்களுக்கு முன் ஏற்கனவே எழுதிய பதிவை இங்கு மீண்டும் பதிவிடுகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தாய்க்கு நிகராக தாய் நாட்டையும் தாய்மொழியையும் குறிப்பிடுகின்றோம். வேறெதற்கும் தாய் என்ற அடைமொழி கிடையாது. தாய் நாட்டைப் பிரிந்திருக்கையிலே, நம் நாட்டவனைக் கண்டால் மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு முறை நான் அயல் நாட்டிற்கு சென்ற போது, தனிமை என்னை வெகுவாக வாட்டியது. என் நாட்டவன் யாரையாவது காண மாட்டேனா என்ற ஏக்கம் என்னுள்ளே எழுந்தது. ஆனால் என் தாய்மொழி பேசும் அண்டை நாட்டவனைக் கண்ட போது, எனது மகிழ்ச்சி அளவிடமுடியா உயரத்தை எட்டியது. என் தாய் மொழி பேசும் ஒருவனை சந்தித்ததில் தாயையே சந்தித்த மகிழ்ச்சி.

ஆனால், இன்று வெகுவான பெற்றோர்கள், தமது குழந்தைகளுக்கு தாய்மொழியை போதிக்க மறந்துவிட்டனர். தாய் மொழியிலே பேசினால் கூட அது ஒரு கௌரவக் குறைச்சல் என்று எண்ணுகிறார்கள். A for Apple , B for Ball என்று கற்றுக்கொடுக்கும் பெற்றோர்கள் அம்மா, ஆடு, இலை, என்று சொல்லிக்கொடுப்பதில்லை. ஒரு குழந்தையிடம் யானையின் படத்தைக்காட்டி, இது என்ன என்று கேட்டால், elephant என்று பதில் வருகிறதே தவிர, யானை என்று சொல்லத் தெரியவில்லை. One two three four என்று நூறு வரை சொல்லும் குழந்தைக்கு ஒன்று இரண்டு மூன்று என்று சொல்லத் தெரியவில்லை. என் பிள்ளை mummy daddy என்று தான் கூப்பிடுவான் என்று சில பெற்றோர்கள் பெருமை பட்டுக்கொள்கிறார்கள். பிஞ்சு உள்ளங்களின் நெஞ்சங்களிலே தாய்மொழி ஏதோ தவறான மொழி என்ற ஒரு மாயை ஏற்படுத்திவ்விட்டார்கள். நான் சில அரசியல் வாதிகளைப்போல, தாய் மொழியிலே தான் கல்வி கற்க வேண்டும் என்று சொல்ல வில்லை. சத்தியமாக இல்லை. போட்டி மிகுந்த இன்றைய உலகத்தில் எதிர் நீச்சல் போட வேண்டும் என்றால், ஆங்கிலத்திலே பயில்வது அவசியமாகிவிட்டது. இது ஒரு மறுக்க முடியா உண்மை. தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பது என் வாதம் அல்ல. தாய்மொழியைப் புறக்கணிக்காமல் கல்வி கற்ப்பிப்போம் என்பதே என் வேண்டுகோள்.

பெற்றோர்களே, குழந்தைகளுக்கு Ba Ba Black Sheep சொல்லிக்கொடுக்கும் போது, அம்மா இங்கே வா வா என்ற பாட்டும் சொல்லிக்கொடுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு Tinkle comics வாங்கும் போது, அம்புலிமாமாவும் சிறுவர்மலரும் வாங்கிக்கொடுங்கள். நெபோலியனையும், கார்ல் மார்க்ஸையும் பற்றிச் சொல்லிக்கொடுக்கும் போது, நம் சேர சோழ பாண்டியர் பற்றியும் சொல்லிக்கொடுங்கள். Harry Potter புத்தகங்கள் வாங்கும் போது, ஒரு பொன்னியின் செல்வனையும் வாங்குங்கள். குறைந்த பட்சம், பத்து குறளாவது கற்றுக்கொடுங்கள். At least திருவள்ளுவர் யார் என்று கேட்க வைக்காதீர்கள். ஔவ்வையாரும், பாரதியாரும், கம்பரும் எழுதாததை, மில்டனும், டென்னிசனும் வேர்ட்ஸ்வொர்தும் எழுதிவிடவில்லை. முடிந்தவரை வீட்டிலே, தாய் மொழியில் உறையாடுங்கள். சச்சின் டெண்டுல்கரே, வீட்டில் மராட்டியில் பேசுகிறார். தம் குழந்தைகள் தாய்மொழியை மறந்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்.

பிற மொழி கற்பது பாபமல்ல. தாய்மொழியைப் புறக்கணிப்பது புண்ணியமுமல்ல.

