Pages

October 31, 2008

தொடர் பதிவுக்கு நடுவில் ஒரு கொசுவர்த்திச் சுருள்

நான் பிளாகுலகில் பெயர் வாங்கக் காரணமே கொசுவர்த்திச் சுருள் சுற்றித்தான். (ஆமா, நீ பேரு போனவனாச்சே!) அதாவது என் வாழ்க்கையில் நடந்த ஸ்வாரஸ்யமான சில சம்பவங்களை எழுதித்தான். சில சமயம் அச்சம்பவங்கள் ரொம்பவும் கிறுக்குத்தனமாக இருக்கும். கிறுக்குத்தனமும் ஒரு விதத்தில் நகைச்சுவை தானே. அதனால் அதை எழுதித் தமிழ் கூறும் நல்லுலகத்தை மகிழ்வித்தேன். (அதாவது நினைப்புத்தேன் பொளப்ப கெடுக்கும்பாங்க!!!) அதான் வெட்டிவம்பு துவங்கி நூறாவது பதிவாக ஒரு கொசுவர்த்திச் சுறுளையே மீண்டும் ஏற்றுகிறேன். அதான் இந்த பதிவுக்குக் கூட இப்படியொரு தலைப்பு. என்னப்பா, எல்லாரும் ஜோரா கைதட்டி ஒரு ஓ போடுங்கப்பா. (எலேய், ஒன்னியெல்லாம் வீடு தேடி வந்து முதுகுல தட்டணும்லே)

நான் படித்தது கோவில்பட்டி அருகிலுள்ள நேஷனல் பொறியியல் கல்லூரி. வீட்டிலிருந்து 60 கிலோமீட்டர் தூரம் இருந்தாலும், ஒரு மணி நேரத்தில் போய் விடலாம். மதுரை செல்லும் பேரூந்துக்களில் செல்லலாம். காலேஜுக்கென்று தனியாக நிறுத்தமெல்லாம் கிடையாது. ஓட்டுனரை நிற்கச் சொன்னால் நம்மைத் திட்டிக் கொண்டே பிரேக் பிடிப்பது போல் பிடிப்பார். தனியாளாக மாட்டிக்கொண்டால், ஓடும் பொதே அவர் பிரேக் போடும் சமயத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும். நிமிஷத்திற்கு ஒரு பேரூந்து இருப்பதால் அவ்வளவாகக் காத்திருக்கத் தேவயில்லை.

நான் கல்லுரியில் படித்தது (இன்றைக்கு அவ்வளவாக நலிந்து போய் விட்ட) ராகிங்க் நிறைந்த காலம். இன்றைய கல்லூரி மாணவர்களிடம் ராகிங்க் என்றாலே பயங்கரமான கொடூரமானதொன்று என்று நினைக்கிறார்கள். ஆனால், நான் ராகிங்கை ரொம்பவே ரசித்தேன்.

எங்கள் கல்லூரியில் அதிகார பூர்வமாக ராகிங்க் தடை செய்யப்பட்டிருந்தது. அதனால் காலேஜ் ஹாஸ்டலில் அவ்வளவாக ராகிங்க் கிடையாது. அப்படியே இருந்தாலும் பாட்டுப் பாடு, டான்ஸ் ஆடு ரகம் தான். சில மாணவர்கள் கோவில்பட்டியில் வாடகை அறைகளில் தங்கியிருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் காலேஜ் பஸ்சிலேயே வந்து போவார்கள். காலேஜ் லெக்சரர்களும் அந்த பஸ்சிலேயே போவதால் அவர்களும் ராகிங்கில் அகப்பட மாட்டார்கள். ஒரு மணி நேரம் எந்த எஸ்கார்டும் இல்லாமல் திருநெல்வேலியிலிருந்து வந்து போகும் என் போன்ற டே ஸ்காலர்கள் தான் சீனியர்களுக்குக் கிடைக்கும் பலியாடுகள்.

அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயைப் போல் இருக்குமாம். அந்த மாதிரி பஸ் நிறுத்தத்தில் எந்த கல்லூரி மாணவனாக இருந்தாலும், இவன் சீனியரோ என்று தோன்றும். அதில் முதலாமாண்டு பசங்க தான்னு தெரியாம நிறைய பேருக்கு Good Morning wish சொல்லியிருக்கேன். Wish அடிப்பதிலும் ஒரு procedure உண்டும். மகளிர் மன்னிக்கவும். எல்லாவற்றையும் மூடிக்கொண்டு எம்பிக் குதித்து விஷ் அடிக்கணும். அப்படி சீனியரைக் கண்டு விஷ் அடிக்க வில்லையென்றால், தொலைந்தோம். அதனால் தான் எதற்கு வம்பு என்று யாரைப் பார்த்தாலும் விஷ் அடித்துவிடுவது better.

