Pages

December 24, 2006

ந்யான் ஒரு மலையாளப்படம் கண்டு

கல்யாணம் ஆன பிறகு இது மட்டும் நடந்து விடக்கூடாது என்ற பயம் சில காலம் இருந்து வந்தது. கல்யாணம் ஆகி இறண்டு ஆண்டுகள் ஓடியும், அது நடக்காதலால், சற்று நிம்மதி வந்தது. (பொடி வச்சது போதும், விஷயத்துக்கு வாடா). எனது வலைக்கிறுக்கலகளை முதன் முதலாகப் படிப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். எனது எல்லா பதிவிலும், என்னை வாரும் ஒரு கதாபத்திரமும் உண்டு. அது என் மனசாட்சி தான். என்ன அதற்கு எஸ்.ஜே.சூர்யா மாதிரி நீல நிற உடை அணிவிக்கவ்வில்லை. அதனால் அவன் பேசும் வசனங்களை மட்டும் " "க்கு நடுவில் போட்டு விடுகிறேன்.
"என்னைத்தான் இன்ட்ரொ குடுத்தாச்சுல்ல, விஷயத்துச்சொல்லு". இதுவும் என் ம.சா. தான்.

என் மனைவி கேரளாவிலே மலையாளத்திலேயே பரைந்து வளர்ந்தவள். நானோ மலையாளத்தை கிண்டலடித்தே வளர்ந்தவன். மலபார் போலீஸ் கவுண்ட மணி ரகம். கல்யாணத்திற்குப் பிறகு எனது தலையாளம் ஆகிவிடுமோ என்ற உறுத்தல் இருந்து கொண்டெ இருந்தது. இதை விட பெரிய பயம், வீட்டில் சன் டி.வி.க்கும் சூர்யவுக்கும் சண்டை வருமோ என்றும் நினைத்திருக்கிறேன். இதையெல்லாம் விட, நம்மளை ஒக்காத்தி வச்சு மலையாளப் படம் பார்க்க வச்சுடக்கூடாதேன்னு தான் பெரிய பயம்.
நேற்று அந்த கொடுமை நடந்தேறி விட்டது. என்னை வலுக்கட்டாயமாக மலையாளப் படம் பார்த்தே ஆக வேண்டும் என்று கட்டளை. Domestic Violence'க்கு எதிராக சட்டமெல்லாம் கொண்டுவந்துவிட்டார்கள். இதெல்லாம் அதில் அடங்காதா??
என் மனைவி எடுத்து வந்த படத்தின் பெயர் Classmates. "சரிதான் கேரளத்தில் இன்னும் கேளிக்கை வரி விலக்குச் சலுகை இன்னும் அமலுக்கு வரவில்லை போலிருக்கு. எலாத்திலுமே பக்கத்து மாநிலத்தவர் சற்று மந்தம் தான் போலிருக்கு. "டேய் ஏற்கனவே முல்லைபெரியாறு விஷயத்துல அவனவன் மீசையையும் தாடியையும் முறுக்கிக்கிட்டு அலையிறானுவ. நீ வேற எரியுர தீயில பெட்ரோல ஊத்தாதடா".
சரி, படத்துல நடித்திருப்பது, "பாரிஜாதம்" ப்ருதிவி ராஜ், காவ்யா மாதவன் மற்றும் சில அறியாத தெரியாத முகங்கள். யாரிந்த காவ்ய மாதவன் என்று எண்ணுபவர்களுக்கு ஒரு செய்தி. தென்காசிப்பட்டணம் என்ற டப்பா படத்தில் சரத் குமாருக்கு தங்கையாக வருமே ஒரு அட்டு ஃபிகரு. அதே தான். "தமிழில் டப்பா போணியாகாததெல்லாம், மலையாளத்துக்கு போய்விடும்".
மலையாளப்படம் பார்ப்பவர்களுக்கு சற்றே கூடுதலாக பொறுமை வேண்டும். ஏனென்றால் படம் முதல் கியரிலேயே தான் பயணிக்கும். அவ்வப்போது பின்னாடியும் போகும். "அதாங்க ஃப்ளாஷ் பேக்கு".
படத்தில் நாயகனின் பெயர், சுகுமார். அவனை அழைப்பதை வைத்து பார்த்தோமேயானல், அவனது பெயரை ஆங்கிலத்தில் SUGUMAR என்று தான் எழுத வேண்டும். படத்தின் பட்ஜெட், 1 கோடியாவது எட்டியிருக்குமா என்பது சந்தேகம் தான். "நம்மூர் தயாரிப்பாளர்கள் தெரிந்து கொள்ளவேன்டியது". 60 நிமிடங்கள் ஓடி, 2-3 பாடுக்கள் முடிந்தும் படத்தின் கதை என்னவென்று தெரியவில்லை. ஒருவரையொருவர் முறைத்து முறைத்துப் பார்த்துக்கொள்கின்றனர். டேய் ஏதாவது பண்ணுங்களேண்டா என்று கத்த வேண்டும் போலிருந்தது. "சரிடா, என்ன தான் கதை? அதைச் சொல்லவே மாட்ட்டியா". ஏதோ லவ் ஃபெலியர் பற்றிய கதை என்று மட்டும் தெரிந்தது. எல்லோர் மூஞ்சியில் எப்போதும் வழிந்தோடும் ஒரு வ்விதமான சோகம். கதாநாயகன் ஆறு மாதம் வளர்ந்த தாடியுடனேயே இருக்கிறான். எடுத்த எடுப்பிலேயே தற்கொலைக்கு முயற்சிக்கிறான். ஃப்ளாஷ் பேக்கில், சக மாணவியுடன், சகட்டு மேனிக்கு மோதுகிறான். ஒரு சூழ் நிலையில் அவள் அடிபடும் போது அவள் காயங்களுக்கு மருந்தளிக்கிறான். மோதல்ல ஆரம்பித்து காதலில் முடியும் இத்துப்போன பழைய ஃபார்முலா தான். அப்படியே ஒரு டூயட். ஆதற்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. கண்கள் சொரிகி விட்டன. என் மனிவிக்கு என் மேல் ஒரு வழியாக கருணை வந்து விட்டது போலும். படத்தை நிறுத்தி விட்டாள்.

படத்தின் வசனங்கள் முழுவ்வதும் புரியாவிட்டாலும், சில கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்:
- சும்மா சும்மா மாணவர்கள் மறியல் செய்கிறார்கள். கேரளாவில் இது சகஜமாம்.
- மாணவர்கள் சில பேர் வேஷ்டி அணிந்து கல்லூரிக்கு வருகிறார்கள் (இதுவும் சகஜமாம்).
- பின்னணி இசை என்பதே இருக்கவ்வில்லை. இயற்கை சத்தங்கள் தான். மியூசிக் டைரக்டருக்கு சம்பள பாக்கி வைத்திருப்பார்கள் போல.
- கேரளாவிலும் சூபர் ஸ்டார் மவுசு ஓங்கியிருக்கிருக்கு. ஆட்டம் போடுவதற்கு தலைவரின், அண்ணாமலை (வந்தேண்டா பால்காரன்) பாட்டு தான்.
- படத்தில் காட்டப்படும் கல்லூரியில் 100 பேருக்கு மேல் படிக்க மாட்டார்கள் போலிருக்கு.

இன்று காலை விழித்ததும் மாலை வந்து மறுபடியும் படத்தை தொடர்ந்து பார்க்க வேண்டும் என்றாள். வடிவேளு குரலில் "மீண்டுமா" என்று கத்த வேண்டும் போலிருந்தது.

March 26, 2006

விடியலின் மறுபக்கம்

இன்றைக்கு உலகே நம்மைப் பார்த்து பிரமித்து நிற்கிறது. எல்லா சௌகர்யமும் கொண்ட அமெரிக்க மக்களே இந்தியாவை நினைத்தால் கதி கலங்கிப் போய் நிற்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன? இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கையா? இல்லை! மற்ற பிற தேசங்களிலிருந்து நம் நாட்டில் இறக்குமதியாகும் வேலை வாய்ப்புகள் தான் இதற்குக் காரணம். மென் பொருள் மற்றும் மென் பொருளை உபயோகித்து செயல் படும் துறைகளில் வரலாறு காணாத அளவிற்கு இன்று வேலை வெடித்துத் தான் போயிருக்கிறது. உங்களுக்கு C C++, ஜாவா இதில் ஏதாவதொன்றில் இருநூறு வரிகள் எழுதத் தெரிந்து அதை கணினியிலும் செலுத்திவிட்டால் போதும் ஏதாவது ஒரு கம்பெனியில் குறைந்தது பத்தாயிரம் ரூபாய்க்கு வேலை நிச்சயம். நுனி நாக்கால் அங்கிலமும் பேசத் தெரிந்து மின்னஞ்சல் அனுப்பத் தெரிந்தால் போதும். ஏதாவது கால் சென்டரில் ஏழாயிரம் ரூபாய்க்கு வேலை நிச்சயம்.

