Pages

Showing posts with label சுய புராணம். Show all posts
Showing posts with label சுய புராணம். Show all posts

December 23, 2008

நியானும் மலையாளமும்

எனிக்கும் மலையாளத்துக்கும் நன்னாயிட்டு சம்பந்தமுண்டாக்கும். எனிக்கு நன்னாயிட்டு ஓர்மையுண்டு, எண்ட பாட்டி, அவளண்ட பால்ய காலம் கேரளாவிலே கழிச்சு. எண்ட தாத்தாவுக்கு கேரளத்தில் கஸ்டமர் உண்டு. எண்ட அச்சன் மூக்கைப் பிடித்துக்கொண்டு தமிழ் பரையெங்கில் அதே வல்லிய மலையாளமாக்கும். எண்ட குருவினண்ட பார்யாவுக்கு அம்பலபுழையாக்கும் சொந்த ஊர். எண்ட பார்யாவிண்ட நாடு ஆலப்புழை. இதாக்கும் எண்ட மலையாள சம்பந்தம்.

மலையாளிகளையும், தமிழை மலையாளத்தில் கலந்து தலையாளமாப் பரையும் தலையாளிகளை நியானும் எண்ட சிநெகிதனும் நன்னாயிட்டு களியாக்காம். மலபார் போலீஸண்ட ஒரு தமிழ்ப் படம். ஆ படத்தில் சத்யராஜ் நடிச்சு. அயாள் ஒரு கேரளா போலீஸ். அயாளெண்ட அசிஸ்டெண்ட் கௌண்ட மணி தன்ன. எடா, மலையாளி சத்யாராஜை அயாள் இந்தா இந்தா களிச்சு, எடா நியானும் எண்ட சிநேகிதனும் ஆ படம் கண்டுட்டு உருண்டு புரண்டு சிரிச்சு. ஆ படத்தை எந்த மலையாளி நோக்கினெங்கிலும், அவன் கௌண்ட மணியை கொன்னு களைஞ்சு.

சாரி சாரி, தமிழ் பேசும் நல்லார்கள் ஆன்றோர்கள் சான்றோர்கள் எல்லோரும் என்னை மன்னிக்கணும். இவன் என்னடா பெனாத்துறான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? காயத்ரி பேசுவதற்கு ஒரு காதைக் கொடுத்துக் கொண்டே எழுதினேனா எல்லாம் மலையாளமா வந்துவிட்டது. இது ஒரு மாதிரியான ஃபோபியாவோ? தங்கமணி பேசுவதைக் கேட்டாலே சிந்தனையெல்லாம் Malayalify ஆகிறதே நான் மட்டும் கேரளாவிலேயே செட்டில் ஆகியிருந்தால், ஐயோ, வெட்டிவம்பைப் படிப்பவர்கள் என்னைக் கூலிப் படை வைத்துப் போட்டுத் தள்ளியிருப்பார்கள்.

எந்த மொழிக்கும் இல்லாத ஒரு சக்தி மலையாளத்துக்கு உண்டு.
ஒரு எஃபக்ட் என்று கூடச் சொல்லலாம் அது என்ன? எந்த மொழி பேசுபவரானாலும், அயாள் (பார்த்தீர்களா, எழுதும் போதே மலையாளம் மூக்கை நுழைக்கிறது) அந்த ஆள் கேரளாவிலே செட்டில் ஆனால், அவர்கள் பேசும் மொழிக்கு ஒரு மலையாள மூலாம் பூசினது போலிருக்கும்.

நான் கொல்கத்தாவிலே இருந்த போது என் சக அரையாளன், பாலக்காட்டைச் சேர்ந்தவன். அவன், “சாமான்களை எப்படி கொண்டு போகப் போறே” என்று கேட்பதற்கு, “எடா, இந்த சாமானெல்லாம் எப்படியாக்கும் கடத்தப் போறாய்” என்பான். இவன் பேசுவதை தமிழ் தெரிந்த ஒரு மூன்றாவது மனிதர் கேட்டால் என்ன நினைப்பார். இவனுங்க ஏதோ கஞ்சா கடத்தப் போறாங்க போலிருக்கேன்னு நினைக்க மாட்டார். அவன் கூட ஒரு வருடம் இருந்து விட்டு நெல்லைக்கு வந்திருந்த போது, ஒரு ஆள் என்னிடம், “நீங்க மலையாளியா” என்றார். எனக்கு அப்படியே பத்திண்டு வந்தது.