இன்னும் ராகிங்க் வகைகள் பற்றி சொல்லவே இல்லையே. முதலாமாண்டு மாணவன் யாராவது மினி-டிராஃப்டர் வைத்திருப்பார்கள். அதை மஷின் கன் மாதிரி வைத்துக்கொண்டு சத்தம் போட்டுக் கொண்டே சுட வேண்டும். மக்களும் நாங்க செய்யற சேட்டைகளைப் பார்த்து ரசிப்பார்கள். சீனியர்களுக்குப் பயந்து எல்லோரும் காலை
ஏழு மணிக்கு முன்னரே பஸ் பிடித்து காலேஜ் போய் விடுவோம்.

ஒரு முறை நான் ராகிங்கில் அகப்பட்ட போது, என்னை சீனியர் பெண்ணிடம் "நீ ஜெயலலிதா மாதிரி இருக்கேன்னு சொல்லு" என்றார்கள். நானும் பயந்து கொண்டே அந்தப் பெண்ணிடம் போய், "மேடம், நீங்க சி.எம் மாதிரி இருக்கீங்களாம்"னு சொன்னதற்கு, அந்தப் பெண் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவே இல்லை.

இன்னொரு முறை பஸ் நடத்துனரிடம் போய், "கொஞ்ச நேரம் நான் உங்க வேலையைப்பாக்கறேன்னு சொல்லி அவர் பையை வாங்கிக்கோ "என்பார்கள். இன்னொரு முறை, டிரைவர் ரொம்ப மெதுவாக பஸ் ஓட்டுறார். அவரைப் போய் இந்த மினி டிராஃப்டர் வைத்து சுட்டு விட்டு வா என்று உத்தரவு. இந்த மாதிரியெல்லாம் என்ன கோமாளித்தனம் செய்தாலும் பஸ்ஸில் பயணிக்கும் சக பயணிகளும் ரொம்பவே ரசிப்பார்கள்.

கோவில்பட்டிக்கும் திருநெல்வேலிக்கும் நடுவில் கயத்தாறில் தான் பஸ் நிற்கும். "சிங்கப்பூர் வந்துடுச்சு இறங்கறவங்கள்லாம் இறங்குங்க. லண்டன் போறவங்கள்லாம் ஏறுங்கன்னு பஸ்ஸ சுற்றி இரண்டு பிரதட்சிணம் வைக்கச் சொல்லி உத்தரவு வரும். வேறு வழி, உத்தரவைக் கேட்டுத் தான் ஆகணும்.

என்ன தான் இருந்தாலும் எஞ்சினியரிங்க் படிக்கற பசங்க இல்லையா? அதனால அப்பப்போ கொஞ்சம் அறிவு பூர்வமான கேள்வியெல்லாம் கேட்டு கொடைவானுங்க. ஒரு 50 பைசாவைக் கொடுத்து, அதை integrate பண்ணுன்னு சொல்லுவாங்க. என்னடா இது, 50 பைசாவை எப்படி integrate பண்ண்றதுன்னு பேந்தப் பேந்த முழிப்போம். புடனியில் ஒரு போடு போட்டு, இது 50 காசு இப்போ integrate பண்ணு என்பார்கள். அதாவது 50 cos. cos 50. அதை integrate செய்தால் sin 50. இது தான் பதில். இதைச் சொன்னாலும் இது சரியான பதில் இல்லை என்பார்கள். -sin 50 என்றால், கன்னத்தில் ஒன்று விழும். Cos differentiate செய்தால் தான் -Sin. Integrate செய்தால் -Sin வருமா என்று நம்மையே குழப்புவார்கள். என்னடா இது, இப்படி குடையறானே என்று மனதில் எண்ணிக்கொண்டிருக்கையில், "Integrate செய்தால் +C சேர்த்துக்கணும்'னு தெரியாது என்று கேட்டு புடனியில் இன்னொன்று விழும்.

ஐயோ தாங்கலியேன்னு கத்தறீங்களா? உங்களுக்கே இப்படி இருக்குதுன்னா, பூனை கிட்ட அகப்ப ட்ட எலியாட்டம் இருக்கற எங்களுக்கு எப்படி இருக்கும்? சிரிக்கவும் முடியாது, அழவும் முடியாது. சிரிச்சா, "ஏம்ல, ஒரு integration ஒழுங்கா பண்ணத்தெரியலை. இதுல இளிப்பு வேறயோல" என்று இன்னொன்று புடனியில் விழும்.

ஆனால் ஒரு முறை கூட சிகரெட் பிடிக்கச் சொல்லியோ, பெண்களிடம் அநாகரீகமாக நடக்கச் சொல்லியோ சொன்னதில்லை. அந்த மட்டுக்கு பிழைத்தோமடா சாமி. ஒரு மாதம் இப்படி எங்களையெல்லாம் வதைத்து விட்டு ஒரு welcome party வைத்து எங்களுக்கு நடத்திய ராகிங்கை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விடுவார்கள். பெரும்பாலும், இரண்டாம் ஆண்டு சீனியர்கள் ரொம்பவே வதைப்பார்கள்.

