Pages

January 21, 2009

அமெரிக்க அரசியலிலிருந்து கற்க வேண்டியது

என்ன தான் அமெரிக்க அரசியல்வாதிகள் குள்ள நரித்தனத்தோடு செயல் பட்டாலும், சில விஷயங்களை அவர்களிடமிருந்து நம்மூர் அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ளலாம்:

தேர்தலுக்கு முன் என்ன தான் அடித்துக் கொண்டாலும், தேர்தலில் ஒருவரது வெற்றியை தோற்றவர் ஒப்புக்கொண்டு வாழ்த்துதல்.
நம்மூரில் நடப்பதென்ன? இவன் மக்களுக்கு பணம் கொடுத்து ஜெயிச்சுட்டான். தேர்தல் இயந்திரத்தில் கோளாறு. இவன் ஜெயிச்சது செல்லாது. ஜனநாயக முறையில் தேர்தல் நடக்கலை. பணநாயகம் தான் ஜெயித்திருக்கிறது. அப்படி இப்படின்னு அறிக்கை விடாமல், மற்றவறது வெற்றியை ஒப்புக் கொண்டு, வெற்றி பெற்றவர் மக்கள் பணியாற்றுவதில் உதவி செய்ய வேண்டும்.
"If you can't accept defeat, you have no rights to celebrate victory" என்று யாரோ சொன்னது ஞாபகம். யாரும் சொல்லாட்டாலும் பரவாயில்லை, நான் சொன்னதாகவே வச்சுக்கலாம்.

எந்த ஒரு அரசியல் பதவியிலும் இரண்டு தடவைக்கு மேல் இருக்கலாகாது
இந்தியத் திருநாட்டில் மட்டும் தான், அரசியல் வாதிகளுக்கு ரிடையர்மெண்ட் கிடையாது. உயிருள்ள வரை பதவியிலிருக்கலாம். ஒருவர் மூத்த பதவியிலிருந்து தானாக விலக வேண்டுமென்றால், ஒன்று அவருக்கு உடல் ஆரோக்கியம் கை கொடுக்காமலிருக்க வேண்டும். நம்ம வாஜ்பாய் தாத்தா மாதிரி. அல்லது மக்கள் மத்தியிலும் கட்சியிலும் செல்வாக்கு குறைய வேண்டும். வி.பி.சிங் மாதிரி. இவ்விரண்டும் இல்லையென்றால், ஜ்யோதி பாசு, கருணாநிதி போல் 4-5 தடவை ஒரே பதவியிலிருந்து அடுத்தவர்களுக்கு வழி விடாமலிருப்பது கிரிமினல் குற்றமாக்கப்பட வேண்டும். ஒரே ஆள் மீண்டும் பதவிக்கு வருவதை மக்கள் தான் தடுக்க வேண்டும்.

யார் நாட்டை ஆளப் போகிறார்கள் என்பதை முன்பே சொல்லிவிடுவது நல்லது
நம் நாட்டில் தான் (அதுவும் காங்கிரஸ் கட்சியில் மட்டும் தான்) மக்கள் தேர்தலுக்குப் போகும் போது, இந்தக் கட்சி ஜெயித்தால் யார் நாட்டை ஆளப் போகிறார்கள் என்று தெரியாமல் சமீப காலமாக ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 1989’ல் வி.பி.சிங்குக்கும் சந்திர சேகருக்கும் இடையே போட்டி. யார் பிரதமராவதென்று? 2004’ல் சொல்லவே வேண்டாம். மன்மோஹன் சிங்கே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார், தாம் பிரதம மந்திரி ஆவோம் என்று. மற்ற மாநிலங்களின் சட்ட மன்றத் தேர்தலிலும் இந்தக் குளறுபடி நடந்த வண்ணமே இருக்கிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஜெயித்தால் யார் முதல் மந்திரி ஆவார்கள் என்றே தெரியாததால் மக்கள் பி.ஜெ.பி’க்கு ஓட்டுப் போட்டார்கள். "A known devil is better than an Unknown Angel" என்று மக்கள் நினைத்தார்களாவெனத் தெரியவில்லை. ஜம்மு காஷ்மீரில் நேஷனல் கான்ஃபரன்ஸுக்குள்ளேயே குழப்பம், ஃபரூக் அப்துல்லாவா, அவரது மகனா என்று. இப்படியிருக்க மக்களுக்கெப்படி நம்பிகை வரும். அதனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இவர் தான் பிரதம/முதல் மந்திரி ஆவார் என்று முன் கூட்டியே சொல்லிவிடுவது நல்லது.