இந்தியாவின் பொருளாதாரம் வரலாறு காணாத முன்னேற்றம் அடந்துள்ளது. பங்குச்சந்தையின் சென்செக்ஸ் எகிறிக்கொண்டே போகிறது. உலகின் அத்தனை தேசங்களின் பார்வையையும் இன்று நம் பக்கம் திருப்பியிருக்கிறோம். அத்தனை வியாபார ஸ்தாபனக்களும் இந்தியாவில் ஒரு மென்பொருள் உருவாக்கும் கிளை வைத்திருந்தால் அது கௌரவத்தின் சின்னமாக மதிக்கபடுகிறது. ஒவ்வொரு கம்பெனியும் தனது வாடிக்கையாளர் உதவி (customer support) மற்றும் தகவல் மையத்தையும் (Information Center)இந்தியாவிற்கு மாற்றுகின்றன. எங்கு திரும்பினாலும் வேலைக்கு ஆள் தேவை என்ற விளம்பரங்கள். கை நிறைய சம்பளம், எல்லோர் கையிலும் மொபைல் ஃபோன், விலையுயர்ந்த ஆடைகள் என (இந்தத் துறைகளிலுள்ள) இளைஞர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. "ஆஹா இந்தியாவின் வேலை வாய்ப்புத் திண்டாட்டம் ஒழிந்து விட்டது. நமது பிள்ளைகளின் எதிர்காலம் விடிந்து விட்டது" என்று எத்தனையோ பெற்றோர்கள் நிம்மதிப் பெருமுச்சு விடுகின்றனர்.

ஆனால் எத்தனை பேர் இந்த விடியலின் மறுபக்கத்தை அறிவர்? இந்த விடியலின் மறுபக்கம் எவ்வளவு கொடூரமானது என்று எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த விடியலுக்கு இன்றைய இளைஞர்கள் கொடுக்கும் விலை எவ்வளவு தெரியுமா?
பணம் அழிந்தால், ஒன்றும் ஆகிடாது. ஆனால் ஆரோக்கியமும் ஒழுக்கமும் ஒழிந்தால் எல்லாம் போய்விட்டதென்று காந்தி சொன்னார். ஆனால் இன்று பணத்திற்காக உடல் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் கலாசாரத்தையும் மொத்தமாக குழி தோண்டிப் புதைத்து வருகிறோம்.

மென் பொருள் தயாரிக்கும் வேலை பார்ப்பவர்களாவது காலை நேரத்தில் தான் வேலை பார்க்கின்றனர். எப்போதாவது தான் வேலைப் பளு அதிகமாகிறது. இது எல்லா துறையிலுமுள்ளது தான். அதிலும் ஒரு சிறு பகுதியினர் தான் நாள் பகல் பாராமல் வேலை பார்க்கின்றனர். அதுவும் சில வாரங்களுக்குத்தான். அப்புறம் மீண்டும் ஒன்பதிலிருந்து ஆறு மணி வரையிலுள்ள வேலை தான். இதையே தமிழில் உள்ள பிரபல வாரப் பத்திரிகை மென் பொருள் துறையில் எல்லோரும் இரவு பகல் பாராமல் வேலை பார்க்கின்றனர் என்று ஒரு தவறான தகவலைக் கொடுக்கிறது. மென் பொருள் தயாரிப்பில் ஆறு வருடம் வேலை பார்க்கிறேன் என்பதால் எனக்கு இந்த கருத்தைச் சொல்ல உரிமையுண்டு என நினைக்கிறேன்.

ஆனால் மென் பொருளை உபயோகித்து, புற அலுவலக வேலைத் துறைகளில் (Business Process Outsourcing)உள்ளவர்கள் தான் மிகவும் பாவப்பட்டவர்கள். அதிலும் வாடிக்கையாளர்களுக்கு பதில் கூறும் கால் சென்டரில் வேலை பார்ப்பவர்களின் வேலை இன்னும் மோசமானது.

எப்போது நாம் கால் சென்டரைக் கூப்பிடுகிறோம். வாடிக்கையாளர் மையத்தை நாம் எப்போது அணுகுகிறோம். நமக்கு ஏதாவது ஒழுங்காக நடக்கவில்லை என்ற போது தானே. நமது கோபத்தையெல்லாம் நம்மிடம் பேசும் ஒரு வாடிக்கையாளர் உதவி அலுவலரிடம் கொட்டித் தீர்க்கிறோம். அப்படிப் பார்க்கும் போது இந்த அலுவலர் எதிர்கொள்ளும் ஓவ்வொரு வாடிக்கையாளரும் தனது கோபத்தை இவர் மேல் கொட்டுகிறார்கள். ஒரு சிலர் அவதூறான வார்த்தைகளை பிரயோகிக்கின்றனர். இதில் வேடிக்கையென்னவென்றால் இவரால் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது. தகவலைக் கொடுப்பது மட்டுமே இவரது வேலை.

தொலைபேசி நிறுவனம் அதிகமாக கட்டணம் கேட்கின்றதா? கூப்பிடு கால் சென்டரை. பாவம் ஏதோ இளைஞரோ இளைஞியோ நமது கோபத்திற்கு ஆளாகின்றனர். இவர்கள் பணி நேரம் என்னவோ எட்டு மணி நேரம் தான். ஆனாலும் வேலையிலுள்ள வரை வாடிக்கையாளரிடமிருந்து அவதூறு வார்த்தைகள் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா? இதனால் உண்டாவது; மன அழுத்தம். அதைப் போக்கிகொள்ள இவர்கள் புகைப் பழக்கத்தை நாட வேண்டியிருக்கிறது. பெங்களூரிலுள்ள ஒரு பிரபல கால் சென்டர் வாசலில் நிறைய பேர் (பெண்கள் கூட!!!) புகை பிடித்த வண்ணம் இருக்கின்றனர். புகைபிடிக்கும் பழக்கத்தோடு நின்றுவிடாமல், தவறான உறவிலும் சிலர் ஈடுபடுகிறார்கள் என்பது தான் திடுக்கிடும் உண்மை. சில நாட்களுக்கு முன் ஒரு கால் சென்டரிலுள்ள கழிப்பறை அடைப்பை அகற்றும் போது நிறைய ஆணுறைகளை எடுத்திருக்கிறார்கள். எங்கே போகிறது இந்திய கலாசாரம்??

சரி, இவர்களது பணி நேரம் எட்டு மணிநேரம் தான் என்றாலும், எப்போது வேலை பார்க்கிறார்கள். வேலை ஆரம்பிப்பதே மாலை ஐந்து மணி முதல் தான். அப்போது தான் மேலை நாடுகள் இயங்க ஆரம்பிக்கின்றன. இவர்கள் ஒழுங்காக உறங்குவதுமில்லை. ஐந்து மணி முதல் இரவு ஒரு மணி வரை ஒரு பாட்ச். அடுத்த பாட்ச் ஒரு மணி முதல் ஒன்பது மணி வரை. வீடு வரை கார் வந்து அழைத்துப் போகிறது, காரிலேயே வீடு வரை விட்டுப் போகிறார்கள். இருந்தாலும் காலை ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்தால் எப்படி உறங்க முடியும். ஆண்களாவது ஒரு வாரு சரி செய்து கொள்வார்கள். ஆனால் இந்தத் துறையில் முக்கால்வாசி, பெண்கள் தான் வேலை பார்க்கிறார்கள். அவர்களது நிலை இன்னும் மோசம். திருமணத்திற்குப் பெண் தேடும் போது கால் சென்டரில் வேலை பார்க்கும் வேண்டாம் என்றளவிற்கு பெற்றோர்கள் வந்துள்ளனர்.
இவர்களுக்கு தீபாவளி, பொங்கல், குடியரசு தினம், சுதந்திர தினம் எதற்கும் விடுமுறை கிடையாது. இவர்களது வாடிக்கையாளர்கள் எந்த தேசத்தைச் சார்ந்தவர்களோ அவர்களது விடுமுறைகள் தான் இவர்களுக்கு விடுமுறை.

இப்படி உடலையும் வருத்தி கலாசாரத்தையும் மறந்து ஒழுக்கத்தையும் விட்டு சந்தோஷத்தையும் தொலைத்து விட்டு நமது இளைஞர்கள் எங்கே போகின்றனர். இவர்களது நிலமையை மாற்ற கால் சென்டர் நிறுவனங்கள் என்ன வேணாலும் செய்து தொலைக்கட்டும். நம்மால் இவர்களது நிலை மாற என்ன செய்ய முடியும். முடிந்த வரையில் எந்த ஒரு கால் சென்டர் அலுவலரிடமும் கடுமையாக பேசுவதை தவிர்ப்போம். அவதூறு வார்த்தைகளால் அவர்களது மனம் உளைச்சலுக்குள்ளாக்குவதை தடுப்போம். இவர்களும் மனிதர்கள் தான். நம் நாடு அடைந்திருக்கும் பொருளாதார விடியலிற்கு முழு அர்த்தம் கொடுப்போம்.