எப்போடா, நாமும் செகண்ட் இயர் போவோம், நாலு பசங்களை ராக் பண்ணுவோம் காத்திருந்து காத்திருந்து, ஒரு வழியாக நாங்களும் ஒரு நாள் சீனியர் ஆனோம். ஆனால், அந்த வருடம் தான், அண்ணாமலை பல்கலைகழகத்தில் நாவரசு என்ற பையனை ராகிங்க் செய்து, அந்தப் பையன் இறக்க, ராகிங்கையே மக்கள் ஏதோ பாவச் செயல் போல் பார்க்கலானார்கள். நாங்க ஏதாவது பையனை புடிச்சு விசாரித்தாலே, ராகிங்க் செய்கிறோம் என்று பஸ் பயணிகளை எங்களுக்கெதிராக திரள ஆரம்பித்து விட்டார்கள். கடைசி வரை ஒரு பையனை கூட ராகிங்க் செய்யாமலேயே கல்லூரிப் படிப்பு முடித்தாயிற்று.

பி.கு: ஒரு சீனியர் என்னிடம் ராகிங்க் செய்யும் போது, அடுத்த வருடம், என்ன சப்ஜெக்ட் எடுக்கப்போகிறாய் என்றான். நான் Electrical & Electronics என்று பதிலளித்தேன். இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டான். ஒரு கண்ம் யோசித்து விட்டுச் சொன்னேன், "Electrical என்றால் conductor, Electronics என்றால் Semi-conductor என்றேன். ரொம்பவே புல்லரித்துப் போய் விட்டான்.

October 25, 2008

மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 3

மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 1

மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 2

மஹான்கள் என்னப்படுபவர்கள் ரொம்பவும் மேன்மை பொருந்தியவர்கள் என்பதால், மக்களைச் சுரண்டுபவர்களை மஹான்கள் என்றழைக்க முடியாது. அதனால் இப்பதிவிற்கான தலைப்பை மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் என்று மாற்றப்பட்டுள்ளது.