பதவியேற்பு விழாவை பொது மக்களிடையே நடத்துவது
எனக்குத் தெரிந்து 1990’ல் சந்திர சேகர் மட்டுமே வெட்ட வெளியில் பதவியேற்றுக் கொண்டார். ஒருவர் நாட்டின் தலைவராகப் பதவியேற்பதை ஏன் ராஷ்டிரபதி பவனிலும் ஆளுநர் மாளிகையிலும் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும். இவர்களை இந்தப் பதவியில் மக்கள் தானே? அப்படிப் பட்ட மக்களுக்கு மத்தியிலல்லவா இவர்கள் பதவியேற்றுக் கொள்ள வேண்டும். பாதுகாப்பு அது இதுவென்று சொல்வதெல்லாம் வெறும் சால்ஜாப்பு. After all, A Democracy is at least by the people, if not for and of the people, right?

நான் இந்த ஜாதிக் காரன், அந்த ஜாதிக் காரன் என்று சலுகைகள் பெற்றுக் கொள்வதை நிறுத்த வேண்டும்
ஒபாமா, அமெரிக்காவின் முதல் கறுப்பு ஜனாதிபதி, என்று இந்தியாவின் ஊடகங்கள் தவிர வேறெந்த ஊடகங்களும் சொல்ல வில்லை. ஒபாமாவும் தனது தேர்தல் பிரசாரத்தில், நான் கறுப்பு இனத்தைச் சேர்ந்தவன், தாழ்த்தப்பட்டவன்; அதனால் ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லவில்லை. ரொம்ப கண்ணியமாக நடந்து கொண்டார். ஆனால், நம் நாட்டில், “நான் தாழ்த்தப்பட்ட ஜாதிக் காரன். அதனால் ஓட்டுப் போடுங்கள்” என்று நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம். அரசியல்வாதிகளெல்லாருமே ஒரே ஜாதி தான். ஏமாற்றும் ஜாதி. அவர்களை யாரும் எந்த விதத்திலும் தாழ்த்தி விட வில்லை. அவர்கள் தான் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்கிறார்கள்.
நம் நாட்டு அரசியல்வாதிகள் தங்களது நடத்தையை எவ்வளவோ மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கு. ஏதோ எனக்குத் தெரிந்ததைச் சொல்லியிருக்கேன். என் வீட்டுக்கு ஆடோ சூமோ ஏதும் வராதிருந்தால் நல்லது.
India could still be the largest democracy, in terms of the number of who don't vote.

January 20, 2009

நானும் ஒபாமா கட்சிக்கு மாறிட்டேன்

“உஜாலாக்கு மாறிட்டேன்”னு சொல்லற மாதிரி, நானும் ஒபாமாவுக்கு மாறிட்டேன். இப்போத் தான் அமெரிக்க அதிபராக பதவியேற்றுக்கொண்ட பாராக் ஒபாமாவின் பேச்சு முடிந்தது. அமெரிக்காவை யார் ஆண்டால் என்ன? இந்தியாவிற்கு அதனால் என்ன பெருத்த பயன் வந்துவிடப் போகுது என்பது தான் என்னுடைய கருத்து. அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஒபாமாவின் பதவியேற்பு உறை ரொம்பவே அழுத்தமாக இருந்தது. நம்மூர் பிரதமரும் பேசுறாரு, பேச்சு. கோடானு கோடி மக்கள் பார்ப்பங்களே என்ற வெட்கம் கொஞ்சம் கூட இல்லாமல், யாரோ எழுதிக் கொடுத்து அதை அப்படியே எந்தவொரு உணற்சியும் இல்லாமல் பேசுவாறு. ஆனால் ஒபாமா, எதையும் பார்த்துப் படிக்காமல் மனதில் உள்ளதை உணற்சிப் பெருக்கோடு பேசுவதைக் கேட்கும் போது, அந்தப் பேச்சில் அப்படியே மயங்கிப் போனேன், என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