என் நெருங்கின தமிழ் சிநேகிதன் ஒருவன் பெங்களூரிலிருந்து எரணாகுளத்திற்கு மாற்றலாகிப் போய் விட்டான். சமீபத்தில் அவனோடு தொலைபேசியில் பேசும் போது, “நியான் நியான், புவான் புவான்” என்று ஹார்ன் அடிப்பது பேசுகிறான். “டேய், ஏண்டா இப்படி பேசறே” என்றால், “எந்தா செய்யறது. அப்படியாக்கும் வரது” என்று மூக்கால் தலையாளுகிறான்.

தமிழில் நாம் பேசும் சில வார்த்தைகள் மலையாளத்தில் வேறொரு வார்த்தையாக உபயோகப்படுத்துவார்கள். எங்க பெரியம்மாப் பாட்டி கேரளாவிலே செட்டில் ஆனவங்க. அவங்க எங்க வீட்டுக்கு ஒரு தடவை வந்திருந்த போது, என் தங்கையிடம், “எடி, விளக்கைப் பார்க்கலியோடி. அது இன்னும் கத்தறது”. ”என்னது விளக்கு கத்தறதா” என்று பயந்தே போயிட்டேன். நாம அதுக்கு ஹாரனா ஃபிட் பண்ணி வச்சிருக்கோம்னு பார்த்தா, விளக்கு எரிவதைத் தான் கத்தறது என்று சொல்லியிருக்கிறார்கள்.

இப்படித் தான் இன்னொரு முறை ஒரு பையனை அவன் அம்மா வீட்டில் தேடிக் கொண்டிருந்தார்கள். இந்தப் பாட்டியிடம், பையனப் பார்த்தீகளா என்று கேட்டதற்கு, “அவன் கொல்லப்புறத்துல தணல்ல நிக்கறான்” என்றார். எல்லாரும் அடிச்சுப் பிடிச்சு, “ஐயோ, தீ ஏதாவது வந்துடுத்தா. பிள்ள தணல்ல நிக்கறான்னு சொல்லறாளே”ன்னு போய் பார்த்தா, அந்தப் பையன் வேப்ப மரத்து நிழலில் விளையாடிக் கொண்டிருக்கிறான். நிழல் என்பதற்குத் தான் தணல் என்று சொல்லுவார்களாம், கேரளாவுல. நல்லா சொன்னாங்க.

இதாவது பரவாயில்லை. ஒரு முறை காயத்ரி என்னிடம் வந்து “இன்னிக்கு ஊர்ல ஆத்துக்கு ஸ்கந்தன் வந்திருந்தானாம்.” ”யாரந்த ஸ்கந்தன்” என்று யோசிப்பதற்கு முன்பாகவே, “அவனோட சின்ன வயசுல கோவில் விசேஷத்துக்கு கூட்டிண்டு வந்திருந்தப்போ, நம்பாத்துல தான் இருந்தான். இந்த வருஷம் கோவில் விசேஷத்துக்கு நம்பாம் வழியா நடந்து போயிண்டிருந்தப்போ தானாவே காம்பவுண்டுக்குள் வந்துட்டானாம்” என்று புல்லரித்துப் போய்ச் சொன்னாள்.

யாரடா இந்த ஸ்கந்தன். சரி, அப்படியே அவன் வந்திருந்தாலும் அதுக்கு ஏன் இவ்வளவு புல்லரித்துப் போகணும் என்று நியானும் குழம்ப, மேலும் சொன்னாள், “இன்னிக்கு அம்மா அவனுக்கு பெரிசா இரண்டு வாய் உண்டக் கட்டியும் வெல்லமும் கொடுத்தாளாம்” என்றாள்.
”யாருடீ இந்த ஸ்கந்தன்” என்றேன். ”ஐயோ பக்கத்து ஊர் கோவில் ஆனையாக்கும்” என்றாளே பார்க்கலாம். வாயடைத்துப் போய் விட்டேன்.