March 09, 2006

அனுபவம் புதுமை

எத்தனை பேர் இந்த பாடலைக் கேட்டிருப்பீர்கள்? காதலிக்க நேரமில்லை படத்தைப் பார்த்த யாரும் இந்தப் பாடலை ரசிக்காமல் இருந்ததில்லை. சரி சரி, ரொம்பவும் கற்பனைக் குதிரையை அவிழ்த்து விட வேண்டாம். இந்த வாரம் ஒரு புதுமையான அனுபவம் கிட்டியது. அது தான் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களை நேர்காணும் வைபவம். கொஞ்சம் எல்லோருக்கும் புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் campus interview.
எங்கள் கம்பெனி தேர்ந்தெடுத்தது பெங்களூரிலுள்ள கல்லூரியை. நான், எனது மேலாளர் மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறையைச் சார்ந்த அதிகாரி (Human Resource Manager) என்று மூன்று பேர் போயிருந்தோம்.

நிறைய மாணவவர்களைக் காண நேரிட்டது. அதுவும் பெங்களூர் கல்லூரி, கேட்கவா வேணும். ச, காலேஜுன்னா!!!, இப்படி இருக்கணும். நாமளும் படிச்சோமே என்ற ஆதங்கமும் மதில் எழுந்தது. (சில பேருக்குத்தான் இந்த ஆதங்கத்தின் உண்மையான அர்த்தம் புரியும்!!)

எங்களது முந்நேர்காணல் உறையைக் (Preplacement Talk) கேட்க ஒரு பெருங்கூட்டமே கூடிற்று. நானும் எனது கம்பெனி பற்றி ஒரு சில வார்த்தைகள் அவிழ்த்து விட்டேன். (மைக்கை கையில புடிச்சா அரசியல்வாதி மாதிரி பேசிட்டே இருப்பியேடா!!!).

ஒவ்வொரு மாணவனின் கண்களிலும் ஒரு மாதிரியான எதிர்பார்ப்பு, ஏக்கம், ஒளி என பல வகையான அர்த்தங்கள். அவர்களது கண்களே ஆயிரம் கதைகள் சொல்லின. எவ்வளவு பேர் வீம்புக்கு எங்களது நேர்காணலில் பங்கு கொண்டார்களோ, எவ்வளவு பேர் இந்த கம்பெனியாவது நமக்கு ஒரு வேலை போட்டுத்தருவார்களோ என்று எண்ணியவை எத்தனை மனங்கள், ஈசன் தான் அறிவார். ஒரு மாதிரியாக எழுத்து தேர்வு ஆரம்பமானது. அந்த 45 நிமிட இடைவேளையில் என மனக்கடலில் உதித்து மறைந்தன ஆயிராமாயிரம் எண்ண அலைகள்.

இதே போன்று தானே ஒரு காலத்தில் நாநும் எத்தனை கம்பெனி படியேறி விண்ணப்பம் செய்திருப்பேன். எவ்வளவு முறை எழுத்துத் தேர்விலேயே நிராகரிக்கப் பட்டு அவமானம் அடைந்திருப்பேன். ஒவ்வொரு முறை நான் ஏதாவது தேர்வு எழுதும் போது என் அம்மா எத்தனை சாமிக்கு எவ்வளவு வேண்டியிருப்பாள். எனது தேர்வு முடிவை எதிர்பார்த்து ஆவலாய் இருந்திருப்பாள். ஒவ்வொரு முறை தோல்வி அடைந்த போதும் எவ்வளவு மனக்கஷ்டத்தையெல்லாம் காட்டிக்கொள்ளாமல் எனக்கு ஆறுதல் சொல்லியிருப்பாள். எனது மகனும் ஒரு நாள் கை நிறைய என்று சம்பாத்திக்க மாட்டானா என்று எவ்வளவு ஏங்கியிருப்பாள். "அம்மா!!! நான் செலக்ட் ஆகிட்டேன்" என்று சொன்னபோது எவ்வளவு மகிழ்ந்திருப்பாள். அந்த மாகிழ்ச்சியை என் தாயோடு பகிர்ந்துகொள்ள எனக்கு 15 நாள் ஆயிற்று.

இன்று இந்த மாணவர்களில் எத்தனை பேர் என்னைப் போன்று இருக்கிறார்களோ? எவ்வளவு அம்மாக்கள் தனது மகன்(ள்) இந்த கம்பெனியில் வேலை கிடைக்க வேண்டும் என்று எத்தனை சாமிகளுக்கு நேர்ந்து கொண்டார்களோ? எவ்வளவு பேர் நிராசை அடைந்தார்களோ?
நானறியாத அம்மாக்களே, உங்கள் மகனுக்கு என்னால் இந்த கம்பெனியில் வேலை கொடுக்க முடியவில்லை. ஆனால் உங்கள் மகனுக்கு வேறொரு நல்ல கம்பெனியில் கண்டிப்பாக வேலை கிடைக்கும், என்னை மன்னித்துவிடுங்கள், என்று மானசீகமாக மன்னிப்பு கோரிவிட்டு வெறும் மூன்று பேரை மற்றும் தேர்வு செய்தேன்.

March 07, 2006

விவஸ்தை கெட்ட அரசியல்

தமிழ் நாட்டில் இப்போது எங்கு பார்த்தாலும், தேர்தல் பற்றித் தான் பேச்சு. யார் யாருடன் கூட்டணி, யார் யாருக்கு எத்தனை சீட்டு, யார் யாருக்கு போட்டியிட இடம் கிடைக்கும் கிடைக்காது, இதை பற்றித்தான் எந்த நாளிதழ், மாத இதழ், வார இதழை புரட்டினாலும் வெளிப்படும் முதல் செய்தி. அதிலும் சென்ற வாரம் எந்த செய்தி முதல் இடத்தைப் பிடித்தது என்று ஒரு டாப் டென் நிகழ்ச்சி நடத்தினால், அது கண்டிப்பாக மதிமுக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது பற்றித்தான்.
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை எதிரியும் இல்லை என்று ஒரு புதுமொழியுண்டு. ஆனால் விவஸ்தை, தன்மானம் இது எதுவுமே இல்லையா?? அப்புறம் என்ன இக்கட்சியின் தலைவரை தன் மானச்சிங்கம் என்று வர்ணிப்பது. போயும் போயும் 12 சீட்டு அதிகமா கிடைக்கிறது என்பதற்க்காகவா கூட்டணியை மாற்றுவது? சட்ட மன்றத்தில் வெறும் 36 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு என்ன சாதித்து விட முடியும்??

இதே ஜெயலலிதாவை காதால் கேட்க முடியாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார்கள் இந்த மதிமுக கட்சியினர். இப்போது அதையெல்லாம் மறந்துவிட்டு எப்படி இவர்களால் நட்பு பாராட்ட முடியும்?

சரி இதே வைகோவை திட்டித்தீர்த்தவர் தானே ஜெயலலிதா, இவரை ஒண்ணரை ஆண்டுகள் சிறையில் அடைத்து மகிழ்ந்தாரே. இப்போது வோட்டு வேண்டும் என்பதற்காக இவரை அழைத்துக் கொள்வாரா?

பதவிக்காக கொள்கையையும் காசுக்காக சகோதரியைக் கூட்டி கொடுக்கும் நயவஞ்சகற்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. கூட்டிக் கொடுப்பவர்களுக்காவது தான் செய்வது தவறு என்பது தெரியும். அதை நியாயப் படுத்த மாட்டார்கள். ஆனால் இந்த மானங்கெட்ட அரசியல் வாதிகள் விவஸ்தை கெட்ட நடத்தையை என்னவென்று சொல்வது??

இப்படி ஒரு ஜனனாயகம் தேவை தானா??

