Pages

March 26, 2009

பயணப்பட்டோம்

இரவு பகலென்று பாராமல், என்ன கிழமை என்றும் நினைக்காமல் கருமமே கண்ணாக இருந்து ஒரு வழியாக எடுத்துக் கொண்ட வேலையை முடித்தாயிற்று. இரண்டு மூன்று வாரங்களுக்கு நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளக் கூட நேரம் இல்லை. இரவு வீட்டுக்கு எல்லோரும் உறங்கிய பின்பு வந்து, விழித்திருக்கும் காயத்ரி தூக்கக் கலக்கத்துடன் சாப்பாடு போடும் போது, நாளை சீக்கிரம் போக வேண்டும் என்று சொல்லும் போது, “ஆஃபீஸிலேயே இருக்க வேண்டியது தானே, எதற்காக வீட்டுக்கு வரவேண்டும்” என்று சலித்துக் கொள்ளும் அளவிற்கு வேலை. பதிவெழுதவும் நேரமில்லை, நண்பர்களின் பதிவுகளை ஒழுங்காகப் படிக்கமுடியவில்லை. இருந்தாலும் ஏதோ பேருக்கு பின்னூட்டமிட்டுக் கொண்டிருக்கும் அளவிற்கு அவ்வளவு வேலை. உகாதியை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு எங்காவது போய் வரலாம் என்றிருந்த பிளானெல்லாம் வீணாய்ப் போய்விடுமோ என்றெண்ணும் அளவிற்கு வேலை அதிகம். ஒரு வழியாக போன வாரம் ஒரு வழியாக எவனோ எழுதிய மென்பொருள் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. அப்பாடா, ஒரு வழியாக இவ்வளவு நாள் கண் விழித்தது வீண் போகவில்லை என்று எல்லோருக்கும் மன நிம்மதி. அதை விட எனக்கு இன்னும் நிம்மதி. பின்ன காயத்ரியிடம் இந்த மூன்று நாட்களில் கோவா போகலாம் என்று சொன்னதைச் செய்யாவிட்டால், விட்டிலேயே ஒரு சுனாமி ஏற்பட்டு விடும். அப்படியேதும் நடக்காமலிருந்ததே, அதுதான் மென் பொருள் வேலை செய்ததை விட பெரிய நிம்மதி. “ரொம்ப வேலை செய்து விட்டாய், ஒரு நாள் லீவு எடுத்துக்கோ” என்று மேனேஜர் சொன்னது இன்னும் நல்லதாய்ப் போயிற்று.

ஒரு மாதமாக கோவா போகப் போகிறோம் என்று கனாக் கண்டு கொண்டிருந்த நாளும் வந்தது. வெள்ளிக் கிழமை அதிகாலை 6.15 மணிக்கு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் விமானம். பழைய விமான நிலையமாக இருந்தால் 5 மணிக்குக் கிளம்பினால் கூட 5.20க்குப் போய் விடலாம். தேவனஹள்ளி விமான நிலையம் வரை போக வேண்டும் என்பதால் வீட்டிலிருந்து 3.50’க்கெல்லாம் கிளம்பியாயிற்று. ஏர்-டெக்கனிடமிருந்து வாங்கிய Turbo Propeller பொறுத்திய விமானத்தைத் தான் கோவா வழித்தடத்தில் ஓட்டுகிறார்கள். “கல்யாணமாகி முதன் முதலில் விமானத்தில் போகிறோம், இப்படி டப்பா விமானத்திலா போவது” என்று காயத்ரி அங்கலாய்க்கவில்லை, மனதிற்குள் திட்டியிருப்பாள். என்ன செய்வது, 1.30 மணிநேரப் பயணத்திற்கு A-380’ஆ விடுவார்கள்?? சொன்ன நேரத்துக்கு வண்டியைக் கிளப்பி 7.30’க்கெல்லாம் கோவா போய் சேர்ந்தாயியுற்று.

கோவா என்றதுமே, நண்பர்களெல்லோரும், மனைவியுடனா கோவா செல்வது என்று கேலி செய்தார்கள். அவர்கள் சொன்னது, விமானம் ஏறியவுடனேயே பலித்து விட்டது. விமானத்தில் பயணிக்கும் பாதிப் பேர் பாதி உடை தான் அணிந்திருந்தார்கள். அதிலும் விமானப் பணிப் பெண் வேறு அநியாயத்துக்கு கையை உரசிக் கொண்டு அங்குமிங்கும் நடக்கிறாள். காயத்ரி முகத்தில் கொஞ்சம் கடுகைப் போட்டு தாளித்து விடலாம், அப்படி சிவந்திருந்தது.