ந்த செட்-டாப்-பாக்ஸ் செட்-டாப்-பாக்ஸ் என்கிறார்களே அது என்ன? ஒளி ஒலி அலைகள் அனலாக் அலைகளாகத்தான் முதன் முதலில் நம் தொலைக்காட்சிப்பெட்டிகளை வந்தடைந்து கொண்டிருந்தன. அனலாக் அலைகள் ஒவ்வொன்றிற்கும் ஓர் அலைவரிசை உண்டு. அதாவது Frequency. ஒவ்வொரு சானலுக்கும் இந்த அலைவரிசை எண் மாறுபடும். ஒரே அலைவரிசையில் இரண்டு சானல்களை ஒளிபரப்ப முடியாது. நூறு சானல்களை ஒளிபரப்ப வேண்டுமென்றால் நூறு அலைவரிசைகள் தேவை. அது மட்டுமல்லாமல், இரண்டு சானல்களுக்கு நடுவில் இவ்வளவு அலைவரிசை வித்தியாசம் இருந்தாக வேண்டும். ஆக நூறு சானல்களை ஒளிபரப்ப நிறைய அலைவரிசைகள் தேவை. இதைத் தான் ஆங்கிலத்தில் Bandwidth என்கிறார்கள். அதாவது அனலாக் சானல்களை ஒளிபரப்ப Bandwidth நிறைய தேவை.
சானல் ஒளிபரப்பாளர்கள் தங்கள் இஷ்டத்திற்கு அலைவரிசையைத் தேர்ந்தெடுத்து, ஒளிபரப்ப முடியாது. அவர்கள் அரசாங்கத்திடம் முறைப்படி விண்ணப்பம் செய்து, வேறு எவரும் உபயோகிக்காத அலைவரிசையை இவர்களுக்கு ஒதுக்குவார்கள். இதை ஆங்கிலத்தில் Spectrum Allocation என்பார்கள். இந்தியாவில் இந்தச் சேவையை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் செய்கிறது(Ministry of Information and Broadcasting). ஒரு அலைவரிசையை தங்களுக்கென உபயோகம் செய்வதற்கு இவர்கள் கோடிக்கணக்கில் அரசாங்கத்திற்கு உரிமத் தொகையாக செலுத்தாகியாக வேண்டும்.
ஆக சன் டி.வி போன்ற ஒரு நிறுவனம், 10 சானல்களை ஒளிபரப்ப வேண்டுமெனில், அவர்கள் பத்து அலைவரிசைகளை தங்களுக்கென ஒதுக்கித்தர அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதற்கேற்ற வாறு உரிமத்தொகையும் அத்துணை மடங்கு கூடும். இதெல்லாம் போக, அனலாக் அலைகளில் சிக்னல் நஷ்டம் நிறைய. அதனால் நம் தொலைக்காட்சிக்கு வரும் அலைகளை படமாகப் பார்க்கும் போது துல்லியமாகத் தெரியாது. சரி இதற்கும் செட்-டாப்-பாக்ஸிற்கும் என்ன சம்பந்தம்?
அதற்குத்தான் வருகிறேன். அதற்கு முன்னால் இந்த டிஜிடல் அலைகள் பற்றி சொல்லிடட்டுமா? ஒளி ஒலி அலைகளை டிஜிடைஸ் செய்து அவைகளை எண்களாக மாற்றிடலாம். பயப்பட வேண்டாம். அந்த தொழில் நுட்பமெல்லாம் சொல்லவில்லை. இப்படி டிஜிடைஸ் செய்த எண்களை மாடுலேஷன் செய்து அலைகளாக மாற்றி ஒளிபரப்பலாம். இதற்கும் ஒரு அலைவரிசை உண்டு. அவைகளை ஒரு ஆன்டென்னா கொண்டு டி-மாடுலேட் செய்து மீண்டும் எண்களாக மாற்றிட முடியும். சரி இதனால் என்ன பயன் என்கிறீர்களா? ஒரு சானலில் உள்ள ஒளி மற்றும் ஒலியை இப்படி எண்களாக மாற்றி அலைபரப்ப முடியும். இதிலுள்ள விஷயம் என்னவென்றால், ஒன்றிற்கு மேலாக உள்ள சானல்களின் ஒளி ஒலியை டிஜிடைஸ் செய்து, ஒரே அலைவரிசையில் அலைபரப்பலாம். ஒவ்வொரு சானலுக்கும் ஒரு அலைவரிசை என்ற நிலமை போய் ஒன்றிற்கு மேலாக நிறைய சானல்களை ஒரே அலைவரிசையில் அலைபரப்பலாம் என்றால் லாபம் தானே? அதனால் டிஜிடல் சிக்னல்களை அலைபரப்பத் தேவையான Bandwidth'உம் அனலாகை விட சிறியது தான். மேலும் டிஜிடல் சிக்னலில் சிக்னல் நஷ்டம் குறைவு. அதனால் துல்லியமான படங்களைப் பார்க்கலாம்.
நம் வீட்டிலுள்ள தொலைக்காட்சிப் பெட்டிகள் அனலாக் சிக்னல்களைத்தான் டிகோட் செய்ய முடியும். இந்த டிஜிடல் அலைகளை டிகோட் செய்யும் திறன் செட்-டாப்-பாக்ஸிற்குத்தான் உண்டு. டி.வி செட்டிற்கு மேல் இதை சுலபமாக வைக்கலாம் என்பதால் இதற்குப் பெயர் செட்-டாப்-பாக்ஸ் என்றமைந்தது. இதுவே இதன் பெயர்க்காரணம்.
எல வெண்ணெய், "செட் டாப் பாக்ஸ் வச்சிருந்தாலும் ஏன் எல்லா எளவு சானலும் வருதுன்னு" இந்தப் பதிவுல சொல்லுதேன் சொல்லிப்புட்டு என்னமோ பாடம் எடுக்குதியேல்லா, வெண்ண?
அந்தக் கேள்விக்கான விடையைத் தெரிந்து கொள்ளத்தான் இவ்வளவு தொண்டைத் தண்ணி வற்ற சொல்லவேண்டியதாப்போச்சு?
டிஜிடல் சிக்னல்களை கேபிள் ஆபரேடர் இந்த இந்த வீட்டுக்கு இந்த இந்த சானல்களை கொடுக்க முடியும். இந்த மாதிரி, நமக்கு வேண்டிய சானல்களுக்கு மட்டும் செலுத்த வேண்டிய தவணையை செலுத்திப் பார்ப்பதற்குப் பெயர், Pay Per View.
ஆனால், பெரும்பாலான கேபிள் ஆபரேடர்கள் இந்த செட்-டாப்-பாக்ஸை மட்டும் கொடுத்து விட்டு, எல்லா சானல்களையும் சப்ளை செய்து விட்டு, நாம் பார்க்காமலிருக்கும் சானல்களுக்கும் சேர்த்தே சந்தா வசூலிக்கிறார்கள். அவர்கள் அப்படிச் செய்யக் காரணமென்ன? இந்த Pay Per View என்ற தொழில் நுட்பத்தை நடைமுறைப் படுத்த இவர்கள் கணிசமான அளவு மென்பொருளில் முதலீடு செய்ய வேண்டும். இந்த மென்பொருளை வழங்கும் நிறுவனங்கள் நிறைய ஆய்வு செய்து, இந்த மென்பொருளை கொடுக்கிறார்கள். அதனால் இந்த மென்பொருளின் விலையும் சற்றே அதிகம். இந்தக் காசை மிச்சப் படுத்தத்தான் இவர்கள் நமக்கென்ன வந்தது என்று எல்லா சானல்களையும் கொடுத்து விட்டு, எவ்வளவு செட்-டாப்-பாக்ஸ் விற்றிருக்கிறதோ அவ்வளவு சந்தா தாரர்கள் என்ற கணக்கில் கட்டண சானல்காரர்களுக்கு சந்தா செலுத்துகிறார்கள். அரசாங்கமும் கேபிள் ஆபரேடர்களின் இந்தத் தில்லு முல்லு தெரியாமல் CAS நடைமுறையாக்கப்பட்டுவிட்டது என்று நம்பிக் கொண்டிருக்கிறது? ஆனால் உண்மையில் கேபிள் ஆபரேடர்கள் மக்களை சுரண்டுவதை இதன் மூலம் நிறுத்தவில்லை.
இதனாலெல்லாம், கேபிள் ஆபரேடர்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்ட மக்களின் பரிதாமான நிலை மாறி விட்டதா என்றால், அதான் இல்லை. இதை ஓரளவு போக்கத்தான் புதிதாக வந்திருக்கிறது, DTH முறை. அதாவது Direct To Home. சாடிலைட் வழியாக நேராக வீட்டுக்கே சிக்னல்களை கொண்டு வரும் தொழில் நுட்பம். அது பற்றி அடுத்த பதிவில்.