November 02, 2005

கடவுளின் சொந்த ஊர்

"என்னப்பா, ஆவணி அவிட்டம் விநாயகர் சதுர்த்தி நவராத்திரின்னு ஒரே திருவிழா ஸ்பெஷலாவே இருக்கே, அடுத்து என்ன தீபாவளி பற்றி எழுதப் போறியா"ன்னு நண்பர் ஒருவர் எந்த வேளையில் கேட்டுத் தொலைத்தாரோ, இப்போது நான் எழுதிக்கொண்டிருப்பது தீபாவளி பற்றிய வலைப்பதிவு தான். இந்த வருஷம் நமக்கு தலை தீபாவளி வேறு. அதனால் இந்த வருடம் தீபாவளியை நான் கழித்தது என் மனைவியின் சொந்த ஊரான ஆலப்புழையில். கேரளாவில் தீபாவளி அவ்வளவு விமர்சையாகக் கொண்டாடுவது இல்லை. வெடிச் சத்தமே கேட்கவில்லை. மருந்துக்கூட ஒரு வெடிக்கடை கூட இல்லை. ஆஷியாநெட்டில் ஒரு ஸ்பெஷல் நிகழ்ச்சி கூட கிடையாது. :(
இப்படி இருக்க இந்த தீபாவளியை எப்படி விமர்சையாகக் கொண்டாடுவது என்று ஆலோசிக்கலானேன். சரி எல்லோரையும் கூட்டிக்கொண்டு எங்காவது சென்று வரலாம் என்று முடிவு செய்தேன்.
பெண் பார்க்கச் சென்ற தினத்தன்றே இந்த ஊரை கிழக்குலகின் வெனிஸ் என்று சொன்னார்கள். (உண்மை வெனிஸை இவர்கள் பார்த்திருக்கிறார்களா என்று தெரியாது) ஊருக்குள்ளே ஏகப்பட்ட கால்வாய்க்கள் இருக்கிறதென்றும், மக்கள் படகுகளை போக்குவரத்து சாதனமாக பயன் படுத்துவார்கள் என்றும் கேள்விபட்டேன்.இதற்கு முன் ஆலப்புழை சென்ற போதெல்லாம் எங்குமே செல்லாமல் திரும்பி வந்து விட நேரிட்டது.

இதற்கு முன் ஆலப்புழை சென்ற போதெல்லாம் எங்குமே செல்லாமல் திரும்பி வந்து விட நேரிட்டது. ஒரிரண்டு கோவிலகளுக்கு மட்டும் சென்று விட்டு, வேறெங்கும் என்னை அழைத்துச் செல்ல வில்லை என் மனைவியானப் பட்டவள். அவளுக்கு இந்த கால்வாய்களையும் படகுகளையும் பார்த்துப் பார்த்துப் புளித்துப் போய்விட்டதாம். (எனக்கு இருட்டுக் கடை அல்வா பழகி விட்டதைப் போல்)
ஆனால் இம்முறை பிடிவாதமாக படகுச் சவாரி செய்தே ஆக வேண்டும் என்று தீர்மானம் செய்து விட்டேன். என மனைவியின் கஸின்களை அழைத்துக் கொண்டு படகுச் சவாரிக்கு ஆயத்தமானோம்.
நல்ல வேளை அன்று வானிலையும் ஒத்துழைத்தது. முந்தைய தினம் மழை. தீபாவளி அன்று மழை ஏதும் பெய்யாமல் ஆதவன் மேகங்கள் படை சூழ வானிலே வட்டமிட்டான். அதனால் அவனது தாக்கமும் அதிகமில்லமல் we had a perfect day and weather for boating.

படகுத் துறையிலிருந்து படகு மெல்ல மெல்ல கால்வாயை கிழித்துக் கொண்டு புறப்பட்டது. (என்னவோ டைடானிக் நகருது மாதிரி சொல்லொதியேன்னு கேக்குறீயேளா??) இரு புறமும் அடர்த்தியாக தென்னை மரங்கள். அந்தக் காட்சியே மிக ரம்மியமாக இருந்தது.
போகும் வழியில் ஏகப்பட்ட படகுகள். இல்லை இல்லை இவற்றை படகு வீடுகள் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு படகுக்குள்ளும் ஒரு நட்சத்திர ஹோட்டல் போன்ற வசதிகள் இருக்கின்றன. உள்ளேயே ஒரு ஹோட்டல் அறை போன்ற வசதியை செய்திருக்கிறார்கள். இதற்குள்ளேயே சில திங்கள் தங்கலாம். குடும்பத்தோடு விடுமுறையைக் கழிக்க ஒரு நல்ல வழி.

கால்வாயைத் தாண்டி படகு காயலுக்குள் சென்றது. அதுவரையில் முப்பதடி அகலம் கொண்ட கால்வாய், திடீரென ஒரு கடல் போல் காட்சியளித்தது. அக்கறையைக் காணவே இல்லை. எல்லாம் ஒரே நீல நிறம். சிறுசிறு படகுகள் ஆங்காங்கே காட்சியளித்தன. ஆஹா அந்த காட்சியை வர்ணிக்க வைரமுத்துவைத் தான் அழைத்து வர வேண்டும். நிறைய புகைப்படங்களை கிளிக்கித் தள்ளினேன். (டிஜிடல் கேமராவில் அதுவொரு வசதி. வேண்டாததை அழித்து விடலாம்).

இந்த ரம்மியமயமான காட்சியைப் பார்க்து விட்டுத் தான்,

கேரள நாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்
என்று பாரதி பாடினார் போல.

சரி அவர் அடந்த மகிழ்ச்சி நாமும் ஏன் அடையக்கூடாது என்று, நாங்கள் அந்தாக்ஷரி எல்லாம் விளையாடினோம். இரண்டு மணி நேரம் கழிந்ததே தெரிய வில்லை. திபாவளியன்று ஒரு வெடி கூட பற்ற வைக்காவிட்டாலும் இப்படி ஒரு படகுச் சவாரி செய்தது மிகவும் இனிமையாய் இருந்தது.
இப்போது புரிகிறது கேரளத்தை கடவுளின் சொந்த ஊர் என்று ஏன் சொல்கிறார்கள். இவ்வளவு எழில் மிகு ஊரில் கடவுள் கண்டிப்பாக வாசம் செய்கிறார்.

நண்பன் ஒருவன், திருமணத்திற்குப் பின் தனது தேன் நிலவை ஆலப்புழையில் கழிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளன். இந்த வலைப் பதிவை படித்துவிட்டு, அடுத்த வாரமே தேன் நிலவுக்குச் சென்றால் கூட ஆச்சர்யமில்லை. :)

October 06, 2005

நவராத்திரி

நவராத்திரி என்றாலே, எங்கள் வீட்டில் கொலு வைக்கும் வைபவம் தான் ஞாபகம் வரும். பள்ளிக்கூடக் காலத்தில், இந்த ஒன்பது நாட்களும் பள்ளி காலாண்டு விடுமுறை விட்டு விடுவார்கள். மாஹாளய அம்மாவாசையின் முந்தைய தினம் பரீட்சை எல்லாம் முடிந்து விடும்.
வருடந்தோறும், விட்டில் கொலு வைப்போம். நான் தான் உத்தரத்தின் மீதேறி(ஏறுவது குதிப்பது எல்லாம் தான் நமக்கு கை வந்த கலையாச்சே), ஒவ்வொரு கொலு பொம்மையாக எடுத்துக் கொடுப்பேன். எங்கள் வீட்டில் பொம்மைகளெல்லாம் தனித்தனியாக இல்லாமல் எல்லாமே, செடு செட்டாக இருக்கும். வெங்கடாசலபதி அலமேலுமங்கை செட், வரலக்ஷ்மி விரதம் செட், தசாவதாரம், கருட சேவை, சிவன் நந்தி, ராமர் பட்டாபிஷேகம், கிருஷ்ண லீலைகள் (னந்தவனத்தில் கிருஷ்ணர் கோபிகா ஸ்த்ரீகளுடன் குஜால் செய்தவை) செட்டியார் கடை இப்படியாக நிறைய செட்டு பொம்மைகள். ஆற்றங்கரையிலிருந்து கரம்பை வெட்டி வந்து காடு மலையெல்லாம் செய்வோம். அப்பா சீரியல் லைட்டு போடுவார். எல்லா விளக்கும் ஒரு வழியாக சரஸ்வதி பூஜையன்று தான் எரியும். துர்கை லக்ஷ்மி சரஸ்வதியென தலா ஒவ்வொருவருக்கும் மூன்று நாட்களென காலையில் அஷ்டோத்திரம் சொல்லி பூஜை செய்வேன்.
இதையெல்லாம் விட ஸ்வாரஸ்யமாக இருப்பது ஒவ்வொரு நாளும் என் தங்கைக்கு ஏதாவது ஒரு வேஷத்தை போட்டுவிட்டு எல்லா வீடுகளுக்கும் சென்று அழைத்து வருவாள். ஒரு முறை "நானும் வேஷம் போட்டுக் கொள்வேன்" என்று அடம் பிடித்ததால் , குடுகுடுப்பாண்டி வேஷம் போட்டுவிட்டாள். (நம்ம மூஞ்சிக்கு அது தான் எடுப்பா இருந்தது)
எப்போடா சரஸ்வதி பூஜை வரும் என்று காத்திருப்போம். நாளிதழ் கூட படிக்க மாட்டேன். மாதத்திற்கொருமுறை சரஸ்வதி பூஜை வரக்கூடாதா என்று ஏங்கியதுண்டு. மறுநாள் விஜயதசமி ஏண்டா வருகிறதென்று இருக்கும். பள்ளி திறந்து விடுவார்கள். அதை விடக் கொடுமை, விடைத்தாளெல்லாம் ஒரே நாளில் விநியோகம் செய்து விடுவார்கள். நம்ம வண்டவாளமெல்லாம் அன்று தண்டவாளம் ஏறிவிடும். ஒவ்வொரு விஜயதசமியும் கவலை தசமியாகத் தான் இருக்கும். ஏதாவது விடைத்தாளை மறைத்தால் கூட என் உடன் பிறப்பு வந்து போட்டுக் கொடுத்துவிடுவாள்.
கல்லூரி வந்த பிற்பாடு தான் விஜயதசமி கவலையில்லாமல் கழிந்தத்து.