அவரது இந்தியா சார்ந்த கொள்கைகள் எப்படி வேணா இருந்துட்டுப் போகுது. புதுசா எந்த அமெரிக்க் அதிபரும்,இந்தியா மீது பாச மழை பொழியப் போவதில்லை. ஆனால், ஒரு நாட்டின் அதிபர் தன்னை எப்படி நடத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு ஒபாமா ஒரு நல்ல முன்னுதாரணம்.
பி.கு: ஒபாமா பதவியேற்றத்தால் நாளை பங்குச் சந்தையில் ஒரு 1000 பாயிண்டுகள் சென்செக்ஸ் ஏறினால் நல்லா இருக்கும்.

January 17, 2009

ஹம் ஹோங்கே காம்யாப்

ந்த வருடத்தில் எப்படியாவது என் உடம்பு எடையைக் குறைப்பது என்ற தீர்மானத்தை, என்ன தான் காயத்ரி என் சம்மதமேயில்லாமல் அவளாக நிறைவேற்றிக் கொண்டாலும், நானே கோதாவில் இறங்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். என்ன தடை வந்தாலும் சரி, அடுத்த மூன்று மாதங்களில் இவ்வளவு எடை குறைத்திருக்க வேண்டும், இடுப்பு சுற்றளவு இவ்வளவு இருக்கணும் என்று எனக்கு நானே quarterly target செய்து கொண்டேன்.

நமக்கெல்லாம் நோகாமல் நூல் நூற்பது தான் பிடித்த விஷயம். இணையத்திலுள்ள வலைத்தளங்களில் ஒருமித்தமாக எல்லாரும் சொல்லும் முதல் விஷயம், வாயைக் கட்டுவடு தான். கொஞ்சம் கஷ்டமான விஷயம் தானென்றாலும், வேறு வழியில்லை. சரி இன்றிலிருந்து எண்ணெய்ப் பண்டங்கள், இனிப்பு வகைகளுக்குத் தடா, ஜன்க் உட்பொருள்களை கண் கொண்டே பார்க்கக் கூடாது, சாக்லேட் பிஸ்கட்டெல்லாம், ம்ஹூம் அந்தத் திசையிலேயே இருக்குக்கூடாது என்று சங்கல்பம் எடுத்தாயிற்று.

காலையில் ஓட்ஸ் கஞ்சி, மதியம் இரண்டு சப்பாத்தி ஒரு குவளை மோர் சாதம், மாலையில் ஏதாவது ஜூஸ், இரவில் இரண்டே இரண்டு சப்பாத்தி என diet அட்டவணையும் தயாராயி்ற்று. காயத்ரியிடமும் இதை சொல்லியாச்சு. “மறுநாளிலிருந்து இதைத் தவிர வேறெதுவும் கொடுக்காதே” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டேன்.

ஆனால் காயத்ரி போட்டுக் கொடுக்கும் ஓட்ஸ் கஞ்சி, கஞ்சியாக இல்லாமல் ஓட்ஸ் பாயாசமாக இருப்பதால், ஒரு டம்ளரோடு எப்படி நிறுத்திக் கொள்ள? காயத்ரி ஒரு இருபத்தியோறாம் நூற்றாண்டு “சுடிதாரணிந்த சாவித்ரி”; பதி பக்தி ஜாஸ்தி. போனால் போகட்டும் என்று பரிதாபப் பட்டு, இன்னொரு டம்ளரும் கொடுப்பாள். அதிலே இரண்டு மூன்று பாதாமும் முந்திரியும் சேர்த்துப் போட்டுக் கொடுப்பதால் இன்னொரு டம்ளர் ஓட்ஸ் கஞ்சி, சாரி பாயாசம் உள்ளே ஸ்வாஹா.