[தொடரும்]

October 24, 2008

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்



எல்லோருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். பட்டாசெல்லாம் வாங்கிப்புட்டியளா? பார்த்து கொளுத்தங்கப்பா. நாளைக்குத்தான் வெடி வாங்கப்போகணும்!!!









October 15, 2008

எப்போது காதல் வந்தது

எண்ணிப் பார்க்கிறேன் நான், எப்போதடி
உன் மேல் எனக்குக் காதல் வந்ததென்று
என்னை மிகவும் பிடிக்கும் என்றாயே
அப்போதுன்மேல் காதல் வந்ததா
என் மேல் இவ்வளவு அக்கறை காட்டுகிறாயே
அப்போதுன் மேல் காதல் வந்ததா
வசீகரமான உன் முகத்தைப் பார்த்த நாளன்று
உன் மேல் கண்டதும் காதல் வந்ததா
எனக்குப் பிடித்ததெல்லாம் உனக்கும் பிடித்திருக்கிறதே
அப்போதுன் மேல் காதல் வந்ததா
என் தாயை 'அம்மா' என்றழைத்தாயே
அப்போதுன் மேல் காதல் வந்ததா
என் நலனுக்காக நீ வேண்டிக்கொண்டாயே
அப்போதுன் மேல் காதல் வந்ததா
என் வேலையில் நீ எனக்கு உதவினாயே
அப்போதுன் மேல் காதல் வந்ததா
இல்லையடி இல்லை.
என் விருப்பத்திக்கேற்ப நீ நடந்த போதெல்லாம்
உன் மேல் காதல் வரவில்லை
உன் விருப்பத்திக்கேற்ப நானும் இருக்க
வேண்டும் என்றெண்ணிய போது உணர்ந்தேனடி
உன் மேல் எனக்கு காதல் வந்ததென்று

October 12, 2008

மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 2


நாம் ரசித்துப் பார்க்கும் நிகழ்ச்சிகள் இப்படி திடீரென்று துண்டிக்கபடுவது இன்று ரொம்பவே இயல்பாகிவிட்ட நிலமை. பொதுவாக நாம் கேபிள் ஆபரேடர் ஒழுங்காக சந்தா செலுத்தாது தான் காரணம் என்று நாம் எண்ணுவொம். ஆனால், தனது லாபத்தைப் பெறுக்கிக் கொள்ள இந்த கட்டண தொலைக்காட்சிகள் செய்யும் தில்லுமுகளும் நிறைய. உதாரணத்திற்கு, ஒரு முக்கியமான விளையாட்டுத் தொடர் தொடங்குவதற்கு முன், வேண்டுமென்றே மாதச் சந்தாவை கூட்டி விடுவார்கள். கேபிள் ஆபரேடர்கள் இவ்வளவு தர முடியாது என்று பேரம் பேசுவார்கள். இந்த இழுபரியில் தத்தளிப்பவர்கள், நம் போன்ற சாதாரண மக்கள். இவர்கள் பேசி முடிவதற்குள் பாதி தொடர் முடிந்து விடும்.
சானல்களும் கேபிள் ஆபரேடர்கள் செய்யும் தில்லுமுல்லுகளை CAS மூலம் கட்டுப்படுத்தலாம். CAS என்றால் Conditional Access System. இந்த திட்டத்தை முதன் முதலில் அமல் படுத்திய பெருமை சென்னைக்குச் சேரும். இந்த திட்டத்தை உபயோகப்படுத்த வேண்டுமெனில், அதற்கு இப்போது எல்லோருக்கும் அறிமுகமாகிவிட்ட செட்-டாப்-பாக்ஸ் தேவை.