இம்முறை மனைவியும் அம்மாவும் சேர்ந்து கொலு வைத்திருக்கிறார்கள். ஆனால் நான் அந்த வைபவத்தைக் கண்டுகளிக்க என் மேலாளருக்கு மனம் ஒப்ப வில்லை போலும். என்னை ஒரு வாரத்த்ற்கு இத்தாலி அனுப்பி விட்டார். இது போதாதென்று இவ்வாரத்தில் இரண்டு நாள் விடுமுறையும் போயிற்று. இத்தாலி பயணம் பற்றி அடுத்த வாரம். (ஆமாம், பெரிய மெகா சீரியல் எடுக்கே. அடுத்த வாரம்னு பெரிய சஸ்பென்ஸ் உண்டாக்குதியாக்கும். வெளக்கெண்ணெய்)

September 16, 2005

கன்னி சமையல் அனுபவம்

"நாம அலைஞ்சு திரிஞ்சு ஒழைச்சு சம்பாதிக்கறது எதுக்கு?இந்த ஒரு ஜாண் வயித்த நிறப்பத் தானே" என்று பாய்ஸ் படத்தில் செந்தில் ஒரு டயலாக் பேசுவார். நிறைய பேர் இதை கவனித்திருக்க முடியாது. ஆனால் எவ்வளவு பெரிய தத்துவம். இவ்வளவு அசால்ட்டா சொல்லிட்டாரே. சரி சமையல் பற்றி தலைப்பை கொடுத்துவிட்டு என்னென்னமோ எழுதிக்கொண்டிருக்கிறேன்.

வயிற்றை நிறப்புவதற்கு சாப்பாடு அவசியம். அதை நன்றாகச் சமைத்தல் இன்னும் அவசியம். அப்பாடா, ஒரு வழியா கொடுத்த தலைப்புக்கு ஒரு மாதிரி சம்பந்தம் இருக்கற மாதிரி வந்துடுத்து ;-) சிறு வயதில் அம்மா என்ன சமைத்தாலும் அது பிடிக்காது இது பிடிக்காது என்று அநியாயத்துக்கு அடம் பிடிப்பேன். (ஒக்காத்தி வச்சு அம்மா அதுக்கப்புறம் வாயில திணித்ததெல்லாம் தனி கதை). "என் சமையலை பிடிக்கலைன்னு சொல்லற பாத்தியா! ஒரு நாள் நாக்கு வெண்டிப் போய் (நாக்கு செத்து போய்) என் கால்ல வந்து விழறியா இல்லையான்னு பாரு" என்று சொல்லுவாள்.
வேலை நிமித்தமாக கொல்கொத்தா செல்லும் வரை சாப்பாட்டிற்கு என்றுமே கஷ்டப்பட்டதுகிடையாது. அங்கு சென்ற பின் நிஜமாகவே சாப்பட்டுக்கு லாட்டரி அடித்துள்ளேன். அது வரை சமையலில் அ ஆ கூட தெரியாது. (ஆனா ஆவன்னான்னு படிக்கணௌம்;-)) வென்னீர் போடத் தெரியும். அவ்வளவு தான். அங்கு எல்லா ஹோட்டலும் அசைவம் தான். வேறு வழியில்லாமல் ஒரு சமையல் காரனை அமைத்திருந்தோம். ஒரு நாள் அவன் சொந்த ஊருக்கு போய் விட்டான். சரி இங்குள்ள ஹோட்டலில் சாப்பிட்டால் வேலைக்காகாது என்று தோன்றியதால் நானும் என் நண்பனும் இன்று நாமே சமைப்போம் என்ற முடிவிற்கு வந்தோம். அதுவரை அடுப்பாங்கரை பக்கம் எட்டிக்கூட பர்த்ததில்லை. சரி என்ன தான் இருக்கு பார்ப்போம் என்று முதலில் நோட்டமிட்டோ ம். உருளைக்கிழங்கும் வெங்கயமும், மற்ற சில பொடிகளும் இருந்தன. stove cooker எல்லாமே கூட இருந்தது. அரிசி மட்டும் இல்லை. நண்பன் அரைக்கிலோ அரிசி வாங்கி வந்தான். அதுவும் விலையுயர்ந்த basmati அரிசி. இதற்கு முன்னால் சமைத்த அனுபவம் என்ன, சமையல் செய்வதை பார்த்த அனுபவம் கூட கிடையாது. அரிசியை எப்படி களைய வேண்டும், எவ்வள்வு தண்ணீர் வேண்டும், ஒன்றுமே தெரியவில்லை. சரி நமக்கு ஒன்றும் தெரியாது என்று காட்டிக்கொள்ளக்கூடாது என்று என் மனசாட்சி கண்டிப்பான கட்டளையிட்டதால் கம்மென்று இருந்துவிட்டேன்.

நண்பன் முதலில் அரிசியை கழுவினான். அம்மா அரிசியை களைவதை பார்த்திருக்கிறேன். இவன் என்னவோ வித்தியாசமாக கழுவுவதை பார்த்து, "டேய் அரிசியை களைய மாட்டாயா. அப்படியே போடுறியே" என்றேன். அவன் தனது பாலக்காட்டுத் தமிழில் (இதை கொஞ்சம் மூக்கால் படித்துப் பார்க்க வேண்டும்) "டாய்! இப்படியாக்கும் என் அம்மா பண்ணுவாள். கேட்டியா" என்றான். அவன் கழுவிய அரிசி குறைவாக இருந்தது போல் தோன்றிற்று. "டேய் நீ போட்டிருக்கற அரிசி எனக்கே காணாது போலிருக்கே, நாம ரெண்டு பேரும் சாப்பிடணும்டா. இவ்வளவு போதுமா" என்று என் போறாத வேளைக்குக் கேட்டுத்தொலைத்தேன். "அப்படிங்கறியோ!!இன்னும் எவ்வளவு போடணுங்கறாய்" என்றான். "நீ வாங்கிண்டு வந்திருக்கறதே கொஞ்சமாத் தான் இருக்கு. அம்புட்டயும் போட்டுடேன்" என்றேன். பாஸ்மதி அரிசியின் எடை மற்ற அரிசிகளை விட எடை கூடுதலாக இருக்கும் என்று தெரியாது. அரைக்கிலோ அரிசியையும் போட்டு விட்டு அடுத்த கேள்வி எழுந்தது. எவ்வளவு தண்ணீர் வைக்க வேண்டும்? அப்போது தான் நான் ஒரு சூப்பர் டூப்பர் ஐடியா கொடுத்தேன். "டேய், அந்த குக்கர் மனுவலில், எவ்வளவு அரிசி வைத்தால் எவ்வளவு தண்ணீர் விட வேண்டும் என்று போட்டிருப்பான்" என்றேன். ஒரு வழியாக மனுவலை தேடியெடுத்துப் பார்த்தால், தண்ணீர் அளவு பற்றி ஒன்றுமே போடவில்லை. "இதே அமெரிக்காவில் நடந்திருந்தால், அந்த குக்கர் கம்பெனி மீது வழக்கு தொடர்ந்திருக்கலாம். நம் போராத வேளை, இந்தியாவில் இருக்கிறோம், என்று நொந்து கொண்டு, தோராயமா அரிசி முங்குகிற அளவுக்கு தண்ணீர் விட்டோம்.
குக்கரையும் அடுப்பிலேற்றி வைத்து அதன் மீது வெயிட் எல்லாம் போட்டாயிற்று. மணல் கயிறு விசு மாதிரி அதன் மேல் விபூதியோ குங்குமமோ இடாதது தான் குறை.
நண்பன் உருளைக்கிழங்கு கறி பண்ணுகிறேன் பேர்வழியென்று உருளைக்கிழங்கை நறுக்க ஆரம்பித்துவிட்டான். வெறும் சாதத்தையும் உருளைக்கிழங்கையும் எப்படி சாப்பிட. என்ன பண்ணுவது. கடலுக்குள் இறங்குவதென்று முடிவான பிறகு பின் வாங்க முடியுமா?
அடடா முதலில் உருளைக்கிழங்கை வெந்து வச்சுக்கணுங்கறது தெரியாமப் போயிடுத்தே என்று பிறகு தான் தெரிந்தது. சரி என்ன பண்ண, சாதம் ஆகும் வரை பொறுத்திருக்கலாம் என்றிருந்தோம். பத்து நிமிடங்களாகியும், விஸில் வராததால் எனக்கு லேஸாக சந்தேகம் வந்தது. இருந்தாலும் அடுப்பு பக்கம் போக பயம். விஸில் சத்தம் கேட்காமல் குக்கரைத் திறக்கக் கூடாது என்பது எங்கேயோ படித்த ஞாபகம் வேறு. நண்பன் குக்கர் மனுவலை தோண்ட ஆரம்பித்தான். "என்னடா தேடற" என்றதற்கு, "எவ்வளவு விஸில் வந்த பிறகு அடுப்பை அணைக்க ஏதாவது போட்டுருக்கா என்று பார்க்கிறேன் என்றேன். இந்த விபரமும் இல்லை. இரண்டு அபராதங்களுக்காக குக்கர் கம்பெனி மீது கேஸ் போட்டிருக்கலாம். சே. என்ன மனுவல் இது. அரை மணி நேரம் கழித்தும் விஸில் வராததால், அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் கழித்து திறந்தால், அரிசி இருக்கும் இடமே தெரியாமல் போய் எல்லாம் ஒரு பெரிய மாவுக் குழம்பாகி இருகிப் போயிருந்தது. அதுவும் குக்கரின் விளிம்பு வரை. ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டோ ம். இப்படியாகிவிட்டதே என்று சிரிக்கவா, பசி வயிற்றைக் கிள்ளுகிறதே என்பதை நினைத்து அழவா என்று தெரியாமல் முழித்தோம். அப்படியும் நான் விடவில்லை. ஒரு spoon எடுத்து அந்த மாவையும் தின்ன ஆரம்பித்தேன். நமக்குத்தான் வெறும் சாதம் பிடிக்குமே. அதுவும் பாஸ்மதி அரிசின்னா சும்மாவா? ஆனா எவ்வளவு தான் சாப்பிட. இரண்டு வாய்க்குப்பிறகு ஒன்றும் உள்ளே போகவில்லை. வேறு வழியில்லாமல் எல்லாத்தையும் ஒரு plastic பையில் போட்டு குப்பையில் போட்டு விட்டு, ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் சாயாவும் குடித்துவிட்டு படுத்துக் கொண்டோம்.
இந்த சம்பவம் நடந்த பிறகும், சமையல் செய்யும் ஆர்வம் மட்டும் எனக்கு இன்னும் குறையவேயில்லை. என் சமையல் ருசியாக அமைவதும் இல்லை ;-((
எனது சமையல் அனுபவங்கள் (சமையல் என்ற பெயரில் நான் செய்த / செய்து கொண்டிருக்கும் சர்க்கஸ் கோமாளித்தனங்கள்) பற்றி எழுதவேண்டும் என்றால், ஒரு மெகா சீரியலே எடுக்கலாம். இருந்தாலும் என்னுடைய maiden சமையல் அனுபவத்தை நினைத்தால் இன்றும் விழுந்து விழுந்து சிரிப்பேன்.