கோவாவில் நாங்கள் போய்ச் சேர வேண்டிய இடம், கோல்வா பீச். விமான நிலையத்திலிருந்து 40 நிமிட பயணத்திலிருக்கிறடு. சாலைகளெல்லாம் வெகு ஜோர். நல்ல பராமரிப்பு. தெற்கு கோவாவில் அவ்வளவாக மக்கள் கூட்டம் இருக்காது என்று நண்பன் சொன்னதால், இந்த கடற்கரையைத் தேர்ந்தெடுத்தேன். இணையதளத்தில் ரொம்பவும் தேடி ஒரு ஹோட்டலில் அறையும் முன் பதிவு செய்தாயிற்று. போய் இறங்கிய தான் தெரிந்தது, இணையதளத்தில் காட்டிய படங்களை எவ்வளவு மாற்றியிருக்கிறார்களென்று. இணைய தளத்தில் காட்டப்பட்ட அறைக்கும் நிஜத்திலும் நிறைய வித்தியாசம். புலம்பி என்ன செய்ய? ஒரு நாள் இங்கே இருப்போம் என்று தேற்றிக் கொண்டு, பக்கத்திலிருக்கும் கொஞ்சம் விலை கூடுதலான ஹோட்டலில் மறு நாளைக்கு மாறினோம்.

கோல்வா பீச்சின் அழகே அங்கிருக்கும் வெள்ளை நிறத்திலுள்ள மணல் தான். வேறெங்கும் இந்த நிறத்தில் மணலைப் பார்த்ததில்லை. 19 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்டிருக்கும் நீஈஈஈஈஈளமான கடற்கரை. கூட்டம் அவ்வளவாக இல்லை. Bare Minimum உடையில் அயல்நாட்டவர் மட்டுமில்லை, இந்திய நங்கைகளும் பார்க்க முடிந்தது. காயத்ரி கூட இருந்ததனால், மனதில் தான் படப் பிடிக்க முடிந்தது.

மற்ற கடற்கரைகளில் காணப்படும் கூட்டத்தில் பத்தில் ஒரு பங்கு தான் இங்கு இருக்கிறது. அங்கேயே parasailing என்ற படகோடு கட்டை விடப்பட்ட பராசூட் பயணம், Jet Skiing என்ற தண்ணீரில் பயணிக்கும் வேகமான ஸ்கூட்டர், வாழைப் பழம் போலுள்ள தோணியில் பயணிக்கும் Banana Ride வேகமாகக் கடலில் போகும் ஸ்பீட் போட் ஆகியவை இருக்கிறது. கடற்கரைக்குள்ளே போகும் போதே நம்மை வந்து அது பண்ணணுமா இது பண்ணனுமா என்று மொய்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்கள் சொன்ன விலைக்கும், கால் பங்கிலிருந்து பேரம் பேசலாம். கொஞ்சம் அசந்தாலும் நன்றாக மசாலா அறைத்து விடுவார்கள். நான் பராசெய்லிங்க், ஸ்கூட்டர் ரைட், மற்றும் ஸ்பீட் போட் மட்டும் போதும், எவ்வளவு ஆகும் என்று கேட்டதற்கு, முதலில் 3000 ரூபாய் ஆகும் என்றான். 500 தான் கொடுப்பேன், முடிந்தால் வா, இல்லையென்றால் வேண்டாம் என்று சொன்ன பிறகு பேரம் பேசிப் பேசி, 900 ரூபாயில் வந்து நின்றான். எல்லாமே, பத்து நிமிடம் தான். ஆனால் அந்த பத்து நிமிடத்தில் ஏற்பதும் அந்த த்ரில், விவரிக்க வார்த்தைகளில்லை. நான் மட்டும் தான் பராசெய்லிங்க் போனேன். காயத்ரிக்கு உயரத்தைக் கண்டால் பயம். அதுவும் கடல் மீது பறப்பதற்கு இன்னும் பயம். 100 அடி உயரத்திலிருந்து கோவா கடற்கரையையும் கீழே நீல நிறக் கடலையும் பார்க்கும் அனுபவம் வாழ்க்கையில் மறக்க முடியாதது. நல்ல வெயில் அடித்தாலும், கடற்கரையில் காற்று அடித்ததால் அவ்வளவாகத் தெரியவில்லை. மாலையில் கொஞ்சம் கூட்டம் கூடியிருந்தது. ஒரு மணி நேரம் கடலில் குளித்தேன். அலைகள், திருச்செந்தூரில் இருப்பது போல் அவ்வளவு வீரியம் இல்லை. காலை நக்கி விட்டுத்தான் செல்கின்றன. காயத்ரி கால் மட்டும் நனைத்துக் கொண்டாள்.