இந்த மூலம் கேபிள் ஆபரேடர்கள் செய்யும் தில்லுமுல்லுகளிடமிருந்து ஓரளவேனும் பிழைக்கலாம். "அதெப்படி செட்-டாப்-பாக்ஸ் வாங்கி டி.வி பார்ப்பது கூடுதல் செலவு தானே" என்று சிலர் கேள்வியெழுப்பலாம். நியாயம் தான். ஆனால், இந்த செட்-டாப்-பாக்ஸ் என்பது தற்காலிக தீர்வு இல்லையே. இது ஒரு Long term solution. இதன் பலன் மெதுவாகத்தான் தெரியும்.

இன்று நமது வீட்டுக்கு வரும் சானல்களின் எண்ணிக்கை நமக்கே தெரியாது. நாம் விரும்பிப்பார்ப்பதென்னவோ 10-15 தான். ஆனால் வருவதென்னவோ 100+ சானல்கள். இதில் பாதிக்குப் பாதி கட்டண சானல்கள் வேறு. இவ்வளவு சானல்களும் நாம் கேட்கவில்லையே. நாம் கேட்காமலேயே இவ்வளவு சானல்கள் இவ்வளவு சான்ல்கள் நன் வீடு தேடி வந்தாலும், கேபிள் ஆபரேடர் கட்டண சானல்களுக்கு சந்தா செலுத்தித் தான் ஆகவேண்டும். அதனால், அந்த தொகையை நம் மேல் சுமத்தி விடுவார்கள்.

சரி செட்-டாப்-பாக்ஸ் வைத்திருந்தால், இந்தத் தொல்லையிலிருந்து எப்படி தப்பிக்க முடியும்? செட்-டாப்-பாக்ஸோடு ஸ்மார்ட் கார்ட் என்ற கருவியும் இருந்தால் மட்டுமே கட்டண சானல்களைப் பார்க்க முடியும். எவ்வளவு செட்-டாப்-பாக்ஸ் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்களோ அவ்வளவு பேருக்குண்டான சந்தாவை கேபிள் ஆபரேடர்கள் கட்டண சானல்களுக்குச் செலுத்த வேண்டும். இதனால், கேபிள் ஆபரேடர்களால் தில்லுமுல்லுவில் ஈடுபட முடியாது. செட்-டாப்-பாக்ஸ் வைத்திருந்தால் இன்னொரு வசதி, துல்லியமான படங்களைப் பார்க்கலாம். செட்-டாப்-பாக்ஸிற்கு வருவது டிஜிடல் அலைகள். அதனால் படங்கள் மிகவும் துல்லியமாகத் தெரியும்.

செட்-டாப்-பாக்ஸ் இல்லாதவர்களுக்கு கட்டணமின்றி இலவசமாக ஒளிபரப்பப்படும் சானல்கள் மட்டும் கிட்டும். இந்திய ஆகாயத்தை உபயோகப்படுத்தும் அனைத்து சானல்களும் சில விதிமுறைகளுக்குட்பட வேண்டும். செய்திகள் போன்ற சானல்கள் கட்டணசானல்களாக இருக்க முடியாது.
சரி செட்-டாப்-பாக்ஸ் வைத்து விட்டால் எல்லா பிரச்சனையும் தீர்ந்து விட்டதா? இன்னமும் நமக்கு வேண்டாத எத்தனையோ சானல்கள் நம் வீடு தேடி வந்து கொண்டிருப்பதை நம்மால் தடுக்க முடியவில்லையே. அது ஏன்?
கேபிள் ஆபரேடர்கள் சானல் ஒளிபரப்பாளர்களிடமிருந்து நேரடியாக சிக்னல் அலைகளை வாங்கி வீடுகளுக்குக் கொண்டு வருவதில்லை. இந்தக் கேபிள் ஆபரேடர்களுக்கும் சானல்காரர்களுக்கும் இடையில் ஒரு இடைத் தரகர் இருக்கிறார். அவர்கள் MSO என்று அழைக்ப்படுகிறார்கள். MSO என்றால் Multi Services Operator. இவர்கள் தான் சானல்களிடம் நேரடி தொடர்பு வைத்திருப்பவர்கள். இவர்கள் தான் டிஷ் ஆன்டென்னா பொருத்தி, செயற்கைக்கோளிலிருந்து சானல்களின் அலைகளை இறக்கம் செய்து, அவைகளை வீடுகளுக்கு சப்ளை செய்யும் கேபிள் ஆபரேடர்களுக்குக் கொடுக்கிறார்கள்.

சன் டி.வி நடத்தும் சுமங்கலி கேபிள் விஷன், ஹாத்வே, இப்போது அழகிரி ஆரம்பித்திருக்கும் ராயல் கேபிள் விஷன், அரசு கேபிள் எல்லோருமே MSOக்கள் தான். சில கட்டண தொலைக்காட்சிகள் தெரியாதிருப்பதற்கு இந்த MSO'க்களே காரணம். இவர்கள் தான் கட்டண சானல்களிடம் பேரம் பேசுபவர்கள். வீடுகளுக்கு சிக்னல்களை ஆம்ப்ளிஃபை செய்து கொண்டு செல்லும் கேபிள் ஆபரேடர்கள் இவர்களின் சப்-டீலர்கள் என்று சொல்லலாம்.