இதே போல் ஒரு முறை, எனக்குத் தெரிந்த ஒருவர் கேரளாவிலுள்ள உறவினர் வீட்டுக்குப் போயிருக்கிறார். உறவினர் மருந்துக் கடை வைத்திருந்தாராம். மருந்து வாங்க வந்த ஒருத்தன், “கேசவனுக்கு பனியாணு (கேசவனுக்குக் காய்ச்சலாம்). நூறு க்ரோஸின் இல்லெங்கில் நூறு பாராசிடமோள் குடுக்காம்” என்றானாம். கடைக் காரர் பயந்து போய், “நூறு பராசிடமோள் கழிச்செங்கில் அயாள் மரிச்சு போகும். அயாள் எவட?” என்றார். மருந்து வாங்க வந்தவன், மீண்டும் அதே பல்லவியைப் பாடியிருக்கிறான். இதைப் பார்துக் கொண்டிருந்தவர், “அந்த ஆள் எங்கே” என்று கேட்டிருக்கிறார். அதற்கு மருந்து வாங்க வந்தவன், ”கேசவன், இவட வர மாட்டான்.” என்றான்.
”ஏன்” என்றதற்கு “அவன் ஆனை” என்றானாம்.

மலையாகளின் மிருகங்கள் மேலுள்ள பரிவை என்னவென்று புகழ?

ஆஃபீஸிலிருந்து லேட்டாப் போனால் என்ன காரணம் சொன்னாலும், காயத்ரி “நியான் இதை விஷ்வசிக்கணுமா” என்கிறாள். குப்பையாக ஒரு இடம் இருந்தால், அவள் அதிகாரியில், அது, ”ஒரு விருத்தி கெட்ட ஸ்தலம்”. ஏதாவது கேலி செய்தால், “களியாக்க வேண்டா” என்பாள். இண்டரஸ்டிங்காக கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தால், “களி தீர்ந்ததா” என்பாள். முந்தைய களிக்கும் இந்த களிக்கும் என்ன வித்தியாசமோ?

தனது மலையாளத் தோழியிடம் பேசும் போது, “நாட்டில் எல்லோரும் சுகம் தன்னே” என்று வினவுவாள். “ஆஹா வீட்டிலுள்ளவர்கள் மட்டும் சுகமா என்று கேட்காமல் நாட்டிலுள்ளவர்கள் பற்றி விசாரிப்பதைப் பார்க்கும் போது, “எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா” என்ற அழகன் பாட்டுத் தான் ஞாபகம் வருகிறது.

ஆக இப்படியாக நியானும் மலையாளத்தோடு உறவாடிக் கொண்டிருக்கிறேன். My Tryst with Malayalam continues.

டிஸ்கி: யப்பா யாரும் வுட்டுக்கு போன் போட்டு நான் இப்படியெல்லாம் எளுதியிருக்கேன்னு சொல்லிப்புடாதீங்க. பயமெல்லாம் ஒண்ணும் இல்ல, இருந்தாலும்...... ஒரு முன்னெச்சரிக்கை அறிக்கை.

July 30, 2008

ஆடிக்காலம்

எந்தச் சானல் திருப்பினாலும் சதாவோ, ஸ்நேஹாவோ ஷ்ரியாவோ இல்லை மீரா ஜாஸ்மினோ ஏதாவதொரு ஜவுளிக்கடை விளம்பரத்தில் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த விளம்பரங்களைப் பார்க்கும் பொழுது விகடனில் வந்த ஒரு ஜோக் தான் ஞாபத்திற்கு வருகிறது.

நீதிபதி: பக்கிரி, நீ ஏன் சரவணா ஸ்டொர்ஸில் உன் கை வரிசையைக் காட்டினாய்.
பக்கிரி: எஜமான், நான் அங்கே திருடினதுக்கு நடிகை சதா தான் காரணம்
நீதிபதி: அதெப்படி?
பக்கிரி: அவங்க தானே எல்லா சானலிலும் எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோன்னு பாடறாங்க. அதான் அங்கே திருடினேன். நீங்க தண்டனை கொடுக்கறதா இருந்தா அவங்களுக்குத் தான் கொடுக்கணும்

என் மனைவி ஜூலை முதல் தேதியிலிருந்தே "எனக்கு ஆடிக்கென்ன வாங்கித்தராப்புல ஐடியா" என்று நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாள். அப்படியென்ன தான் ஆடிமாதத்திற்கும் ஜவுளிக்கடைகளுக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. ஒரு முறை என் அப்பா, ஜவுளி கடை அதிபரிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில், "சார், ஆடியில் எந்த வீட்டுலயும் விசேஷம் ஏதும் இருக்காது. பண்டிகையும் கிடையாது. ஸ்கூலும் திறந்துடுவாங்க. எங்க வியாபாரமெல்லாம் ரொம்பவே சுணங்கிப் போயிடும். வியாபாரத்தைப் பெருக்கத்தான் இந்த தள்ளுபடி விற்பனை அது இதுன்னு ஏதாவது ஏற்றி விட்டால், நம்மூர் பொம்பளைங்க கியூல வந்துடுவாங்க" என்று சொன்னாராம். இது நிஜமாகவே ஜவுளிக் கடை முதலாளி சொன்னாரா இல்லை என் அம்மா ஜவுளிக் கடைப் பக்கம் போகாமலிருக்க அப்பா இப்படி கிளப்பி விட்டாரா என்று தெரியவில்லை.

