Pages

August 25, 2005

கால வெள்ளோட்டம் கொண்டு சென்றவை

போன வெள்ளிக்கிழமை ஆவணி அவிட்டம். வயசு பசங்க கல்லூரிக்குக் கல்தா கொடுக்கும் நாள். பொண்ணுங்கள்லாம் ராக்கிய எடுத்துண்டு வந்துட்டாங்கன்னா. அதுக்காக எஸ்கேப் ;-))
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் ஆவணி அவிட்டத்திற்கு என் அப்பாவின் சொந்த ஊரான கல்லிடைக்குறிச்சிக்குப் போவது வழக்கம். என் தாத்தா வீடு அங்கிருந்ததால் ஒவ்வொரு விசேஷத்திற்கும் அங்கு சென்று விடுவோம். அதற்கு முன் கல்லிடைக்குறிச்சி பற்றி ஒரு சிறு விளக்கம். மேற்குத் தொடற்சி மலையின் அடியில், அம்பாசமுத்திரத்திற்கருகில் தாமிரபரணி கொஞ்சி விளையாடியோடும் ஒரு பெரிய கிராமம். ஒரு காலத்தில் பெரும்பாலும் அந்தணர்களே வசித்து வந்தனர். பதினெட்டு அக்கிரஹாரங்கள். இங்கு தான் சாமி மற்றும் Gentleman படங்களின் பல காட்சிகள் எடுக்கப்பட்டன. அண்ணாமலை சீரியலும் தான். எங்கள்
வீட்டிற்கு முன்பாக ஒரு பெரிய வாய்க்கல் போகும். அதில் தான் நீச்சல் கற்றுக் கொண்டேன். இப்படியாக, எழில் மிகுந்த ஊரில் ஆவணி அவிட்டம் படு ஜோராக நடக்கும்.
பிராமணனாகப் பொறந்தவன் தினமும் மூன்று வேளையும் சந்தியா வந்தனம் செய்ய வேண்டும் என்பது
ஐதீகம். ஆனால் இன்று 99 விழுக்காடு மக்கள் அதைச் செய்வதில்லை. (என்னையும் சேர்த்துத்தான்). பூணூல் போடும் போதே, "நித்ய கர்ம அனுஷ்டான யோக்யதா சித்யர்த்தம்" என்று சொல்லித் தான் போடுகிறார்கள். இன்று நாமெல்லாம் நித்ய கர்மங்களையும் செய்வதில்லை, யோக்கியமாகவும் இருக்கிறோமா என்றும் தெரியவில்லை. அதனால் ஆவணி அவிட்டம் ஒரு நாளாவது எல்லாம் செய்வோமே என்று தவறாது எல்லோரும் பட்டு வேஷ்டி கட்டிக் கொண்டு கையில் பஞ்ச பாத்திரம் எடுத்துக்கொண்டு எங்கள் தெருவில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு வந்து விடுவர்.
முதலில் காமோகாரிஷீது மந்திரத்தில் ஆரம்பிக்கும். வாத்தியார் 1008 சொல்லச் சொல்லுவார். ஆனால் அலுவலகம் செல்லுவோர், 108 போதுமே மாமா என்று சொல்லி விட்டு அதையும் சொல்லாமல் நழுவி விடுவர். சில பிரம்மச்சாரி பிள்ளைகள் சமிதாதானம் செய்வார்கள். தினமும் செய்ய வேண்டிய எல்லாம், அன்று ஒரு நாள் மட்டும் கிரமமாக நடக்கும். அதன் பிறகு ஒரு மணி நேரத்திற்கு break. வாத்தியார் மற்ற தெருக்களுக்கெல்லாம் போய் விடுவார். பிறகு 11 மணியளவில் திரும்பி வருவார். வந்த பிறகு பிரம்ம யக்ஞம். "என்னப்பா எல்லோரும் மாத்தியாந்நிகம் பண்ணியாச்சா" என்பார். முக்கால் வாசி பேர் பண்ணியிருக்க மாட்டார்கள். ஆனால் எல்லோரும் "ஓ பண்ணியாச்சே" என்று தலையாட்டிவிடுவார்கள். என் அப்பாவிற்கு நான் தான் மாத்தியாந்நிகம் கற்றுத் தருவேன். "பிள்ளை சொல்லித் தந்து மந்திரம் சொல்லறேளே; வெக்கமா இல்லையா" என்று அம்மா கிண்டல் செய்வாள். அப்பா இதற்கெல்லாம் அசரும் ஆசாமி இல்லை. "நீண பாட்டுக்கு மந்திரத்தை சொல்லிண்டே போ. நான் சொல்லற வரைக்கும் வெயிட் பண்ணாதே" என்று instruction கொடுத்து விடுவார்.
பிறகு மஹா சங்கல்பம் நடக்கும். இது ஒரு அரை மணிண நேரம். எங்கள் வீட்டு கொட்டடியில் (அக்கிரஹாரங்களில் உள்ள வீடுகளின் முதல் அறையை இப்படித் தான் அழைப்பார்கள்) தான் இது நடக்கும்.
பிறகு வாய்க்காலில் சென்று ஸ்னானம் செய்து மீண்டும் பட்டாடை உடுத்தி பூணூல் மாற்ற வேண்டும். 10 நிமிடத்தில் எல்லாரும் வந்துடணும் என்று வாத்தியார் கட்டளையிடுவார். நாங்க வயசுப் பசங்க அப்போத் தான், தண்ணீரில் தொட்டுப்பிடிச்சு விளையாடுவோம்.
குளித்து முடித்து காண்டரிஷித் தர்ப்பணம் முடிந்து கோவிலில் கூடுவோம். கோவிலில் இன்னும் பல மந்திரங்கள் சொல்லி, சுவாமிக்கு தீபாரதனை நிவைத்தியம் எல்லாம் முடிந்து வீட்டிற்கு வரும் போது 2.30 ஆகிடும். வீட்டிற்கு வந்து பெரியவா காலிலெல்லாம் விழுந்து ரூபாய் வாங்குவோம். தெருவில் நண்பர்கள் வீட்டிற்கெல்லாம் சென்று அவர்கள் அம்மா அப்பா காலிலெல்லாம் விழுந்து ஒரு 10-15 ரூபாய் சேர்த்து விடுவேன். என் தங்கைக்கு காதிலிருந்து புகையா வரும். நமக்கும் இந்த மாதிரி ஆவணி அவிட்டம் இல்லையே என்று. அப்புறம் தான் சாப்பாடு.