இந்த MSO'க்கள் மனது வைத்து கொடுக்கும் சானல்களைத் தான் பார்த்தாக வேண்டும். அரசியல் ரீதியாக, அவர்களுக்கு ஒரு சானல் பிடிக்கவில்லையென்றல், அதைத் தர மாட்டார்கள். சில தினங்களுக்கு முன் மதுரையில் சன் டி.வி சுத்தமாக இருட்டடித்துப் போனதற்குக் காரணம், ஒரு குறிப்பிட்ட MSO தனது அரசியல் ஆதாயத்திற்காக சன் டி.வி.யின் சிக்னல்களை கேபிள் ஆபரேடர்களுக்குக் கொடுக்காதது தான் காரணம். அதே போல் 2 வருடங்களுக்கு முன் தமிழகம் முழுவதிலும் ESPN Start Sports தெரியாதிருக்கக் காரணம், மொத்தத் தமிழ் நாட்டின் கேபிள் ஆபரேடர்களுக்கு சிக்னல் சப்ளை செய்த சுமங்கலி கேபிள் விஷனுக்கும் அந்த சானல்களுக்கு நடந்த சந்தா பேரம் தோல்வியடைந்ததால் தான். சென்னையில் யார் யார் வீட்டில் செட்-டாப்-பக்ஸ் வைத்திருந்தார்களோ அவர்கள் மட்டும் பிழைத்தார்கள்.


செட்-டாப்-பாக்ஸ் வைத்திருந்தாலும் நமக்கு வேண்டாத சானலெல்லாம் நம் வீடு தேடி அழையா விருந்தாளியாக வந்து விடும். இதற்கெல்லாம் சேர்த்துத் தான் நாம் கேபிள்காரர்களுக்கு அழ வேண்டும். "அப்போ செட்-டாப்-பாக்ஸ் வச்சிருந்தா, கேபிள் சந்தா குறையும்னு சொல்லறாங்களே அதெல்லாம் புருடா தானா"ன்னு கேக்கறீயளா? அதுல ஒரு டெக்னிகல் சிக்கல் இருக்கு. அது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

[தொடரும்]

October 09, 2008

மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 1

தினைந்து இருபது வருடங்களுக்கு முன் வந்த கேபிள் தொலைக்காட்சி, எல்லோரையும் திகைக்க வைத்தது. தூர்தர்ஷனின் தயவிலேயே பொழுது போக்கிக்கொண்டிருந்த மக்களுக்கு கேபிள் தொலைக்காட்சி ஒரு பெரிய வரப்பிரசாதம். கிரிக்கெட் மேட்சா தூர்தர்ஷன் மனது வைத்தால் தான் பார்க்க முடியும். சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியா, ஒளியும் ஒலியையும் ஞாயிற்றுக்கிழமை அவர்களாக மனது வைத்து ஏதாவது நல்லதொரு படத்தைப் போட்டால் தானுண்டு. ஒன்பது மணிக்கெல்லாம் டில்லியிலிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியைத் தான் பார்க்க வேண்டும்.

இந்த மாதிரி மக்களை தனது விருப்பத்திக்கேற்ப பொழுது போக்குமாறு தூர்தர்ஷன் நாட்டையே கட்டுப்படுத்தி வைத்திருந்தபோது தான் சாடிலைட் மூலமாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி, கேபிள் மூலம் அதை வீடுகளுக்குக் கொண்டு சென்று மக்களின் தொலைக்காட்சி பர்க்கும் அனுபவத்திற்கு புதிய பரிணாமம் கொடுக்கத் துவங்கினார்கள். இருபத்திநாலு மணி நேரமும் தொலைக்காட்சியில் பொழுது போக்கு நிகழ்ச்சிகள், செய்திகளுக்காக, சினிமாப் படங்களுக்காக, பல்சுவை நிகழ்ச்சிக்காக என நிறைய சானல்கள் கொண்டு வந்தார்கள்.
அப்பாடா இனிமேல் இந்த தூர்தர்ஷனை நம்பி பொழுது போக்க வேண்டாம் என்று நாமெல்லாம் நினைத்த போது தான், பேரிடியாக வந்தது பே (pay) சானல்கள். வீடொன்றிற்கு இவ்வளவு ரூபாய் சந்தா செலுத்தவேண்டுமென கேபிள் ஆபரேடர்களை நிர்பந்திக்க ஆரம்பித்தார்கள். கேபிள் ஆபரேடர்கள் தங்களது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டி இது போன்ற கட்டண சானல்களுக்கு அல்வா கொடுப்பர்கள். அதாவது, ஒரு கேபிள் ஆபரேடர் 100 வீடுகளுக்கு இணைப்பு கொடுத்திருக்கிறார்களென்றால், 60-70 வீடுகளுக்குத்தான் இணைப்பு கொடுத்திருக்கிறோம் என்று சொல்லிவிடுவார்கள். ESPN வீடொன்றிற்கு 10 ரூபாய் வேண்டுமென்று சொன்னால், கேபிள் ஆபரேடர்கள், 1000 ருபாய்க்கு பதில் வெறும் 600-700 ரூபாய் தான் செலுத்துவார்கள். இப்படி நேயர்களுக்கும் சானல்களுக்கும் நடுவில் இருந்து கொண்டு இவர்கள் செய்யும் தில்லு முல்லுக்கு அளவே கிடையாது. சில சமயம் சந்தா செலுத்தாமல் இழுத்தடிப்பார்கள். அப்படிப்பட்ட நேரத்தில், கட்டணம் செலுத்தாத கேபிள் ஆபரேடர்களுக்கு தங்களது சிக்னலை இந்த கட்டண தொலைக்காட்சிகள் துண்டித்துவிடுவார்கள்.