எங்கள் ஊரில் ஆடி மாசம் என்றால் காற்று பிய்த்துக் கொண்டு போகும். குற்றால சீஸனும் களை கட்டி விடும். இந்த வருடமாவது சீஸனுக்கு குற்றாலம் போகமுடியுமா என்று தெரியவில்லை. ஆடி மாசத்தில் தான் நானும் அவதாரம் எடுத்தேன் என்பதால் எனக்கிது கொஞ்சம் ஸ்பெஷல் மாசம். ஆடி அம்மாவாசை அன்று வானதீர்த்தம் அருவியில் (சின்ன ஆசை சின்ன ஆசை என்று மதுபாலா ஆடுவாறே) நல்ல கூட்டம் இருக்கும். ரோஜா படத்தில் மதுபாலா சொல்லுவாரே "பூக்குடையெல்லாம் எடுத்துக் கொண்டு வண்டி கட்டிக்கொண்டு செல்வோம் "என்று, அந்தத் திருவிழா நடக்கும் ஊர்.
ஆடிப் பெருக்கும் படு அமர்க்களமாக இருக்கும். இனி அதெல்லாம் எந்த ஜன்மத்திலோ?

July 04, 2008

தின்னுட்டியா??

விஜய் டி.வி நடத்தும் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் ஒருவர், வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் சம்பவங்களில் இருக்கும் நகைச்சுவைகளை அழகாகக் கதை போல் சொல்வார். அப்படி என் வாழ்க்கையிலும் சில ஸ்வாரஸ்யமான சில நிகழ்ச்சிகள் நடந்துள்ளது.
சிறு வயதில் (பத்தாவது படிக்கும் போது என்று நினைக்கிறேன்)அப்பாவோடு ஒரு முறை நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் கான்ஃப்ரன்ஸுக்குப் போயிருந்தேன். இரவு டின்னர் புஃபே (buffet) முறை. நாம போனதே அதற்காகத்தானே?! அப்பா என்னை அம்போ என்று விட்டுவிட்டு அவரது சகாக்களோடு சாப்பிடப் போய்விட்டார். முதல் முறையாக புஃபே டின்னர் சாப்பிடுகிறேன். அதுவும் நட்சத்திர ஹோட்டலில். எதிலிருந்து தொடங்குவது, எதை முதலில் விழுங்குவது என்று ஒரு பெரிய திண்டாட்டாம், மனப்போராட்டம். பிச்சைக்காரன் பாத்திரத்தில், எல்லோர் வீட்டு சாப்பாடும் இருக்குமே. அது மாதிரி ஒரே தட்டில் எதையெல்லாம் எடுத்துக்கொள்ள முடியுமோ, அத்தனையும் எடுத்துக் கொண்டேன். இப்படி நான் சாப்பிடுவதை அம்மா, "அவக்கை மாதிரி சாப்பிடாதே. நீ சாப்பிடுவதை யாரும் எடுத்துண்டு போக மாட்டா" என்று அடிக்கடி திட்டுவாள். இதெல்லாம் எனக்கு செவிடன் காதில் ஊதின சங்கு மாதிரி தான்.
ஒவ்வொரு பதார்த்ததையும் எடுத்துக் கொள்ளும் முன் முன்னால் எழுதியிருக்கும் அதன் பெயரைப் படித்துப் பார்ப்பேன். அது அசைவம் இல்லை என்று தெரிந்த பிறகு தான் எடுத்துக் கொள்வேன்.
இப்படித் தான் ஒவ்வொண்ணா பார்த்துப் பார்த்து எடுத்துக் கொண்டிருக்கும் போது, அது என் கண்ணில் பட்டது. அதற்கு முன்னால் எழுதியிருப்பதும் எனக்குப் புரியவில்லை.சரி இது என்ன என்று தெரிந்து கொள்ள, அங்கு நின்றிருந்த சர்வரிடம், "Is it vegetarian or Non-Vegetarian" என்று கேட்டேன். பின்ன, அம்மாம் பெரிய ஹோட்டல்ல போயி இங்கிஷுல பேசினாத்தானே ஒரு பந்தாவா இருக்கும். அவர் சொன்ன ஒரு வார்த்தை பதில் என்னை இன்னும் சிந்தனையில் ஆழ்த்தியது. ரோஜா அரவிந்சாமி மாதிரி ஒரே வார்த்தையில் அவர் சொன்னது "XXXX". (அவன் என்ன சொன்னான் என்று இறுதியில் சொல்கிறேன். அது என்னவென்று நான் இப்பொழுதே சொல்லிவிட்டால் ஸ்வாரஸ்யம் இருக்காது. கொஞ்சம் பொறுமை காக்கவும் )