மதியம் டிஃபன் பாக்ஸைத் திறந்தால், இரண்டுக்குப் பதிலாக நாலு சப்பாத்தி, சாம்பார் சாதம், மோருக்குப் பதிலாக தயிர் விட்டு குழையக் குழைய தயிர் சாதமும் இருக்கும். இந்த பாழாப் போற ஆஃபீஸ் கேண்டீன்ல அன்னிக்குன்னு பார்த்து பன்னீர் பட்டர் மசாலாவும் செய்திருப்பார்கள். இந்த நாக்கு, தவளை நாக்கு போல் நீண்டு போய் விடும். லன்ச் diet program'உம் அவுட்.

ஆஃபீஸில் டீ குடிக்கப் போனால், அருகே Bourbon பிஸ்கட்டும் வைத்திருந்தால், மேனகையைக் கண்ட விசுவாமித்திரர் போல் மனம் அல்லாடுகிறது. சரி இன்னிக்கு மட்டும் போனால் போறது என்று ஒன்றே ஒன்று மட்டும் எடுத்துக் கொள்ள முடிகிறதா. கை ஆடொமேடிக்காக இரண்டு மூன்றை அள்ளிக் கொள்கிறது. இந்த லக்‌ஷணத்துல யாராவாது பிறந்த நாள் வேற கொண்டாடி சாக்லேட் கேக்கேல்லாம் கொடுத்தால் எப்படி மறுக்க? அது நாகரீகமாகாதே!

சரி ராத்திரியாவது இரண்டு சப்பாத்திகள் மட்டும் போதும் என்று நிறுத்தினால், காயத்ரி செய்திருக்கும் சப்ஜி, “இரண்டோடு நிறுத்திக் கொள்வதா” என்று என்னை முறைத்துப் பார்ப்பது போல் இருக்கிறது. அதனால் கூட இரண்டு மூன்று போட்டுக் கொள்ள வேண்டியதாப் போறது.

சரி தான், இந்த நாக்கை அடக்கும் விஷயம் விவகாரமாகப் போவதால், அடுத்த நடவடிக்கை என்ன யோசித்த போது தான் ஐடியா வந்தது, யோகா. சில வருடங்களுக்கு முன் கற்றுக் கொண்ட யோகாசனங்களை செய்து உடம்பைக் குறைக்கலாம் என்று அதிகாலையில் எழுந்து யோகா செய்ய ஆயத்தமானேன். ரொம்ப யத்தினப் பட்டு தலை கீழாக சிரசாசனம் செய்கையில், கைக்கடியில் ஏதோ கடித்துத் தொலைக்க அப்படியே, மாட்டு வண்டி குடை சாய்வது போல் கட்டிலுக்கும் சுவருக்கும் இடையே இருக்கும் இடுக்கில் விழுந்து தொலைக்க, சிரசாசனம், குண்டக்கா மண்டக்காசனம் ஆனது. எந்த நி்லையில் விழுந்திருக்கிறேன் என்று அறிந்து கொள்வதற்கே பத்து விநாடிகள் ஆகிவிட்டது.

சத்தம் கேட்டு அடிபிடித்து ஓடி வந்தாள் காயத்ரி. அங்குமிங்கும் நோட்டமிட்டு விட்டு, “அப்பாடா, எங்கப்பா வாங்கிக் கொடுத்த கட்டிலுக்கு ஒண்ணும் ஆகலை”ன்னு சொல்லிட்டு போயிட்டாள், கலியுலக சீதை.

ஒரு மாதிரி எழுந்த பிறகு தான் தெரிந்த கழுத்தில் ஆண்டவன் பொறுத்தியிருந்த swivel போன்ற தசைகள் 45 டிகிரிக்கு மேல் சுழல மறுக்கிறது. “அடிப்பாவி புருஷன் இங்கே அடிமைப் பெண் எம்.ஜி.ஆர் மாதிரி நிற்கிறேன். அப்பா வாங்கிக் கொடுத்த கட்டிலுக்கு என்ன ஆயிருக்குன்னு பார்க்கறியேன்னு” சொன்னா காதிலேயே வாங்கிக்கவில்லை. அடுத்த நாளிலிருந்து யோகாவுக்கு காலவரையற்ற ஓய்வு கொடுத்தாயிற்று.