September 08, 2005

விமர்சையான விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி திருநாள் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது என் அப்பா ஊரான கல்லிடைக்குறிச்சியில் நடக்கும் பத்து நாள் திருநாள் தான். எங்கள் தெருவில் இருப்பதென்னவோ சிறியதொரு விநாயகர் கோயில் தான். டுண்டி விநாயகர் என்று பெயர். தெருவின் பெயரே தொந்தி விநாயகர் தெரு தான். ஆனாலும் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பத்து நாளும் தெருவே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். பத்தாவது திருநாளாக விநாயகர் சதுர்த்தியன்று திருவிழா நிறைவு பெறும்.
ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒருத்தர் கட்டளைதாரராக இருப்பார். தினமும் காலையில் கணபதி ஹோமம் நடக்கும். பிறகு ஜபங்கள் தொடரும். நானும் சில நாள் ஜபத்திற்குச் செல்வதுண்டு. ஜபம் செய்தவற்களுக்கு தட்சிணை தருவார்கள். (நான் தட்சிணை ஏதும் வாங்கக்கூடாது என்று அம்மா கட்டளையிடுவாள்) பிறகு சுவாமிக்கு அபிஷேகமும் தீபாரதனையும் நடக்கும். நான் சிறுவனாக இருந்த காலத்தில் சேண்டியை எடுத்துக்கொண்டு தெரு முழுவதும் சென்று அபிஷேகம் நடக்கப்போகிறது, எல்லோரும் வாருங்கள் என்று தண்டோரா போடுவோம். சில சமயம் நானும் தண்டோரா கோஷ்டியோடு சென்றதுண்டு. இப்போதெல்லாம் மைக்கிலேயே அறிவிக்கிறார்கள்.
பிறகு சர்க்கரைப் பொங்கலும் பஞ்சாமிர்தமும் பிரசாதமாகத் தருவார்கள். பிரசாதம் விநியோகம் போது ஒரு பெரிய அடிபுடி சண்டையே நடக்கும். யாரு நிறைய தடவை பிரசாதம் வாங்குகிறார்கள் என்று சிறுவர்கள் இடையே ஒரு போட்டியே நடக்கும். நான் சக்கரைப்பொங்கல் மட்டும் வாங்கிக் கொள்வேன். பஞ்சாமிர்தம் பிடிக்காது. எல்லோருமாக வாய்க்காங்கறைக்குச் சென்று அங்கு மதில் படியில் உட்கார்ந்து சாப்பிடுவோம்.

மாலையில் சுவாமி புறப்பாடு இருக்கும். மேள தாளங்கள் முழங்க குழந்தைகள் ஆலவட்டம் பிடிக்க, சுவாமி தெருவை ஒரு சுற்று சுற்றி வருவார். நான் சிறு பிள்ளையாக இருந்த போது நான் தான் தீவட்டி பிடிப்பேன் என்று அடம் பிடிப்பேன். நான் தீவட்டி ஏந்திச் செல்வதை என் தாத்தா பார்த்தால் (என்னைத்தவிர) எல்லோருக்கும் திட்டு விழும் என்பதால், எனக்கு தீவட்டி கொடுக்க மாட்டார்கள். தீவட்டி கிடைக்கவில்லையே என்று பலமுறை ஏங்கியிருக்கிறேன். என் நண்பர்களுடன் கொடிச் சண்டை போடுவோம். இரவு தீபாரதனைக்குப் பிறகு பெண்களும் சிறுமிகளும் கோவிலை கழுவிவிட்டு மறுநாள் விசேஷத்திற்குக் கோலம் போடுவார்கள். பருவ வயதை அடைந்த பின் சில பெண்களை கலாய்த்த அனுபவமும் உண்டு. ஒரு படை இளநீர் வெட்ட கிளம்பும். எனக்கு மரம் ஏறத்தெரியாதலால், கீழேயே நிற்பேன். வெட்டும் இளநீரில் சரிபாதி பங்கு எங்களுக்கு. மற்றவை தான் பிள்ளையாருக்கு.

ஒன்பது நாள் திருநாள் முடிந்து பத்தாவது திருநாளாக சதுர்த்தித்திருநாள் நடைபெறும்.
சதுர்த்திக்கு முந்தைய நாள் இரவு தெருவில் எந்த பையனும் தூங்க மாட்டான். எல்லோரும் தோரணம் கட்டுவோம். வீதி வீதியாக சென்று சுவரொட்டிகள் ஒட்டுவோம். அதிலும் "விளம்பரம் செய்யாதீர்" என்று எங்கு ஒட்டியிருக்கிறதோ அங்கு தான் ஒட்டுவோம். சில வீடுகளில் சுக்குமல்லிக் காப்பி, தேனீர், உப்புமா, புளியோதரை தயிர் சாதமெல்லாம் தருவார்கள். இது போததென்று ஏதாவது தின் பண்டமும் தருவார்கள். இந்த கொண்டாட்டங்களுக்காகவே சதுர்த்திக்கு முந்தைய நாள் அங்கு கழிக்க வேண்டும். ஓவ்வொருவர் வீட்டிலும் போட்டிருக்கும் கோலங்களைக் காண கணகள் இரு கோடி வேண்டும்.
காலையில் கணபதி ஹோமம் ருத்ர ஏகாதசி பிறகு தாரா ஹோமம், அப்புறம் சுவாமிக்கு அபிஷேகமும் தீபாரதனையும் நடைபுபெறும்.