மறு நாள் வடக்கு கோவாவிலுள்ள பீச்களுக்குப் போகலாம் என்று முடிவெடுத்தோம். வடக்கே பணாஜி (கோவாவின் தலைநகரம்) தாண்டி 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, கோவாவின் பிரசித்தி பெற்ற கலாங்குடே பீச். இங்கு தான் தன்ஹா தன்ஹா பாட்டு படமாக்கப் பட்டது என்று நினைக்கிறேன். பிரசித்தி பெற்றதால் கூட்டமும் நிறைய. எனக்கென்னவோ, இதை விட கோல்வா மிகவும் பிடித்திருந்தது. இரு சக்கர வாகனங்கள் வாடகைக்குக் கிடைக்கிறது. ஒரு நாளுக்கு 250 ரூபாய் வாடகை. பெட்ரோல் செலவு நமது. ஒரு ஹோண்டா ஆக்டிவா எடுத்துக் கொண்டு அஞ்சுனா, மிராமர் வெகேடர் பீச்சுகளுக்குப் போனோம்.

மிராமர் பீச் பணாஜி ஊருக்குள்ளேயே இருக்கிறது. இங்கு கடலில் எங்கும் நீந்தவோ, கால் நனைக்கவோ முடியாது. எடுத்தவுடனேயே ஆழம் தான். கரைக்கு வெகு அருகில் கப்பலைப் பார்க்கலாம். அஞ்சுனா பீச் வெறும் பாறை. அடுத்து வெகேடர் பீச்சுக்குப் போனொம். இயற்கை எழில் கொஞ்சும் அழகான பீச். சுற்றிலும் மலை. மலைக்கு மேலே சபோரா கோட்டை. இங்கு தான் தில் சாஹ்தா ஹை படத்தில் ஒரு காட்சி இங்கு தான் எடுத்தார்கள். கோட்டைக்கு ஏறிச் செல்வதற்கு தனி வழி. அங்கிருந்து பார்த்தால் கீழேயுள்ள கடற்கரை. மறு புறத்தில் தென்னை மரங்கள் அடர்ந்த நிலப்பரப்பு. இன்னொரு புறம் கடல். ஆஹா, அங்கேயே நாள் முழுக்க உட்கார்ந்திருக்கலாம். அப்படியொரு அழகு இடம். அந்த இடத்தில் ஒரு அரை மணி நேரத்தில் இருந்தோம். கோட்டை வரை மேலேறிப் போவதற்குள் காயத்ரி ரொம்பவே களைத்துப் போய் விட்டாள்.

மீண்டும் கோல்வாவிற்கு பயணத்தைத் துவங்கினோம். திரும்பும் போது நெடுஞ்சாலையில் வராமல், சில இண்டீரியர் பாதைகளிலெல்லாம் வண்டியைச் செலுத்தினேன். அற்புதமான சாலைகள். மக்கள் தான் எவ்வளவு பண்புள்ளவர்களாக இருக்கிறார்கள்? ஒரு முச்சந்தியை கடக்கும் போது, அவர்கள் நின்று நமக்கு வழி விடுகிறார்கள். நிறைய பழங்காலத்து வீடுகளைப் பார்க்க முடிந்தது. ரொம்பவே வித்தியாசமான கட்டமைப்பு, கலாசரம். மக்கள் எவ்வளவு செல்வச் செழிப்புடன் வாழ்கிறார்கள் என்று எண்ணத் தோன்றியது. ஒரு வழியாக 7 மணிக்கு கோல்வா வந்து சேர்ந்தோம். உடலிலுள்ள அனைத்து தசைகளும் எலும்புகளும் நரம்புகளும் செயலிழந்து போயிருந்தது.