சரி, அடுத்த வழி தான் என்ன என்று யோசித்த போது தான், ஆஃபீஸிலே நான் எட்டிக் கூடப் பார்க்காத ஒரு இடம் ஞாபகம் வந்தது. அது தான் ஆஃபீஸிலுள்ள ஜிம். என்ன அதிசயம், அது முற்றிலும் இலவசமாம். இந்த டம்பெல்ஸ், பஸ்கி, வெயிட்டெல்லாம் தூக்கிவிட்டு திடு திப்பென விட்டுட்டா, நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு விடுமாம். ஒரு நலம் விரும்பி சொன்னார். அதனால் இந்த விஷப் பயிற்சி கொண்ட உடற்பயிற்சியெல்லாம் வேண்டாம். Tread Mill மற்றும் சைக்கிள் ஓட்டலாம் என்று முடிவு செய்தால், இவ்விரண்டையும் உபயோகிக்க ஒரு நீண்ட பெரிய கியூ. “பேசும் பட”த்தில் காலைக் கடன் கழிக்க ஒரு கி்யூ நின்றிருக்குமே, அது போல் ஒரு கியூ. திருப்பதியில் கால் கடுக்க நின்று சுவாமியை தரிசித்தால் புண்ணியமாகப் போகும். இங்கு நின்றால் முட்டு வலி தான் மிச்சம்.

அப்படியே எல்லோரும் ஓடித் தேய்த்த பிறகு அதன் மீதேறினால், “Excuseme, I have already booked this slot" என்கி்றது பின்னாலிலிருந்து ஒரு குரல். ஏதேது, விட்டால் ஆஃபீஸ் இண்ட்ரா நெட்டில் இதற்காகவெல்லாம் புக்கிங்க் ஆரம்பித்து விடுவார்கள் போலிருக்கே. அப்படியே, எல்லோரும் ஓடி முடித்த பிறகு ஏறினால், சுவிட்சைத் தட்டியதுமே, ஓடிக் கொண்டிருந்த இயந்திரம் தானாக அணைந்து கொள்கிறது. என்னவென்று பார்த்தால் இவ்வளவு பேர் இவ்வளவு நேரம் ஓடியதில் சூடாகஒ விட்டதாம் மோட்டார். ஒரு அரை மணி நேரம் அதற்கு ரெஸ்ட் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். ஜிம் உபயோகிக்கும் எண்ணமே போய் விட்டது.

இவங்க என்னடா எனக்கு ஓடுவதற்கு ஸ்லாட் கொடுப்பது, நானே அதிகாலயில் கோழி கூவுவதற்கு முன்னாடியே எழுந்து ஜாகிங்க் போகலாம் என்றால், பெங்களூர் குளிர் யாரை எழுந்திருக்க விடுகிறது. அப்படியே எழுந்து மஃப்ளர், குல்லாய், மங்கி கேப் எல்லாம் போட்டுக் கொண்டு ஓடினால் தெருவில் அலையும் நாய்கள் பயமுறுத்துகின்றன. அவை ஏதாவது மிரண்டு போய் என்னைத் துரத்த ஆரம்பித்து விட்டால்?

ஆக சூர்யா போல் இல்லாவிட்டாலும் ஒரு மாதவன் மாதிரியாவது உடம்பை மாற்ற இது வரை மேற்கண்ட முயற்சிகள் அனைத்தும் ஃபிளாப். ஆனாலும் மனம் தளர்ந்து விட வில்லை நான். இது நான் ஏற்றிருக்குமோர் வேள்வி. ஒரு நாள் வெற்றி பெருவேன்.
ஹம் ஹோங்கே காம்யாப்
ஹம் ஹோங்கே காம்யாப், ஏக் தின்
மன் மேம் ஹை விஷ்வாஸ்
பூராஹை விஷ்வாஸ்
ஹம் ஹோங்கே காம்யாப் ஏக் தின்
என்ற ஹிந்தி பாடலை அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டு என்னை போடிவேட் செய்து கொள்கிறேன். எனக்காகவே இந்த மாதிரிப் பாடல்களை எழுதியிருக்கிறார்களோ??