நம்ம மரமண்டைக்கு இங்கிலிஷுல கேள்வி மட்டும் தான் பந்தாவா கேட்க முடிந்ததேயொழிய அவர் சொன்னது என்னவென்று புரியவில்லை. அதனால் மறுபடியும் கேட்டேன். அப்படியும் நான் விடவில்லை. மறுபடியும், "Sir, Is it vegetarian or Non-Vegetarian?". இந்த தடவை கொஞ்சம் மருவாதை ஜாஸ்த்தி. அந்தாளுக்கு அப்பவாச்சும் தெரியவேண்டாம். இது வெறும் வெட்டி பந்தா பார்ட்டி. இதுக்கு நாம சொன்னது மண்டையில ஏறலைன்னு. மறுபடியும் அந்தாளு அதே ஒரு வார்த்தையைச் சொன்னான். யாமறிந்த கூட்டு கறிகளிலே இது போல் எங்கும் கேள காணோமே, "இதை try பண்ணிப் பார்ப்போமா" என்று மூளை என்னும் சட்டசபையில், இதைச் சாப்பிடலாமா என்ற மசோதாவைத் தாக்கல் செய்தேன். மூளை தலைமைச் செயலகமான மனதை கன்சல்ட் செய்ய, மசோதாவிற்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. மசோதா நிராகரிக்கப்படவே, ச ச இந்தப் பழம் புளிக்கும். இது என்ன எழவோ, சரி போனா போறது. அப்புறமா வந்து பார்த்துக்கலாம் என்று மனதை தேற்றிக் கொண்டு அடுத்த டிஷ் நோக்கி நகரலானேன்.
எதிர்த் திசையிலிருந்து அப்பாவும் எதோ எடுத்துக்கொண்டு வந்தார். அவரிடம் அப்பா, "XXXX அப்படின்னா என்ன" என்று கேட்டேன். அது என்ன ஏதென்று அப்பா சொல்லாமல் அவர் கொடுத்த reaction இருக்கே, அது இன்றும் என் கண் முன்னால் அப்படியே இருக்கிறது. "தின்னுட்டியா???" அவர் வாயிலிருந்து வந்த வார்த்தையே இது தான். "டேய் அது XXXXடா. நெஜமா சொல்லு தின்னையா இல்லையா"
"இல்லைப்பா. அந்தாளு சொன்னது எனக்கு புரியலை. எனக்கென்னவோ ஒரு சந்தேகம் இருந்தது. அதனால நான் அதைச் சாப்பிடலை"
அப்பா சொன்னார் " இங்க பாரு, அம்மா இதெல்லாம் பண்ணிப் போட மாட்டா. இங்க தின்னுண்டாத்தான் உண்டு. அதனால சும்மா சொல்லு. நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன். யார் கிட்டயும் சொல்லவும் மாட்டேன்"
அதைக் கேட்டதற்குப் பிறகு அது இருக்கும் பக்கமே போகவில்லை. மற்ற சமாசரத்தையெல்லாம் நல்ல ஒரு வெட்டு வெட்டிவிட்டு வீடு திரும்பினோம்.
சரி, அப்படி அந்த சர்வர் என்ன தான் சொன்னான். அவன் சொன்ன சரி, அப்படி அந்த சர்வர் என்ன தான் சொன்னான்.
அவன் சொன்ன ஒரே வார்த்தை "PORK"
ஏண்டா வெண்ணை ஒரு சாதாரண விஷயத்தை இப்படி இழு இழுன்னு இழுத்திருக்கியேன்னு நிறைய பேர் சொல்லறீங்க. என்ன பண்ணறது.
நம்ம கற்பனைக் குதிரையை அவிழ்த்துவிட்டு எங்கேயாவது போய் மேய்ஞ்சுட்டு வா என்று சொன்னால், அது தோட்டத்துக்குள்ளேயே தான் வட்டமடிக்கிறது. அது போய் மேயும் வரை சுய புராணம் தான்.