மாலையில் தெருவே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். வீதி முழுவதும் மின் விளக்கு பொருத்தியிருப்பார்கள். பதினெட்டுதெருவிலுமுள்ள மக்கள் பிள்ளையார் கோவிலுக்கு வருவார்கள். அவர்களை பார்ப்பதற்காகவே நாங்களெல்லாம் திண்ணையில் உட்கார்ந்து வம்படிப்போம். என்ன Brigade Road என்ன Forum. அன்று வரும் ஃபிகருங்களுக்கு ஈடு இணையுண்டா. கோவில் கும்பத்திற்கு அபிஷேகமும் பூஜை நடக்கும். சஹஸ்ரநாம ஜபத்திற்க்குப்பின் ஒரு நீண்ட பிரேக். இரவு பத்து மணியளவில் சுவாமி புறப்பாடு. இம்முறை எல்லா தெருவையும் சுற்றி வருவார். வெகு ஜோராக அலங்காரம் இருக்கும். இந்த சப்பரம் தள்ளுவதே ஒரு பெரிய வைபவம். எல்லா தெருவையும் சுற்றி வந்து சுவாமி இறங்குவதற்கு எப்படியும் இரண்டு மணியாகிவிடும். சுவாமி வந்திறங்கியபின், நாதஸ்வரக்காரர் ஒரு சூப்பர் பாட்டு இசைப்பார். (கணேசன் இசைக்கும் 'நாத முடி மேலிருக்கும் நாகப்பாம்பே'யை கேட்டால் நமக்கே படமெடுத்து ஆடத் தோன்றும்). சுவாமியை உள்ளே வைத்து விட்டு எல்லோருக்கும் பிரசாதம் குடுப்பார்கள். அதிலும் ஸ்பெஷல் புளியோதரை மற்றும் பானகம். சுவாமி கூட வந்தவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும். அதை வாய்க்கால் படியில் போட்டு சாப்பிட்டு விட்டு உறங்கி மறு நாள் எழுந்தோமானால், ஊருக்குத் திரும்ப மனதே இருக்காது. பத்து நாளும் ஜே ஜே யென்று இருந்து விட்டு தெருவே அழுத முகமாக இருக்கும். ஒவ்வொரு வருடமும் கனத்த இதயத்தோடு திரும்பி ஊருக்கு வருவேன்.
பத்து நாளும் சதுர்த்தி திருநாளை கல்லிடையில் கழிக்க வேண்டும் என்ற நெடு நாள் ஆசை என்று நிறைவேறப்போகிறதோ தெரியவில்லை.

August 25, 2005

கால வெள்ளோட்டம் கொண்டு சென்றவை

போன வெள்ளிக்கிழமை ஆவணி அவிட்டம். வயசு பசங்க கல்லூரிக்குக் கல்தா கொடுக்கும் நாள். பொண்ணுங்கள்லாம் ராக்கிய எடுத்துண்டு வந்துட்டாங்கன்னா. அதுக்காக எஸ்கேப் ;-))
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் ஆவணி அவிட்டத்திற்கு என் அப்பாவின் சொந்த ஊரான கல்லிடைக்குறிச்சிக்குப் போவது வழக்கம். என் தாத்தா வீடு அங்கிருந்ததால் ஒவ்வொரு விசேஷத்திற்கும் அங்கு சென்று விடுவோம். அதற்கு முன் கல்லிடைக்குறிச்சி பற்றி ஒரு சிறு விளக்கம். மேற்குத் தொடற்சி மலையின் அடியில், அம்பாசமுத்திரத்திற்கருகில் தாமிரபரணி கொஞ்சி விளையாடியோடும் ஒரு பெரிய கிராமம். ஒரு காலத்தில் பெரும்பாலும் அந்தணர்களே வசித்து வந்தனர். பதினெட்டு அக்கிரஹாரங்கள். இங்கு தான் சாமி மற்றும் Gentleman படங்களின் பல காட்சிகள் எடுக்கப்பட்டன. அண்ணாமலை சீரியலும் தான். எங்கள்
வீட்டிற்கு முன்பாக ஒரு பெரிய வாய்க்கல் போகும். அதில் தான் நீச்சல் கற்றுக் கொண்டேன். இப்படியாக, எழில் மிகுந்த ஊரில் ஆவணி அவிட்டம் படு ஜோராக நடக்கும்.
பிராமணனாகப் பொறந்தவன் தினமும் மூன்று வேளையும் சந்தியா வந்தனம் செய்ய வேண்டும் என்பது
ஐதீகம். ஆனால் இன்று 99 விழுக்காடு மக்கள் அதைச் செய்வதில்லை. (என்னையும் சேர்த்துத்தான்). பூணூல் போடும் போதே, "நித்ய கர்ம அனுஷ்டான யோக்யதா சித்யர்த்தம்" என்று சொல்லித் தான் போடுகிறார்கள். இன்று நாமெல்லாம் நித்ய கர்மங்களையும் செய்வதில்லை, யோக்கியமாகவும் இருக்கிறோமா என்றும் தெரியவில்லை. அதனால் ஆவணி அவிட்டம் ஒரு நாளாவது எல்லாம் செய்வோமே என்று தவறாது எல்லோரும் பட்டு வேஷ்டி கட்டிக் கொண்டு கையில் பஞ்ச பாத்திரம் எடுத்துக்கொண்டு எங்கள் தெருவில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு வந்து விடுவர்.
முதலில் காமோகாரிஷீது மந்திரத்தில் ஆரம்பிக்கும். வாத்தியார் 1008 சொல்லச் சொல்லுவார். ஆனால் அலுவலகம் செல்லுவோர், 108 போதுமே மாமா என்று சொல்லி விட்டு அதையும் சொல்லாமல் நழுவி விடுவர். சில பிரம்மச்சாரி பிள்ளைகள் சமிதாதானம் செய்வார்கள். தினமும் செய்ய வேண்டிய எல்லாம், அன்று ஒரு நாள் மட்டும் கிரமமாக நடக்கும். அதன் பிறகு ஒரு மணி நேரத்திற்கு break. வாத்தியார் மற்ற தெருக்களுக்கெல்லாம் போய் விடுவார். பிறகு 11 மணியளவில் திரும்பி வருவார். வந்த பிறகு பிரம்ம யக்ஞம். "என்னப்பா எல்லோரும் மாத்தியாந்நிகம் பண்ணியாச்சா" என்பார். முக்கால் வாசி பேர் பண்ணியிருக்க மாட்டார்கள். ஆனால் எல்லோரும் "ஓ பண்ணியாச்சே" என்று தலையாட்டிவிடுவார்கள். என் அப்பாவிற்கு நான் தான் மாத்தியாந்நிகம் கற்றுத் தருவேன். "பிள்ளை சொல்லித் தந்து மந்திரம் சொல்லறேளே; வெக்கமா இல்லையா" என்று அம்மா கிண்டல் செய்வாள். அப்பா இதற்கெல்லாம் அசரும் ஆசாமி இல்லை. "நீண பாட்டுக்கு மந்திரத்தை சொல்லிண்டே போ. நான் சொல்லற வரைக்கும் வெயிட் பண்ணாதே" என்று instruction கொடுத்து விடுவார்.
பிறகு மஹா சங்கல்பம் நடக்கும். இது ஒரு அரை மணிண நேரம். எங்கள் வீட்டு கொட்டடியில் (அக்கிரஹாரங்களில் உள்ள வீடுகளின் முதல் அறையை இப்படித் தான் அழைப்பார்கள்) தான் இது நடக்கும்.
பிறகு வாய்க்காலில் சென்று ஸ்னானம் செய்து மீண்டும் பட்டாடை உடுத்தி பூணூல் மாற்ற வேண்டும். 10 நிமிடத்தில் எல்லாரும் வந்துடணும் என்று வாத்தியார் கட்டளையிடுவார். நாங்க வயசுப் பசங்க அப்போத் தான், தண்ணீரில் தொட்டுப்பிடிச்சு விளையாடுவோம்.
குளித்து முடித்து காண்டரிஷித் தர்ப்பணம் முடிந்து கோவிலில் கூடுவோம். கோவிலில் இன்னும் பல மந்திரங்கள் சொல்லி, சுவாமிக்கு தீபாரதனை நிவைத்தியம் எல்லாம் முடிந்து வீட்டிற்கு வரும் போது 2.30 ஆகிடும். வீட்டிற்கு வந்து பெரியவா காலிலெல்லாம் விழுந்து ரூபாய் வாங்குவோம். தெருவில் நண்பர்கள் வீட்டிற்கெல்லாம் சென்று அவர்கள் அம்மா அப்பா காலிலெல்லாம் விழுந்து ஒரு 10-15 ரூபாய் சேர்த்து விடுவேன். என் தங்கைக்கு காதிலிருந்து புகையா வரும். நமக்கும் இந்த மாதிரி ஆவணி அவிட்டம் இல்லையே என்று. அப்புறம் தான் சாப்பாடு.

ஆவணி அவிட்டத்திற்கும் கோமணத்திற்கும் என்ன சம்பந்தமோ தெரியாது. எங்கள் ஊரில் ஆவணி அவிட்ட தினத்தன்று ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று கோமணத்துணி வாங்குவோம். அதுவும் எப்படி, ஒரு பாடுப்பாடி.
ஆவணி அவிட்டம் கோமணம்
அம்பி பொறந்தா சோபனம்
அங்கிச்சி பொறந்தா கல்யாணம்
அக்கா பொறந்தா சீமந்தம்
தம்பி பொறந்தா பூணல்.

