Pages

September 08, 2005

விமர்சையான விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி திருநாள் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது என் அப்பா ஊரான கல்லிடைக்குறிச்சியில் நடக்கும் பத்து நாள் திருநாள் தான். எங்கள் தெருவில் இருப்பதென்னவோ சிறியதொரு விநாயகர் கோயில் தான். டுண்டி விநாயகர் என்று பெயர். தெருவின் பெயரே தொந்தி விநாயகர் தெரு தான். ஆனாலும் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பத்து நாளும் தெருவே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். பத்தாவது திருநாளாக விநாயகர் சதுர்த்தியன்று திருவிழா நிறைவு பெறும்.
ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒருத்தர் கட்டளைதாரராக இருப்பார். தினமும் காலையில் கணபதி ஹோமம் நடக்கும். பிறகு ஜபங்கள் தொடரும். நானும் சில நாள் ஜபத்திற்குச் செல்வதுண்டு. ஜபம் செய்தவற்களுக்கு தட்சிணை தருவார்கள். (நான் தட்சிணை ஏதும் வாங்கக்கூடாது என்று அம்மா கட்டளையிடுவாள்) பிறகு சுவாமிக்கு அபிஷேகமும் தீபாரதனையும் நடக்கும். நான் சிறுவனாக இருந்த காலத்தில் சேண்டியை எடுத்துக்கொண்டு தெரு முழுவதும் சென்று அபிஷேகம் நடக்கப்போகிறது, எல்லோரும் வாருங்கள் என்று தண்டோரா போடுவோம். சில சமயம் நானும் தண்டோரா கோஷ்டியோடு சென்றதுண்டு. இப்போதெல்லாம் மைக்கிலேயே அறிவிக்கிறார்கள்.
பிறகு சர்க்கரைப் பொங்கலும் பஞ்சாமிர்தமும் பிரசாதமாகத் தருவார்கள். பிரசாதம் விநியோகம் போது ஒரு பெரிய அடிபுடி சண்டையே நடக்கும். யாரு நிறைய தடவை பிரசாதம் வாங்குகிறார்கள் என்று சிறுவர்கள் இடையே ஒரு போட்டியே நடக்கும். நான் சக்கரைப்பொங்கல் மட்டும் வாங்கிக் கொள்வேன். பஞ்சாமிர்தம் பிடிக்காது. எல்லோருமாக வாய்க்காங்கறைக்குச் சென்று அங்கு மதில் படியில் உட்கார்ந்து சாப்பிடுவோம்.

மாலையில் சுவாமி புறப்பாடு இருக்கும். மேள தாளங்கள் முழங்க குழந்தைகள் ஆலவட்டம் பிடிக்க, சுவாமி தெருவை ஒரு சுற்று சுற்றி வருவார். நான் சிறு பிள்ளையாக இருந்த போது நான் தான் தீவட்டி பிடிப்பேன் என்று அடம் பிடிப்பேன். நான் தீவட்டி ஏந்திச் செல்வதை என் தாத்தா பார்த்தால் (என்னைத்தவிர) எல்லோருக்கும் திட்டு விழும் என்பதால், எனக்கு தீவட்டி கொடுக்க மாட்டார்கள். தீவட்டி கிடைக்கவில்லையே என்று பலமுறை ஏங்கியிருக்கிறேன். என் நண்பர்களுடன் கொடிச் சண்டை போடுவோம். இரவு தீபாரதனைக்குப் பிறகு பெண்களும் சிறுமிகளும் கோவிலை கழுவிவிட்டு மறுநாள் விசேஷத்திற்குக் கோலம் போடுவார்கள். பருவ வயதை அடைந்த பின் சில பெண்களை கலாய்த்த அனுபவமும் உண்டு. ஒரு படை இளநீர் வெட்ட கிளம்பும். எனக்கு மரம் ஏறத்தெரியாதலால், கீழேயே நிற்பேன். வெட்டும் இளநீரில் சரிபாதி பங்கு எங்களுக்கு. மற்றவை தான் பிள்ளையாருக்கு.