பெற்றோர்களே, ஆதலினால் உங்கள் குழந்தைகளுக்கு தாய்மொழியும் பயிற்றுவீர்!!!!!!!

10 comments:

மதுரை சரவணன் said...

//. உங்கள் குழந்தைகளுக்கு Tinkle comics வாங்கும் போது, அம்புலிமாமாவும் சிறுவர்மலரும் வாங்கிக்கொடுங்கள். நெபோலியனையும், கார்ல் மார்க்ஸையும் பற்றிச் சொல்லிக்கொடுக்கும் போது, நம் சேர சோழ பாண்டியர் பற்றியும் சொல்லிக்கொடுங்கள். Harry Potter புத்தகங்கள் வாங்கும் போது, ஒரு பொன்னியின் செல்வனையும் வாங்குங்கள். குறைந்த பட்சம், பத்து குறளாவது கற்றுக்கொடுங்கள். //
அருமை. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
இன்று என் இடுகை இது சம்பந்தாமான ஒரு பகிர்வாக தான் இருக்கும்.

Subbu said...

நன்று விஜய்,
கோபமோ, சந்தோஷமோ தாய் மொழியில் பகிர்ந்தால் தான் இனிமை.
திட்டுவதற்கு ஆங்கிலம் உபயோகிப்பது நன்று ;)

subbu

Vidhya Chandrasekaran said...

நல்ல பதிவு. ஆனா ஆங்கிலம் கலக்காமல் பேசுவது சாத்தியமாகுமா? லெட் மீ ட்ரை;)

தாரணி பிரியா said...

ம் என்னோட தாய்மொழி தமிழ் இல்லை. ஆனா எங்க வீட்டு குழந்தைங்க கன்னடம், தமிழ் + இங்கிலீஷ் மூணுமே பேசறது போல சொல்லி தந்து இருந்தாலும் அவங்க பேச விரும்பற மொழி தமிழ்தான்.

எங்களுக்குமே தமிழ் சுலபமா இருக்கு. அவங்க கன்னடம் சரியா பேசறதை விட எப்பவுமே இங்கதான் இருக்க போறோம். அதனால தமிழ் சரியா தப்பில்லா பேசணும் இதுதான் என் ஆசை :)

Karthik said...

தமிழ் சரியா வராதுன்னு சொல்லிக்கறது ஒரு பாஷன் ஆயிடுச்சு விஜய். நான் இப்போ பொன்னியின் செல்வன் படிச்சிட்டு இருக்கேன். காலேஜ்ல அதை பார்க்கறவன் எல்லாம் நான் ஏதோ படிக்கக் கூடாத புக்க படிக்கற மாதிரி பார்க்கறான். தமிழ் கூட படிப்பியாங்கறான். எகொச!

விக்னேஷ்வரி said...

உங்கள் ஆதங்கம் மிகச் சரி. வடநாட்டில் ஹிந்தி அல்லது அவர்கள் தாய் மொழியே அதிகம் ஆக்கிரமித்துள்ளது என்பது மறுக்கவியலா உண்மை. தாய்மொழி தாய்க்கு சமானம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

குந்தவை said...

//நான் இப்போ பொன்னியின் செல்வன் படிச்சிட்டு இருக்கேன். காலேஜ்ல அதை பார்க்கறவன் எல்லாம் நான் ஏதோ படிக்கக் கூடாத புக்க படிக்கற மாதிரி பார்க்கறான். தமிழ் கூட படிப்பியாங்கறான்.//

:(

Karthik said...

@குந்தவை

ஹிஹி உங்க சோகம் புரியுதுங்க. ரொம்ப நல்ல பேர் உங்களோடது. :)

Vijay said...

நன்றி மதுரை சரவணன். அடிக்கடி வாங்க.

@Subbu
ஆங்கிலத்தில் திட்டினால் உரைக்குமா என்ன?

@வித்யா
இந்தியா தவிர மற்ற பல நாடுகளில் ஆங்கிலம் கலக்காமல் தான் பேசுகிறார்கள். நாம் தான் கலப்படம் செய்கிறோம்.

@தாரணி பிரியா
உங்கள் எண்ணம் வரவேற்கத்தக்கது.

@கார்த்திக்
எது நாகரீகம் என்றே தெரியாமல் வாழ்கிறார்கள் சிலர். என்னத்தச் சொல்ல?

@விக்னேஷ்வரி
வருகைக்கு நன்றி. அடிக்கடி வருக

@குந்தவை
வருகைக்கு நன்றி

Ravi said...

Thambi unnonda second language yenna pa school la ???