இந்த பாட்டை இப்போ நினைத்துப்பார்த்தால் சிரிப்பு தான் வருது. அக்கா எப்படி இனிமேல் பிறக்க முடியும். ஆனாலும் பாட்டில் ஒரு வீச்சு இருக்க வேண்டும் என்பதற்காக வைத்தார்களோ தெரியாது. இப்படி பாடினால் தான் சில மாமாக்கள் கோமணத் துணி தருவார்கள். இந்தத் துணி எங்கள் தெருவிலிருக்கும் பிள்ளையார் கோவில் சதுர்த்தி விசேஷத்தின் போது தீவட்டி கொளுத்துவதற்காக. பிள்ளையாருக்கு ஏன் தான் இப்படி அழுக்கு துணியில் தீவட்டி கொளுத்துகிறார்களோ???? இப்படி ஒரு சிறு விசேஷம் கூட மிக விமர்சையாக நடக்கும்.

மறு நாள் காயத்திரி ஜபம். பிரம்மச்சாரி பிள்ளைகள் ஹோமம் வளர்த்து 1008 சமித்துகளை காயத்திரி மந்திரம் ஜபித்து ஒவ்வொன்றாக நெய்யில் முக்கி போட வேண்டும். இப்படிச் செய்தால் விசேஷம். நான் ஒழுங்காக செய்கிறேனா என்று பார்ப்பதற்கு என் தாத்தாவும் பக்கத்தில் உட்கார்ந்து கொள்வார். இதில் ஒரு பெரிய கூத்தே நடக்கும். யாருக்கு 1008 சமித்துகளை ஒவ்வொன்றாக போடுவதற்கு பொறுமை. அவர் அந்தப் பக்கம் எங்காவது நகரும் போது ஒரு பெரிய கட்டை, அப்படியே நெய்யில் முக்கி போட்டு விடுவேன். (எனக்கு காயத்திரி என்று பெயர் கொண்டவளே மனைவியாக வந்தது இதன் பலன் தானோ என்னவோ. இந்த வருடம் காயத்திரி காயத்திரி என்று ஜபித்தாயா என்று அம்மா கிண்டல் செய்தாள்)

இப்போது திரவியம் தேடி பெங்களூர் வந்த பிறகு 1 மணி நேரத்திற்குள் ஆவணி அவிட்டம் முடிந்து விடுகிறது. வீட்டிலேயே மந்திரம் சொல்லி பூணூல் மாற்றிக்கொள்கிறேன். அப்படியே கோவில்லுக்குச் சென்றாலும் 1 மணி நேரத்தில் மந்திரம் சொல்லி வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள். சென்னையிலிருந்து ஆவணி அவிட்ட மந்திர புத்தகத்தை அனுப்புமாறு என் தங்கையிடம் சொல்லியிருந்தேன். ஆனால் வந்ததோ இரண்டே பக்கத்தில் அடக்கமாக இருந்த சில மந்திரங்கள். பிரம்ம யக்ஞத்தை விழுங்கி விட்டார்கள். மஹா சங்கல்பத்தில் பாதி மந்திரத்தைக் காணோம். சமிதாதானம் பற்றி ஒன்றுமே போட வில்லை. வருடத்திற்கொரு நாள் அனுஷ்டானங்களை முழுதாக செய்யலாம் என்றால், நகரத்தில் இருக்கும் வாத்தியார்களே பாதி மந்திரத்தை விழுங்கி விடுகிறார்கள். "ஆதித்யம் தர்ப்பயாமி" என்று உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒருவன் அர்க்க்யம் விடுவதால் தான் காலையில் ஆதவன் உதயாமாகிறான், மாலையில் மங்குகிறான் என்று வேதங்கள் கூறுகின்றன. அனுஷ்டானங்களையும் பழக்கங்களையும் நாளுக்கு நாள் மறந்து வருவதால் கலியவதாரம் சீக்கிரத்திலேயே நடந்துவிடும் போலிருக்கிறதே.

August 22, 2005

நூலுக்குள் நுழைந்தேன் - 2

எனது முந்தைய பதிப்பான "நூலுக்குள் நுழைந்தேன்" பதிப்பைப் படிக்க வில்லையென்றால், அதை முதலில் படித்து விட்டு பிறகு இதைப் படிக்கவும்.

ஒரு புத்தகத்தைப் பெருவாரியான மக்களைப் படிக்க வைப்பதென்பது சாமன்னியப்பட்ட விஷயமல்ல. (அது ஒரு சாதாரண விஷயமாக இருப்பின் நான் எவ்வளவோ பெரிய கதாசிரியனாகியிருப்பேன் ;-))) )
ஆனால் ஒரு புத்தகத்தில் தன்னையே ஐக்கியப் படுத்திக் கொள்ளச் செய்தலென்பது அதை விடவும் மிக கடுமையானது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அப்படி ஒரு மாபெரும் சாதனையைத்தான் அமரர் கல்கி தனது சில கதைகள் மூலம் செய்துள்ளார். அதிலும் பொன்னியின் செல்வன் புத்தகம் எவரையும் கதையினுள் இழுத்துக் கொள்ளும் வல்லமை பெற்றது. ஒவ்வொரு கதா பாத்திரமும் நம் முன் பேசுவது போல் தோன்றும்.
இதைப் படித்த எவருமே தன்னையும் அதில் ஒரு கதாபத்திரத்தோடு இணைத்துப் பார்க்காமல் இருந்ததில்லை. "நான்லாம் அப்படி இல்லப்பா" என்று யாராவது சொன்னால் அவர்கள், ஒரு மிக அற்புதமான வினோதமான அனுபவத்தை இழந்துவிட்டார்கள் என்று தான் சொல்லக் கூடும்.
என்னை மிகவும் கவர்ந்த கதாபத்திரம், குந்தவை. நான் வந்தியத்தேவனாக மாறியதால், அவன் காதல் வயப்பட்டவள் மேல் எனக்கும் காதல் ஏற்பட்டது. அந்த கதை நடந்த இடத்துக்கெல்லாம் செல்ல வேண்டும் போன்றிருந்தது. கதையில் வரும் கதாபத்திரங்களோடு நாமும் பேச மாட்டோமா என்ற ஆவல் ஏற்பட்டது.
ஒரு முறை கும்பகோணம் செல்லும் வழியில் தஞ்சாவூரைக் கடக்க நேரிட்டது. அப்போது காவேரியாற்றங்கரையைக் கடிக்கையிலே, எனது குந்தவையும் இவ்விடத்தில் நீராடியிருப்பாளோ. இந்த நீராழி மண்டபத்துக்கு வந்திருப்பாளோ என்றெல்லாம் என்னை எண்ண வைத்தது. குந்தவையைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப் படுபவர்கள் "காதல் கொண்டேன்" பதிப்பினைப் படிக்கவும்.


கும்பகோணம் சென்ற பிறகு பேருந்துவில் பயணம் செய்கையிலே அங்கு பழையாறை என்ற ஊர் இருக்கிறதா என்று வினவினேன். (பழையாறையை சுந்தரபாண்டியன் 1600ல் இடித்து தரைமண்ணாக்கிவிட்டான் என்று பிற்பாடு தெரிய வந்தது) இப்படி ஒவ்வொரு இடத்தையும் பார்க்கையிலே பொன்னியின் செல்வன் கதையில் இந்த இடங்களில்லாம் என்ன நடந்திருக்கும் என்று எண்ண வைத்தது.

புத்தகம் படித்து முடித்த பிறகு என்னுள் நடந்திருக்கிறதென்றால், புத்தகம் படிக்கும் போது எவ்வளவு பித்து பிடித்தவன் போல் இருந்திருப்பேன். (நீ இப்பவும் அப்படித் தான் இருக்கேடா!!!)
புத்தகத்தின் கடைசி பாகத்தை ஒரே இரவில் படித்து முடித்தேன். அதுவும் இப்புதகத்தை படிக்கணினியில் (லப் டாப்) வைத்து pdf முறையில் படித்தேன்.

படித்த பிற்பாடு யாருடானாவது இதைப் பற்றி பேச முடியாதா? இதில் வரும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பை யாருடனாவது பகிர்ந்துகொள்ள முடியாதா என்றெல்லாம் ஏங்கியதுண்டு. அப்போது தான் வலைதளத்தில் பொன்னியின் செல்வனுக்கென்றே ஒரு யாஹூ குழுமம் இருப்பது தெரியவந்தது. இக்குழுவில் தற்போது 500 மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் என்னைப் போல் பொன்னியின் செல்வனைப் படித்து பித்து பிடித்தவர்கள்.

உங்களுக்கும் இப்புதகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறதா? எனக்கு ஒரு மினஞ்சல் அனுப்புங்கள். நான் எல்லா பாகங்களையும் pdf முறையில் அனுப்பித்தருகிறேன். நீங்களும் அந்நூலுக்குள் நுழையுங்கள்.