ஒன்பது நாள் திருநாள் முடிந்து பத்தாவது திருநாளாக சதுர்த்தித்திருநாள் நடைபெறும்.
சதுர்த்திக்கு முந்தைய நாள் இரவு தெருவில் எந்த பையனும் தூங்க மாட்டான். எல்லோரும் தோரணம் கட்டுவோம். வீதி வீதியாக சென்று சுவரொட்டிகள் ஒட்டுவோம். அதிலும் "விளம்பரம் செய்யாதீர்" என்று எங்கு ஒட்டியிருக்கிறதோ அங்கு தான் ஒட்டுவோம். சில வீடுகளில் சுக்குமல்லிக் காப்பி, தேனீர், உப்புமா, புளியோதரை தயிர் சாதமெல்லாம் தருவார்கள். இது போததென்று ஏதாவது தின் பண்டமும் தருவார்கள். இந்த கொண்டாட்டங்களுக்காகவே சதுர்த்திக்கு முந்தைய நாள் அங்கு கழிக்க வேண்டும். ஓவ்வொருவர் வீட்டிலும் போட்டிருக்கும் கோலங்களைக் காண கணகள் இரு கோடி வேண்டும்.
காலையில் கணபதி ஹோமம் ருத்ர ஏகாதசி பிறகு தாரா ஹோமம், அப்புறம் சுவாமிக்கு அபிஷேகமும் தீபாரதனையும் நடைபுபெறும்.

மாலையில் தெருவே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். வீதி முழுவதும் மின் விளக்கு பொருத்தியிருப்பார்கள். பதினெட்டுதெருவிலுமுள்ள மக்கள் பிள்ளையார் கோவிலுக்கு வருவார்கள். அவர்களை பார்ப்பதற்காகவே நாங்களெல்லாம் திண்ணையில் உட்கார்ந்து வம்படிப்போம். என்ன Brigade Road என்ன Forum. அன்று வரும் ஃபிகருங்களுக்கு ஈடு இணையுண்டா. கோவில் கும்பத்திற்கு அபிஷேகமும் பூஜை நடக்கும். சஹஸ்ரநாம ஜபத்திற்க்குப்பின் ஒரு நீண்ட பிரேக். இரவு பத்து மணியளவில் சுவாமி புறப்பாடு. இம்முறை எல்லா தெருவையும் சுற்றி வருவார். வெகு ஜோராக அலங்காரம் இருக்கும். இந்த சப்பரம் தள்ளுவதே ஒரு பெரிய வைபவம். எல்லா தெருவையும் சுற்றி வந்து சுவாமி இறங்குவதற்கு எப்படியும் இரண்டு மணியாகிவிடும். சுவாமி வந்திறங்கியபின், நாதஸ்வரக்காரர் ஒரு சூப்பர் பாட்டு இசைப்பார். (கணேசன் இசைக்கும் 'நாத முடி மேலிருக்கும் நாகப்பாம்பே'யை கேட்டால் நமக்கே படமெடுத்து ஆடத் தோன்றும்). சுவாமியை உள்ளே வைத்து விட்டு எல்லோருக்கும் பிரசாதம் குடுப்பார்கள். அதிலும் ஸ்பெஷல் புளியோதரை மற்றும் பானகம். சுவாமி கூட வந்தவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும். அதை வாய்க்கால் படியில் போட்டு சாப்பிட்டு விட்டு உறங்கி மறு நாள் எழுந்தோமானால், ஊருக்குத் திரும்ப மனதே இருக்காது. பத்து நாளும் ஜே ஜே யென்று இருந்து விட்டு தெருவே அழுத முகமாக இருக்கும். ஒவ்வொரு வருடமும் கனத்த இதயத்தோடு திரும்பி ஊருக்கு வருவேன்.
பத்து நாளும் சதுர்த்தி திருநாளை கல்லிடையில் கழிக்க வேண்டும் என்ற நெடு நாள் ஆசை என்று நிறைவேறப்போகிறதோ தெரியவில்லை.

2 comments:

Subbu said...

Vijay,
Me too same feelings about Tenkasi. My Street had a Pillayar temple(end of the street),our house was at the end of the street. Almost daily we used to go to temple. I still wonder everyone of us/ in the street will assemble when the bell rings during Pooja time. There were lot of young guys in my age or elders and we had a gala time. Nowadays i don't think the same enthusiasm exists.

You can write "Kallidai Days" like "Malgudi days" :)

-Subbu

Anonymous said...

ஆஹா! இன்னொரு திருநெல்வேலிக் காரரா? வாங்க வாங்க![நான் திருநெல்வேலி கிடையாது. ஆனா, பக்கந்தான்]

தமிழில் வலைப்பதிவு தொடங்கியமைக்கு வாழ்த்துகள்.

ரொம்ப சுவாரசியமாக எழுதுறீங்க.

வரவேற்புடன்,
மதி