மறு நாள் ஷாப்பிங்க் ஏதாவது செய்யலாம் என்று அருகிலிருக்கும் ஊரான மர்காவுன் போனோம். என்ன ஆச்சர்யம், ஒரு கடை கூட திறக்கவில்லை. ஞாயிறன்று கடைகள் கிடையாதாம். ஒன்றுமே வாங்காமல் ஹோட்டலுக்கு வந்து காலி செய்து கொண்டு, விமான நிலையம் வந்து ஊர் திரும்பினோம்.

கோவாவில் எனக்கு இன்னொரு பிடித்த விஷயம், எந்த பீச்சருகில் இருக்கும் கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் கிடையாது. கடற்கரையெல்லாம் ரொம்ப சுத்தமாக இருக்கிறது. அவ்வளவு நன்றாகப் பராமரிக்கிறார்கள்? மெரீனா எந்த லக்ஷணத்தில் இருக்கோ?
இன்னொரு அம்சம், இங்குள்ள ஹோட்டல்கள். சுத்த சைவமாக இருந்தாலும் சாப்பாட்டுப் பிரச்னையே இல்லை. கோவா சாப்பாடு என்றாலே மீன் தான் என்று நினைத்திருந்தது எவ்வளவு தவறு? கோல்வாவில் ஒரு ஹோட்டலில் சைவ கோவா சாப்பாடு கிடைத்தது. வெகு ஜோர். மது பானமில்லாத ஹோட்டலே கிடையாது.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், எல்லோரும் ஆங்கிலம் பேசுகிறார்கள். நாம் ஹிந்தியில் பேசினால் கூட ஆங்கிலத்தில் பதிலளிக்கிறார்கள். டாக்ஸி டிரைவர், ஸ்கூட்டர் வாடகைக்கு விடுபவர், ஹோட்டல் ரிஷப்ஷெனிஸ்டு என எல்லோரும் ஆங்கிலம் சரளமாகப் பேசுகிறார்கள். அதே போல் பெயர்ப் பலகைகள் ஒன்றுமே ஹிந்தியிலோ, மராத்தியிலோ எழுதப் படவில்லை. எல்லாமே ஆங்கிலம் தான்.

மனதே இல்லாமல் முன்று நாட்கள் போனதே தெரியாமல் கனத்த மனதுடன், மீண்டும் வர வேண்டும் என்ற எண்ணத்துடன் ஊர் திரும்பினோம். வாழ்வில் மறக்க முடியாத மூன்று நாட்கள் போனதே தெரியவில்லை.

வாசகப் பெருமக்களின் வேண்டுகோளுக்கிணங்க, இந்தப் பக்கம் புதிதாக சேர்க்கப்பட்டது:
வெட்டிவம்பு பக்கத்திலேயே புகைப்படங்களின் ஸ்லைட் ஷோவை சேர்த்துள்ளேன். க்ளிக்கினால் பெரிதாகக் காணலாம். பார்க்க முடியவில்லையென்றால், இது தான் புகைப் படங்கள் இருக்கும் இணையதள முகவரி:
http://picasaweb.google.com/vksankaran/GoaTrip

கோவாவில் எங்கு தங்கலாம், எந்த இடம் போகலாம் என்று இணையதளத்தில் நிறைய எழுதித் தள்ளியிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, கோவா என்றாலே பீச் என்றாகிவிட்ட பிறகு, பீச் அருகில் இருக்கும் ஒரு விடுதியில் தங்குவது நல்லது. டிசம்பரிலிருந்து மே மாதம் இறுதி வரை தான் கோவா செல்ல முடியும். பிப்ரவரி மாதம் வரை நல்ல சீசன். மார்சிலேயே வெப்பம் 32 டிகிரி. மூன்று நாட்களில் நானே கறுத்து விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் :-)

கோடை காலத்தில் வெயில் பின்னியெடுத்து விடும். ஜுன் முதல் நவம்பர் வரை மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி விடும். அப்போது கோவா போவது நல்லதில்லை. புயலுடன் மழை வருவதால், கடலிலும் போக முடியாது. தங்கும் வசதி நிறையவே இருக்கின்றன. ஆனால் இணையதளத்தில் போட்டிருக்கும் விளம்பரங்கள் நம்மை ரொம்பவே ஏமாற்றுகின்றன. 2500 ரூபாய்க்கு மேல் தான் நல்ல தரமான விடுதிகள் கிடைக்கின்றன. பேச்சுலர்களாகப் போனால் எப்படியும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். இந்தத் தங்கமணிகளைக் கூட்டிச் செல்லும் போது தான் இந்த பாராமீட்டரையெல்லாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. கோல்வா பீச்சில் நாங்கள் தங்கின விடுதி, Silver Sands Beach Resort". ஒரு நாளைக்கு 3000 ரூபாய் (ஏ.ஸி வசதி கொண்டது, இரண்டு பேருக்கான காலை சிற்றுண்டியும் இதில் அடக்கம்)