January 15, 2009

வழக்கொழிந்த சொற்கள்

கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி, தமிழ்குடி என்றொரு பழமொழியுண்டு. தமிழ்க் குடியே அவ்வளவு பழமையானதென்றால், தமிழ் மொழி எவ்வளவு தொன்மையானதாக இருக்கும். இன்றைய தேதியில் உலக மக்களிடையே புழக்கத்திலுள்ள மிகவும் பழமையான மொழி, தமிழ் மொழியேயாகும்.

அப்படிப் பட்ட தொன்மை வாய்ந்த தமிழ் மொழி இன்று பல பரிணாம வளற்சிகளைக் கண்டுள்ளது. தமிழிலுள்ள பல வார்த்தைகள் மற்ற மொழிகளுக்குப் போயுள்ளன. தமிழும் மற்ற மொழிகளிலிருந்து பல வார்த்தைகளை இறக்குமதி செய்திருக்கிறது. இன்று நாம் பேசும் வார்த்தைகளில் தொண்ணூறு விழுக்காடு இறக்குமதி செய்யப்பட்ட வார்த்தைகள் தான்.

தமிழில் வழக்கொழிந்த வார்த்தைகள் என்னவென்று ஆராய்ச்சி செய்ய எனக்கு அவ்வளவு அறிவு போதாது. சமீபத்தில் படித்துத் தெரிந்து கொண்ட வார்த்தைகள் இப்போது தமிழில் புழக்கத்திலேயே இல்லாத வார்த்தைகள் என்று சொல்ல வேண்டும். சுஜாதா அவர்கள் எழுதிய “கணையாழியின் கடைசி பக்கங்கள்” என்ற புத்தகத்தில், இந்த இரு வார்த்தைகள் பற்றி எழுதியிருந்தார்.

வெருகடி - ஒரு உள்ளங்கை அளவு.

சிறங்கை - மூன்று நான்கு கைகளால் அள்ளும் அளவு.

பெண்மணிகள் இனி சமையல் குறிப்பு எழுதும் போது, ஒரு சிறங்கை அரிசியை கொதிக்க விட்டு ஒர் வெருகடி உப்பு ஜீரகத்தை சேர்த்துக் கொள்ளவும் என்று எழுதலாம்.

ஏதோ, எனக்குத் தெரிந்த தமிழில் வழக்கொழிந்த சொற்கள் பற்றி எழுத அழைப்பு விடுத்த குந்தவைக்கு அநேக நன்றிகள். ஏற்கனவே நான் வழக்கொழிந்த சொற்கள் பற்றி முன்றோரு பதிவு எழுதியிருக்கேன். முடிந்தால் படித்துப் பார்க்கவும்.

சரி என்னை குந்தவை மாட்டி விட்டாங்க. நான் யாரையாவது மாட்டி விடலையென்றல், தமிழ் கூறும் நல்லுலகம் என்னை மன்னிக்கவே மன்னிக்காது.
யாரை மாட்டி விடலாம் என்று யோசித்துப் பார்த்ததில் இவர்கள் தான் ஞாபகத்துக்கு வந்தனர்.

சாரலாய் வரும் பூர்ணிமா சரன்

சென்னைத் தமிழன் முகுந்தன் எத்தனை அறிதான தமிழ் வார்த்தைகள் சொல்கிறாரென்று பார்ப்போம்.

லொள்ளும் நக்கலைத் தவிர வேறு வேலை வெட்டியில்லாமலிருக்கும் கார்த்திக்.

சீக்கிரம் சொல்லுங்கப்பா, தமிழ் பாட நூலிலிருந்து அருஞ்சொற்பொருள்ளிலிருந்து சுட்டாவது சொல்லுங்கள்.