ஆவணி அவிட்டத்திற்கும் கோமணத்திற்கும் என்ன சம்பந்தமோ தெரியாது. எங்கள் ஊரில் ஆவணி அவிட்ட தினத்தன்று ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று கோமணத்துணி வாங்குவோம். அதுவும் எப்படி, ஒரு பாடுப்பாடி.
ஆவணி அவிட்டம் கோமணம்
அம்பி பொறந்தா சோபனம்
அங்கிச்சி பொறந்தா கல்யாணம்
அக்கா பொறந்தா சீமந்தம்
தம்பி பொறந்தா பூணல்.

இந்த பாட்டை இப்போ நினைத்துப்பார்த்தால் சிரிப்பு தான் வருது. அக்கா எப்படி இனிமேல் பிறக்க முடியும். ஆனாலும் பாட்டில் ஒரு வீச்சு இருக்க வேண்டும் என்பதற்காக வைத்தார்களோ தெரியாது. இப்படி பாடினால் தான் சில மாமாக்கள் கோமணத் துணி தருவார்கள். இந்தத் துணி எங்கள் தெருவிலிருக்கும் பிள்ளையார் கோவில் சதுர்த்தி விசேஷத்தின் போது தீவட்டி கொளுத்துவதற்காக. பிள்ளையாருக்கு ஏன் தான் இப்படி அழுக்கு துணியில் தீவட்டி கொளுத்துகிறார்களோ???? இப்படி ஒரு சிறு விசேஷம் கூட மிக விமர்சையாக நடக்கும்.

மறு நாள் காயத்திரி ஜபம். பிரம்மச்சாரி பிள்ளைகள் ஹோமம் வளர்த்து 1008 சமித்துகளை காயத்திரி மந்திரம் ஜபித்து ஒவ்வொன்றாக நெய்யில் முக்கி போட வேண்டும். இப்படிச் செய்தால் விசேஷம். நான் ஒழுங்காக செய்கிறேனா என்று பார்ப்பதற்கு என் தாத்தாவும் பக்கத்தில் உட்கார்ந்து கொள்வார். இதில் ஒரு பெரிய கூத்தே நடக்கும். யாருக்கு 1008 சமித்துகளை ஒவ்வொன்றாக போடுவதற்கு பொறுமை. அவர் அந்தப் பக்கம் எங்காவது நகரும் போது ஒரு பெரிய கட்டை, அப்படியே நெய்யில் முக்கி போட்டு விடுவேன். (எனக்கு காயத்திரி என்று பெயர் கொண்டவளே மனைவியாக வந்தது இதன் பலன் தானோ என்னவோ. இந்த வருடம் காயத்திரி காயத்திரி என்று ஜபித்தாயா என்று அம்மா கிண்டல் செய்தாள்)

இப்போது திரவியம் தேடி பெங்களூர் வந்த பிறகு 1 மணி நேரத்திற்குள் ஆவணி அவிட்டம் முடிந்து விடுகிறது. வீட்டிலேயே மந்திரம் சொல்லி பூணூல் மாற்றிக்கொள்கிறேன். அப்படியே கோவில்லுக்குச் சென்றாலும் 1 மணி நேரத்தில் மந்திரம் சொல்லி வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள். சென்னையிலிருந்து ஆவணி அவிட்ட மந்திர புத்தகத்தை அனுப்புமாறு என் தங்கையிடம் சொல்லியிருந்தேன். ஆனால் வந்ததோ இரண்டே பக்கத்தில் அடக்கமாக இருந்த சில மந்திரங்கள். பிரம்ம யக்ஞத்தை விழுங்கி விட்டார்கள். மஹா சங்கல்பத்தில் பாதி மந்திரத்தைக் காணோம். சமிதாதானம் பற்றி ஒன்றுமே போட வில்லை. வருடத்திற்கொரு நாள் அனுஷ்டானங்களை முழுதாக செய்யலாம் என்றால், நகரத்தில் இருக்கும் வாத்தியார்களே பாதி மந்திரத்தை விழுங்கி விடுகிறார்கள். "ஆதித்யம் தர்ப்பயாமி" என்று உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒருவன் அர்க்க்யம் விடுவதால் தான் காலையில் ஆதவன் உதயாமாகிறான், மாலையில் மங்குகிறான் என்று வேதங்கள் கூறுகின்றன. அனுஷ்டானங்களையும் பழக்கங்களையும் நாளுக்கு நாள் மறந்து வருவதால் கலியவதாரம் சீக்கிரத்திலேயே நடந்துவிடும் போலிருக்கிறதே.

1 comment:

Anonymous said...

நமஸ்காரம்,
சூப்பர் பதிவு இது.ஆனால் இது நம்மைப்போன்ற அனுபவத்தில் உணர்ந்தவர்களாலேயே ரசிக்கமுடியும்.ரொம்ப லேட்டா படிச்சாலும்.சூப்பர் அப்பு