பீச்சிலிருந்து 150 மீட்டர் தூரத்தில் தான் இருக்கிறது. அருகிலேயே கோல்வா பீச் ரெஸிடென்ஸி (இது கோவா சுற்றுலாத்துறை நடத்தும் விடுதி), ஸ்டார் பீச் ரிசார்ட், கோல்பார் பீச் ரிசார்ட், வின்ஸிஸ் பீச் ரிசார்ட் என்று நிறைய இருக்கின்றன. அவையெல்லாம் எப்படியென்று தெரியவில்லை.

கலங்குடே பீச் அருகில் கலங்குடே பீச் ரிசார்ட் இருக்கிறது. இதுவும் கோவா சுற்றுலாத் துறையினர் நடத்தும் விடுதி. வெளியிலிருந்து பார்க்க நன்றாக இருக்கிறது. பாகா பீச்சிலும் நிறைய விடுதிகள் உள்ளன. இந்த மூன்றும் தான் பிரசித்தி பெற்ற பீச்சுகள். இது போக நிறைய தனியார் வீடுகளும் வாடகைக்குக் கிடைக்கின்றன. இணையதளத்தில் அதற்கான விளம்பரங்கள் கொட்டிக் கிடக்கின்றன. பெங்களூரிலிருந்து நிறைய தனியார் பேரூங்துக்கள் போகின்றன. 16 மணி நேரம் ஆகும். விமானத்தில் பயணிக்க 1.15 மணி நேரம் தான்.

மது அருந்துபவர்களுக்கு சுவர்க லோகம். எல்லா ஹோட்டலிலும் மது உண்டு. புகை பிடிக்க முடியாது.

வாழ்வில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடம்.

March 14, 2009

என்னைக் கவர்ந்த சரித்திர நாயகர்கள்

மூன்று வாரங்களாக வேலை வேலை மேலும் வேலை. ஒரு நாளைக்கு 15 மணி நேரத்துக்கு மேலாக ஆஃபிஸிலேயே முகாமிட்டிருக்கி்றேன். சனி ஞாயிறன்றும் வேலை. தூக்கத்தில் கூட கோட் தான் கண் முன்னே வருகிறது. தூக்கத்திலும் டெக்னிகல் டிஸ்கஷன் நடத்துகிறேனாம், காயத்ரி சொல்கிறாள். இந்தியா நியூசிலாந்து கி்ரிக்கெட் மாட்ச் கூட ஒழுங்காகப் பார்க்க முடியவில்லை.  நண்பர்களின் பதிவுகளைப் படிக்க முடிவதில்லை. எடுத்த புத்தகத்தை படிக்க முடியவில்லை. 

அதனால் நண்பர் மேவீ “என்னைக் கவர்ந்த  சரித்திர நாயகர்கள” பற்றி என்னை எழுதக் கேட்டுக் கொண்டதை சீக்கிரமே எழுத முடியவி்ல்லை. தாமதத்துக்கு மன்னிக்கவும் விசு. 

எனக்கு பள்ளிக்கூட நாட்களில் சரித்திரம் மிகவும் பிடித்த பாடம். வகுப்பில் எந்த பாடத்தில் முதல் மதிப்பெண் எடுக்கிறேனோ இல்லையோ, சரித்திரத்தில் முதல் மார்க். ஹிஸ்டரி வாத்தியாராப் போல என்று அப்பா பிரோக்ரஸ் ரிபோர்டில் கையெழுத்துப் போடும் போது திட்டுவார்.