January 06, 2009

பயணப்பட்டோம்

புது வருஷப்பிறப்புக் கொண்டாட்டங்களெல்லாம் முடிவடைந்து மறு நாள் ஒரு மினி-தீர்த்த யாத்திரைக்குத் தயாரானோம். காஞ்சிபுரமும் பாண்டிச்சேரியும் போய் வருவது தான் பிளான். ரொம்ப நாட்களாக போகணும் போகணும் என்று நினைத்துக் கொண்டிருந்து இப்போது தான் போவதற்கு நேரம் காலம் எல்லாம் அமைந்தது. வெள்ளிக் கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறையெடுத்தால் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை என்பதால், ஊரில் நிறைய பேர் தங்களது சொந்த ஊருக்குப் போய்விட்டனர். அதனால் ரயிலில் தத்கால் கற்காலென யார் காலில் விழுந்தாலும் டிக்கட் கிடைக்கப் போவதில்லை. அதனால், காரிலேயே போகலாம் என்று முடிவானது.

பெங்களூர் சென்னை சாலையில் கார் செலுத்துவது ஓர் தனி இன்பம் தான். அமெரிக்காவில் கூட 70 மைல் வேகத்துக்கு மேல் போக முடியாது, ஆனால் நம்மூரில் 140 கி.மி. வேகத்தில் கூடப் போகலாம், அப்படி இருக்கிறது, பெங்களூர் சென்னை நால்வழிப் பாதை. என்ன 75 கிலோமீட்டருக்கு டோல் கேட் என்ற பெயரில் வழிப்பறைக் கொள்ளையடிக்கிறார்கள்.

காலை 5 மணிக்கே கிளம்பணும் என்று நினைத்தாலும், பெங்களூர் குளிராலும் பனியினாலும் 6.30 மணிக்குத் தான் கிளம்ப முடிந்தது. காஞ்சிபுரத்தில் சங்கர மடம், காமாட்சியம்மன் கோவில், குமரகோட்டம், ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கெல்லாம் போய்விட்டு, இரவு மடத்திலேயே சாப்பாடு. சிம்பிளாக இருந்தாலும் சுவையாக இருந்தது.

மறு நாள் காலை 4 மணிக்கெல்லாம் மார்கழி மாத பூஜைக்கு வரும்படி இளைய சுவாமிகளே சொல்லிவிட்டதால் மறுநாள் காலை 3 மணிக்கெல்லாம் எழுந்து 4.15 மணிக்கெல்லாம் மடத்தில் ஆஜர். மடத்திலும் நேரம் துல்லியமாகக் கடைபிட்க்கிறார்கள். அரசியல் கூட்டம் போலல்லாமல், 4.20’க்கு தனுர் மாத பூஜை ஆரம்பம். காலை வேளையில் கஜ பூஜை கோ பூஜையெல்லாம் பார்க்க முடிந்தது. ஆனால் இது எதையும் படம் பிடிக்க முடியவில்லை. அது ஏன் மடம், கோவில் மாதிரி இடங்களில் புகைப் படம் எடுக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதி வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. சுவாமி சிலையப் படம் பிடித்தால் அருள் குறைந்து விடுமா? எங்கள் ஊர் தெருக் கோயிலில் சுவாமியைப் படம் பிடிக்கலாம். எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. கொஞ்சம் பிரசித்தி பெற்ற கோவிலில் தான் இந்த மாதிரி கெடுபிடிகளெல்லாம்.

காலை பூஜை முடிந்த பிறகு, பிரசாதமாக சுடச் சுட வெண் பொங்கல். கூட சட்னியும் கொடுத்திருந்தால் வெகு ஜோராக இருந்திருக்கும். இல்லாதிருந்தாலும் நன்றாகவே இருந்தது. காலை 8.30 மணிக்கு வரதராஜ பெருமாள் கோவில். கோவில் தான் எவ்வளவு அழகு? கோவில் சுவரெங்கும் கல்வெட்டுக்களாக செதுக்கித் தள்ளியிருக்கிறார்கள். சரித்திரம் பயிலும் மாணவர்கள் இந்தக் கோயிலில் இருக்கும் கல்வெட்டுக்களைப் படித்து ஆராய்ச்சி செய்யலாம். சரித்திரம் பயிலும் மாணவர்கள் இருக்கிறார்களா என்ன?