அதெப்படி, செயற்கைக்கோளிலிருந்து நேராக ஒரு கேபிள் ஆபரேடர் பொருத்தியிருக்கும் டிஷிற்குச் செல்லும் சிக்னலை எப்படிச் செயலிழக்கச் செய்ய முடியும்?
ஒவ்வொரு கட்டண சானலும் தனது சிக்னல்களை என்க்ரிப்ட் செய்து செயற்கைக்கோள் மூலமாக அலைபரப்புவார்கள். சாதாரண டிஜிடல் டிகோடர் கொண்டு அவைகளை டிகோட் செய்து கேபிள் மூலமாக வீடுகளுக்குக் கொண்டு செல்ல முடியாது. தங்களது சிக்னல்களை டிகோட் செய்வதற்கு அவர்களிடமிருந்து பிரத்தியேகமாக ஒரு இயந்திரம் வாங்கியாக வேண்டும். இது செட்-டாப்-பாக்ஸ் போன்றதொரு கருவியாகும். கொஞ்சம் அதிக ஆற்றல் படைத்த செட்-டாப்-பாக்ஸ் என்று வைத்துக்கொள்ளலாம். அதன் கூட ஒரு ஸ்மார்ட் கார்டும் கொடுத்து விடுவார்கள். இந்த கேபிள் ஆபரேடருக்கு இந்த ஸ்மார்ட் கார்ட் என்று ஒரு டேடாபேஸ் வைத்திருப்பார்கள். அந்த ஸ்மார்ட் கார்டில் தான் இந்த சிக்னல்களை டி-க்ரிப்ட் செய்ய வேண்டிய சாவிகள் இருக்கும். மேலும் இந்த பாக்ஸ் அந்த சிக்னல்களை டி-க்ரிப்ட் செய்யலாமா வேண்டாமா என்ற விவரமும் இருக்கும்.
ஒரு கேபிள் ஆபரேடர் ஒழுங்காக சந்தா செலுத்தவில்லையென்றால், அந்த செட்-டாப்-பாக்ஸிற்காக பிரத்தியேகமாக ஒரு அலையை உண்டு பண்ணி, இந்த சிக்னலை இந்த பாக்ஸ் டிகோட் செய்யக்கூடாது என்ற விவரத்தை அந்த ஸ்மார்ட் கார்டிலே பதிந்து வைத்து விடுவார்கள். இப்படி செய்த பிறகு, அந்த செட்-டாப்-பாக்ஸால், கட்டண சானல்களின் அலைகளை டிகோட் செய்ய முடியாது. இந்த கேபிள் இணைப்புக் கொடுத்திருக்கும் வீடுகள் அந்த சானல்களைப் பார்க்கவும் முடியாது. கேபிள் ஆபரேடர் செய்யும் தவறுக்கு மக்கள் பணயமாக்கப்படுகிறார்கள்.
நாம் இது ஒன்றும் தெரியாமல் கேபிள் ஆபரேடரிடம் போய், "அண்ணேன், ESPN தெரியமாட்டேங்குதுண்ணே. மேட்ச் நடக்குத்துண்ணே" என்று சொல்லுவோம். "தம்பி, திடீர்னு ESPN சந்தாத் தொகை கூடுதலா கேக்கறான். அதான் தெரியமாட்டேங்குது. நான் என்ன பண்ணட்டும்" என்று பழியை ESPN மீது போட்டு விடுவார்கள்.
இப்படி நாம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சியை பார்க்க விடாமல் செய்வது கேபிள் ஆபரேடர் மட்டும் தானா? தங்களது லாபம் பெருகுவதற்காக கட்டண சானல்கள் செய்யும் தில்லும்முல்லுகளென்னென்ன? அடுத்த பகுதியில் பார்ப்போம்.