சில நாட்களுக்கு முன் சரித்திரம் பழகு என்றொரு பதிவு கூட எழுதி வைத்திருந்தேன். ஆனால், இது எவ்வளவு பேருக்கு பிடிக்குமோ, பிடிக்காதோ என்றதால் அதை பப்ளிஷ் செய்ய வில்லை. சரி, என்னைக் கவந்த சரித்திர நாயகர்கள் பற்றிச் சொல்கிறேன். என்னைப் பொறுத்த வரை சரித்திரத்தை மூன்று விதமாகப் பிரிக்கலாம். ஆதிகால சரித்திரம். பெயர் தெரியாத ஆதி மனிதன் வாழ்ந்த காலம், அரசர்கள் ஆண்ட இடைக் கால சரித்திரம். ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வந்து நம்மை அடிமைப் படுத்தி பிறகு சுதந்திரம் கண்டு நேற்று வரை அரங்கேறியுள்ள நிகழ்ச்சிகள் யாவையும் தற்கால சரித்திரம் என்று சொல்லலாம்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொருவர் என்னை மிகவும் கவர்ந்தி்ருக்கிறார்கள். என்னைக் கவர்ந்த முதல் சரித்திர நாயகனுக்குப் பெயர் கிடையாது, அடையாளம் தெரியாது, என்ன மொழி பேசினானோ, என்ன வேலை செய்தானோ, அதுவும் அறியேன். ஆனால் உலகில் அறங்கேறியிருக்கும் பற்பல கண்டுபிடிப்புகளுக்கு விதை விதைத்தவன். அவன் தான் சக்கரத்தைக் கண்டு பிடித்த ஆதி மனிதன். சுழலும் சக்கரம் தான் என்னைப் பொறுத்தவரை விஞ்ஞானத்தின் உன்னதமான கண்டு பிடிப்பு. அதைக் கண்டுபிடித்தவன் தான் என்னைக் கவர்ந்த முதல் சரித்திர நாயகன். 

என்னைக் கவர்ந்த மற்றொரு சரித்திர நாயகர் சுபாஷ் சந்திரபோஸ். இந்தியாவிற்கு இவரால் தான் சுதந்திரம் கிடைத்தது என்று இன்றளவும் நான் நம்புகிறேன்.   சும்மா சத்தியாகிரஹம் அது இது என்று காந்தி பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்த போது கருமமே கண்ணாக காரியத்தில் இறங்கிய செயல் வீரர் சுபாஷ் சந்திர போஸ். சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி அமைத்ததால், இவரு்க்கு சரித்திரத்தில் உரிய இடம் கிடைக்கவில்லை என்று நினைக்கி்றேன்.

என்னைக் கவர்ந்த இன்னொரு சரித்திர  நாயகரும் இருக்கிறார். இந்தியாவிலிருந்து பன்னாட்டு நிறுவனங்களை ஜனதா அரசு விரட்டியடித்த சமையத்தில் ஒரு வெற்றிடம் உருவாயிருந்த நேரத்தில், இது தான் நேரம் என்று தான் நிர்வகித்து வந்த எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, இந்தியாவிலேயே கணினி மற்றும் மென் பொருள் தயாரிக்கும்  நிறுவனமாக மாற்றிய விப்ரோ அதிபர், திரு.அசிம் பிரேம்ஜி. பல கோடீஸ்வரர்களை உருவாக்கியதற்காக இன்ஃபோஸிஸ் நாரயண மூர்த்தி பெயர் வாங்கியிருக்கலாம். ஆனால் இன்று உலகத்திலுள்ள அனைத்து நிறுவனங்களும் இந்தியாவில் ஒரு மென்பொருள் வடிவமைக்கும் மையம் அமைக்கிறார்கள் என்றால் அதற்கு விதை வி்தைத்தவர் திரு. அசிம் பிரேம்ஜி. விப்ரோவில் கி்ட்டத்தட்ட 5 ஆண்டுகள் வேலை பார்த்த போது, நாணயத்துக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் ஆச்சர்யப் படுத்தியது. நாணயமற்றவர்களை உடனே நீக்குவதில் எள்ளளவும் யோசிக்க மாட்டார். இது என்னை மிகவும் கவர்ந்த விஷயமாகும். 

அப்பாடா, கொடுத்த வேலையை முடிச்சாச்சு. நான் யாரையு்ம் கோர்த்து விடப் போறதில்லை. இதைப் படிச்சுட்டு, உங்களையும் கவர்ந்த சரித்திர நாயகர்கள் பற்றி தாராளமா எழுதலாம். 
இப்போதைக்கு ஜகா வாங்கிக்கறேன். வர்டா!!!