Pages

July 23, 2010

நான் யார்? நான் யார்?

“நான் யார் தெரியுமா! நான் யார் தெரியுமா”

“அண்ணன் யார் தெரியுமா?? அண்ணன் யார் தெரியுமா??”

“டேய் சும்மா இப்படியே சௌண்டு விட்டுக்கிட்டு இருக்கீங்கடே, அண்ணனைப் பத்தி எடுத்துசொல்லுங்களேண்டா”

“அண்ணன் பொட்டி தட்டற வேலை செய்யறேன்னு சொல்லிகிட்டு வெட்டியா ஒக்காந்து ஈ ஓட்டிக்கினு இருக்கச்சொல, மொக்கையா யாருக்குமே உபயோகம் இல்லாம ஏதாவது யோசிப்பாரு. யோசிச்சதோட இல்லாம எளுதித் தள்ளுவார். அண்ணனை உசுப்பத்தவே ஒரு பட்டாளம் திரியுது”

அடப்பாவிப் பயபுள்ளேளா, கூட இருந்தே குழி பறிக்கானுவளே.
ஐயா, தற்புகழ்ச்சி நமக்குப் புடிக்காதுங்க. இருந்தாலும் கொலைஞர், சாரி கலைஞர் மாரி நானே சில கேள்வி கேட்டுக்கிட்டு அதுக்கு பதிலும் சொல்லிருக்கேன். உங்க தலையெழுத்து இம்புட்டு தூரம் படிச்சுப்புட்டீக. இன்னும் ஒரு பத்து நிமிஷம் செலவழிச்சு மிச்சத்தையும் படிச்சிருங்க.

“எலேய், சொல்ல வந்தத, சொல்லித் தொலைல்ல..”

இனிமேலும் மொக்கையைப் போடாம, மேட்டருக்கு வாரேன்.

வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
என் நெசப் பேரப் போட்டுத் தான் எழுதுதேன். விஜய்ன்ற பேருல தான் எழுதுதேன். முழுப் பேரு, “விஜய் குமார்”.
என்ன, என் பேர கெடுக்க ஒரு நடிகனும் பொறப்புட்டிருக்கான்னு கேக்கைல தான் வருத்தமா இருக்கு.

அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
எல என்ன எழவு கேள்வி கேக்க? என் பேருல தான் எழுதுதேன். இந்தப் பேரு அம்புட்டு பிரபலம் ஆவாட்டி, பிறவால பொஞ்சாதி பேரப்போட்டு எழுதலாம்’னு இருக்கேன். என்ன சொல்லுதீய?

நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
எல நீ கேக்க கேள்வியே சரியா இல்லை. நான் என்ன கண்ணாணம் கட்டின புதுப் பொண்ணா, காலடி எடுத்து வைக்கறதுக்கு? எல்லாம் தமிழ் படிக்கத் தெரிஞ்ச மக்கா செஞ்ச பாவந்தேன். நான் எழுததையும் படிக்கணும்’னு, சில பேர் தலையில எழுதியிருக்கு.
என்னத்தச் சொல்ல? எதோ மனசுல உள்ளத எளுதணும்’னு தோணிச்சு. காசு கொடுத்து இணையதளமெல்லாம் வாங்க, நமக்கு சரிப்பட்டு வராது. மவராசன், “இனாமாத்தேன் கொடுக்கேன், இங்கிட்டு வந்து எழுது”ன்னு இவனுங்க சொன்னானுங்க. அட, மனசுல உள்ளத எளுதிப் பாப்புமேன்னு, தோணிச்சு, எழுத ஆரம்பிச்சுட்டேன்.


உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

எலேய், வாழைப் பழத்துல ஊசி ஏத்துத மாதிரியே, கேள்வி கேக்க்கிதியே?
“எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம்”னு ஏதோ படத்துல ஒரு கிறுக்குபய கத்திகிட்டு ஒடுவானே, அது மாதிரி, “நான் பதிவு போட்டிருக்கேன், நான் பதிவு போட்டிருக்கேன்”னு கூவச் சொல்லுதியா??
எதுக்குலே, ஆர்குட்டு, ஃபேஸ்புக்கு, ட்விட்டரெல்லாம் இருக்கு? இங்கிட்டு போடுற மொக்கையெல்லாம், அங்கிட்டு போட்டுருவேன். ஏதோ நாமளும் ஏதோ உருப்படியாச் சொல்லுதோம்’னு நினைச்சு நாலு பயலுவ வந்துட்டுப் போறானுவ.

இன்னும் நிறைய கூட்டம் வரணுமா? தொறந்த வீட்டுல நாய் நொழயற மாதிரி, யார் எதுன்னே தெரியாத ஆள் பதிவுல போயி ஆஹா ஓஹோ’னு எழுத வேண்டியது. முடிஞ்சா அந்தாளு பதிவ ஃபாலோ பண்ணறது. பத்து பேர் கிட்ட இப்படி பண்ணினா, ரண்டாவது தேரும். இப்படித் தான் நாம வாசக வட்டத்த உண்டாக்கறது.
எலேய், இத நான் சொன்னேன்னு, யார்ட்டயும் சொல்லிப்புடாத. பொளப்பு நாறிரும்.



வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
நாம எழுதறதே சொந்தக் கதை சோகக் கதை தான? நாம பண்ணுன கோமாளித்தனத்தயெல்லாம் எழுதித்தானே பொழப்பே ஓடுது. கற்பனை பண்ணி எழுதினேன்னா, இந்நேரம் 21’ஆம் நூற்றாண்டின் சுஜாதா’வாய்ருக்க மாட்டமா? “நினப்பு தான் பொளப்புக் கெடுக்கும்”னு நினைக்கீயளோ?

நாமும் கதை எழுதலாம்’னு ஒண்ணு ரண்டு கதை எழுதினேன். பாத்துக்க ஒண்ணும் சரிப்பட்டு வரல. எல அதுக்கெல்லாம் ஒரு இது வேணும்’ல சொல்லிக்கிட்டு, மறுபடியும் சொந்தக் கதைக்கே போய்ட்டேன்.



நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
நான் வச்சிருக்க பேரைப் பாத்துட்டு நீ இப்படி ஒரு கேள்வி கேக்கலாமா? சொல்லுல கேக்கலாமா? பொழுதே போகாததுனால தானே நான் எழுதுதேன்’ற பேருல மொக்கையைப் போடுதேன்.

நாலு பேத்துக்கு நல்லது பண்ணி அதுனால நாலு காசு வந்தா நல்லாத்தேன் இருக்கும். ஆனா நாம எழுததப் பாத்துப்புட்டு, “அடப் பாவிபயபுள்ளேளா, நாம் இவன் பதிவ படிக்கதுனால, இவன் நாலு காசு பாக்கறாண்டா”ன்னு வவுத்தெரிஞ்சா, அந்தக் காசு நம்மட்ட தங்குமா? வேணாண்டே, வேணாம். பதிவெழுதி நமக்கு காசு வேண்டாம்.


நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
உருப்படியா இது ஒண்ணு தான் போகுது. கிரிக்கெட் ஆர்வக்கோளாறு கொஞ்சம் ஜாஸ்தியகிடுச்சுன்னாலோ, அல்லது நம்ம கிரிக்கெட் ஆட்டக்காரங்களை காய்ச்சணும்னாலோ, சில்லி போயிண்டுன்னு ஒரு பதிவு ஆரம்பிச்சேன். அது அப்படியே போட்டது போட்ட படியே கெடக்கு. ஒரு நா அதுக்கு மறுபடியும் புத்துயிர் கொடுக்கணும்.


மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
ச, நம்மால இவன(ள)ப் போல எழுத முடியலியேன்னு நிறைய பொறாமை உண்டு. இப்படி என்ன தம்பட்டம் அடிக்க வச்ச வித்யா எழுதுதக் கூட பார்த்து பொறாமயா இருக்கும். இவங்கள்’லாம் எழுததப் படிக்கசொல, “வாடி என் கப்பக்கெழங்கே” பாட்டுல ஒரு வரி வருமே, “அதுக்கு ஞானம் வேணும் ஞானம் வேணும்டோய்யா”ன்னு, அது தான் ஞாபகம் வரும்.

சில பேர் பகுத்தறிவு, பைத்தியக்கார அறிவுன்னு சொல்லிகிட்டு, என்ன ஏதுன்னு முழுசா எதையுமே தெரிஞ்சிகிடாம ஏதாவது தத்துப் பித்துன்னு உளறும் போது, அவங்களைப் போய் நாலு சாத்து சாத்தணும்’னும் தோணும்


உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
நாம எழுததப் படிச்சுப்புட்டு இது வரைக்கும் வீட்டுக்கு ஆடோ வராம இருக்கே, அதுவே பெரிய விஷயம் தான். நான் என்ன எழுதினாலும் மொதல்ல என் பொஞ்சாதிக்குப் படிச்சுக் காட்டிருவேன். மொத மொதல்ல நான் காதலிச்ச பொண்ணு பத்தி எழுதிட்டு அவ கிட்ட படிச்சுக் காட்டினேன். அம்மணிக்கு அப்போ இருந்த தமிழறிவுல எம்புட்டு புரிஞ்சதுன்னு தெரியலை. என்னவோ, எழுதியிருக்க, பரவால்ல’ன்னுட்டா.

எங்கம்மாவும் படிப்பாங்க. நல்ல சுருதி சேர்த்து பாடினாக்கூட, சில வித்வான்கள் வாயத் தொறந்து பாராட்டிற மாட்டாங்க. ஒரு தலையாட்டு தான் இருக்கும். இத விட நல்லா சாதகம் பண்ணி, உன்னால இன்னும் முடியும்’னு மறைமுகமா கொடுக்கற ஊக்கம் அது. அம்மாவும் அப்படித்தான். ஒரு சிரிப்பு மட்டும் தான் வரும்.

தங்கமணியைக் கலாய்ச்சு எழுததை அவுக அப்பாரும் படிக்காராம். என்ன நினச்சுக்கிடுவாகளோ? இவனுக்குப் போயி......., வேண்டாம், விட்ருங்க.


கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்.
என்னப் பத்தி நானே.... எப்படி புகழ்ந்துக்கறது? இருந்தாலும் கேக்கீங்களே’ன்னு சொல்லுதேன். நிறைய படிக்கணும்’னு ஆசை. முடிஞ்ச வரைக்கும் கையில ஏதுனாச்சும் பொஸ்தகம் எடுத்துட்டுப் போகறது வழக்கமுங்க.

கஷ்டம் வரும் போதெல்லாம், இது வரைக்கும் வழிகாட்டிய ஆண்டவன் இனிமேல் கைவிட்டுடுவானான்னு, என்னை நானே தேத்திக்குவேன்.

ஓயாம பேசுவேன். எதைப் பத்தினாலும். எல்லாத்துக்கும் அபிப்ராயம் இருக்கும். வேற நம்பளப் பத்தி சொல்லுறதுக்கு ஒண்ணும் இல்லை.

டிஸ்கி: இந்த தொடர் சங்கிலி அருந்துடக் கூடாதாம். அப்படி என்னால அருந்திச்சுன்னா, என் பதிவு தளத்துக்கு மால்வேர் வந்துரும்’னு ஜெர்மனியின் பால் ஆடோபஸ் சொல்லியிருக்காம். அதுனால, இதைப் படிக்கறவங்க எல்லாரும், இதே கேள்விகளை நீங்களே கேட்டுக்கிட்டு பதிலும் போட்டுருங்கய்யா. மவராசனாயிருப்பீய.

நான் பாட்டுக்கு சிவனேன்னு தானே இருந்தேன். ஏதோ ஊருல இருக்க ஹோட்டல் பத்தியெல்லாம் இவுக எழுதறாங்களே’ன்னு இவங்க பதிவ படிச்சா, என்னைப் பத்தி நானே கேள்வி கேட்டுக்கிட்டு பதிலும் நானே எழுதணுமாம். அதான் எழுதிருக்கேன். அவங்களும் அவங்களப் பத்தி எழுதிருக்காங்க. வரட்டா......

8 comments:

(Mis)Chief Editor said...

Reminded of Yaagava Muni and Vivek's comedy piece!

'Oho'nnu varuvel, pongo!

Subbu said...

"நான் என்ன எழுதினாலும் மொதல்ல என் பொஞ்சாதிக்குப் படிச்சுக் காட்டிருவேன். மொத மொதல்ல நான் காதலிச்ச பொண்ணு பத்தி எழுதிட்டு அவ கிட்ட படிச்சுக் காட்டினேன். அம்மணிக்கு அப்போ இருந்த தமிழறிவுல எம்புட்டு புரிஞ்சதுன்னு தெரியலை. என்னவோ, எழுதியிருக்க, பரவால்ல’ன்னுட்டா."

நீங்கா ரொம்ப நல்லவர்-னு பாராட்டினாங்களா? இல்ல ஒழுங்கா translate பண்ணலயா?

Vidhya Chandrasekaran said...

சூப்பர் ஃப்ளோ.

தொடர்ந்தமைக்கு நன்றி.

Ramachandranwrites said...

இன்னும் நிறைய கூட்டம் வரணுமா? தொறந்த வீட்டுல நாய் நொழயற மாதிரி, யார் எதுன்னே தெரியாத ஆள் பதிவுல போயி ஆஹா ஓஹோ’னு எழுத வேண்டியது. முடிஞ்சா அந்தாளு பதிவ ஃபாலோ பண்ணறது. பத்து பேர் கிட்ட இப்படி பண்ணினா, ரண்டாவது தேரும். இப்படித் தான் நாம வாசக வட்டத்த உண்டாக்கறது.


ஓஹோ ! அதுனாலத்தான் இன்னும் திறப்பு விழா நடக்காத என் கடைல தினம் ஒரு விசிட்டா ? சரி சரி மவனே

Karthik said...

ஜூப்பரு. நிஜமாவே. :)

//பிரபலம் ஆவாட்டி, பிறவால பொஞ்சாதி பேரப்போட்டு எழுதலாம்’னு இருக்கேன்.

Lol. :))

M Arunachalam said...

Fantastic write-up. Pl keep on writing.

தனி காட்டு ராஜா said...

எலே....நல்லா எழுதற ....

Vijay said...

நன்றி மிஸ்சீஃப் :)

சுப்பு, வசிஷ்டர் வாயால கூட பிரம்மரிஷி பட்டம் வாங்கிடலாம். ஆனால் அம்மணிகிட்டேர்ந்து பாராட்டு வாங்கறது கஷ்டம் :(

நன்றி வித்யா :)

ஸ்ரீராம் அண்ணா, உங்க பிளாகின் முதல் ஃபாலோயர் என்ற பெருமையை நான் எடுத்துக்கப்படாதா?? :)

நன்றி கார்த்திக்!!

அருணாசலம் சார், ரொம்ப நன்றி. நீங்கள்’லாம் என் வலைப் பதிவு படிப்பது ரொம்ப பெருமையா இருக்கு :)

நன்றி தனி காட்டு ராஜா :)