இந்தக் கோயிலில் பெருமாள் மாடியில் இருக்கிறார். படியேறிப் போவதற்குள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஆரம்பித்து விட்டது. எனக்கில்லை, எங்கம்மாவுக்கு. ஆனால் இந்தக் கோவிலிலுள்ள இன்னொரு கட்டுப்பாடு மனதை நெருடச் செய்தது. உள் பிரஹாரத்தினுள் ஹிந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக் கூடாது என்று பலகை வைத்திருக்கிறார்கள். கடவுள் என்பவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்றான பிறகு ஹிந்துவென்ன முஸ்லீமென்ன கிறிஸ்தவர்களென்ன? இல்லை, ஹிந்து அல்லாதவர்களுக்கு அருள் பாலிக்க மாட்டேனென்று பெருமாள் திரும்பி உட்கார்ந்து கொள்ளப் போகிறாரா?

ஒரு வழியாக வரதராஜ பெருமாளை சேவித்து விட்டு பாண்டிச்சேரி நோக்கிப் பயணப்பட்டோம். செங்கல்பட்டு வரை காரை செலுத்துவது ஒரு சவாலாக இருந்தது. ஒரு குழியில் கார் இருக்க ஸ்டியரிங்கை வேறு பக்கம் திருப்பினால் அங்கே இன்னொரு குழி. செங்கல்பட்டிலிருந்து திண்டிவனம் வரை மீண்டும் நால்வழிப்பாதை. ஆனால் நம்மூர் லாரிக் காரர்களை நம்ப முடியாது. எந்த சமயத்தில் ராங்க் சைடில் வருவார்கள் என்று சொல்ல முடியாது.

12.30’க்குப் பாண்டிச்சேரி. என்னமோ பாண்டிச்சேரியில் தெருக்களெல்லாம் சீராக நேராகவும் குறுக்காகவும் தான் இருக்கும் என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. கடற்கறை அருகிலுள்ள ஒரு சதுர கிலோமீட்டர் இடம் மட்டும் தான் இப்படி இருக்கிறது. மற்ற இடங்களெல்லாம் சுமாராகத்தான் இருக்கிறது.

நிறைய இடங்களில் BAR என்று கொட்டக் கொட்ட எழுத்துக்களில் எழுதி வைத்திருக்கிறார்கள்.





நிறைய அயல் நாட்டவர்கள் அலைகிறார்கள். ஃப்ரென்சு மற்றும்
ஐரோப்பிய கொடிகள் பறக்கின்றன.










தெருப் பெயர்களெல்லாம் ஃப்ரென்சு மொழியில்
வித்தியாசமாக
இருக்கின்றன.






அந்தக் காலத்து லேடீஸ் சைக்கிளெல்லாம் பார்க்க முடிகிறது.



ஆரோபிந்தோ ஆஷ்ரமத்தில் தங்கி நிறைய சேவை செய்கிறார்கள்.ஆரோவில் போகணும் என்ற ஆசை மட்டும் நிறைவேற வில்லை. அடுத்த முறை போகும் போது கண்டிப்பாகப் போகணும். ஆனால் நிறைய கெடுபிடிகள் இருக்கின்றனவாம். அரவிந்தர் எழுதிய நான்கைந்து புத்தகங்கள் வாங்கினேன்.

காருக்குப் பெட்ரோல் போடுவதற்குப் போனால் லிட்டர் 43’ஏ ருபாய் தானாம். இவ்வளவு மலிவாக இருக்கும் என்று தெரிந்திருந்தால், கூட ஒரு கேன் கொண்டு போய் ரொப்பிக் கொண்டு வந்திருக்கலாம். பெட்ரோலே இவ்வளவு மலிவா இருக்கே, மற்ற சரக்கெல்லாம் எவ்வளவு மலிவாக இருக்கும். சும்மாவா விடலைப் பசங்க, வீக்கெண்டுன்னா பாண்டிச்சேரிக்கு ஓடறாங்க!

ஈ.சி.ஆர் ரோட் பிடித்து சென்னைக்கு வந்து மறு நாள் மதியம் கிளம்பி ஒரு வழியாக பெங்களூர் வந்து சேர்ந்தோம்.